Thursday, January 16, 2014

ஒரு வினா – சில விளக்கங்கள்.



14.1.2014 அன்று நான் பதிவு செய்து இருந்த பாரதி பாய்என்றப் பதிவை அப்துல் ஜப்பார் ஐயூஎம்எல்என்னும் நண்பர் மறு பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவில் ரைட் நம்பர்என்கிற பதிவு ஒரு வினா எழுப்பி இருந்தது.

அந்தப் பதிவின் வினா இது தான். எனக்கு ஒரு சந்தேகம்.... ஏன் எப்போதும் ஐயூஎம்எல் தலைவர்களாக சாஹிப்கள் மட்டுமே வருகின்றனர்.... ஐயூஎம்எல் கூட ஒரு பிரிவின் கையில் இருப்பதாகத் தோன்றுகிறது....

இந்த வினாவை எப்படிப் புரிந்து கொள்வது என்ற சந்தேகம் எல்லோரைப் போலவும் எனக்குள்ளும் எழுந்தது.

நான் அதைப் புரிந்து கொண்ட விதத்தில் அதற்குரிய பதிலைத் தேடிக் கண்டறிந்தேன்.

ஐயூஎம்எல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக். இந்தியன் யூனியனில் உள்ள முஸ்லிம்களின் அமைப்பு. இது அரசியல் கட்சி. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அரசியல் அமைப்பு விதிகளுக்கு முழுவதும் உட்பட்டு நடத்தப் படும் ஓர் அரசியல் இயக்கம்.

இந்தியாவில் உள்ள சிறுபான்மைப் பிரிவினரான முஸ்லிம்களின் நலங்களையும் உரிமைகளையும் அவர்களுக்கு எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளையும் இந்திய அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பெற்றுக் கொள்வதற்காக நடத்தப் படும் பதிவு செய்யப்பட்ட அரசியல் இயக்கம் இது.

இந்தியாவில் எந்த ஒரு இனமும், மதமும், வர்க்கமும், அமைப்பும் தங்களின் உரிமைகளை சட்ட விதிகளுக்கு உட்பட்டு முன்னெடுத்துச் சென்று கோரிக்கைகளாக வைத்தும் பெறலாம், போராடியும் பெறலாம்.

ஆனால் வேறு ஒரு அமைப்பின் உரிமையை பறித்துக் கொள்வதற்காக யாரும் போராடுவது குற்றத்துக்கு உரிய தண்டனையாகும்.

இந்த விதி முறைகளைப் புரிந்து கொண்டு மேலே நாம் இன்னும் விவாதிக்கலாம்.

முஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டு இருக்கும் ஒரு முஸ்லிம் அமைப்புக்கு ஒரு முஸ்லிம்தான் தலைவராக வருவது ஒரு வகையான இயற்கை நியதி. வேறு ஒருவர் வரக் கூடாது என்று தடுக்க அனுமதி கிடையாது. ஆனால் அமைப்பின் வாக்கெடுப்பு அடிப்படையில் மற்றொருவர் தலைவராக வரமுடியாது.

இந்திய விடுதலைக்கு முன் அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற அமைப்பு இருந்தது. அகில இந்திய முஸ்லிம் லீகிற்கு விடுதலை காலகட்டம் வரை முஹம்மது அலி ஜின்னா சாஹிப் தலைவராக இருந்தார். அவர் குஜராதி. அதாவது ஒரு இந்திய முஸ்லிம் தலைவராக இருந்தார்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. முஹம்மது அலி ஜின்னா சாஹிப் பாகிஸ்தானிய முஸ்லிம் லீகிற்குத் தலைமை தாங்கினார். அதுவரை அவர் வாழ்ந்து வந்த மும்பையை விட்டு வெளியேறினார். அன்றிலிருந்து அவரை இந்தியராக ஒப்புக் கொள்ள முடியாது. இந்திய முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் அருகதையை ஜின்னா சாஹிப் இழந்தார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உதயமானது. இது இந்திய முஸ்லிம்களின் உரிமை கோரும் அரசியல் இயக்கமாகப் பதிவு செய்யப்பட்டது.

இந்த இந்தியன் யூனியம் முஸ்லிம் லீகிற்கு (ஐயூஎம்எல்) தலைவராக தமிழகத்தைச் சார்ந்த நெல்லை மாவட்டத்து பேட்டை நகரத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழரான எம்.முஹம்மது இஸ்மாயில் சாஹிப் தலைவரானார்.

இவருக்குப் பின்னால் ஒரு சில தினங்கள் நெல்லை மாவட்டம் தென்காசியைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான மு.ந.அப்துர் ரஹ்மான் சாஹிப் தலைவரானார். இவரைத் தொடர்ந்து கேரளத்தைச் சார்ந்த மலையாளியான அப்துர் ரஹ்மான் பாபக்கி தங்ஙள் சாஹிப் சில வாரங்கள் இந்தியன் யூனியன் தலைவராக இருந்தார். அவரை அடுத்து கர்னாடகத்தைச் சார்ந்த இப்ராஹிம் சுலைமான் சேட் சாஹிப் பல ஆண்டுகள் இந்தியன் யூனியன் தலைவரானார். அவருக்குப் பின்னால் மராட்டிய மாநிலம் பம்பாயைக் சார்ந்த குலாம் முஹம்மது பனாத்வாலா சாஹிப் இந்தியன் யூனியன் தலைவரானார். இன்று கேரள மாநிலத்தைச் சார்ந்த மலையாளி இ.அகமது சாஹிப் இந்தியன் யூனியன் தலைமையேற்று நடத்திவருகிறார்.

