Monday, October 6, 2014

பாரதி இந்தியா..!


எட்டையபுரத்து அற்புதம் மகாகவி பாரதி. பாரதி போற்றப்பட்ட அளவுக்கு பாரதி காலத்து எந்தக் கவிஞரும் தமிழர்களால் நேசிக்கப் பட்டவர்கள் அல்லர்.

பாரதியின் சிந்தனையின் பரப்பளவு இந்தியா முழுவதும் பரவி இருந்தது. அதையும் தாண்டி உலகப் பரப்பளவிலும் பாரதியின் பார்வையின் வீச்சு விரிந்து இருந்தது.

பாரதி வாழ்காலத்தில் அவரால் சந்திக்க முடியாத சுதந்திர இந்தியா, சுதந்திர காலத்தில் எப்படி எல்லாம் இருக்கும் என்ற கற்பனையை உறுதியோடும் ஆழமாகவும் பதிவு செய்திருக்கிறார்.

சுதந்திர இந்தியாவில் வெளிநாட்டுக் கொள்கை எப்படி எல்லாம் அமைந்திருக்க வேண்டும் என்ற சிந்தனையையும் பாரதி முன்வைத்திருக்கிறார்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.
என அண்டை அயல் நாட்டோடு நட்புறவுகளை எப்படியெல்லாம் விரிவு படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கனாக் கண்டுள்ளார்.

இந்தியத்திற்குள்ளும் மொழி, இன, மாநில பிரிவினைகளை உச்சப் படுத்தி மோதிக் கொண்டால், அது இந்தியத்தினுடைய வீழ்ச்சியாக மாறிவிடக் கூடும் என்ற பக்குவத்தையும் அவர் கனாச் செய்தி வெளிப்படுத்துகிறது.

இந்தியத்திற்குள்ளே எப்படியெல்லாம் பரிவர்த்தனைச் செய்து கொள்வோம் என்ற பண்புகளையும் முன்வைக்கிறார்.

தென்கடலிலே முத்துக் குளிப்போம். மேற்கு கரையிலே அதற்குள்ள சந்தை அமைப்போம். தங்கம் குடைந்தெடுப்போம். எட்டுத் திசைக்கும் அதை ஏற்றுமதி பண்ணுவோம்.

கங்கை நதிப்புரத்துக் கோதுமையை காவிரிக்கரை வெற்றிலைக்கு பரிமாறிக் கொள்வோம்.

மராட்டியரின் கவிதைக்கு, மலையாளத்து யானைத் தந்தங்களைத் தருவோம். காசி நகரிலே நடைபெறும் புலவர் விவாதங்களைக், காஞ்சி நகரத்திலிருந்து கேட்பதற்கு வானொலி நிலையங்களைச் சமைத்து வைப்போம்.

ராஜ புத்திர வீர்ர்களுக்குக் கன்னடத்து தங்கம் தருவோம். இப்படி எல்லாம் கூறி இந்திய மாநிலங்களுக்கு இடையிலே ஐக்கியத்தை ஏற்படுத்தினார் மகாகவி பாரதி.

பாரதியின் கனவு மகத்தானது ஆனால் இன்றைய நடப்பு அவமானகரமானது.

காவிரி நீர் கேட்டு தமிழகம், உச்சநீதி மன்றத்தையும் பிற நீதிமன்றங்களையும் நாட வேண்டி இருக்கிறது. பெரியார் நீர் தேக்கத்திற்குக் கேரளத்து அரசு கெட்ட செயல்களைச் செய்து கொண்டிருக்கிறது.

மகாகவியின் கனவு இந்தியா, நடைமுறை நனவில் கிழிபட்டுக் கொண்டிருக்கும் மண் பரிமாணமாக மாறிக் கொண்டிருக்கிறது.

சுதேசிப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டியப் பட்டியலையும் கனவு இந்தியாவில் மகாகவி கண்டறிந்திருந்தார்.

பட்டினில் ஆடை செய்வோம். பருத்திப் பஞ்சிலும் உடைகள் உண்டாக்குவோம். அவைகளை உலக வணிகச் சந்தையில் கொண்டு விற்போம்.

ஆயுதங்களும் செய்வோம். அவற்றை முறையாகப் பயன்படுத்த தேவைப்படும் நூற்களுக்கு தேவையான காகிதமும் செய்வோம்.

ஆலைகளை உருவாக்குவோம். கல்வி சாலைகளைப் படைப்போம்.

ஓயுதலும் தலை சாயுதலும் செய்யோம். வாகனங்கள் செய்வோம். கடலில் உந்திச் செல்லும் கப்பல்களும் செய்வோம். வான் மண்டலத்தை பயன்படுத்துவோம். கடலின் கீழுள்ள செல்வங்களை அளந்து வைப்போம்.

சந்திர மண்டலம் போன்ற கிரகங்களைக் கண்டு தெளிவோம். காவியம் செய்வோம். காடுகள் வளர்ப்போம். கலை வளர்ப்போம். கொல்லர் உலை வளர்ப்போம். ஓவியம் செய்வோம். ஊசிகள் கூட செய்வோம்.

உலகத்துத் தொழில் அனைத்தும் நாமே உவந்து செய்வோம் என்று உற்பத்திப் பட்டியலைப் பாரதியின் கனவு விரிக்கிறது.

இந்தப் பட்டியலில் ஒரு அற்புதமான தகவலை பாரதி பதிவு செய்கிறார்.

தூய்மையான இந்தியாவை நாம் கண்டெடுப்போம். தூய்மைப் படுத்தும் தொழிலையோ தொழிலாளர்களையோ ஏளனப்படுத்தி விட முடியாது. தூய்மைப் படுத்தும் தொழிலை விஞ்ஞானப் படுத்துவோம். தூய்மைப் படுத்துவதற்கென்று ஒரு சாதியை உருவாக்காமல் தூய்மைப் படுத்தலை விஞ்ஞானப் பெருமைப் படுத்துவோம். தூய்மைத் தொழிலாளர்கள் விஞ்ஞானிகளாகக் கருதப்பட வேண்டியவர்கள்.

இப்படி ஒரு உரையாடலை பாரதியின் கனவு இந்தியா நமக்கு காட்டுகிறது.

