Saturday, March 16, 2013

எப்போதோ கொட்டிய மழைத்துளிகள்!!!


நானொரு கேள்வி எழுப்புகிறேன் - அதை

நாயகம் பெயரால் அனுப்புகிறேன் !

நீயொரு பதிலைச் சொல்லிவிடு - அந்த

நினைவில் என்னை மிதக்கவிடு!


அழுது கேட்டும் கிடைக்கவில்லை - உன்

ஆணை இன்னும் பிறக்கவில்லை!

விழுந்து சாக மனமுமில்லை - அது

வீணர் வழக்கம் எனக்குமில்லை!


மனிதப் பொறுமை கடந்துவிடும் - என்

மனதின் குமுறல் உடைந்துவிடும்!

இனியும் கருணை மறுப்பதென்றால் - என்

இறைவா என்னுயிர் துடித்துவிடும்!


கேட்டால் தருவது தருமமல்ல - நான்

கெஞ்சிக் கேட்பது புதுமையல்ல!

ஆட்டம் முடியும் எல்லைவரை - நீ

அருள மறுப்பது நியாயமல்ல !


பிடரி நரம்பின் பக்கத்தில் - உன்

பீடம் இருப்பதை நானறிவேன்!

இடரோ துயரோ எதுவரினும் - அது

எனக்குள் இருப்பினும் கவலையில்லை!


இறைவா உன்னைப் பணிகின்றேன் - இனி

எதுவும் வரட்டும் துணிகின்றேன்!

நிறைவோ , குறைவோ வெறுப்பில்லை - நீ

நினைத்ததே நடக்கும் மறுப்பில்லை!

புத்தகம் ஆயிரம் படித்துவிட்டேன் - என்

புத்தியால் அதனைப் பிடித்துவிட்டேன்!

செத்ததும் எதுவும் தொடர்வதில்லை - என்

சிந்தனை அங்கே படர்வதில்லை!

சொட்டுத் துளியில் படைத்துவிட்டாய் - உன்

சுவனம் வரைக்கும் அழைத்துவிட்டாய்!

கெட்டுத் தொலைவது விதியுமில்லை - உன்

கிருபைக் காக்கும் தடையுமில்லை!



முஹம்ம தென்னும் ஒளிப்பிழம்பு - அதன்

முன்னே கிடக்கும் சிறுதுரும்பு!

எமக்குக் குறைவு வருவதில்லை - இந்த

ஈமான் கணக்கு முடிவதில்லை!

Monday, March 11, 2013

கண்டெடுத்த கவிஞன் தா.காசிம் - 5



கண்டெடுத்த கவிஞன் தா.காசிம் - 5



ளபதி திருப்பூர் மைதீன் அண்ணன் அரசியல் வட்டாரத்தில் அதிகம் அறிமுகமாகி இருக்க வேண்டிய ஒரு விற்பன்னர். ஆனால் அதிகமாக மறைக்கப்பட்ட திரைகளால் நிரப்பப்பட்டிருந்தார்.

ஈரோட்டு பெரியார் ஈ.வே.ராவின் நம்பிக்கைகளைப் பெற்றவர்களில் இவரும் ஒருவர். பள்ளிபடிப்புப் பூஜ்யம். ஆனாலும் பெற்றிருந்த ஞானப் பரப்பு கொஞ்சம் விசாலம். மேடைகளில் இவர் முழக்கம் கூட்டத்தை அதிரவைத்து விடும். இவரின் சொற்பொழிவு வேகத்தில் தயாரிக்கப்பட்ட நபர்களில் இன்றைய மூத்த தலைவர் கலைஞர் கருணாநிதியும் ஒருவர் என்ற ரகசியம் பலருக்குத் தெரியாது. எனினும் கலைஞர் கருணாநிதிக்கு அந்த நன்றி உணர்வு இன்றும் இருக்கிறது.

இன்றிருக்கும் திராவிடக் கழகத் தலைவர்களில் திருப்பூர் மைதீன் அண்ணனுக்குத் தனிப பெரும் இடம் உண்டு. அந்த மைதீன் அண்ணன் நம்மை விட்டு மறைந்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

கவிஞர் தா. காசிம் பற்றிய நினைவுகளைப் பதிவு செய்யும் போது திருப்பூர் மைதீன் அண்ணனைச் சொல்லியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இந்தப் பீடிகையுடன் பேசப்படும் மைதீன் அண்ணன், தன்னுடைய சமூக வாழ்வின் தடத்தை மாற்றியமைத்துக் கொண்டார். அதாவது பெரியார் இயக்கத்தை விட்டு வெளியேறிவிட்டார்.