எல்லா காலகட்டங்களிலும் இந்தியர்கள்தான் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக இருந்திருக்கிறார்கள், இருந்து வருகிறார்கள்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்தும் அகில இந்தியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

கேள்வி கேட்ட நண்பர் இப்பொழுது ஓரளவிற்கு முஸ்லிம் லீகின் வரலாற்றுத் தலைவர்களைப் புரிந்திருப்பார் எனக் கருதுகிறேன்.

இப்போது சாஹிப்தான் தலைவராகிரார். இது ஒரு பிரிவிற்குள் அடங்குவதாகத் தெரிகிறதே எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

சாஹிப்என்பது ஜாதியோ, மதமோ, இனப்பிரிவோ, குழுப் பிரிவோ அல்ல.

சாஹிப்என்றால் தோழர்என்று பொருள்.

முஹம்மது நபிகளாருடன் வாழ்ந்தவர்களை சஹாபிகள் என்பார்கள். சஹாபிகள் என்றால் தோழர்கள் என்று பொருள்.

முஹம்மது நபிக்கு முன்னர் தோன்றிய தீர்க்கத்தரிசிகளை பின்பற்றியவர்களை சீடர்கள் என்றார்கள். ஆனால் முஹம்மது நபியோ தன்னைப் பின்பற்றியவர்களை தோழர்கள் என்றார்கள். தோழரைக் குறிக்கும் அரபுச் சொல் சஹாபின் மூலத்தில் இருந்து பிறந்ததுதான் சாஹிப் என்ற சொல்.

முஸ்லிகள் தங்களைத் தோழர்கள் (சாஹிப்) என்று குறித்துக் கொள்கிறார்கள். மார்க்ஸியவாதிகளும் தங்களைத் தோழர்கள் (காம்ரேட்) என்று குறித்துக் கொள்கிறார்கள்.

பாபா சாஹிப் அம்பேத்கர் என்கிறோம், தாதா சாஹிம் நவ்ரோஜி என்கிறோம். இந்த சாஹிப் என்ற சொல்லை வைத்துக் கொண்டு இந்தப் பெரிய மனிதர்களை எல்லாம் முஸ்லிம்களாக மதம் மாற்றி விடாதீர்கள்.

பொதுவாகவே முஸ்லிம் பெயர்களைக் கேட்ட உடனேயே இன்று கூட பலரும் சில சொற்களைக் கூறி அவர்களை அழைக்கிறார்கள்.

என் பெயரைப் படித்துவிட்டு என்னை அநேகமாக பாய்என்றே எல்லோரும் அழைக்கிறார்கள். நான் குறிப்பிடுவது தமிழகத்தில் மட்டும் தான்.

பாய்என்ற சொல்லுக்கு முஸ்லிம் என்று யாரோ தப்பாக அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள். என்னுடைய பெயரே என்னை முஸ்லிமாக அடையாளம் காட்டுகிறது. அதை ஏற்றுக் கொள்ளாமல் பாய்தான் முஸ்லிம் அடையாளச் சொல் என்று எப்படி ஏற்பட்டதென்றே தெரியவில்லை.

என்னுடைய நண்பர்களில் விநாயக மூர்த்தியை செட்டியார் என்று நான் அழைத்ததில்லை. சண்முக சுந்தரத்தை பிள்ளைவாள் என்று கூப்பிட்டதில்லை. சுந்தரேசனை ஐயர் என்று அழைக்கவில்லை. ஏனென்றால் இந்த ஜாதிப் பெயர்கள் அவர்களின் அடையாளம் என்று நான் கருதவில்லை.

என்னைச் சார்ந்தவர்களுக்கு நான், நானாகத்தான் தெரிய வேண்டும். அதைத் தாண்டி எந்த ஜாதியாகவும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

அதே போல் ஃபாதிமா என்ற ஒரு பெண்ணை அழைக்கும் பொழுது பீவி என்றோ, பேகம் என்றோ, பாய் அம்மா என்றோ, பூவா என்றோ அழைக்கிறார்கள். இவைகள் எல்லாம் முஸ்லிமை அடையாளப்படுத்தும் பெயர் என்று கருதுகிறார்கள்.

உண்மை அப்படி அல்ல. உருது, ஹிந்தி மொழிகளில் இந்தச் சொற்கள் சகோதரன், சகோதரி என்ற பொருளைக் குறிக்கின்றன.

ரைட் நம்பர்என்றப் பதிவில் வினா எழுப்பிய சகோதரருக்கு அவர் வினாவைப் புரிந்து கொண்ட நான் தந்திருக்கும் விளக்கங்களே மேலே உள்ளவை.

இதெல்லாம் எப்படி நடந்தது - 33

பாரதி பாய்..!!!


எம்.ஜி.ஆர். தமிழகத்தின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்து தமிழகத்தை அரசாண்ட 1986-87 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைக் கீழே பதிவு செய்கிறேன்.

தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாஹிபிடம் , திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி தொலைபேசியில் தொடர்புக் கொண்டு நடைபெற இருக்கக் கூடிய திருப்பத்தூர் தி.க மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்புத் தந்தார். இந்தச் சம்பவம் நடந்தது தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைமையகமான மரைக்காயர் லெப்பைத் தெரு அலுவலகத்தில்தான்.

கீ.வீரமணி நட்புடன் அழைத்த அழைப்பை ஸமது சாஹிப் மனமகிழ ஏற்றுக் கொண்டார்.

பெரியார் இயக்கத்திற்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் மானசீகமான அன்புறவு ஊடாடிக் கிடப்பதாக முழுவதுமாக நம்பப்பட்ட காலமது.

வட ஆற்காட்டு திருப்பத்தூரில் தி.க மாநாடு இரண்டு தினங்கள் நடக்கவிருந்தது. முதல் நாள் காலைப் பத்து மணிக்கு மேல் நிகழ்வில் அப்துஸ் ஸமது சாஹிப் பேச அழைக்கப் பட்டிருந்தார்.



