Saturday, September 24, 2016

அடையாளம் கரைந்த அவமானம்..! - 9 அ



இப்பதிவைப் பதிவதில் எனக்கு விருப்பம் துளியும் இல்லை. வேதனையும் கனக்கிறது.
 
என்ன செய்ய? சில எதார்த்தப் பிரசவங்கள் இப்படித்தான் நடந்தாக வேண்டியுள்ளது.

சகோதரர் Mohamed Hasan Vena தன் பின்னோட்டத்தில் சில தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார். அதைத் தவிர்த்து விட்டுக் கடந்து செல்ல முடியாது.

"நீங்கள் உங்கள் கட்டுரையில் என்ன சொல்ல வருகிறீர்கள் ?" இதற்கு நான் தன்னிலை விளக்கம் தராமல் தாவிச் செல்ல முடியாது.

ஏற்கனவே 9- தொடர்களில் எதுவும் நான் சொல்லவில்லையா

அப்படியானால் இந்த 9-- பதிவில் என்ன விளக்கி விடப் போகிறேன்?
அடுத்து இன்னொரு தகவல் பதிகிறார்.
 
" பிரிவினைவாதிகளுக்கு உங்கள் எழுத்துத் தீனி போட்டுவிடக் கூடும்." என்கிறார்.
 
" உம்மாவில் ( சமூகத்தில் ) சிதறலை ஏற்படுத்துவது வேதனையானது" என்கிறார்.
 
" சில பிரிவினை சக்திகள் பேராசிரியரைச் சூழ்ந்திருப்பதாகவும் அந்தச் சக்திகளைக் கடந்து இயக்கத்தைப் பேராசிரியர் இழுத்து வருவதாகவும்"
குறிப்பிடுகிறார்.
 
"லீக் தனது சொந்தச் சின்னத்தில் நின்று சாதித்திருக்கிறது" எனவும் குறித்திருக்கிறார்.

என் கடந்த காலப் பதிவுகள் இவற்றைப் புறக்கணித்து விட்டது போன்ற தோற்றத்தை முன் வைக்கிறார்.

Mohamed Hasan vena அவர்களே!
 
நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரு செய்தியைச் சொல்லிக் கொண்டே வருகிறீர்கள்.

சிராஜ் ஹாலில் நடந்த கூட்டத்தில் "நான் கலந்து கொண்டேன்" என்று சொல்லிக் கொண்டே வருகிறீர்கள்.
 
தயவு செய்து நம்புங்கள் நானும் அக் கூட்டத்தில் சிறப்பழைப்பினராகக் கலந்து கொண்டேன்.
 
அங்கே நடந்தவைகளுக்கு நானும் ஒரு சாட்சிதான். 

அது சரி அங்கே ஏதோ ஒரு பயங்கரப் பிரிவு சக்தி சதியில் ஈடு பட்டு இருந்தது போல ஒரு தகவலைப் பதிவிடுகிறீர்கள்.
 
எதற்கு மூடு மந்திரம் எது அந்தப் பயங்கரச் சக்தி? யார் அந்தப் பயங்கரப் பிளவு சக்தி? இப்போதாவது அந்தத் தீய சக்தியைத் தயவு செய்யது அம்பலப் படுத்துங்கள். இந்தச் சமூகம் தன்னைக் காத்துக் கொள்ள அது உதவும்.
அன்று நடந்த சம்பவத்துக்கு ஒரு பாதுகாப்புத் தர இப்படியொரு மாயக் கற்பனைத் தோற்றம் தேவைப்படுகிறதா?

காயிதெ மில்லத் காலத்திலேயே இப்படிப் பிளவு சக்திகள் செயல் பட்டு வீழ்ந்திருக்கின்றன. நம் தாய்ச்சபைக்கு இது புதிதல்ல. ஆனால் யார்? காட்ட வேண்டியது நம் கடமை.

தெரிந்து பதனப்படுவது தாய்ச்சபை உரிமை. பிரிவினைச் சக்திக்கு என் பதிவு தீனி போடுவது போலிருக்கிறது என்கிறீர்கள். என் அறியாமையால் இது நிகழ்ந்து விட்டதோ என நான் பதற்றம் அடைகிறேன். தயவு செய்து அடையாளம் காட்டுங்கள்.

லீகின் விருட்சத்தில் இருந்து ஒரு காய்ந்து போன இலையை கூட எவரும் சுலபத்தில் பறித்துவிட முடியாது. இது ஒரு சரித்திரச் சான்றாகும்.

