Tuesday, August 13, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது?–17

நெல்லையின் துருவ நட்சத்திரங்கள்!


 1947 க்கு பின்னர் தமிழகத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் கிளைகள் அதாவது பிரைமரிகள் பரவலாகப் பெருகி வந்தன  என்றாலும் இந்தப் பரவல் சாதாரணமாக நடந்து விடவில்லை.
இந்தப் பரவலுக்கு பலதரப்பட்ட மனிதச் செம்மல்களின் தியாக வரலாறு, சரித்திர மேனியில் தழும்புகளாகக் கிடக்கின்றன. இந்தத் தழும்புகள் ஆறிப் போன புண் என அலட்சியப் படுத்தக் கூடிய ஒன்று அல்ல. மீண்டும் மீண்டும் நினைவு கூரத்தக்க மாட்சிமை கொண்டவை.
யூனியன் முஸ்லிம் லீகின் தமிழக ஆளுமையை அந்தக் காலகட்டத்தில் மூன்று மாவட்டங்கள்தாம் முன்னெடுத்து சென்றன. அவற்றில் முதன்மையானது நெல்லை மாவட்டம், அடுத்து தஞ்சை மாவட்டம், அதைத் தொட்டு வேலூர் மாவட்டம்.
தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் பிரைமரிகள் தவழத் தொடங்கி இருந்தன. மேற்சொன்ன மூன்று மாவட்டங்களில் முஸ்லிம் லீக் இளமை கம்பீரத்தோடு எழுந்து நின்றது.
நெல்லை மாவட்டம், இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களாகப் பிரிந்து இருக்கின்றன. அன்றைய நெல்லை மாவட்டம் இணைந்திருந்த பெரிய ஒரே மாவட்டம் ஆகும்.
மாவட்டத்தினுடைய லீக் தலைவர் எங்கள் தாதா மு.. அப்துர் ரஹ்மான் சாஹிப்.
மு.. அப்துர் ரஹ்மான் அவர்கள் ஏற்கனவே இஷா அத்துல் இஸ்லாம் என்ற ஒரு சமூக அமைப்பையும் உருவாக்கி அதன் தலைமையினையும் ஏற்று இருந்தார்கள்.
நெல்லை மாவட்டத்தினுடைய செயலாளர் என்று நினைவு படுத்தி பார்க்கும் போது முதன்முதலில் நினைவுவெளியில் வெ.கா.. அப்துர் ரஹ்மான் சாஹிப்தான் பளீரென்று முன் வந்து நிற்பார்கள்.
மாவட்டத் தலைவர். அதே நேரத்தில், மாநில முதல் துணைத் தலைவர். மு.. அப்துர் ரஹ்மான் சாஹிப். மாவட்டத்தினுடைய செயலாளர் கடையநல்லூரை சேர்ந்த வெ.கா.. அப்துர் ரஹ்மான் சாஹிப். இந்த இரு அப்துர் ரஹ்மான் சாஹிப்களும் ஆற்றிய சமூகப் பணிகளை மறந்து விட்டால் அது சமுதாயத்தின் குற்றம் நிறைந்த பாபமாகி விடும்.
தலைவர் மு.. அவர்கள் வடிவத்தில் குள்ளமானவர்கள். தேக ஆரோக்கியத்தில் வலிமையானவர்கள். வயோதிகம் அவரைத்  தொட்டிருந்த போது கூட சிந்தனை ஆற்றலிலும் தேக வலிமையிலும் அவர்களை ஒத்த வயோதிகர்கள் வேறு எவரும் அரிதாக வேண்டுமானால் இருக்கலாம்.
கடையநல்லூர் வெ.கா.. அவர்கள் நெடு நீண்ட வடிவம் கொண்டவர்கள். உயரத்திற்கேற்ற பருமன் சார்ந்திருந்தவர். நல்ல நிறம். முகத்தில் நாடியிலே அந்த தாடியின் அழகை இன்று நினைத்தாலும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. கருத்த, உயர்ந்த வட்ட வடிவ தொப்பி, அது துருக்கி தொப்பி போல் இருக்கும் ஆனால் தொப்பியில் குஞ்சம் இருக்காது.
மாவட்டத் தலைவரும், செயலாளரும் கடைபிடித்த ஒற்றுமைக்கு இன்று கூட ஒரு எடுத்துக் காட்டை காட்டி விட முடியாது.