கீ.வீரமணி, ஸமது சாஹிபிற்கு தொலைபேசியில் அழைப்புத் தந்த நேரத்தில் தலைவர் ஸமது சாஹிபுடன் தலைமை நிலையச் செயலாளர் காஜா முஹைதீன் எம்.பி, அமைப்புச் செயலாளர் வந்தவாசி வஹாப், வலங்கைமான் அப்துல்லா, நாகூர் கவிஞர் ஜபருல்லா மற்றும் நான் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் உடனிருந்தோம்.

தலைவர் ஸமது சாஹிப் தன்னுடன் இந்த ஐவரும் மாநாட்டிற்கு வர பணித்தார். அப்படியே முடிவானது.

இந்த அழைப்பு வந்த இரு தினங்களுக்கு பின்னர், பாண்டிச்சேரியில் இருந்து முதல்வர் பாரூக் மரைக்காயரின் அழைப்பு ,தலைவர் ஸமது சாஹிப் இல்லத்திற்கு வந்தது.

பாண்டிச்சேரியில் ஆண்டுதோறும், பாண்டிச்சேரி அரசு நடத்தும் பாரதி விழாவில் தலைவர் ஸமது சாஹிப் கலந்து கொள்ள, ஃபாரூக் மரைக்காயர் கேட்டு இருந்திருக்கிறார்.

கி.வீரமணி திருப்பத்தூர் மாநாட்டிற்கு தலைவர் ஸமது சாஹிபை அழைத்த அதே தேதியில் ஃபாரூக் மரைக்காயர் பாரதி விழாவிற்கு அழைப்புத் தந்திருந்தார்.

திருப்பத்தூரின் தி.க மாநாடு நிகழ்ச்சி காலையில்.பாண்டிச்சேரி பாரதிவிழா நிகழ்ச்சி மாலையில். அதனால் தலைவர் ஸமது சாஹிப் இரு நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ள ஒப்புதல் தந்தார்.

திருப்பத்தூர் செல்வதற்கு இருதினங்களுக்கு முன்னால் மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள அவருடைய சொந்த அலுவலகத்தில் (லீக் அலுவலகம் அல்ல) அமர்ந்திருந்தார். அப்போதும் ஸமது சாஹிப் , காஜா மொஹைதீன் எம்.பி., வந்தவாசி வஹாப் , வலங்கைமான் அப்துல்லா, ஜஃபருல்லா, எம்.ஏ.அக்பர் அண்ணன், கவிஞர் தா.காசிம், நான் ஆகியோர் அமர்ந்திருந்தோம்.

அந்த நேரத்தில், சென்னை காவல்துறை ஐ.ஜி அலுவலகத்திலிருந்து சி.ஐ.டி ஆபிசர் ஒருவர் அங்கே வந்தார்.

ஸமது சாஹிபிடம், “நீங்கள் நாளை மறுநாள் நடைபெறவுள்ள தி.க மாநாட்டில் தயவு செய்து கலந்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு திருப்பத்தூர் செல்கிற வழியில் சில சமூக விரோதிகளால் ஆபத்து ஏற்படலாம் என்ற தகவல் எங்களுக்கு வந்திருக்கிறது.

சில தீவிரவாத இந்து அமைப்பினர் வெறித்தனமான தாக்குலில் இறங்கக்கூடும் என்ற கவலை காவல்துறைக்கு இப்பொழுது இருக்கிறது. தயவு செய்து அந்த நிகழ்வுக்குப் போவதை ரத்து செய்துவிடுங்கள்.

காவல்துறை போதியப் பாதுகாப்பை ஏற்பாடு செய்திருக்கிறது என்றாலும், நிலைமை கவலை அளிப்பதாக இருப்பதால் காவல்துறைக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.

எங்கள் மேலதிகாரி அனுமதியோடு இந்தத் தகவலை உங்களுக்குச் சொல்லுகிறேன்என அந்த சி.ஐ.டி அதிகாரி கூறினார்.

தலைவர் ஸமது சாஹிப் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

தமிழ் நாடு காவல்துறையின் மீது எனக்குப் பூரணமான நம்பிக்கை உண்டு. உங்கள் பணியை நீங்கள் நிச்சயம் சரியாகத்தான் செய்வீர்கள். எங்களைப் போன்றவர்கள் அரசியல் வாழ்வில் வெற்று அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி பணிந்து போய்விட முடியாது.

எல்லாவற்றையும் மீறி நானோ அல்லது நாங்களோ தாக்கப்பட்டாலோ உயிரிழக்க நேரிட்டாலோ அதை யாராலும் தடுக்க முடியாது.

எங்களுக்கு இறை நம்பிக்கை உண்டு. அவன் அப்படி நாடியிருந்தால் அது நடந்துதான் தீரும்.
என உறுதியுடன் தலைவர் ஸமது சாஹிப் பதில் சொல்லிவிட்டார்.

மறுநாள் ஏதோ ஃபுட் பாய்ஸன் காரணமாக காஜா மொஹைதீன் எம்.பி க்கு வயிற்றுப் போக்கு வந்தததாக ஸமது சாஹிபிடம் காஜா மொஹைதீன் தகவல் தெரிவித்து வருத்தம் தெரிவித்தார்.

வந்தவாசி வஹாப் சாஹிபிற்கு , வந்தவாசியிலிருந்து தீடீரென்று அவசர அழைப்பு வந்ததாகக் கூறி தவிர்க்க முடியாத காரணத்தால் வந்தவாசி சென்றுவிட்டார்.

வலங்கைமான் அப்துல்லாவிற்கு ஊரில் அவரின் மகளார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வந்து அவரும் வலங்கைமான் சென்றுவிட்டார்.