சந்திகளையும் தெருக்களையும் தூய்மைப் படுத்தும் அந்தத் தொழிலைக் குறிக்க, பாரதி ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார். அதுதான் தெருப் பெருக்கும் சாத்திரம்என்பது.

வான்வெளியை அறிவது வான சாத்திரம். கடல் வழியை அளப்பது ஆழி சாத்திரம். ஞானங்களைப் புரிந்து கொள்ள வேத சாத்திரம் என்கின்ற சொற் பிரயோகத்தைப் போல் சாத்திரம் என்ற சொல்லாடலை விஞ்ஞானப் பூர்வமானது என்ற பொருளில் வேத சாத்திரம் என்ற தோரணையில் தெருப் பெருக்கும் சாத்திரம் என்ற மொழியாடலாகப் பயன்படுத்துகிறார்.

சந்தித்தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.

தெருப் பெருக்குவது என்பது நவீனப் படுத்தப்பட வேண்டிய விஞ்ஞானப் பூர்வமான கல்வியாகும் என்ற கருத்தை முதன்முதலில் தமிழ் மொழி வரலாற்றில் முண்டாசுக் கவிஞர் பாரதிதான் முன்வைக்கிறார்.

தூய்மை இந்தியா என்கின்ற இன்றைய கோஷம் வெறும் துடைப்பத்தோடு தெருக் கூட்டுவதோடு நின்று விடாமல் சாத்திரம் என்கிற அளவுக்குக் கண்ணியப்படுத்தப் பட்டால்தான் தூய்மை என்ற சொல் பொருள் கொண்டதாக இருக்கும்.

மோடியின் மேக் இந்தியா. தூய்மை இந்தியா பாரதி கண்ட கனவு பட்டியல் இந்தியா அல்ல. மோடி காணும் இந்தியா தன் ஆன்மாவை அழித்துக் கொள்ளக் கூடிய கோணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.


பாரதி இந்தியா, ஒரு கோட்பாட்டுப் பிரகாச இந்தியா. மோடி இந்தியா, மதத் துவேஷ, ஒற்றைச் சார்புடைய, சேனம் மாட்டியக் குருட்டு இந்தியா.

இதுதான் மனித வதை..!


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு, தூர்தர்ஷன் ஒளிபரப்பில் நேரடியாக ஒரு மணி நேரம் காட்டப்பட்டது பற்றி எதிர்ப்புகள் கடந்த இரண்டு தினங்களாக ஏராளமாக வந்து விட்டன. அந்த எதிர்ப்புப் பூரண நியாயமானது என்று பதிவு செய்து விட்டு, அது பற்றிய விளக்கங்களை இங்கே தவிர்த்துக் கொள்கிறேன்.

ஆனால் அவருடைய சொற்பொழிவில் உள்ள அடாவடித்தனமான கருத்துக்களை விமர்சிப்பது ஒரு இந்தியக் குடிமகனாகிய எனக்கு இருக்கும் உரிமைகளிலும் கடமைகளிலும் உள்ள தகுதியாகும். அதன்படி அவற்றைப் பதிவு செய்கிறேன்.

இது மாதிரியான பதிவு வேளைகளில், ஒரு பிழையான அணுகுமுறைகளும் திசை திருப்பும் சாதுர்யங்களும் மிகச் சிறுத்த சிலருக்கு ஏற்படுகிறது.

என் பெயர் ஹிலால் முஸ்தபா என்று இருப்பதால் இவன் ஒரு முஸ்லிம். இவர்களுக்கான ஆதாயங்களுக்காக வலிந்து பதிவு செய்கிறான்என்ற நினைப்பில் முரண்படுபவர்களைப் பற்றி நான் அக்கறைக் கொள்ளப் போவதில்லை. இப்படி எண்ணுபவர்கள் தங்களுக்குள்ளேயே தான்தோன்றித்தனமாக எண்ணிக் கொள்கிறார்கள். என்னைப் பொருத்தவரை எனக்குள்ள உண்மையை நான் மிகுதியும் நேசிக்கிறேன்.

தரப்பட்டு இருக்கும் செய்தியை அதன் வரலாற்றுப் பின்னணியோடு நான் நினைவு கூருகிறேன். இந்த நினைவு கூரலுக்கு எவரிடமும் அனுமதி வாங்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்னும் தார்மீகப் பொறுப்போடு இந்தப் பதிவை அமைக்கிறேன்.

பாகவத் தன் பேச்சில், ஒரு கோரிக்கை வைக்கிறார். பசுவதை மற்றும் இறைச்சி ஏற்றுமதிக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். இந்தச் சட்டத்தை அரசு நிறைவேற்றி ஆக வேண்டும்என்ற இவரது கோரிக்கையில் எத்தகைய அரசியல் அடங்கி இருக்கிறது? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பசு மாமிசத்தை இந்திய எல்லைக்குள் பிறந்தவர் எவரும் புசிக்கக் கூடாது எனச் சொல்ல முனையும் பாகவத் எந்த அடிப்படையில் இதைப் பேசுகிறார்?.

பசு இந்து சமூகத்தின் கடவுள். அதைப் புசிப்பது கடவுளைப் புசிப்பதற்குச் சமம். எனவே அதைப் புசிப்பவர் இந்தியாவில் இருக்கக் கூடாது என்று அவர் கருதுகிறார் போலும்.

வங்காளத்து பிராமணர்கள் மீன் புசிப்பதை மதரீதியாக அங்கீகரித்துக் கொண்டார்கள். அசைவத்துக்குள் இருந்த மீனை சைவத்துக்குள் பொருத்திக் கொண்டார்கள்.

மீன் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான மச்ச அவதாரம். இந்த மச்ச அவதாரத்தைப் புசிப்பது தெய்வத்தைப் புசிப்பதற்குச் சமம். இதற்கும் தடைச்சட்டம் கொண்டுவரக் கோரலாம்.