வெ.கா.. அவர்கள் பள்ளிப் படிப்பு அதிகம் இல்லாதவர். ஆனாலும் அவரின் பேச்சாற்றல் மாஸ்டர் டிகிரி படித்தவர்களையும் நிலை குலைய செய்து விடும். தனக்குச் சாதகமாக எடுத்து வைக்கும் உதாரணங்கள் இன்னொருவரால் தடுத்தோ, மறுத்தோ பேச முடியாமல் அவரைத் திக்பிரமை அடைய வைக்கும்.
செயலாளர் வெ.கா... அவர்கள், தலைவர் மு.. அவர்களிடம் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் வார்த்தைகளைக் கொண்டு வடிவமைத்து காட்டி விட முடியாது. இஷா அத்துல் இஸ்லாம் சபைக்கும் இந்த இருவருமேதாம் தலைவர், செயலாளர்.
இந்த இருபெரும் தலைவர்கள் மீதும் காயிதே மில்லத் மேன்மையான மதிப்புகள் வைத்து இருந்தார்கள்.
மாவட்டம் எங்கும் இளைஞர்களைப் போல முதிய தலைவரும், முதுமையைத் தொட்டுக் கொண்டிருந்த செயலாளரும் சதா பயணப் பட்டு உழைத்து கொண்டே இருந்தார்கள்.
மாவட்டத் தலைவர் மு.. அவர்கள் அதிகப் படியான ஆன்மீகப் பிடிப்பு உள்ளவர்கள். இறை அச்சம் மட்டுமே அவர்களின் அச்சத்திற்குரிய பெரும் ஆற்றல் கொண்டது. வேறு எவற்றைப் பற்றியும் அச்சம் துளியும் இல்லாதவர்கள்.
தலைவர் மு.. அவர்கள் தன் வாழ்நாளில் இறுதி வரை, அலோபதி மருத்துவத்தை ஏற்று கொள்ளாமல் இருந்தார்கள்.அவர்களின் கிட்டத்தட்ட எழுபதாவது வயதில் காட்ராக்ட் ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனாலும் தன் உடம்பில் எந்த வித இன்ஜக்ஷனும் போடாமல் பண்ண வேண்டும் என அடம் பிடித்தார்கள். அதுவரை தன் வாழ்நாளில் இன்ஜெக்ஷன் போட்டதே இல்லை அவர்கள்.
தலைவர் மு.. அவர்கள் முடிவெடுத்து விட்டால், அதை மாற்றக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள் ஒன்றிரண்டு பேர்கள்தாம்.
காட்ராக்ட் ஆபரேஷ னை செய்ய வற்புறுத்தவும், இந்த ஒருமுறை இன்ஜெக்க்ஷனை ஏற்றுக் கொள்ள அனுமதிக்கவும் செய்ய சென்னையிலிருந்து காயிதே மில்லத் அவர்கள் நெல்லைக்கு வந்தார்கள்.
தலைவர் மு.. விடம் காயிதே மில்லத் சொன்னவுடனே எந்த மறுப்பும் சொல்லாமல்,
"அப்படியென்றால் சரி பிரதர்(இப்படித் தான் இருவரும் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வர்)
என்று உடனே சம்மதித்து விட்டார்கள்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் புரை அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. அதற்குப் பின் கண்ணாடி போட்டுக் கொண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து பத்திரிகைகளை வரிவிடாமல் படிக்கத் தொடங்கினார்கள்.
இந்த அறுவை சிகிச்சை மதுரையில் நடக்கும் தினத்தில், காயிதே மில்லத் தலைமையில் லீக் பொதுக் குழு கூடியது. அந்த பொதுக் குழுவில் காயிதே மில்லத் அவர்கள் தலைவர் மு.. அவர்கள் கண் அறுவை சிகிசைக்காககவும், அவர்களின் உடல் நல ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்தனை செய்ய பொதுக்குழுவை கேட்டுக் கொண்டார்கள்.
அப்போது அந்த பொதுக்குழுவில் காயிதே மில்லத் அவர்கள் பயன்படுத்திய சொற்பிரயோகத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
"தென்காசி பெரிய முதலாளி, பிரதர் மு.. அவர்கள் நம் காலத்தில் நம் கண்முன் நடமாடிக் கொண்டிருக்கும் ஒலியுல்லாஹ் என இறைவன் கருணையினால் நான் அறிந்திருப்பதை சொல்லுகிறேன்." எனப் பதிவு செய்தார்கள்.