மதியம் பன்னிரெண்டு மணியளவில் முஸ்லிம் லீக் தலைமை நிலையத்திற்கு அப்துஸ் ஸமது சாஹிப் வந்தார்கள். அங்கு நானும், ஜஃபருல்லாவும் , கவிஞர் தா. காசிமும், தலைமை நிலையத் தலைமை அலுவலர் மீரா சாஹிபும் இருந்தோம்.

தலைவர் வந்து அவர் ஆசனத்தில் அமர்ந்தார். என்னிடமும் ஜஃபருல்லாவிடமும்,

தம்பி உங்களுக்கு உடல்நிலை சரியாக இருக்கிறதா? உங்களில் யாருக்கும் வயிற்றுப் போக்கு இல்லையே, உங்கள் ஊருக்குச் செல்ல வேண்டிய அவசர வேலை ஏதும் இருக்கிறதா?” என்று தலைவர் ஸமது சாஹிப் எங்களிடம் கேட்டார்.

எனக்கு எதுவும் புரியவில்லை. ஏன் பாய் இப்படிக் கேட்கிறீர்கள்? நீங்கள் குறித்த எதுவும் எங்களுக்கு நிகழவில்லைஎன்றேன்.

இல்லை. நாளை திருப்பத்தூருக்கு நீங்கள் என்னோடு வரலாம் அல்லவா? அவர்கள் மூவருக்கும் இந்த மாதிரி இடைஞ்சல்கள் வந்துவிட்டன. அதனால்தான் கேட்டேன். என்று சொன்னார்.

நாங்கள் சிரித்து விட்டோம். நாங்கள் நிச்சயம் வருகிறோம் என்றோம்.

மறுநாள் தலைவர் ஸமது சாஹிபின் அடையாறு இல்லத்திலிருந்து திருப்பத்தூருக்கு ஸமது சாஹிப், ஜஃபருல்லா, நான் மூவரும் புறப்பட்டோம்.

சொல்லவும் வேண்டும், மறைக்கவும் வேண்டும். ஆனாலும் உண்மைப் பதிவாக வேண்டுமென சொல்லி வைக்கிறேன். வழியில் எங்களின் தற்காப்புக்காக என் இடுப்பிலும், ஜஃபருல்லா இடுப்பிலும் ஒரு சைக்கிள் செயினை மறைத்து சுற்றிக் கட்டியிருந்தோம்.

சைக்கிள் செயின் சுற்றுவது ஒருவகையான யுத்தக் கலை. சுற்றத் தெரியாதவர்கள் சுற்றினால் சுற்றியவர்களின் சதையையே குதறிக் கிழித்து விடும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்த காலக் கட்டத்தில் சில தற்காப்புத் தேவைகளுக்காக இந்தக் கலையை நான் கற்று இருந்தேன்.

நாங்கள் அடையாறில் இருந்து அதிகாலையிலே புறப்பட்டோம். சூரியன் உதிக்குமுன் எங்கள் பயணம் தொடங்கி இருந்தது.

காலை பதினொன்று மணியளவில் திருப்பத்தூர் எல்லையைத் தொட்டுவிட்டோம். வழியில் எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஆனால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

அப்துஸ் ஸமதே திரும்பப் போ , இந்து விரோதியே திரும்பப் போ, முஸ்லிம் வெறியனே திரும்பப் போஎன சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. சுவரொட்டியின் கீழ் நகர இந்துக் கூட்டமைப்பு என்று போடப் பட்டிருந்தது.

திருப்பத்தூர் எல்லையில் சாலை ஓரங்களில் சில தோழர்கள் நின்றுக் கொண்டிருந்து நாங்கள் வந்த காருக்கு முன்னால் கருப்புக் கொடி காட்டினார்கள். இவ்வளவுதான் நடந்தது. அஞ்சியவை எவையும் நடக்கவில்லை.

மாநாட்டு மேடைக்கு சென்றுவிட்டோம். வீரமணி தலைமைத் தாங்கி அமர்ந்திருந்தார். மாநாட்டு மேடை பெரிய அளவில் இருந்தது. கூட்டமும் நல்ல கூட்டம். மாநாடு மேடையில் நாங்கள் சென்று அமர்ந்தோம்.

யாரோ ஒரு தோழர் பேசிக் கொண்டிருந்தார். பதினைந்து நிமிடங்களில் மாநாட்டு மேடையில் ஒரு பரபரப்பு. சரியாக இருபத்தியொரு தம்பதியினர் மேடையில் வந்து நின்றார்கள். ஆண்கள் கையில் கத்திரிக்கோல் இருந்தது.

ஒவ்வொரு ஜோடியும் மேடைக்கு முன்வந்து கி.வீரமணிக்கு முன்னால் தன் துணைவியர் கழுத்தில் மஞ்சளோடு கட்டியிருந்த மஞ்சள் கயிற்றுத் தாலியை வெட்டினார்கள்.

இதற்கு வீரமணி தாலியறுப்பு நிகழ்ச்சி என்று மேடையில் அறிவித்தார்.

இப்படி ஒரு நிகழ்வு, தலைவர் ஸமது சாஹிப் இருக்கும் பொழுது நடைபெற இருப்பதாக , இது நடக்கும்வரை ஸமது சாஹிபிடம் தெரிவிக்கவில்லை.

எங்களைப் பொறுத்தவரை இந்த நிகழ்வை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது ஒருமாதிரியான கொடூரமானக் காட்சியாகத்தான் எங்களுக்குப் பட்டது.

தாலி செண்டிமண்ட் முஸ்லிம்களுக்குக் கிடையாது. ஆனால் அதை ஒப்புக் கொண்டு ஏற்று இருக்கக்கூடிய சகோதர இந்து சமுதாயத்தவர்களின் மனங்களை குத்திக் கிளரக் கூடிய இந்தக் கொடூரச் சம்பவத்தை எந்த ஒரு முஸ்லிமாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனொ தெரியவில்லை? இந்த நிகழ்வை கி.வீரமணி, தலைவர் ஸமது சாஹிப் மேடையில் இருக்கும் பொழுது நிகழ்த்தி விட்டார்.