மலர்கள் அனைத்தும் தெய்வத்தோடு சம்மந்தப்பட்டப் புனிதங்கள். அந்தப் புனித மலர்களைச் செடிகளில் இருந்து, மரங்களில் இருந்து பிய்த்து வதை செய்து அவற்றைக் கொண்டு மாலைகள் அமைப்பதும் மண மேடை அமைப்பதும் பிண ஊர்வலத்தில் வீசி எறிவதும், பாகவத் போன்ற தலைவர்களின் தோள்களில் மாலையாக்குவதும் தெய்வத்தை வதை பண்ணுவது போல் அல்லவா ஆகிறது. அதற்கும் தடைச் சட்டம் கொண்டு வரலாம்.

மாமிச உணவு இந்திய உணவல்ல. இறைச்சி உணவு வகைகள் இந்தியர்களுக்கு உரியது அல்ல என்றெல்லாம் கருத்துச் சொல்லி அதை வலியுறுத்த அரசாங்கத்தைக் கட்டாயப் படுத்துவது வரம்பு மீறிய செயல்.

சிறுபான்மை முஸ்லிம்கள், கிருத்தவர்கள் மட்டும்தான் இறைச்சி, மாமிசம் புசிக்கும் மிலேச்சர்கள் என்ற பாணியில் பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ். தோன்றிய நாளில் இருந்து தொடங்கி வைத்து வருகிறது.

நான் தமிழன். நிச்சயமாகத் தமிழன். பிறப்பால் இஸ்லாமிய சமூகத்தில் பிறந்து வாழ்ந்து கொண்டு இருப்பவன். தமிழகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கக் கூடிய இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இந்தியத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கும் கூடத்தான் இது பொருந்தும். எங்கள் தமிழினத்தினுடைய வரலாற்றை நான் நினைவு கூருகிறேன்.

கடையேழு வள்ளல்களில் ஒருவனான அதியமான் பற்றிய தகவல் ஒன்றை நினைவு கூருகிறேன்.

தமிழ் மூதாட்டி அவ்வையார், புறநானூற்றிலே ஒரு தகவலைப் பதிவு செய்கிறார்.

அதியமானிடம் மது குறைந்த அளவில் இருந்தால் அந்த மதுவை எங்களுக்குத் தந்துவிட்டு, அவன் பருகாது இருந்து விடுவான். நிறைந்த அளவு இருந்தால் அவனும் அருந்தி எங்களுக்கும் வழங்குவான். அது மட்டும் அல்ல எலும்புகளே இல்லாத மாமிசத் துண்டுகளால் தயாரிக்கப்பட்ட உணவை எங்களுக்கு வழங்குவான். ஒரு கையிலே மதுக் கோப்பையையும் மறு கையிலே மாமிசத் துண்டையும் மாறி மாறி சுவைத்து மகிழ்ந்து கொண்டு இருப்போம்”.

இப்படிப் பதிவு செய்து இருப்பது பெண்பாற் புலவர் அவ்வையார். இப்படிப் பதிவு செய்து இருக்கக் கூடியக் காலம் முஹம்மது நபியின் காலத்துக்கும் முந்தைய காலம்.

தமிழர்களினுடைய உணவுகளில் மாமிசம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. தமிழர்கள் மட்டும் அல்லர் இன்றுள்ள இந்திய எல்லைக்குள் இருக்கும் அனைத்து இன மக்களின் உணவுப் பட்டியலில் மாமிசம் முக்கிய உணவாக இருந்திருக்கிறது, இருந்து வருகிறது.

வேதகால பிராமணர்கள் மாமிசம் புசித்து இருக்கிறார்கள். வேள்விகளில் பசுக்கள் பலியிடப்பட்டு இருக்கின்றன. பலியிடப்பட்ட பசுக்களை மற்ற நைவேத்தியங்கள் போன்றே, வேத விற்பனர்களும் மற்றவர்களும் புசித்துப் பருகி வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

பிந்திய பிராமணர்கள் மாமிசத்தைத் தவிர்த்து வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டார்கள். இந்தச் சிறுபான்மையினர் தங்களுடைய உணவு முறைகளை இந்தியாவில் உள்ள அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றச் சொல்கிறார்கள்.

இந்தியாவின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தலித்துகள் மற்றும் இந்திய இன மக்கள், தலைமுறை தலைமுறையாக வரலாற்றுக் காலம் தொடங்கி புசித்து வந்த உணவை, ஒரு சட்டம் போட்டுத் தடை செய்ய சொல்லுகின்ற அநாகரீகம் பாகவத் போன்றவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.

ஆனந்த விகடனின் பழைய ஆசிரியர் குழுவில் இருந்த மணியன், அந்தப் பத்திரிகைச் சார்பாக உலகின் பல பாகங்களுக்குச் சென்று வந்து, “இதயம் பேசுகிறதுஎன்று ஒரு பயணக்கட்டுரை எழுதினார்.

மணியன் அமெரிக்கா பற்றியப் பயணக் கட்டுரையில் குறிப்பிடும் ஒரு செய்தி இப்போது என் நினைவுக்கு வருகிறது.

அமெரிக்காவில் ஒரு விழாவில் விருந்தின் போது சில அமெரிக்கர்களோடும் அமெரிக்கத் தலைவர்களோடும் மணியன் கலந்துரையாடலில் ஈடுபட்டு இருந்தாராம். அவர்கள் பேச்சு இந்தியாவைப் பற்றித் திரும்பியதாம்.

அப்போது சிலர் மணியனிடம் கேட்டு இருக்கிறார்கள், “இந்தியா தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் இன்று இருக்கிறது. அங்கே பஞ்சம் அதிகரித்து இருக்கிறது. தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய அளவு விவசாயம் இல்லை. உணவுக்கு இந்தியாவில் தட்டுப்பாடு இருக்கிறது. இந்நிலையில் உங்களிடம் வைத்து இருக்கக் கூடிய கால்நடைகளை உணவுக்காகப் பயன்படுத்திக் கொண்டால் கொஞ்சம் தன்னிறைவு பெற வாய்ப்பு இருக்கிறது அல்லவா?.. இதை விட்டுவிட்டு பசு மாமிசத்தைப் புசிக்கத் தடை செய்யப் போராடி வருகிறீர்களே அது ஏன்?” – இதுதான் அந்த அமெரிக்கர்களின் கேள்வி.