மு.. அவர்களின் ஆன்மீகப் பயணத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் பேசிக் கொள்ளலாம். இங்கே அவர்களின் அரசியல், சமூகப் பணிகளை தொடர்ந்து பேசலாம்.
இந்திய விடுதலைக்கு முன், மு.. அவர்களின் தம்பி மு.. முஹம்மது சாஹிப், இவ்விருவரின் வயோதிகத் தாயார், இன்னும் ஒரு சில பணியாளர்கள் ஹஜ்ஜுக்கு செல்ல ஏற்பாடாகியது.
இந்தக் காலகட்டத்தில் நெல்லை விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள ஒரு பகுதியில், முஸ்லிம் ஜமாஅத்தினர் ஒருவருக்கொருவர் இடையே கருத்து முரண்பட்டு தாக்கிக் கொண்டார்கள்.
முஸ்லிம்களுக்கு இடையே ஒரு சின்ன கலவரம் உண்டாகிவிட்டது. மு.. அவர்கள் அங்கே சமாதானப் படுத்த புறப்பட்டு சென்று விட்டார்கள்.
தாயாருடனும், தம்பியுடனும், பிற பணியாளருடனும் ஹஜ்ஜுக்கு புறப்பட வேண்டிய நாள் வந்து விட்டது. நெல்லையிலிருந்து சென்னை சென்று, சென்னையிலிருந்து பம்பாய் போய் கப்பலில்தான் ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும்.
அந்த நேரத்தில் ஹஜ்ஜை கடைசிக் கடமை எனக் கருதியதை விட, அது ஒரு கடைசிப் பயணம் என்றே அனைவரும் கருதிக் கொள்வார்கள். பயணம் அவ்வளவு இடைஞ்சலாக, சிரமமாக இருக்கும்.
மு.. அவர்கள், தாயாரிடம்
நீங்கள் அனைவரும் புறப்படுவது போல புறப்பட்டு சென்று விடுங்கள். அங்கே போய் துஆ செய்யுங்கள். பின் ஒருமுறை எனக்கு ஹஜ்ஜைக் கடமையாக்க இறைவனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
ஹஜ்ஜா? சமுதாயப் பிளவிற்கு தீர்வா? என்ற நிலை ஏற்பட்டால் என் கடமை சமுதாயப் பிளவைத் தீர்ப்பதில்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்
என தாயாரிடம் பரிவுடன் பேசி அவர்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி விட்டார்கள்.
விடுதலைக்கு பின் 1962 அல்லது 1963 ஆம் ஆண்டுகளாக இருக்கலாம். மு.. அவர்களின் தம்பி, மு..முஹம்மது சாஹிப் அவர்கள், அவருடைய மகனார் ஜமால் முஹம்மது சாஹிப் அவர்கள், ஜமால் முஹம்மது சாஹிபின் மனைவியார், மு.. அவர்களின் ஒரே மகளார் காதர் ஹைருன்னிஷா பேகம் அவர்கள், இவர்களுக்கு சமையல் பொறுப்பை செய்துக் கொடுக்க பணியாளர், வடகரை சமர்த்தன் அவர்கள் ஹஜ்ஜுக்கு புறப்பட்டனர். அப்போதும் மு.. அவர்களையும் சேர்த்தே டிக்கெட் தயார் செய்யப் பட்டது.
அந்த நேரத்திலும் அல்லாஹ் நாட்டம் வேறு விதமாக இருந்திருக்கிறது. நெல்லை மாவட்டம் பத்தமடைக்கு பக்கத்தில் ஒரு ஜமாஅத்தார், இரு பிரிவாக மோதிக் கொண்டு நீதிமன்றத்திற்கு  சென்று விட்டனர். நீதிமன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு பள்ளிவாசலை மூடி விட்டது. தொழுகைப் பள்ளி மூடப்பட்டது அறிந்தவுடன், மு... அவர்கள் அங்கே சென்று விட்டார்கள்.