என் எழுத்துக்கள் நடந்த வரலாற்றைப் பதிவு செய்தன. இது எப்படி துரோகச் செயலுக்குத் துணை போவது போல ஆகும்?இது எப்படிச் சமூகத்தைப் பிளப்பது போல ஆகும்?

இது எப்படிப் பேராசிரியருக்கு எதிராகக் கொடி பிடிப்பதற்குச் சமமாகும்?
இயக்கத்தின் கரைதலைப் பேசித்தானே ஆகவேண்டும். இது எப்படிப் பேராசிரியருக்கு எதிரணி யாகும்?
 
சொல்லப் போனால் பேராசிரியர் காலத்தில் இயக்கப் பிளவு சக்தி என்று ஒரு அடையாளமே கிடையாது. எதிர்க் கருத்துச் சொல்பவர்கள் எதிரிகள் அல்லர்.
லீக்கின் தலைவர் பேராசிரியரை ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ யாருடைய உரிமை? லீகின் உறுப்பினர்கள் உரிமை. லீகின் பொதுக்குழு, செயற்குழு உரிமை. இதைத் தாண்டி இச்செயலைச் செய்ய எவருக்கு உரிமை உண்டு?
அருகதை உண்டு?

என் பதிவில் எங்கேயாவது பேராசிரியரை அகற்றுவோம் எனப் பதிவாகி உள்ளதா.? அப்படிப் பதிவிட எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
அப்படி நான் செய்திருந்தால் அது அத்துமீறிய அயோக்கியத்தனம் அல்லவா?
ஆனால் எங்கள் இயக்கம் கரைகிறதே எனக் கத்தவும் கதறவும் நான் யாரிடம் அனுமதி பெற வேண்டும் என நினைக்கிறீர்கள்?

அவமானம் பிடித்துவிட்டதே எனச் சொல்ல எவர் உத்தரவை நான் பெற வேண்டும்?
 
பேராசிரியர் தலைமையிலேயே இப்பிரச்சினையை லீக் அலச வேண்டியதுதானே.

லீக் தன் சுயச் சின்னத்தில் நின்று வெற்றி வாகை சூடியது பெருமையாகத்தான் இருக்கிறது.

லீகின் சுயச் சின்னத்தை தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலில்தான் ஒதுக்கியதா? கடந்த தேர்தல்களில் ஏன் தன் சுயச் சின்னத்தை லீக் தவற விட்டது?
 
தேர்தல் ஆணையம் சின்னம் பற்றியப் புதிய சட்ட நடைமுறையை எடுக்காதிருந்தால் நம் சின்னம் என்னவாக இருந்திருக்கும்? இதற்கு முன் என்னவாக இருந்திருக்கிறது.?

கடைய நல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் என்னுடைய அன்பிற்கினிய தம்பி அபூ பக்கரின் வெற்றிச் சமூக வெற்றிதான் சந்தேகம் இல்லை.
 
சமுதாயத்தின் செல்லாத பத்துக் காசுக்குக் கூடச் சமம் இல்லாத ஒருவரை எதிர்த்து, நாம் வெற்றி பெற்றோம், இழுபறியில். மிகச் சிறய வித்தியாசத்தில்.
அந்தத் தொகுதிக்கு இது புதிதல்ல. மிகச் செல்வாக்கு மிக்கக் குடும்பப் பின்னணி, தன்னுடைய சமுதாயப் பணி, போன்ற தகுதிகளை நிறைத்திருந்த
முன்னாள் லீக்கின் வேட்பாளர் .சாகுல் ஹமீது சாஹிப், எதிர்த்து நின்ற சாதாரண நபரிடம் சொற்ப வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்.
 
இதை மறந்து விட்டு சாதனை வெற்றி என்று நம் தோளை நாமே தட்டிக் கொண்டு ஏமாந்து போய்விட வேண்டாம். சதி நடந்தது எனச் சாக்குப் போக்குச் சொல்லிக் கொள்ளல் சந்தர்ப்ப வாதமாக இருக்கலாம் உண்மை அது இல்லை.

இன்னொன்றும் நினைவில் இருக்க வேண்டும். வெற்றி ஒன்று. தோல்வி நான்கு.

நான் இயக்கத்தின் கரைதலை மட்டுமே எழுதத் தலைப் பட்டேன். இதர விஷயங்களுக்குள் செல்ல வில்லை.

ஆனால் இவைகளைப் பற்றி விவாதிக்காமல் திசை திருப்புதல் சரிதானா?
தனிமனிதத் துதியும், மாயக் கற்பனாவாதப் பூச்சாண்டியும் காட்டப்படுதல்
நியாயம்தானா?