மணியன் இதற்குப் பதில் சொல்லி இருக்கிறார், “பசு எங்களின் வணக்கத்துக்கு உரிய தெய்வத்தன்மை கொண்டது. அதை உணவாக எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்.
அமெரிக்காவுக்குப் பஞ்சம் வர வேண்டாம். ஒரு பேச்சுக்காகக் கேட்கிறேன் அப்படி ஒரு பஞ்சம் அமெரிக்காவில் வந்து விட்டால், நாங்கள் பசுவுக்குத்தரும் அந்தஸ்தை நீங்கள் உங்கள் வளர்ப்பு நாய்களுக்குத் தருகிறீர்கள். நானே இதை இங்கே கண்கூடாகப் பார்த்து இருக்கிறேன்.

அந்த நிலையில் நாயை, அறுத்துப் புசித்து பசியில் இருந்து தப்பித்துக் கொண்டால் என்ன? என்று நான் உங்களைக் கேட்டால் உங்களுக்கு அது எப்படி இருக்கும்?” இப்படி மணியன் கேட்டு இருக்கிறார்.

நான் அந்த அமெரிக்கர்களின் வாயை அடைத்து விட்டேன்அன்று சந்தோஷப் பட்டேன். ஆனால் அவர்கள் அனைவரும் தந்த பதில் என்னை அதிர வைத்து விட்டது. என்று மணியன் குறிப்பிடுகிறார்.

அந்த அமெரிக்கர்கள் சொல்லி இருக்கிறார்கள் மிஸ்டர். மணியன் அப்படி ஒரு நிலை அமெரிக்காவிற்கு ஏற்பட்டால் நாங்கள் நாய்களை அறுத்துப் புசிப்பதைப் பற்றி கவலைப்பட மாட்டோம். அந்த உணவை எப்படியெல்லாம் சுகாதாரமாய்த் தின்ன வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து முடிவு செய்வோம். மேலும் இன்னும் அதிக அளவில் நாய்களை எப்படி உற்பத்தி செய்யலாம் என்னும் ஆராய்ச்சியிலும் இறங்குவோம்” – என அந்த அமெரிக்கர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

பாகவத் உரையில் அமெரிக்காவை அங்கீகரித்துக் கொண்டு இருக்கிறார். இன்னும் இங்கு இருப்பவர்கள் எல்லாம் பல நேரங்களில் அமெரிக்காவை முன்னுதாரணமாக்குகிறார்கள். அமெரிக்காவின் இந்த நடைமுறையையும் இவர்கள் ஏற்றுக் கொண்டால் என்ன?..

வங்கத்துப் பஞ்சம் இந்திய சரித்திரத்தைத் திக்பிரம்மை பிடிக்க வைத்த ஒரு கொடூரப் பஞ்சம். அந்தக் காலகட்டத்தில் மழை இல்லா காரணத்தால் உணவு தானியங்கள், உற்பத்தி அற்றுப் போயின. உணவில்லாக் காரணத்தால் பாமர மக்கள் நடைபாதைகளில் செத்துக் கிடந்தார்கள். உணவில்லாக் காரணத்தால் செத்த மிருகங்களின் மாமிசத்தைப் புசித்தார்கள். மீன்களை அருந்தினார்கள். இந்த நிலையில் பசுக்களையும் உணவாக்கினார்கள்.

மஹாராஷ்டிரத்தில் இருந்த சில இந்து அமைப்புகள், பசுக்கள் அறுபடுவதைச் சகிக்காமல் அதற்கு மாற்று வழி காண, உணவுக்காக விற்கப்படும் பசுக்களை வங்கத்தில் இருந்து விலை கொடுத்து வாங்கி வந்து மராட்டியத்தில் ஒரு பெரும் நிலப்பரப்பில் அந்தப் பசுக்களை மேய விட்டு, அந்தப் பசுக்களே சாகும் வரை வாழ வைப்பது என முடிவு செய்தனர். (அதாவது தெய்வங்களைக் கொல்லக் கூடாது, தெய்வங்கள் தாங்களாகவே செத்துக் கொள்ளட்டும் என்பது போல).

இதற்குப் பெரும் தொகை தேவைப்பட்டது. மக்களிடம் வசூல் செய்வது என முடிவு செய்தனர். இதற்காகச் சுவாமி விவேகானந்தரையும் நாடினர்.

சுவாமி விவேகானந்தர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

வங்காளத்தில் மக்கள் பசியால் செத்துக் கொண்டு இருக்கும் பொழுது பசுக்களைப் பாதுகாக்க நினைப்பது வினோதமானது, ஏற்க முடியாதது. கடவுள்களை, கடவுளாக்கிப் பார்ப்பதற்கு மனிதர்கள் மட்டுமே மிக முக்கியமானவர்கள். இந்த மனிதர்கள் எல்லாம் மரணக்குழியில் விழுந்து கொண்டு இருக்கும் பொழுது அந்தக் கடவுளர்கள் எல்லாம் யாருக்காகத் தேவைப்படுகிறார்கள்?” என்று சுவாமி விவேகானந்தர் பதில் சொல்லி விட்டார்.

முன்னே சொன்ன அமெரிக்கத் தத்துவம் அந்நியத் தத்துவமாக இருக்குமேயானால் அதைத் தவிர்த்து விட்டு சுவாமி விவேகானந்தர் காட்டிய இந்திய வழி முறையை ஏற்றுக் கொள்வதர்க்கு ஏதாவது தடை இருக்கவா முடியும்?..

இவ்வளவு தூரத்திற்கு முரண்பட்ட செய்திகளை முன்வைத்த பாகவத் உரையை இந்தியப் பிரதமர் மோடி பாராட்டி வரவேற்று இருக்கிறார்., “மோகன் பாகவத் தனது உரையில் தேசத்தின் முக்கியமானப் பிரச்சினைகள் குறித்துப் பேசியுள்ளார். சமூக சீரமைப்புப் பற்றிய அவரது கருத்துக்கள் மிகப் பொருத்தமானவைஎன்று மோடி பாராட்டி உள்ளார்.