ஜமாஅத்தார்களை அழைத்து பேசிப் பார்த்தார்கள். அவர்கள் உடன்படுவதாக தெரியவில்லை. மறுநாள் சஹர் நேரத்தில் சஹரை முடித்துக் கொண்டு, நோன்பு வைத்து, மூடப்பட்ட பள்ளிவாயிலின் படிக்கட்டில் போய் அமர்ந்து விட்டார்கள்.
ஊர் ஜமாத்தார் கூடினர். அவர்களைப் பார்த்து
"நீங்கள் சமாதானமாகி பள்ளி வாசலைத் திறக்க நீதிமன்றத்தில் அனுமதிப் பெற்று மீண்டும் தொழுகையை இங்கே நிறைவேற்ற முயற்சி எடுக்கும் வரையில் நான் இந்தப் பள்ளிவாசல் படிக்கட்டில் அமர்ந்து நோன்பு இருப்பேன்"
என்று கூறிவிட்டார்கள்.
மு... அவர்களின் பிடிவாதம் ஊரறிந்த ஒன்று. ஒன்றிரண்டு நாட்களிலே ஜமாஅத் ஒன்றிணைந்து வழக்கை வாபஸ் வாங்க முயற்சித்தனர். இந்த முறையும் மு.. அவர்கள் ஹஜ்ஜுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. அந்த குடும்பத்தில் மீதமுள்ளவர்கள் ஹஜ்ஜு செய்தனர். மு.. அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்ற முடியவில்லை.
இதற்கு பின் ஹஜ்ஜு செய்ய மு.. அவர்கள் நினைத்தார்கள் என்று கூட துணிந்து சொல்லிவிட முடியாது. ஆனால் அவர்கள் ஹஜ்ஜு செய்யவே இல்லை.
இந்த இடத்தில இன்னொரு தகவலும் சொல்லுகிறேன். தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் பல கோடிகளை சம்பாதித்து (இந்திய விடுதலைக்கு முன்பே) தன் சம்பாத்தியத்தில் 75 சதவிகிதத்தை சமூக நலனுக்காகவும், கல்விப் பணிக்காகவும் வாரி வழங்கிய செய்யது C.. அப்துல் ஹக்கீம் சாஹிப் அவர்கள் தன வாழ்நாளில், ஹஜ்ஜு செய்ய புறப்பட்டு ஆம்பூரில் இருந்து சென்னை வந்தார்கள்.
ஆனால் சென்னையில் கடுமையான நோய் வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்தார்கள்.
C.. அப்துல் ஹக்கீம் பெயரில் திருவல்லிக்கேணி ஹைரோட்டில் அவர் நிறுவிய மேல்நிலைப் பள்ளி இயங்கிக் கொண்டிருக்கிறது. மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் C.. அப்துல் ஹக்கீம் ஹிந்து முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, இன்றும் தன் கல்விப் பணி யை ஆற்றிக்கொண்டிருக்கிறது. ஆம்பூரில் கல்வி நிலையம், சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு எதிர் புறத்தில் பயணிகள் தாங்கும் முஸாபர்கானா உருவாகப் பங்களிப்பு என சமூகப் பணியாற்றிய வள்ளல் C.. அப்துல் ஹக்கீம் சாஹிப் அவர்களுக்கும், எல்லோரையும் போல ஹஜ் ஜை ஏனோ நிறைவேற்ற முடியாமல் ஆகிவிட்டது.
ரகசியம் இறைவனுக் கே சொந்தமானது.
தலைவர் மு.. அவர்களும், செயலாளர் வெ.கா.. அவர்களும் பலப்பல எதிர்ப்புகள், அச்சுறுத்தல்கள் போன்ற இவைகளை துரும்பு அளவு கூட சட்டை செய்யாமல் சமூகப் பணி ஆற்றியவர்கள்.
நெல்லை மாவட்டத்தில் வாழக் கூடிய வீரம் செறிந்த ஒரு சமூகம் என குறிக்கப்படும் அந்த சமூகத்தவர்கள், இவ்விருவரையும் ஒன்றிற்கும் மேற்பட்ட முறை கொல்லுவதற்கான கொலை முயற்சியை மேற்கொண்டார்கள். அப்போதும் தளர்ந்து விடாமல் அந்த சமூகத்தவர்கள் வாழுகின்ற பகுதிக்கே சென்று இயக்க, சமூக பணிகளைச் செய்யும் துணிச்சல் பெற்று இருந்தார்கள்.