தலைவர் ஸமது சாஹிப் பேசும் பொழுது இதைப் பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.

பெரியாரோடும் , அவரால் வளர்க்கப்பட்ட அண்ணா, கி.வீரமணி இவர்களோடும் மிகுந்த நட்புறவும் மரியாதையும் கொண்டவர்கள் நாங்கள். அதனால் பெரியாருடைய எல்லாக் கோட்பாடுகளையும் நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என்று பொருளல்ல.

பெரியாரோடு சரியாகக் கருத்துமுரணும் எங்களுக்கு உண்டு. அந்த கருத்து முரண்களில் ஒன்றுதான் இப்பொழுது இந்த மேடையில் நிகழ்ந்து இருக்கிறது.

இப்படி ஒன்று நடப்பதை நண்பர் வீரமணி முதலிலேயே தெரிவித்து இருந்தால், நான் இந்த மேடைக்கு வந்திருக்க மாட்டேன்.

நான் புறப்படுவதற்கு முன்னால் சென்னைக் காவல்துறையினர் என்னை செல்ல வேண்டாம் என்று தடுத்தார்கள். ஆனால் அவர்கள் அச்சமான சூழ்நிலை இருப்பதகாச் சொல்லித் தடுத்தார்கள். அதை ஏற்றுக் கொள்ளாமல் நான் இங்கு அவர்கள் வேண்டுகோளை மீறி இந்த மேடைக்கு வந்திருக்கிறேன். உள்ளபடியே வேதனைப் படுகிறேன்என்று தலைவர் ஸமது சாஹிப் தெளிவாகப் பேசினார்.

மேலும், “வருகிற வழியில் எனக்கு சில சகோதரர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க கருப்புக் கொடிக் காட்டினார்கள். அதே நேரத்தில் தி.க இயக்கத்தினர் என்னை வரவேற்று கருப்புக் கொடி கட்டி இருக்கிறார்கள். இந்த மாநாட்டைப் பொறுத்தவரை கருப்புக் கொடி வரவேற்பதாகவும் , மங்களகரமானதாகவும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது.

எதிர்ப்பைக் காட்டியத் தோழர்கள் வெள்ளைக் கொடியையோ பச்சைக் கொடியையோ காட்டி இருந்தால் எதிர்ப்பாகத் தெரிந்திருக்கும்என நகைச்சுவையோடு தன் பேச்சை முடித்தார்.

மேடைக்குப் பின்னால் ஒரு வேடிக்கை நிகழ்ந்துக் கொண்டிருந்தது. மேடையின் மேலே மஞ்சள் தாலியை அறுத்துக் கொண்டவர்கள் அனைவரும் மேடையின் மறைவிடத்தில் தங்கத்தாலியை தன் கணவர்கள் கைகளால் கட்டிக் கொண்டார்கள்.

திருப்பத்தூரை விட்டு பாண்டிச்சேரி பாரதி விழாவிற்குப் புறப்பட்டோம். இரவு ஏழு மணியளவில் பாரதி விழா மேடைக்கு வந்து சேர்ந்தோம்.

காரை விட்டு இறங்கும் பொழுது எங்களுக்கு ஒரு அதிர்ச்சி. தலைவர் ஸமது சாஹிப் எப்பொழுதும் அணிந்திருக்கும் தொப்பியைக் காரின் பின்புறத்தில் வைத்திருந்தார். வருகிற வழியில் காருக்குள் வீசியக் காற்று தொப்பியை எங்கோ கடத்தி சென்று இருக்கிறது. எங்களுக்கு அது தெரியாது.

காரை விட்டு இறங்கிய தலைவர் ஸமது சாஹிப், பாரதி விழா மேடைக்கு ஏற வேண்டும். தொப்பியில்லாமல் அவர் எந்த மேடையிலும் தோன்றுவதே இல்லை. இப்பொழுது தொப்பி இல்லை. மேடை அழைக்கிறது.

மாற்றுத் தொப்பிக்கு மார்க்கம் இல்லை.

உடனே காரில் அவரின் மேற்துண்டை கையிலெடுத்தார் ஒரு பாரதி தலைப்பாகைக் கட்டினார். மேடைக்கு ஏறிவிட்டார். இந்தக் கோலத்தில் ஒரு ஸமது சாஹிபை மேடையில் அதுவரை யாருமே பார்த்திருக்க முடியாது. அதன் பின்னாலும் அவர் வாழ்நாள் முழுவதும் இதைப் பார்த்து இருக்க முடியாது.

மேடையில் ஏறிக் கொண்டிருந்த ஸமது சாஹிபை விழாவிற்குத் தலைமைத் தாங்கிக் கொண்டிருந்த முதல்வர் ஃபாரூக் மரைக்காயர் ஆச்சர்யத்தோடு பார்த்து ஓடி வந்து அணைத்து முன்வரிசையில் அழைத்துச் சென்று அமர வைத்தார்.

ஸமது சாஹிபிற்கு அருகாமையில், பேராசிரியர் க. அன்பழகன் ஏற்கனவே அமர்ந்து இருந்தார். அவர் ஸமது சாஹிபைப் பார்த்து,
பாரதி பாய் வாருங்கள்!என்று அழைத்து கைக் கொடுத்து மகிழ்ந்தார்.

அந்த பாரதி விழாவில் தலைவர் ஸமது சாஹிப் பேசிய பேச்சு மிக அற்புதமான ஒன்று. காலையில் திருப்பத்தூரில் நடந்த சம்பவத்திற்குரிய காரணத்தை மனதில் வைத்துக் கொண்டு பாரதியின் எண்ணத்தையும் பிரதிபலிக்கும் தோரணையில் அந்த பேச்சு முழுவதும் அமைந்திருந்தது.