பிரதமர் மோடி மறைத்து வைத்து இருக்கும் ஒவ்வொரு கறும்பூனைக் குட்டிகளும் ஒவ்வொன்றாகத் துள்ளிக் குதித்து வெளிவரத் தொடங்கி விட்டன.

Thursday, October 2, 2014

உயிரற்ற வாழ்க்கையா? உடன்கட்டை ஏறலா?

சில தினங்களுக்கு முன்னால் எனக்கு மிக அணுக்கமான மைத்துனர் உறவுமுறை கொண்ட ஒருவர் இறந்துவிட்டார்.

கடந்த பத்தாண்டுகளாகப் படுத்த படுக்கையாகவே அவருடைய வாழ்க்கை நகர்ந்து வந்தது. இறக்கும் பொழுது அவருக்கு வயது 48. அதாவது அவர் படுக்கையாகப் படுக்கும் பொழுது அவர் வயது 38.

அவருக்கு வாழ்க்கை இறையருளால் இவ்வளவு சுருக்கமாகவே வழங்கப்பட்டது.

அவருடைய துணைவியாரும் எனக்கு மிக அணுக்கமான கொழுந்தி முறைப் பெண்மணி. அவருக்குத் தற்போது வயது 44. இளமைப் பருவத்தில் கிடைத்த வாழ்க்கையின் பயனாக ஒரு மகனும் ஒரு மகளும் அவளுமாகத் தனித்து விடப் பட்டிருக்கின்றனர்.

முப்பத்து நான்கு வயதில் அவளுக்குத் தாம்பத்திய வாழ்க்கை இல்லாது போயிற்று. 44 வது வயதில் கைம்பெண் வாழ்க்கைக் கற்றுக் கொடுக்கப் படுகிறது.

இந்த இளம் விதவையின் வாழ்வு முறையை எண்ணிப் பார்க்கும் பொழுது மனதில் ஒரு பாராங்கல் வந்து அமர்கிறது.

விதவை என்ற வார்த்தையைப் படிப்பவர் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற அடிப்படையில்தான், அந்தச் சொல்லை நான் பயன்படுத்துகிறேன்.

அப்படி ஒரு சொல்லே எனக்கு உகப்பானது அன்று. விதவைத்தனம் என்பது பெண்கள் மீது ஒரு சமூகம் நடத்துகின்ற கொடூரமானத் தாக்குதல் என்றுதான் வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

தாலி பெறுவதும், தாலி அறுப்பதும் என்ற சடங்குகளுக்கு முன்னும் பின்னும் நடுப்பகுதியிலும் அமைகின்ற நம் தமிழகச் சமூகத்துப் பெண்களின் வாழ்வுமுறை தனியாகப் பதிவு செய்ய வேண்டிய ஒன்றுதான்.

அதைத் தனியே சில பதிவுகளாக வாய்ப்பு வரும் பொழுது நானே எழுத இருக்கிறேன்.

இங்கே ஒரு வரலாற்றுப் பெண்ணின் பதிவினைப் பதிவு செய்கிறேன்.

ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன். இவன் பாண்டிய மன்னன். இந்தப் பூதப் பாண்டியன் மரணித்து விடுகிறான். இந்த மன்னனின் மனைவி தேவி கோப்பெரும் பெண்டு விதவை வாழ்க்கையைப் பதிவு செய்கிறாள்.

இந்தப் பதிவு ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பானது அல்ல. புறநானூற்றுக் காலத்துப் பதிவு.

விதவை வாழ்க்கை எப்படி இருந்தது தெரியுமா?

கணவனை இழந்துவிடும் பெண்கள் உடன்கட்டை ஏறிவிட வேண்டும். அதை ஏற்கத் தயங்கிய பெண்கள் சில சட்டதிட்டங்களுக்குக் கட்டுபட்டு வாழ்ந்தாக வேண்டும்.

பொடி அரிசி சாதத்தை அவர்கள் உண்ணக் கூடாது. நெய் பட்ட எந்த உணவையும் அருந்தக் கூடாது. முதல் நாள் சோற்றை நீர் ஊற்றி மறு நாள் அந்த நீரில் இருக்கும் பருக்கையை கைகளால் பிசைந்து உருண்டைச் செய்து எள் துவையல், புளி சேர்த்து வெந்த வேளைக் கீரை உடன் சேர்த்து மூன்று வேளையும் உணவாக்கிக் கொள்ள வேண்டும்.

பாய் விரித்துப் படுக்கக் கூடாது. பரற்கற்களைப் பரப்பி பாயில்லாமல் அதில்தான் படுத்துத் தூங்க வேண்டும்.

இந்தக் கோர வாழ்க்கைதான் கைம்பெண் (விதவை) வாழ்க்கை.

பாண்டியன் மனைவி இந்த அவல வாழ்க்கையை வாழ்வதைவிட கணவன் எரியூட்டப்பட்ட எரிதழலிலேயே வெந்து சாம்பலாகி விடுவது மேலானது எனக் கருதி உடன்கட்டை ஏறி எரிந்து விடுகிறாள்.

உடன்கட்டை ஏறுவதற்கு முன்னர் அவள் பதிப்பித்த அந்தப் பதிவுதான் புறநானூற்றில் பதிவாகி இருக்கிறது.

தினம்தினம் வெந்து மடியும் வாழ்வைவிட ஒருமுறை எரிந்து அழியும் வாழ்க்கை மேலானது என்று கருதிவிட்டாள்.

சில சடங்குகள் பிழையாகப் பதிவாகி விடுவதால் ஒரு அரும் வாழ்க்கை அழிந்துப் போவது கூட உயர்வானதாக ஆகிவிடுகிறது.

அரசாண்ட மன்னனின் மனைவிக்கு இதுதான் நிலையென்றால் அங்கு வாழ்ந்த குடிமக்களுக்கு இந்த வாழ்வு முறை எப்படியெல்லாம் திணிக்கப்பட்டிருக்கும்?

வரலாற்றின் ரத்தக் கசிவுகள் இவைகள்.

தமிழர்களுக்கும், உடன்கட்டை ஏறுதலுக்கும் எப்படி ஒரு பிணைப்பு ஏற்பட்டது?

இது தமிழகத்து வாழ்க்கை முறையா?