இயக்கத்தை இந்த இரு தன்மைகளும்தான் சிதைக்கும். கரைக்கும்.
சகோதரர் Hashim Razvi அற்புதமாகச் சொல்லி இருக்கிறார். "தாய்ச்சபைத் தலைவர்களைத் தப்பிதமாகப் பேசினால் பதில சொல்லாமல் இருக்க முடியாது" என்று.
 
எவ்வளவு நியாயமான ஆவேசம்?

உண்மை. ஒப்புக் கொள்கிறேன். அந்தப் பட்டியலில் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

தாய்ச்சபைத் தலைவர்களைவிடத் தாய்ச்சபை மேலானது. இதனையும்  
ஒப்புக் கொள்ள வேண்டும்.

தாய்ச்சபைக்காகச் சொத்து இழந்தவர்க்கள், சுகம் இழந்தவர்கள், சகலமும் இழந்தவர்கள் பட்டியலைத் தமிழகம் முழுவதும் நாமே சென்றலைந்து தேடி எடுக்கலாமா?

இந்தச் சமுதாயம், ஒரு உன்னதமான சமுதாயம். தன் உறுப்பினர்களைச் சுரண்டித் தின்று தான் மட்டும் செழித்த சமுதாய மில்லை.

இந்தச் சமூகத்துக்காக உழைத்தவர்களுக்கு, இந்தச் சமூகம் வழங்கி இருக்கும் அந்தஸ்துக்களைப் பாருங்கள். வழங்கி இருக்கும் கொடைகளைப்
பாருங்கள்.
 
இந்தச் சமுதாயம் எவருக்கும் நன்றிக் கடன் பட்ட சமூகமில்லை. இந்தச் சமூகத்திற்குத்தான் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள நாம் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

முஹமதலி ஜின்னா சாஹிப். மிகப் பெரும் வழக்கறிஞர். அந்தத் தொழிலில் அவர் கோடிகளைச் சம்பாதித்தவர். பம்பாயில் மலை மாளிகை கண்டவர். அவர் நாடி இருந்தால் அவரின் பேரப் பிள்ளைகளின் பாம்பே டையிங்ஸ் போல பல நிறுவனங்களின் உரிமையாளராக இருந்திருக்கலாம்.
 
ஆனால் அத்தனையையும் இழந்தார், இந்தச் சமூகத்திற்காக. சமூகம் இவைகளைப் பெற்றுக் கொண்டு கைகட்டி இருக்கவில்லை.
 
தன் நன்றிக் கடனாக ஒரு தேசத்தின் தலைபீடத்தையே உரிமையாக வழங்கியது.

ஜின்னா சாஹிப் இழந்தது பெரிதா? இந்தச் சமூகம் அவருக்கு வழங்கியது பெரிதா?

நெல்லைப் பேட்டையில் பரம்பரைப் பணக்காரர். பட்டதாரி. வணிகத் திறனாளர். முஹமது இஸ்மாயில் சாஹிப். அவர் தொழிலில் ஈடுபட்டிருந்தால், நெல்லை மாவட்டத்திற்கு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் போல் நம் சமூகத்தில் ஒரு வணிக வள்ளல் கிடைத்திருப்பார்.
 
ஆனால் அடுத்த தலைமுறைக்குக் கூட சரித்திரம் படைத்திருக்க முடியாது.
அனைத்தையும் இழந்தார், இந்தச் சமூகத்திற்காக.
 
இந்தச் சமூகம் அவருக்குச் செய்த நன்றிக் கடனைப் பாருங்கள். வாருங்கள் தொகுதிக்குப் பிரச்சாரத்துக்கு வராமலே உங்களைக் கண்ணியத்தோடு பாராளு மன்றம் அனுப்பி வைக்கிறோம் என அழைத்துக் கேரளம் அனுப்பி வைத்தது. இந்திய அரசியல் அமைப்புக்குழு உறுப்பினராக ஆக்கிப் பார்த்தது. ஆசிய ஜோதி பண்டித நேருவை எதித்து நின்று வாதாட வைத்து ஆனந்தப் பட்டது.

 எத்தனை கல்லூரிப் பெயர்கள். எத்தனை வீதிப் பெயர்கள். இந்திய தபால் தலை வெளியீடு இப்படி எத்தனை எத்தனை கண்ணியங்கள்.
 
காயிதெ மில்லத் இழந்தது பெரிதா. இந்தச் சமூகம் அவருக்கு வழங்கியது பெரிதா?

கர்னாடக மாநில வணிகக் குடும்பத்தார் இப்றாஹிம் சுலைமான் சேட். அவர் தொழிலில் ஈடுபட்டிருந்தால் பெரும் செல்வந்தராகி இருப்பார்.ஆனால் அடுத்த ஊருக்குக் கூட அறிமுகம் ஆகியிருந்திருக்க மாட்டார்.