அந்தப் பேச்சின் விபரத்தை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இன்னொரு நிகழ்வோடு இணைத்து பின்னர் பதிவு செய்கிறேன்.

Tuesday, January 14, 2014

இதெல்லாம் எப்படி நடந்தது–32

விந்தை மனிதர்...!


தமிழக முஸ்லிம் லீக் சரித்திரத்தில் மறக்க முடியாத, மறக்கக் கூடாத முன்னோடிகள் ஏராளமானவர்கள் உள்ளனர். அந்த உயரிய பட்டியலில் எம்.ஏ.அக்பர் அண்ணனுக்கு ஓர் இடம் உண்டு.

அக்பர் அண்ணன் லேசில் நம்மால் அறிந்து கொள்ள முடியாத ரகசியங்களையும், ஆழமான அரசியல் விற்பனத்தனத்தையும் தனக்குள் பொதிந்து கொண்டு இருப்பவர்.

அக்பர் அண்ணனின் பெற்றோர்கள் கேரளத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் பல ஆண்டுகள் தூத்துக்குடியில் குடியேறி வாழ்ந்து வந்தவர்கள் என்றும் தகவல் உண்டு.

அக்பர் அண்ணனைப் பொறுத்தவரை உடன் பிறந்தவர்களைப் பற்றியும் அறிய வாய்ப்பு இல்லை. பெற்றவர்களையும் தெரிய இயலவில்லை.

அக்பர் அண்ணனை அறிந்தவர்கள் அனைவரும் அவரைச் சென்னைவாசியாகத்தான் தீர்மானித்து இருந்தார்கள். அவரிடம் கேரளத்து மொழி நடையோ, வாழ்வு முறையோ எப்பொழுதும் வெளிப்பட்டதில்லை. அக்பர் அண்ணன் ஒற்றைத் தனிமனிதனாகவே நடமாடித் திரிந்தார்.

சென்னை ஆலந்தூரில் நாற்பது ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தார்.

அக்பர் அண்ணனின் எழுத்து எவரையும் வசீகரிக்கும் சக்தி மிக்கது. அவர் சிறுகதை ஆசிரியராகச் சென்னையில் வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் அரசியல் விமர்சகராக விஸ்வரூபம் எடுத்தவர். அவரின் அரசியல், முஸ்லிம் லீக் அரசியல் மட்டுமே. அவரை ஆக்கிரமித்து இருந்த தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஒருவரே.

முஸ்லிம் லீகின் வரலாற்றில் எந்த மூலையில் சந்தேகம் வந்தாலும் அக்பர் அண்ணனை சென்றடைந்தால் ஆதாரமானத் தகவல்களும் உண்மை நிலைகளும் அவரிடம் இருந்து கண்டெடுத்து விடலாம். அவர் ஒரு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தகவல் கலைக்களஞ்சியம்.

அதிகமான முரண்பாட்டுக் குணம் உடையவர். பிரம்மாண்டமான ராஜ தந்திர பிரமுகர். எல்லாக் காலங்களிலும் முஸ்லிம் லீகில் எவர் தலைவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்பட்டவர். நகைச்சுவை என்பதே அக்பர் அண்ணனின் முழுச் சரக்குத்தான்.

அக்பர் அண்ணனுடைய செயல்கள் பலப்பல நேரங்களில் முஸ்லிம் லீகிற்குள் சுனாமிப் பேரலைகளை ஏற்படுத்தியது உண்டு. அந்தப் பேரலைகளில் எத்தனையோத் தலைவர்கள் காணாமல் போய் இருக்கிரார்கள். சுனாமியின் அமைதிக்குப் பின் முஸ்லிம் லீகைப் பார்த்தால் முஸ்லிம் லீகின் அதே இடத்தில் அக்பர் அண்ணன் அமர்ந்து இருப்பார்.

அக்பர் அண்ணன் கோபப்பட்டு அவர் காலத்தில் அவரை யாரும் பார்த்ததே இல்லை. ஆனால் அக்பர் அண்ணனால் கோபம் கொண்டு கதிகலங்கியவர்கள் முஸ்லிம் லீகில் நிறையப் பேர் உண்டு.

சென்னையில் இருந்து வெளிவந்துக் கொண்டிருந்த காதல்மாத இதழில் சிறுகதை எழுதி வந்தார். இந்த மாத இதழை அரு.ராமநாதன் நடத்தி வந்தார். அரு.ராமநாதன் அற்புதமான எழுத்தாளர்.

கல்கி, அகிலன், சாண்டில்யன், விக்ரமன், நா.பார்த்தசாரதி போன்ற எழுத்துலக வேந்தர்கள் சரித்திரக் கதைகள் எழுதி வந்த காலகட்டத்தில் அரு.ராமநாதன் வீரபாண்டியன் மனைவிஎன்ற சரித்திர நாவலை எழுதியவர். ஒரு சரித்திர நாவல் அந்த சரித்திர காலக்கட்டத்தை தெளிவாக எப்படிப் பிரதிபலிக்க வேண்டும் என்கின்ற உண்மை எழுத்தை வரலாறு ஆக்கியவர் அரு.ராமநாதன்.

கல்கியின் பொன்னியின் செல்வன்”, “சிவகாமியின் சபதம்”, “வஞ்சிக்கோட்டை வாலிபன்”, அகிலனின் வேங்கையின் மைந்தன்”, சாண்டில்யனின் யவன ராணி”, “கடல் புறா”, நா.பார்த்த சாரதியின் மணிப்பல்லவம்போன்ற சரித்திர நாவல்கள் நல்ல கதைகளாக இருந்தன. ஆனால் ஏராளமான வரலாற்றுப் பிழைகளைக் கொண்டு இருந்தன.