எங்கிருந்து இது திணிக்கப்பட்டது?

இவைகள் எல்லாம் தனியே பதிவு செய்யப் பட வேண்டிய தகவல்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் இதைப் பற்றி பேசுவோம்.

என் உறவுக்கார பெண்மணிக்கு இப்பொழுது நடைமுறைப்படுத்த வழங்கப்படும் அறிவுரைகள் மிக வேதனையாக இருக்கிறது.

கணவனை இழந்த ஒரு பெண் நான்கு மாதம் பத்து நாட்கள் அவர்கள் தங்கி இருக்கும் இல்லத்திலேயே கொஞ்சம் தனித்து இருக்க வேண்டும் என இஸ்லாம் சொல்கிறது.

கணவனை இழந்த ஒரு பெண் தானே உழைத்துத் தன் உணவையும், தன் குடும்பத்தார் உணவையும் பெற்றாக வேண்டும் என்ற நிலை இருந்தால் நான்கு மாதம் 10 நாட்கள் தனித்து இருக்க வேண்டும் என்ற வாழ்க்கை முறையைப் பாதுகாப்பான நிலையில் தவிர்த்துக் கொள்ளலாம் என்பதும் இஸ்லாம் சொல்லும் கருத்து.

இந்தக் காலகட்டத்திற்குச் சொல்லப் படும் காரணம், மறைந்த கணவன் மறைவுக்கு முன்னர் இவர்களுக்கு இடையே தாம்பத்யம் நடைபெற்று அவள் கருத்தரித்து இருந்தால் அதைக் கண்டறிய நான்கு மாதங்கள் தேவைப் படுகிறது. மறைந்த கணவனுக்குரியதுதான் அந்தக் கரு என்ற உறுதிக்கு இந்த இடைவெளி அவசியமாகிறது.

இந்தக் காலகட்டத்திற்குப் பின் அந்தப் பெண் தனித்து தன் வாழ்க்கையைத் தொடர்வதற்கோ, இல்லையென்றானால் பல அவசிய காரணங்களுக்காகவோ மறுமணம் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டால் அவளுக்கு அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள உரிமை இருக்க வேண்டும்.

இந்த உரிமையைப் பெறுவதற்கு நான்கு மாதம் பத்து நாள் இடைவெளி தேவைப் படுகிறது. இந்த நான்கு மாத கால இடைவெளியில் அவள் கருத்தரித்து இருப்பது உறுதியானால் அந்தக் கரு மண்ணுலகுக்கு வரும் காலம் வரை பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்.

அதற்குப்பின் அவள் தனி வாழ்க்கையையோ மண வாழ்க்கையையோ மேற்கொள்ளலாம் அது அவள் விருப்பம்.

இந்தக் கால இடைவெளிக்கு பெயர், “இத்தா இருத்தல்”. இந்த இத்தா இருத்தலை இன்று நெல்லை மாவட்டத்து முஸ்லிம் சமூகம் வரைமுறைப் படுத்தி இருக்கக் கூடிய போக்கினைப் பார்த்தால் இஸ்லாம் இவ்வளவு கடுமையாகவா இருக்கிறது? என்று எண்ணத் தோன்றுகிறது.

என் உறவுக்கார பெண்மணியிடம் சமூகத்து ஆண்களும் பெண்களும் இத்தா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்என்ற ஒரு செயற்பாட்டை வற்புறுத்துகிறார்கள்.

இந்தச் சமூகம் வற்புறுத்தும் இந்த நடைமுறைகளை இஸ்லாம் நிச்சயம் வலியுறுத்தவில்லை.

இத்தா இருக்கும் அந்தப் பெண்,
கலர் ஆடைகளை உடுத்தக் கூடாது.
அடுக்களைக்குச் செல்லக் கூடாது.
நெருப்பைப் பார்க்கக் கூடாது. அது தீட்டு.
உணவைப் போதிய அளவு அருந்தக் கூடாது.
குளியலை காலை மாலை வேளைகளில் நிகழ்த்தக் கூடாது.
இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் குளிக்கலாம்.

இப்படித்தான் இத்தா முறை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப் படுகிறது.

இஸ்லாம் இதை எங்கும் எப்பொழுதும் சொல்லவில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் என்ற இவர்கள், இவர்களுக்குத் தோன்றிய இஸ்லாத்தை, இஸ்லாத்தின் முதுகில் ஏற்றி ஊர்வலம் விடுகிறார்கள்.

ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் மனைவி, தேவி கோப்பெரும் பெண்டு கைம்பெண் வாழ்க்கையைவிட கனலில் எரிந்து சாவது மேலென்று சொன்னாளே அந்தப் புறநானூற்றுக் கால வேதனை, வெதும்பல் பெருமூச்சு இன்றும் இங்கே ஒலிக்கிறதே என்ற வேதனையை எண்ணும் பொழுது நமது ரத்த நாளங்களிலும் கனல் சூடு பரவத்தான் செய்கிறது.

தாலி பெறுவது திருமணத் தொடக்கச் சடங்கு. தாலி அறுப்பது திருமண முறிவுச் சடங்கு. இப்படி உள்ள வாழ்க்கை, தமிழகத்துச் சமூக வாழ்க்கைதானா? இல்லையென்பது, வரலாற்றுத் தெளிவு. முடிவு.

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்! பத்தாயிரம் காலத்து மரம்! என்ற தகவல்களுக்குப் பின்னால் பதுங்கி இருக்கக்கூடிய சமூகப் பயங்கரம் பற்றிக்கூட நாம் விரிவாகப் பேசித்தான் ஆக வேண்டும்.

தாலியைக் கழுத்துக்குத் தருவதும் அதை அறுத்தெடுத்து எறிவதும் எங்கிருந்து வந்தது?

இந்த வந்துசேர்ந்த வாழ்க்கை எவ்வளவு பெரிய வேதனைகளை நம் பெண் சமூகத்திற்குத் தர்மக் கொடை போல வழங்கி இருக்கிறது. இந்த அநாச்சாரச் சடங்குகள், தேவி கோப்பெரும் பெண்டுவின் முடிவைப் போலவே நம் காலத்துப் பெண்களையும் முடிவெடுக்கச் செய்யலாம். அல்லது உங்கள் திணிப்புகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்என்று கூறி அவைகளைக் காறித் துப்பிச் சமூக முகத்தின் மீது தூக்கி எறிந்தும் விடலாம்.