காயிதேமில்லத் அரசியல் வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டார். காயிதேமில்லத்தைப்  பின்பற்றிய மூத்த தலைவர்கள் அனைவருக்கும் மூத்தவர் திருப்பூர் மைதீன் அண்ணன்.
அவர் அடிக்கடி சொல்லிக்கொள்வார்," காயிதேமில்லத் தனியே மேடையில் அரசியல் பேசிய காலத்தில் அவர்களை அடுத்து அரசியல் பேசிய முதல் தொண்டன் நான்" என்று.

காயிதேமில்லத் அடைமொழி கொடுத்து அழைக்கப்பட்ட முதல் தொண்டரும் இவர்தான். அடந்த அடைமொழிதான் தளபதி என்பது.
இந்தத் தளபதிக்கும் காயிதேமில்லத்திற்கும் ஓர் மனத்தடங்கல் ஏற்பட ஆரம்பித்தது. அது விரிவுபட்டு இயக்கப் பணிகளை விட்டு முழுமையாகத் தன்னை விலக்கிக்கொள்ள வேண்டிய ஒரு துயரம் முஸ்லீம் லீக்கின் வரலாற்றில் ஒரு வடுவாகப் பதிந்தது.

காலங்கள் அதன் போக்கில் ஓடிக் கொண்டிருந்தன. தலைவரும் மூத்தத் தொண்டனும் பார்வைகளை விட்டு படுவேகமாக நகர்ந்து கொண்டே இருந்தனர்.

தளபதி திருப்பூர் அண்ணனின் மேடைப் பேச்சு துவங்கும்போதே "வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும், தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை" என்று முழங்கும். இந்த ஓசை எந்த மேடையில் எங்கு கேட்டாலும் அது மைதீன் அண்ணன் மேடை என்று சொல்வார்கள். இந்தப் பாடல் தேவார அப்பர் அடிகளுக்கு உரியது.

அந்த நினைவுகள் காயிதேமில்லத்தின் ஆழ்மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. அந்தத் தளபதி திருப்பூர் மைதீன் மீண்டும் இயக்கத்திற்குள் வந்தாக வேண்டும் என்ற முடிவிற்குக் காயிதேமில்லத் வந்துவிட்டார்கள்.

இடைப்பட்ட காலம் முஸ்லீம் லீகின் அடுத்தக்கட்ட தலைவர்கள் ஏராளாமாக உருவாகிவிட்டார்கள். முஸ்லீம் லீகின் மேடைகளில் வடகரை பக்கர் அண்ணன் முழங்குகிறார். அ.க.அப்துல் சமது மேடைகளில் அலங்காரம் செய்கிறார். இரவணசமுத்திரம் M.M.பீர்முகம்மது மேடைகளில் வீர முழக்கம் தருகிறார். இப்படிப் பல பேச்சாளர்கள்.

A.K.ரிபாய் சாஹிப், திருச்சி அப்துல் வகாப் சாஹிப், மதுரை ஷரீப் சாஹிப், A.சாகுல்ஹமீது சாஹிப் போன்ற அரசியல் சிந்தனையாளர்கள் பலர் வந்துவிட்டனர். என்றாலும் காயிதேமில்லத்திற்குத் தளபதி மைதீன் அண்ணன் இடம் காலியாக இருப்பது மனத்திற்குள் காயமாகவே இருந்தது.

தளபதி திருப்பூராரைத் திரும்ப அழைக்க ஒருவரை தேர்ந்தேடுக்க வேண்டும். அந்த ஒருவர் யாராக இருக்க வேண்டும் ? என்று தேர்வு செய்யும் பொழுது காயிதேமில்லத் எடுத்த முடிவுதான் கவிஞர் தா. காசிம்.

காயிதேமில்லத்தின் இந்த அந்தரங்க ராஜதந்திரத்தை இன்றிருப்பவர்களில் எத்தனைபேர் அறிந்திருப்பார்களோ நமக்குத் தெரியாது.