அந்தக் காலகட்டத்தில் அரு.ராமநாதனின் வீரபாண்டியனின் மனைவிதான் சரித்திர நாவல் என்ற தரத்திற்கும், உயர்வுக்கும் தமிழில் முன் மாதிரியாகும்.

வீரபாண்டியம் மனைவியில்வரும் ஜனனாதன் தமிழகத்து அரசியல் விற்பனத்தின் சரியான முன்னோடி.

இந்த அரு.ராமநாதனோடு நெருக்கமும் எழுத்து உறவும் வைத்து இருந்தவர் அக்பர் அண்ணன். இது அவரின் இலக்கிய உலகம்.

அரசியல் விமர்சனம் என்று அவர் பேனாமுனை எழுதத் துவங்கியது முஸ்லிம் லீகில் அவர் இணைந்த காலத்தில் இருந்துதான். அதுவரை அவர் வேறு எந்த அரசியல் இயக்கத்திலும் சேர்ந்தவர் அல்லர்.

அரசியல் விமர்சனத்தை துவங்கியதற்குப் பின்னால் அவருடைய பேனாமுனை இலக்கியத்தைத் தலாக் சொல்லிவிட்டது.

பிறை மாத இதழ் அப்துல் வஹாப் எம்.ஏ, பி.டி.ஹெச். அவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இஸ்லாமிய மாத இதழ். இந்த மாத இதழிலும் அக்பர் அண்ணன் பணி புரிந்து இருந்தார்.

பின்னர் வளர்மதி என்ற மாத இதழை அவரே தொடர்ந்து நடத்தினார். அக்பர் அண்ணன் ஏராளமானப் பத்திரிகை டைட்டில்களைப் பதிவு செய்து இருந்தார். அவைகள் எல்லாம் வெளிவரவில்லை.

முஸ்லிம் லீகின் சொந்த இதழான உரிமைக் குரல் வார இதழ் காயிதே மில்லத்தை நிறுவனராக ஏற்றும், சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் பொருளாளர் இளையான் குடி பி.என்.ஐ.அபு தாலிப் அண்ணனை வெளியீட்டாளராகப் பெற்றும், ஏ.கே.ரிபாயி சாஹிபை ஆசிரியராகக் கொண்டும் வெளிவந்தது.

ஒரு காலகட்டத்தில் உடல் நலக் குறைவின் காரணமாக ஏ.கே.ரிபாயி சாஹிப் அவர் சொந்த கிராமமான வாவா நகரத்தில் வந்து குடியேறி வாழத் தொடங்கினார். அந்த நிலையில் சரித்திர ஆசிரியர் ஹசன் அண்ணன் (செய்யதுனா) உரிமைக் குரல் பத்திரிகையின் பொறுப்பை ஏற்று நடத்தினார். மிகக் குறுகிய காலத்தில் அந்தப் பணியில் இருந்து அவர் தன்னை விலக்கிக் கொண்டார். அதன் பிறகு காயிதெ மில்லத் அவர்கள் எம்.ஏ.அக்பர் அண்ணனிடம் உரிமைக்குரல் வார இதழ் பொறுப்பை ஒப்படைத்தார்கள். ஐந்தாறு ஆண்டுகள் தொடர்ந்து உரிமைக் குரல் வெளி வந்தது. அப்படி உரிமைக்குரல் வெளிவந்த காலம் முழுவதும் எம்.ஏ.அக்பர் அண்ணன் தான் நடத்தி வந்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தினுடைய தலைவராக காயிதே மில்லத்தின் மகனார் மியான் கானும், பொதுச்செயளாலராக அக்பர் அண்ணனும் இணைந்து பணியாற்றி வந்தார்கள்.

அந்தக் காலத்தில் அச்சுத்துறை இன்று இருப்பது போல வளர்ச்சிப் பெற்று இருக்கவில்லை. கைகளால் அச்சுக் கோப்பதும், ஈயத்தால் உருவான பிளாக்குகளில் படங்களைப் பதிவு செய்தும், அச்சு இயந்திரங்களில் அச்சிட்டும் தான் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டு இருந்தன. இந்த அத்துனைத் துறைகளிலும் அக்பர் அண்ணனின் அறிவு அபாரமானது.

இந்த கால கட்டங்களில் தாய்ச் சபையின் தலைமை நிலையத்திலேயே தங்கி இருந்தார் அக்பர் அண்ணன். அவர் வயது என்ன என்பது அல்லாஹ்விற்குத் தான் வெளிச்சம். ஆனால் அவர் அப்பொழுதும் திருமணம் செய்திருக்கவில்லை.

அதற்குப் பின்னர் மீண்டும் ஆலந்தூருக்கு குடியேறி விட்டார். அக்பர் அண்ணன் எழுத்துக்கள் மட்டும் வசீகரமானது அல்ல, எவ்வளவு தேவை என்று அவரிடம் சொல்லி விட்டால் அந்த அளவில் சொல்லி வைத்தது மாதிரி எழுதித் தருவார்.

பத்திரிகை கம்போஸிங் நடந்து கொண்டு இருக்கும். கம்போஸ் பண்ணிக் கொண்டு இருப்பவர் அக்பர் அண்ணனிடம் வருவார், “இந்தப் பக்கத்துக்கு 20 வரிகள் தேவை ஏதாவது எழுதித் தாருங்கள்என்று கேட்பார். அக்பர் அண்ணன் அவரிடம் திரும்பக் கேட்பார், “எது மாதிரி வேண்டும்?” என்று.

அக்பர் அண்ணனின் பேனா, பேப்பரில் குனிந்து எழுதத் தொடங்கும். அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதி முடிக்கும். கம்பாஸிடர் அதை அச்சுக் கோப்பார். சரியாக 20 வரிகள் இருக்கும். அதில் கூடாது, குறையாது.