ஒரு அமைதி வாழ்க்கை வேண்டும். அழிவு வாழ்க்கை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றே அல்ல. அத்துமீறும் வாழ்க்கை கவலையோடு கண்காணிக்கப்பட வேண்டிய வாழ்வாக மாறி விடுகிறது.


அமைதி வாழ்க்கைதான் அனுமதிக்கப்பட வேண்டிய பூரணமான வாழ்க்கை.

இதெல்லாம் எப்படி நடந்தது?–45

மாணவனேயாக முடியாத நானும்!
மதிப்புமிக்க என் ஆசிரியர் பெருமக்களும்!.


யாருக்காவது இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்து இருக்குமா?...

கிடைத்து இருக்காது..

கிடைத்து இருக்கக் கூடாது என்பதே என் எதிர்ப்பார்ப்பு!

எங்கள் வீட்டில் யாருக்கும் இல்லை. எங்கள் குடும்பத்திலும் யாருக்கும் இல்லை. எங்கள் தெருவிலும் யாருக்கும் இல்லை. நான் படித்த ஆரம்பப் பள்ளிக் கூடத்திலும் யாருக்கும் இல்லை.

ஆனால் எனக்கு மட்டும் அந்த வாய்ப்புக் கிடைத்தது.

எங்கள் சொந்தக் கிராமம் வாவா நகரம். பொதிகை மலை அடிவாரக் கிராமம். இந்தக் கிராமத்தில் இரண்டு ஆரம்பப் பாட சாலைகள் உண்டு. ஒன்று முஸ்லிம் ஆரம்பப் பள்ளிக் கூடம். சற்றுப் பக்கத்தில் இந்து ஆரம்பப் பள்ளிக் கூடம். இரண்டுக்கும் நடுவில் எங்கள் வீடு. கொட்டாரம். அந்த கிராமத்தில் கொட்டாரம்தான் அன்றைக்கு வலுத்த பெரிய பங்களா.

எனக்கு ஐந்தாவது வயது. என்னிலும் வயது குறைந்தவர் என் மாமி மகன் மாப்பிள்ளை அப்துல்லா. எங்கள் இருவரையும் ஒண்ணாவது வகுப்பில் சேர்க்கப் போகிறார்கள். எங்கள் வீட்டில் உள்ள அத்தனைப் பிள்ளைகளையும் இந்து ஆரம்பப் பாடசாலையில்தான் எங்கள் தாதா சேர்த்தார்கள்.

என்னையும் மாப்பிள்ளை அப்துல்லாவையும் எங்கள் ஊர் பள்ளிக்கூட வழக்கப்படி சரஸ்வதி பூஜை அன்றுதான் சேர்த்தார்கள். நானும் மாப்பிள்ளை அப்துல்லாவும் புத்தாடை அணிந்து இருந்தோம். அந்த இந்து ஆரம்பப் பாடசாலையில் 5 ஆசிரியர்கள் பணி புரிந்தார்கள். அவர்களுக்கும் புத்தாடைகள் வழங்கப் பட்டன.

பழங்களும், இனிப்புகளும் தட்டுகளில் பரப்பப்பட்டுத் தூக்கி வந்தனர். நாங்களும் அழைத்து வரப் பட்டோம். பள்ளியில் சேர்க்கப் பட்டோம். பள்ளியின் அத்தனை ஆசிரியர்களுக்கும் குருதட்சிணைப் பணம் வழங்கப் பட்டது. மதிய உணவு எங்கள் கொட்டாரத்தில் பரிமாறப் பட்டது. இப்படித் தடபுடலோடு என்னுடைய ஆரம்பப் பள்ளி சேர்க்கை ஆரம்பம் ஆனது.

மாப்பிள்ளை அப்துல்லா, அந்தப் பள்ளிக் கூடத்தில் அந்த ஆண்டு தொடர்ந்து படித்தார். நான் மட்டும் ஆறாவது மாதத்தோடு நிறுத்தப் பட்டேன். என் தாய், தந்தையருடன் சென்னைக்குக் குடி பெயர்ந்துவிட்டேன். அந்த ஆண்டு ஆரம்பப் பாடம் அவ்வளவுதான்.

சென்னை மண்ணடி செம்புதாஸ் தெருவில் குடியேறினோம். அடுத்த ஆண்டு தம்புச் செட்டித் தெருவில் உள்ள எலமென்ட்ரி ஸ்கூலில் ஒண்ணாவது வகுப்பில் திரும்பச் சேர்ந்தேன். அந்த ஆண்டும் ஒண்ணாவது வகுப்பு முற்றுப் பெறவில்லை. பாதியில் நின்றது.

மீண்டும் தென்காசிக்குக் குடி வந்தோம்.

அடுத்த ஆண்டு தென்காசியில் எங்கள் மேனேஜ்மென்டில் நடந்து கொண்டு இருக்கும் காட்டுபாவா ஆரம்பப் பாடசாலையில் மீண்டும் ஒண்ணாவது வகுப்பில் என் படிப்பு ஆரம்பம் ஆனது.

எனக்கு மட்டும்தான். இந்த ஒண்ணாவது வகுப்பு இழுபறியாக இழுத்துக் கொண்டு இருந்தது.

காட்டுபாவா பள்ளிக்கூடத்தில் அங்கம்மா டீச்சர் எனக்கு ஆசிரியை. வயது ஐம்பதைத் தொட்டுக் கொண்டு இருக்கலாம். கொஞ்சம் கனத்த சரீரம். அதற்குத் தகுந்த உயரம். வெள்ளை நிறம். என்னுடைய ஒண்ணாவது வகுப்பு ஆசிரியர்களில் இந்த டீச்சர்தான் இப்பொழுதும் நினைவில் இருக்கிறார்கள்.