கவிஞர் தா.காசிமை அழைத்து "தளபதி திருப்பூராரைத் திரும்ப அழைக்க ஒரு கட்டுரையைப் பத்திரிக்கையில் எழுதுங்கள். அந்தக் கட்டுரை தளபதியாரின் கைக்கும் போய்ச் சேர வேண்டும். தளபதியார் திரும்ப வர அந்தக்கட்டுரை தளபதியாரின் ஆழ்மனதில் உந்துசக்தி ஏற்படுத்த வேண்டும். இவ்வளவுசக்திமிக்க எழுத்தாற்றலை புலவரே நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். உடனே எழுதுங்கள். என்னுடைய தலையீடு எங்கும் தெரிய வேண்டாம்" என காயிதேமில்லத் சொன்னார்கள்.

சென்னை மாநகராட்சியின் முஸ்லீம் லீகின் துணை மேயராக இருந்த சிலார் மியானின் பிறைக்கொடி மாத இதழில் "தளபதி எங்கே இருக்கிறாய்" என்று ஒரு ஆவேசமான உருக்கமான கட்டுரையைத் தா.காசிம் எழுதினார்.

இந்தக்கட்டுரை முடங்கிக் கிடந்த திருப்பூராரைச் சென்னை குரோம்பேட்டை காயிதே மில்லத்தின் குடிலுக்கு கூட்டிவந்து சேர்த்தது. காயிதேமில்லத்தின் ஆழ்மன வேதனை அன்றுதான் முழுவதுமாக விடைபெற்றது. அது அரசியல் அந்தரங்க ரகசியம்.

திருப்பூர் மைதீன் அண்ணன், அதன் பின் துறைமுகம் தொகுதியில் நின்று வென்று சட்ட மன்றத்துக்குள் சென்றார். முஸ்லீம் லீகின் கொறடாவாகப் பரிணமித்தார்.

இன்னொரு நிகழ்வு. காயிதேமில்லத் அவர்கள் தன்னுடைய நாடாளுமன்ற லெட்டர் பேடில் சமுதாயத்திற்கு ஒரு கோரிக்கை வைத்தார்கள்.
“புலவர் தா.காசிம் சமுதாயத்தின் சொத்து. அவருக்கு உதவுபவர்கள் எனக்கே நேரிடையாக உதவுபவர்கள் ஆவார்கள் என எழுதி கையொப்பமிட்டு கவிஞர் தா.காசிமிடம் கொடுத்தார்கள். கொடுத்துவிட்டுச் சொன்னார்கள், “இந்தக் கடிதத்தில் நான் தேதி போடவில்லை. தேதி போடாத கடிதமும், பணம் குறிக்காமல் கையெழுத்திட்டுத் தரும் செக்கும் விலை மதிப்பற்றது. எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்”.

இப்படி ஒரு சிபாரிசுக் கடிதம் தன வாழ்நாளில் எவருக்கும் காயிதேமில்லத் தரவில்லை என்பதே சத்தியம் என இதுவரை நம்பிக்கொண்டிருக்கிறேன்.

இந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு காயிதேமில்லத் தன் தம்பி மறைந்துவிட்ட அஹமது இப்ராஹீம் சாஹிப் அவர்களின் காது ஒலி கேட்கும் கருவியையும் கொடுத்தார்கள்.

கவிஞர் தா.காசிம், காயிதேமில்லத் தந்த இந்த இரு பொக்கிஷங்களையும் கடைசிவரைப் பயன்படுத்த முடியாமலேயே போய்விட்டது.

கவிஞர் இந்த இரு பொக்கிஷங்களையும் தன் கைப்பையிலேயே வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தார்.

ஒருமுறை ஈரோடு அக்ரஹாரத்தில் மீலாது கவியரங்கத்திற்கு இளைஞன் A.ரஷீத் அண்ணன் ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்தில் கலந்து விட்டு சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்த கவிஞர் தன் கைப்பையைத் தொலைத்து விட்டார்.    

காயிதேமில்லத் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தன் வாழ்வின் இறுதி கால கட்டங்கள். கவிஞர் தா.காசிமும், மணிவிளக்கு மாத இதழின் அச்சுக்கோப்பாளர் பலராமனும் தலைவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்தார்கள்.

தலைவர் அவர்களுக்கு நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. கவிஞர் வந்து நின்றபோது தலைவர் முழு நினைவோடு இருந்தார்கள். கவிஞர் தா.காசிமைப் பார்த்து லேசாக கையசைத்தார்கள். கவிஞர் தலைவர் பக்கத்திற்குச் சென்றார். தலைவரின் ஒரு கரம் தலையணையின் கீழ் சென்று வெளிவந்தது. கவிஞர் கையில் வைத்து அழுத்தி கவிஞரைப் பிடித்த்துக் கொள்ளும்படி  சைகை காட்டினார்கள். கவிஞர் கண் கலங்கிவிட்டார்.

