Monday, August 19, 2013

நிமிடங்கள்




கர்ப்பப்பை
கழட்டி விட்டபின்
காலமெல்லாம் பயணம்தான்

நாமறியாமல்
நமக்கு நடக்கும்
யாத்திரையின் முடிவுவரை...
எத்தனை பயணம்..!

பருவங்களின் பயணம்
ரசவாத மாற்றங்களை
மேனி முழுக்கவும்
தூவுகின்றன..!

கருமை ரோமங்கள்
கால அசைவுகளால்
வெள்ளை விழுதுகளாக
விளம்பரமாகின்றன

விழிக் கூர்மையால்
காதலைப் பேசிய கண்கள்
நிமிடங்களின் நகர்ச்சியால்
பாதைகளைக் கூட
பார்க்க முடியாமல்
தளர்ச்சி சிறையில்
தள்ளாடுகின்றன..!

பிடித்த பிடியில்
இரும்பு கூட நெளிந்தது!
நாட்கள் நடந்தன...
நரம்பு பிடித்தது
துரும்பு கூட
இன்று தொல்லையாகிறது!

இப்படியும் ஒரு பயணம்...

பிறப்பும் இறப்பும்
சதா நேரமும்
சம்பவிக்கின்றன!

யாருக்காக இந்த நடவடிக்கைகள்..!

'எனக்காக'...
என்று சொன்னவர் கல்லறைகள்
காலத்தின் கால்களில்
நசுங்கிக் கிடக்கின்றன!

'பயணத்தில் லாப நஷ்டம்
பயணிக்குத்தானே...?
படைத்தவன் எதற்கு..?
வேடிக்கை பார்க்கவா..?'

இப்படி
எதிர்க் கேள்வி போட்டவர்கள் எல்லாம்
பதில் வரும் முன்பே
பயண முடிவில் பதிந்து போனார்கள்!

நடவடிக்கை எல்லாம்
அந்த ஒருவனின் சொந்தம்!

நடப்பதை அறியும்
ஞானம் நமக்கு கிடைப்பதில்லை..!

முயலும் போது

முடிந்து போகிறது பயணம்..!

No comments:

Post a Comment