கவிஞர் காசிம் அப்போது கம்பாசிடர். அக்பர் அண்ணனிடம் 10 வரி வேண்டும் அது துணுக்காக இருக்க வேண்டும் என்று கேட்பார். அக்பர் அண்ணன் உடனே எழுதித் தருவார். அது பத்து வரிதான் இருக்கும். இரண்டரை பக்கத்துக்கு வேண்டும் அரை பக்கம் விளம்பரம் போட வேண்டும் என்பார். அது ஒரு குட்டிக் கதையாக இருக்க வேண்டும் என்று மேலும் சொல்லுவார். அக்பர் அண்ணன் உடனே எழுதித் தருவார். நல்லதொரு குட்டிக் கதை இருக்கும். இரண்டரைப் பக்கத்துக்கு சரியாக இருக்கும். கூடாது, குறையாது.

இப்படி நூறு முறைகளுக்கு மேல் அக்பர் அண்ணன் கம்பாஸிடர்களால் பரிசோதிக்கப்பட்டார். அக்பர் அண்ணன் தோற்றதே இல்லை. கம்பாஸிடர்கள் தான் வெட்கப்பட்டு இருக்கிறார்கள். எழுத்து முறையில் அவ்வளவு தெளிந்த ஞானம் பெற்றவர் அக்பர் அண்ணன்.

கவிஞர் காசிம், “எழுத்துத் துறையிலும், அரசியல் சிந்தனையிலும் நான் அக்பர் அண்ணனிடம் முரீது வாங்கியவன். என்னை கவிஞர் காசிம் என்று சொல்வதை விட காசிம் ஆலந்தூரி (ஆலந்தூர் அக்பர் அண்ணன் வாழ்ந்த பகுதி) என்று அழைப்பதில் பெருமைப் படுகிறேன்என்று தலைவர் அப்துஸ் ஸமதிடம் கவிஞர் ஒருமுறை கூறினார்.

முஸ்லிம் லீகில் இளைஞர் அணித்தலைவராக காயிதே மில்லத்தால் நியமிக்கப் பட்ட செங்கம் ஜப்பாருக்கு அரசியல் குரு அக்பர் அண்ணன். ஆனால் ஜப்பார் மமதையால் முஸ்லிம் லீகைவிட்டு வெளியேறினார்.

முஸ்லிம் லீகின் மாநிலப் பொதுச்செயளாலராக இருந்த எம்.ஏ. லத்தீஃப் சாஹிபிற்கு அரசியல் ஆலோசகராக இருந்தவர் அக்பர் அண்ணன். ஆனால் லத்தீஃப் சாஹிப் குதர்க்கத்தால் லீகைவிட்டு வெளியேறினார்.

மாநில முஸ்லிம் லீகின் பொருளாளர் பொதிகைக் கவிஞர் அ.சாகுல் ஹமீது சாஹிப் (என் சிறிய தந்தையார்) அவர்களுக்கு அரசியல் ஆலோசகராகவும் அக்பர் அண்ணன் இருந்தார். ஆனால் விடாப்பிடி குணத்தால் முஸ்லிம் லீகை விட்டு சாகுல் ஹாமீது சாஹிப் வெளியேற்றப் பட்டார்.

முஸ்லிம் லீகினுடைய மாநிலத் தலைவர் அப்துல் ஸமது சாஹிப் எம்.ஏ. அக்பர் அண்ணனை ஒரு கட்டத்தில் அழைத்து தன்னுடைய அறமுரசு பத்திரிகையின் முழுப் பொறுப்பையும் எம்.ஏ. அக்பர் அண்ணனிடம் கொடுத்து தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டார்.

எம்.ஏ. அக்பர் அண்ணனிடம் ஒரு பழக்கம் உண்டு. அன்றைய செலவுக்கு எவ்வளவு தேவையோ தன் எழுத்தின் மூலம் அந்தத் தொகையைச் சம்பாதிப்பார். அதற்கு மேல் அன்று சம்பாதிக்க மாட்டார். மறுநாள் ஆலந்தூரில் இருந்து வெறுங்கையோடுதான் சென்னை மண்ணடிக்கு வருவார்.

பிந்திய காலத்தில் அக்பர் அண்ணன் ஒரு கேரளத்து பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். ஆலந்தூரிலேயே அப்பொழுதும் குடியிருந்தார். குடும்பம் நடத்திக் கொண்டு இருந்த காலத்திலும் காலையில் வீட்டிலிருந்து வெறும் பையோடு மண்ணடிக்கு வருவார். மறு நாளுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கரிக்குத் தேவையானப் பணத்தை சம்பாதித்துக் கொண்டு இரவு ஆலந்தூருக்கு சென்று விடுவார்.

ஒரு கட்டத்தில் நாங்களெல்லாம் அவரிடம் கேட்டோம், “அண்ணே ஒரு நாள் தேவை பூர்த்தி பொருளாதாரத் திட்டம் ஆபத்தானதே. இதை இனி மேலாவது மாற்றிக் கொள்ளக் கூடாதா?” என்று.

அதற்கு அக்பர் அண்ணன் சொன்ன பதில், “இன்று இருக்கிறேன். நேற்றும் இன்றும் நாளையும் அல்லாஹ் கையில் இருக்கிறதுஎன்பதே.

நாங்கள் அவர் தொழுது பார்த்ததில்லை. ஆனால் இறை நம்பிக்கை அவரிடம் அழுத்தமாக இருந்திருக்கிறது. அக்பர் அண்ணனின் இறுதி கால கட்டம் வறுமையானது. இறைவன் ஒரு நாள் அவரை வறுமையில் இருந்து விடுவித்து விட்டான். ஆம் அவர் மரணித்து விட்டார்.

தற்போது அவர் துணைவியாரும் குழைந்தைகளும் கேரளத்தில் எங்கேயோ இருப்பதாகத் தகவல்.

அக்பர் அண்ணன் ஒரு வினோத விந்தை...!!!