“தலைவரே ! இதெல்லாம் எதற்கு? என்று விம்மினார். காயிதேமில்லத்தின் கரம் கவிஞரின் கரத்தில் ஒரு ஐந்து ரூபாய் நோட்டை வைத்து அழுத்தியது. ஏற்கனவே இப்படிப் பலமுறை நடந்திருக்கிறது.
காயிதேமில்லத் அவர்கள் இறுதியாக செய்த “அறம்அதுவாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் மருத்துவமனையிலிருந்து திரும்பாமலேயே அடுத்த ஓரிரு தினங்களில் காயிதேமில்லத் மறைந்துவிட்டார்கள்.

கவிஞர் தா.காசிமின் மனைவி பெயர் பாத்திமா. மூத்த மகன் அப்துல் ஹமீது. பாக்கிஸ்தான்-இந்தியா போரில் பாக்கிஸ்தானின் டாங்கியை அழிக்க தன் உடல் முழுதும் வெடிகுண்டுகளைக் கட்டி டாங்கியின் அடியில் விழுந்து அந்த டாங்கிப் படையைச் சீரழித்து நம் இந்தியப் படைக்கு வெற்றி வாங்கித்தந்த வீரப்பதக்கத்திற்குரிய ஹவில்தார் அப்துல்ஹமீதின் நினைவாகத் தன் மகனுக்கு அப்பெயரை வைத்தார்.

இரண்டாவது மகன் அகமது கபீர் ரிபாய். A.K. ரிபாய் சாஹிபின் மீது வைத்த பாசத்தால் வைத்த பெயர். மூன்றாவது மகள் ஆமினா.

பெரியாரின் குடியரசு இதழில் இராவணன் என்ற பெயரில் எழுதி வந்த கவிமணி வீ. நூற் முகம்மது கவிஞர் தா.காசிமின் மாமி மகன்.

கண்டெடுத்த கவிஞனின் கவிதைகள் “மேற்கின் உதயம் என்ற பெயரில் தொகுப்பாக அவராலேயே தொகுக்கப்பட்டது. வெளிவந்தது.

திருவள்ளுவர் 1330 குறள்களை திருக்குறள் என வழங்கினார். கவிஞர் தா.காசிம் 1550 அருட்குறள்கள் என அறிவித்து எழுத தொடங்கினார். ஆனால் முடிக்கவில்லை. அருட்குறளில் ஒன்று. இன்பத்துப்பால் என்ற தலைப்பின் கீழ் அவர் எழுதியது. வெளிநாடு செண்றிருக்கும்  கணவன் தன் மனைவிக்குக் கடிதம் எழுதுகிறான்.

தான் இந்தியா திரும்புவதாக அதில் குறிப்பிடுறான். மனைவிக்கு இந்த கற்கண்டுச் செய்தி இனிக்கிறது. மாமியாரிடம் ஓடிச்சென்று அவர் மகன் வருவதைச் சொல்கிறாள். கணவன் தங்கையான தன நாத்தியிடம் குதூகலித்துச் சொல்கிறாள். கடைசியாக நாணிக்கோணி தன்படுக்கையான மெத்தையிடம் சொல்கிறாள்.  

“அத்தைக்கும் நாத்திக்கும் ஆளன் வரவுரைத்து
 மெத்தைக்கும் சொல்வாள் தனித்து”.


எழுதிய கவிஞன் வயது இன்று வரை கண்டுபிடிக்கப் படவில்லை. எப்போது பார்த்தாலும் நாற்பதைத் தாண்டாத உருவத்தோற்றம்.

என் தந்தை A.K. ரிபாய் சொல்வார்கள். “கவிஞர் சொல்லும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது என்னைவிட எட்டு அல்லது ஒன்பது வயது மூத்திருக்க வேண்டும் என்று. இப்படி சொல்லும்போது என் தந்தைக்கு அறுபத்தி மூன்று வயதிருக்கும்.

எதோ ஒரு கல்ப கால தை மாதம் ஒன்றாம் நாள் (ஜனவரி 14) தான் பிறந்ததாகக் கவிஞர் அடிக்கடிச் சொல்லிக் கொள்வார்.

கவிஞர் தா.காசிம் பற்றி இப்போதைக்கு இவை போதும்.