இந்தச் சமூகத்திற்காக உழைத்தார். கேரளம் அழைத்துப் பாராளு மன்றம் அனுப்பியது. இந்திரா காந்திக்கு எதிர் அமர்ந்து அரசியல் நடத்தினார்.

சேட் சாஹிப் இழந்தது பெரிதா? இந்தச் சமூகம் வழங்கியது பெரிதா?

மராட்டிய கல்வியாளர் பனாத்வாலா. அங்கே பெரிய கல்விக் கூடம் நிறுவி
பல்கலைக் கழகமாகப் பரிணமிக்க செய்து இணை வேந்தராகக் கூட ஆகி இருப்பார். பணத்தில் மிதந்திருக்கவும் முடிந்திருக்கும். இந்தச் சமுகத்திற்காக இழந்தார். இந்தச் சமூகம் எப்படி நன்றிக் கடன் செலுத்தியது பாருங்கள்.

கேரளம் அழைத்து பாராளு மன்றம் அனுப்பியது. இந்தியப் பாராளு மன்றவாதிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். இவர் அங்கு பேசும் போது அவை நிரம்பி இருக்கும்.

பனாத்வாலா இழந்தது பெரிதா? இந்தச் சமூகம் வழங்கியது பெரிதா?

அல்லாமா மவ்லவி குடும்பத்துப் பிள்ளை. பட்டதாரி. வணிக குணம் படைத்தவர். அப்துஸ் ஸமது சாஹிப், அவர் சொந்தப் பணி ஆற்றியிருந்தால் செல்வச் சீமானாகி இருப்பார்.
 
காரைக்காலில் ஒரு பழமொழி உண்டு. "காரைக்கால் ரோட்டைப் பார். காதர் சுல்தான் வீட்டைப் பார்." அப்படி ஒரு காதர் சுல்தான் மாதிரி வாழ்ந்திருப்பார்.
 
ஆனால் பக்கத்தில் இருக்கும் திருமலைராயன் பட்டணம் கூட அறிந்திராத மனிதராகி மறைந்திருப்பார்.

இந்தச் சமூகப் பணிக்காக இழந்தார். இந்தச் சமூகம் அவருக்கு என்னஎன்ன நன்றிக் கடன் செலுத்தியது பாருங்கள்.

தனக்குத் தலைவராக்கி. பாராளு மன்றத்துக்கு அனுப்பியது. சட்ட மன்றத்துக்கு அனுப்பியது. ஆயிரக் கணக்கில் பள்ளி வாசல்களை அவர் கரத்தால் திறக்கவைத்தது.

அப்துஸ் ஸமது சாஹிப் இழந்தது பெரிதா? இந்தச் சமூகம் வழங்கியது பெரிதா?

அப்துல் லத்தீப் சாஹிப், அட்வகேட். அவர் தொழிலைச் செய்திருந்தால் சென்னை பிரபல்ய அட்வகேட் ஆகியிருப்பார். பல கோடிகளைச் பார்த்திருப்பார். இந்தச் சமூதாயத்திற்காக இழந்தார். இந்தச் சமுதாயம் நன்றிக் கடன் செலுத்தியதைப் பாருங்கள்.

அவரைச் சட்டம் மன்றம் அனுப்பியது.மாநிலச் செயலாளராக்கி மகிழ்ந்தது.
கல்லூரித் தாளாளராக்கியது.இந்திய அளவில் பிரபல்யப் படுத்தியது.
அப்துல் லத்தீப் சாஹிப் இழந்தது பெரிதா? இந்தச் சமூகம் வழங்கியது பெரிதா?

A.K.ரிபாய் சாஹிப் பெரிய எஸ்டேட் மற்றும் தோட்டத் துறவுகள் உரிமையாளர். அவர் வேளாண்மையை பார்த்திருந்தால் தென் மாவட்டச்
செல்வந்தர்களில் ஒருவராக இருப்பார். இந்தச் சமூகப் பணிக்காக அவற்றை இழந்தார்

இந்தச் சமூகம் அவருக்குச் செய்த நன்றிக் கடனைப் பாருங்கள். காயிதெ மில்லத் காலத்திலேயே மாநிலச் செயலாளராக்கியது. பாராளு மன்றத்துக்கு அனுப்பியது.
 
.கே.ரிபாய் சாஹிப் இழந்தது பெரிதா? இந்தச் சமூகம் வழங்கியது பெரிதா?