ஒருமுறை சென்னை எழும்பூர் ரயில்வே நிலையத்தில் இருந்து நெல்லைக்கு, நெல்லை எக்ஸ்ப்ரஸில் பயணம் புறப்பட்டார்கள் இந்த இருவரும். அப்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் எல்லாம் கிடையாது.
ரயில் நிலையத்தில் ரயில் கோச்சில் உள்ள இருக்கையில் வெ.கா.. அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். பிளாட்பாரத்தில் மு... அவர்களும் இயக்கத் தொண்டர்களும் நின்று இருந்தனர்.
மு.. அவர்கள் தன் பக்கத்தில் நின்றிருந்த மகன் A..K. .ரிபாயிடம் மணி கேட்டார்கள். அவர் மணி சொன்னார். அது மக்ரிப் தொழுகை நேரம். உடனே மேற்கு எது?” என்று மு.. கேட்டார்கள்.
திசை காட்டியவுடன் தோளில் இருந்த துண்டை பிளட்பரத்தில் விரித்து தொழுகையை ஆரம்பித்து விட்டார்கள். இனி அவர்களை தடுக்க முடியாது. நெல்லை எக்ஸ்பிரஸ் சரியாக புறப்படும் நேரம் அது. நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்பட்டும் விட்டது.
வண்டிக்குள் வெ.கா... அவர்கள். பிளாட்பாரத்தில் மு... அவர்கள். வண்டி எழும்பூரைத் தாண்டி சேத்துப்பட்டுடைய ரயில்வே கேட் (பச்சையப்பன் கல்லூரி மாணவர் விடுதி) அருகில் திடீரென்று நின்றுவிட்டது.
பிளாட்பாரத்தில் மு.. வின் தொழுகை நடந்து கொண்டிருக்கிறது.
திடீரென்று நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் பின்னோக்கி நகர்ந்து வருகிறது. ஏற்கனவே புறப்பட்ட பிளாட்பாரத்திற்கு உள்புகுந்து நிற்கிறது. ரயில்வே துறையினர் ஏதோ காரணம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் மு.. வின் மக்ரிப் தொழுகை அவருடைய பிரார்த்தனையோடு நிறைவு பெற்று அதிலிருந்து எழுந்து நிற்கிறார்கள்.

முதலில் வெ.கா.. அமர்ந்திருந்த கோச் எந்த இடத்தில நின்றதோ அதே இடத்தில நிற்கிறது.
மு... அவர்கள்  நிதானமாக உரிய கோச்சில் ஏறி இருக்கையில் அமருகிறார்கள். நெல்லை எக்ஸ்பிரஸ் மீண்டும் ஓசை எழுப்பி புறப்படுகிறது. மு.. அவர்களை திரும்ப வந்து ஏற்றி செல்வதற்கே வந்தது போல், அவர்கள் இருக்கையில் அமர்ந்தவுடன் வண்டி புறப்பட்டு சென்றது. இந்த நிகழ்வு எதுவும் மு.. அவர்களுக்குத் தெரியாது என்று நாங்கள் கருதிக் கொண்டோம்.
வெ.கா... அவர்கள் வண்டிக்குள்ளே மு.. அவர்களிடம் இந்தச் செய்தியை சொன்னார்களாம். அதற்கு மு.. அவர்கள், எந்தச் சலனமும் இல்லாமல்,
"அல்லாஹ் பெரியவன்." என்று கூறி வழக்கம் போல ஓதுதலை தொடங்கி விட்டார்களாம். இந்த நிகழ்வை வெ.கா.. அவர்கள் பின்னர் அடிக்கடி சொல்லிக் காட்டுவார்கள்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இப்படி ஒரு சம்பவம், இந்த நிகழ்வுக்கு முன் நடந்ததே இல்லையாம். இதற்கு பின் இன்று வரை நிகழ்ந்திருக்கிறதா? என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
இது நடந்திருக்குமா? என்ற கேள்விக்கு ஒரே பதில்தான். நடந்தது நடந்தது நடந்தது.

அடுத்து நெல்லை மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வெ... அவர்களின் தயாரிப்பான கடையநல்லூர் கரீம் சாஹிப் அவர்களைப் பற்றி பேசலாம்.

No comments:

Post a Comment