Monday, March 4, 2013

கண்டெடுத்த கவிஞன் தா.காசிம் - 4


விஞர் தா.கா.வின் சரவிளக்கு அச்சகம் உதயமாகிவிட்டது. சரவிளக்கு மாத இதழும் புறப்பட்டு வந்து பல சாதனைகள் புரிந்தன.


சரவிளக்கில் எழுத்துகள் இருந்தன என்று சொல்வது ஒப்புக்குக் கூடச் சரியில்லை. தாள்களில் அனல் கங்குகள் பற்றிக் கொண்டு இருந்தன என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு சந்தர்ப்பத்தில் முஸ்லீம் லீகின் மூத்த தலைவர் ஒருவர் சரவிளக்கின் விமர்சனம் தாங்க முடியாமல்
"இந்த செவிடனைத் தெருவில் என் காரை வைத்து ஏற்றி விபத்து போல் காட்டி கொன்றுவிடுவேன். வழக்கும் இல்லாது ஆக்கி விடுவேன்" என அப்பட்டமாகவே கத்தித் தீர்த்தார். சரவிளக்கு அந்த அளவிற்கு கனல் விளக்காக வெளி வந்து கொண்டிருந்தது.

ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சொல்லித்தான் ஆக வேண்டும்.

சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள அரசினர் தோட்டத்திற்குள் ஏழு அடுக்கில் தமிழகச்சட்டமன்ற உறுப்பினர்களின் பழைய விடுதி இருந்தது. இந்த விடுதியில் 5ஆவது மாடியில் தி.மு.க.வின் மேலவை உறுப்பினர் நாகூர்.ஈ.எம்.ஹனிபா அறை இருந்தது. பக்கத்து அறையில் முஸ்லீம் லீகின் மேலவை உறுப்பினர் வடகரை எம்.எம்.பக்கரண்ணன் இருந்தார். அந்த விடுதியில் பாளையங்கோட்டைச் சட்டமன்ற உறுப்பினர் கோதர் மைதீனுக்கும் தங்கும் அறை இருந்தது.

நாகூர் ஹனிபா அண்ணன் அறையில் கவிஞர் தா.கா இசைப் பாடலுக்கு பல்லவி அனுபல்லவி எழுதிக்கொண்டு இருந்தார். ஹனிபா அண்ணன் கவிதை வரிகளுக்கு சுருதி சேர்த்துக் கொண்டு இருந்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரவண சமுத்திரம் எம்.எம். பீர்முகமது அண்ணன் அறைக்குள் நுழைந்தார்.
கவிஞர் தா.கா.வைக் கண்டவுடன் வார்த்தைகளுக்குச் சூடேற்றி ஒருமையில் சொல்லத்தகாத "சின்னச்"சொற்க்களால் தீண்டத் தொடங்கிவிட்டார்.

எம்.எம்.பி.அண்ணன் தன் கையிலிருந்த பைக்குள் கரம் நுழைத்து சரவிளக்கை எடுத்தார். தாறுமாறாக கிழித்து எறிந்தார். அதுவரை பொறுமைக்காத்த கவிஞர் தா.கா சீறி எழுந்தார்.

கவிஞரின் கவிதை எவ்வுளவு இனிமையானதோ , அவ்வுளவு அருவருப்பானது அனுமதிக்கமுடியாத கொடூரமானது கவிஞரின் கோபவெளிப்பாடு. அவருக்கு கோபம் வந்தால் காலில் இருப்பது கையிற்கு வந்து விடும்.

அன்றும் அது தான் நடந்தது.

ஹனிபா அண்ணன், பக்கர் அண்ணண் போன்றவர்கள் ஓடி வந்து கவிஞரை பிடித்துக் கொண்டார்கள். கவிஞர் தன்னைப் பற்றித் தரக்குறைவாகப் பேசும் பொழுது அமைதியாக இருந்தார். சரவிளக்கைக் கிழித்து எறிந்ததை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சரவிளக்கில் வந்த ஒரு கேள்வி-பதில், எம்.எம்.பிர்முகமதை அந்த அளவிற்குக் கீறி இருந்தது.

கவிஞர்.தா.கா. நேராக மண்ணடியில் உள்ள மரைக்காயர் லெப்பை தெருவில் உள்ள முஸ்லீம் லீகின் தலைமையகத்திற்கு வந்து விட்டார்.