பேராசிரியர் கே.எம்.காதர் முஹையதீன் சாஹிப் கல்லூரிப் பேராசிரியர்.
சிறந்த ஆய்வாளர். அவர் தொழிலைச் செய்திருந்தால் கல்லூரி முதல்வராகி இருப்பார். ஏன் பல்கலைக் கழகத் துணை வேந்தராக கூட ஆகியிருப்பார்

இந்தச் சமூகத்திற்காக இழந்தார். இந்தச் சமூகம் தன் நன்றிக் கடனை எப்படிச் செல்த்தியது பாருங்கள்.

மாநிலத் தலைவராக்கிப் பார்க்கிறது. பாராளு மன்றத்துக்கு அனுப்பி மகிழ்ந்தது. உலக நாடுகளின் சமுதாயத்தவரோடு உறவாட செய்கிறது.
பேராசிரியர் காதர் முகையதீன் சாஹிப் இழந்தது பெரிதா? இந்தச் சமூகம் வழங்கியது பெரிதா?

இப்படி நம் சமூகத்திற்குக் கற்றுக் கொடுக்க மறந்து விட்டோம். மாறாகத்
தனி மனிதத் துதி பாடக் கற்றுக் கொடுத்து விட்டோம். இதன் விளைவாகத்
தலைவர் பரணி பாடத் தொடங்கி விட்டோம்.

இயக்கம் பின்னுக்குத் தள்ளப் பட்டது. தலைமைகள் நம் தலைக்குள் புகுந்து கொண்டார்கள். இங்கேதான் அடையாளம் கரைந்த அவமானம் நம்மைத் தழுவியது.

தலைவர்கள், மாண்புக்குரியவர்கள். தாய்ச்சபையோ, நம் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் உயிரூட்டம் போன்றது.

நம் தலைவர்கள் மேலானவர்கள். நம் தாய்ச்சபை அவர்களிலும் மேலானது.
இரண்டு எடுத்துக்காட்டு காட்டுகிறேன்.

நமது மூத்தப் பெரும் தலைவர் நாவலர் .எம். யூசுப் சாஹிபின் மறுமலர்ச்சிப் பத்திரிகை முஸ்லிம் லீகர்களின் கெஸட் போன்று ஒரு காலத்தில் பாவிக்கக் பட்டது. லீகின் பிரச்சார ஏடே அதுதான். நாவலர் லீகர்களின் இரும்புக் கோட்டை.
 
கருத்து முரணில் நம் நாவலர் விலகினார். லீகர்கள் தங்கள் கெஸட்டாகப்
பாவித்த மறுமலர்ச்சியை அப்படியே கை விட்டனர். நம் நாவலரையும்
ஒரு கனவுத் தோற்றமாகப் பார்த்தார்கள்.

மீண்டும் மூத்தப் பெரும் தலைவர் நாவலர் லீகின் சிம்மாசனம் அமர்ந்தார்.
மறுபடி மறுமலர்ச்சி கெஸட்டாகியது. நாவலர் லீகின் இரும்புக் கோட்டையானார்.
 
மற்றொரு உதாரணம்.
 
நெல்லைச் சீமையின் சிங்கம் .சாகுல் ஹமீது சாஹிப். ..கே. ரிபாய் சாஹிப் உடன் பிறந்த தம்பி. என் சிறிய தந்தையார்.
 
அவர் சமூகப் பணியை ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன். இந்தச் சமூகம் அவரைக் கொஞ்சக் கொஞ்சிப் பதவிகளை வாரி வழங்கியது.
 
தென்காசி முதல் முனிசிபல் சேர்மனாக்கியது. கடைய நல்லூர் தொகுதிச்
சட்ட மன்ற உறுப்பினராக்கிப் பார்த்தது. மாநிலப் பொருளாளராக்கியது.
சட்ட மன்றத்தில் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரை. தம் விரல்களை நீட்டிச் சுட்டிக் காட்டிச் சாவல் விட்டவர்.

கருத்து முரணால் லீகை விட்டு விலகினார். தென்காசி நகரப் பிரைமறி உறுப்பினர் கூட அவரைச் சீண்ட வில்லை.

இதுதான் இந்தச் சமுதாயத்தின் சக்தி . பண்பாடு. எவரையும் விடத் தாய்ச்சபை மேலானது.

இதுதான் என் ஒன்பது கட்டுரைகளின் உள் நோக்கம்.

இப்பகுதியைப் பதிவிட்ட என் விரல்கள் மீது எனக்குக் கோபம் வருகிறது.
என் நெஞ்சம் சுடுகிறது.
 
இந்தப் பதிவையிட நான் வேதனைப் படுகிறேன். இப் பகுதிக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன்.