அப்போதைய முஸ்லீம் லீகின் தலைமை அகம் எங்களுக்கெல்லாம் தாய் வீடு. விவாத மேடை. சொற்போர் களம். பட்டினியோடு படுத்து உறங்கும் படுக்கை பீடம் . இரவில் கவிஞ்ரால் தூங்க முடியவில்லை. நான் இரண்டு மூன்று முறை விழித்துப் பார்த்த போதும் அந்த பெரிய ஹாலில் நடமாடிக்கொண்டே இருந்தார்.
விடிவெள்ளி அடி வானில் முளைத்து இருக்க வேண்டும்."டேய் மருமகனே எந்திரி...நான் வெளியே செல்கிறேன்...கதவடைத்துக் கொள்..." என எனக்கு எரிச்சலை மூட்டி என்னை எழுப்பினார்.
நான் எழுந்து கதவடைக்க வரும் பொழ்து " பஜ்ர் பாங்கு" ஒலித்தது...கதவை யாரோ தட்டும் ஓசையும் இணைந்து வந்தது.

கதவைத் திறந்து பார்த்தால் எதிரே இரவண சமுத்திரம் எம்.எம். பீர்முகமது அண்ணன் நிற்கிறார். கவிஞ்ர் அலறிக் கொண்டு ஓடி அவரை அணைத்து அழுதார். அவரும் விசும்பினார். " உங்களை பார்க்கத்தான் புறப்பட்டு கொண்டு இருக்கிறேன்... என்னை மன்னித்துவிடுங்கள். இதில் கூட நீங்கள் முந்திக்கொண்டீர்களே." என கவிஞர் கதறிக் கதறிக் அழுதார். எம்.எம்.பி அண்ணனும் " நான் சரவிளக்கை கிழிக்கவில்லை... சமுதாயக் கவிஞ்சன் இதயத்தை அல்லவா நார் நாராக கிழித்து விட்டேன்...கவிக்குயிலே மன்னித்துவிடுங்கள்" என விம்மி அழுதார்.

இந்த இரு பண்பாளர்களின் ஆவேசமும், அறிவார்ந்த நடைமுறையும், அன்பார்ந்த பண்பாடும் இப்பொழுது நினைத்தாலும் எனக்குள்ளே இனம் காட்ட முடியாத உணர்வலைகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றது.

சென்னையில் கவிஞருடன் பணிபுரிந்த நாகர்கோவில் குளச்சலை சார்ந்த செய்யது என்பவரின் உறவுக்காரப் பெண் பாத்திமா என்பவரைத்தான் குளச்சலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

மணப்பெண் சென்னைக்குக் குடும்பம் நடத்த வர வேண்டும்...ஏற்பாட்டை கவிஞ்ர் சரியாகத்தான் செய்து இருந்தார்.

அப்போது சைதாப்பேட்டையில் வாடகை வீட்டில் குடியிருந்த எ.கே.ரிஃபாய் இல்லத்தில்தான் முதன் முதலாக வந்து தங்குவது என ஏற்பாடாகி இருந்தது.

இந்த ஏற்பாட்டை கவிஞர் செய்து விட்டு குளச்சலில் இருந்து முன்னரே சென்னைக்கு வந்து விட்டார்.குறிப்பிட்ட தேதியில் மணப்பெண்ணை உறவுக்காரர் சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னை எழும்பூரில் வரவேற்க வேண்டிய மணமகனைக் காணவில்லை. மணப்பெண் பயந்து விட்டார்.

மணமகளுடன் வந்த உறவுக்காரர் முஸ்லீம் முரசு மாத இதழ் ஆசிரியர் ரஹீம்சாகிப்பின் தொலைப்பேசி எண் வைத்து இருந்தார். உடனே தொடர்பு கொண்டார். ஏன் என்றால் அப்போது கவிஞர் முஸ்லீம் முரசில்தான் வேலைப் பார்த்தார். ஆசிரியர் ரஹீம்சாகிப் செய்தி அறிந்து எழும்பூருக்கு ஓடி வந்தார். மணப்பெண்ணையும் அவரது உறவுக்காரரையும் சைதாப்பேட்டை எ.கே.ரிஃபாய் இல்லத்தில் விட்டு சென்றார்.

கவிஞர் இருதினம் கழித்து பத்திரமாகச் சென்னை வந்து சேர்ந்தார். ஒன்றும் பாதகம் நடந்துவிடவில்லை. மணப்பெண் வரும் தேதியை மறந்துவிட்டார்,ஒரு சொற்பொழிவுக்காக இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுவிட்டார் அவ்வுளவுதான்.