பள்ளிக்கூட கிரவுண்டில் ஒண்ணாவது வகுப்பு மாணவ, மாணவியர் பொடிப் பொடிக் கற்களைப் பொருக்கி எடுத்துக் கொண்டு வகுப்புக்கு வருவோம். அந்தப் பொடிக் கற்களை தரையில் வரிசையாக அடுக்கி னா, ஆவன்னா எழுத்துக்களை அங்கம்மா டீச்சர் கற்றுத் தருவார்கள். கொஞ்சம் மணலையும் தரையில் பரப்பி வலது கை ஆட்காட்டி விரலை மணலில் அழுத்தி அனா எழுதக் கற்றுத் தருவார்கள். அன்றைய சிலேட் தரைதான். பல்பம் வலதுகை ஆள் காட்டி விரல்தான்.

எழுத்தறிவு எனக்கு இப்படித்தான் ஆரம்பம் ஆனது. எழுத்தறிவு தரப்பட்டு 5ஆம் வகுப்பு வரை 5 ஆண்டுகள் அந்தப் பள்ளியில்தான் கல்வி தொடர்ந்தது.

ஐந்து ஆண்டுகளும் நான் பாஸ் பண்ணேன். ஆனாலும் எழுத்தறிவு பற்றி ஏறுக்குமாறான நிலைதான் என்னிடம் இருந்தது.

ஆண்டுகள் 5 கடந்தன. படித்தேன் என்று நானும் சொல்லிக் கொண்டேன். பள்ளிக்கூடமும் ரெகார்ட் ஷீட் தந்தது.

அந்தப் பள்ளிக் கூடம் என்னைப் பொருத்தவரை, வாத்தியார்கள் வந்தமரும் பர்ணசாலை என்று மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது.

அங்கம்மா டீச்சர், குட்ட டீச்சர், பாத்துமா டீச்சர், வல்லத்து சார்வாள், சங்கரலிங்கம் சார்வாள், கண்ணாடி அசரத்து இவர்கள்தான் என் நினைவுகளில் இன்றும் நிற்கிறார்கள்.

அங்குக் கற்றக் கல்வி அந்த மைதானத்தில் எங்கோ சிதறி விழுந்து காணாமல் போய் விட்டது.

6-வது வகுப்பு தென்காசி ஐ.சி.ஐ.ஈஸ்வரன் பிள்ளை உயர் நிலைப் பள்ளியில் தொடங்கியது. இங்கும் விதி விட வில்லை. 6 மாதம்தான் 6 வது வகுப்பு. மீண்டும் சென்னைக்குக் குடியேற்றம்.

இப்போது சைதாபேட்டை ஆலந்தூர் ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டில் எங்கள் வாழ்க்கைத் தொடர்ந்தது.

அந்த ஆண்டு படிப்பு இல்லை. அடுத்த ஆண்டு சென்னை மண்ணடி தம்புச் செட்டித் தெருவில் இருக்கும் முத்தியாலுப் பேட்டை உயர் நிலைப் பள்ளியில் பழையபடி 6ஆம் வகுப்புச் சேர்ந்தேன். அந்த ஆண்டு 6வது வகுப்பு ஃபெயில். கல்விக் கூடத்தில் நான் அடைந்த ஒரே ஃபெயில் இதுதான்.

மீண்டும் ஆறாம் வகுப்பு. அந்த ஆண்டு பாஸ் ஆகிவிட்டேன். 7வது வகுப்பு அதே பள்ளியில். முழு ஆண்டுத் தேர்வு எழுதவில்லை. ஆனால் பாஸ் ஆகிவிட்டேன். 8வது வகுப்பு அதே பள்ளியில் பாதியோடு நின்றது.

என் பள்ளிப் பயணம் முடிவு பெற்றது.

முத்தியாலுப் பேட்டை உயர் நிலைப் பள்ளி என்றால் எனக்கு புலவர்.கந்தசாமி ஐயா மட்டுமே நினைவிற்கு வருவார். என்னமோ தெரியவில்லை அவர்தான் எனக்கு முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியாக இருந்தார்.

பள்ளிக்கூடங்களில் நான் மாணவனாக இருந்ததே இல்லை. ஆனால் அற்புதமான ஆசிரியர்கள் இருந்து இருக்கிறார்கள்.

படிப்பு நின்று விட்டது. எங்கள் வீட்டில் எனக்கு மட்டும்தான் இந்த வாய்ப்புக் கிடைத்தது.

பள்ளிக்கு வெளியேதான் எனக்குப் பாடங்கள் கிடைத்தன. அதற்கான ஆசிரியர்களும் என்னைப் பள்ளிக்கு வெளியேதான் கண்டெடுத்தார்கள்.

பள்ளிக்கூடத்துக்குள் மாணவனாக இல்லாதே போய்விட்ட நான், பள்ளிக்கு வெளியே மாணவனாகிக் கற்கத் தொடங்கினேன்.

என்னுடைய முதல் ஆசிரியர் கவிஞர்.தா.காசிம். இவர்தான் என்னை தமிழிடம் கொண்டு வந்து சேர்த்தவர். எனக்கும் இவருக்கும் அடிப்படை ஒற்றுமை ஒன்று உண்டு. இவரும் பள்ளிக் கூடம் சென்று படிக்காதவர். எனக்கு ஆசிரியர்.

அப்போது 18,19 வயதிற்கு உரியவனாகி விட்டேன். பள்ளிக்கூடத்தில் சென்று படிக்க ஆசை வந்தது.

சென்னை முத்தியாலுப் பேட்டை மேல் நிலைப் பள்ளியில் என் பழைய டி.ஸி. யை வாங்கிக் கொண்டு எங்கள் சொந்த கிராமம் வாவா நகரத்திற்கு வந்து விட்டேன். எங்கள் குடும்பச் செல்வாக்கைப் பயன்படுத்தி பக்கத்தில் உள்ள பண்பொழில் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்புச் சேர்ந்தேன்.

கவிஞர். தா.காசிம் தயாரிப்பில் இளம் கவிஞனாக வளர்ந்து இருந்தேன்.

முறுக்கிவிடப்பட்ட மீசை. முழுக்கை சட்டை. எட்டு முழ வேட்டி. தோளிலே ஒரு சிறிய டவல். இந்தக் கோலத்தில் அந்தக் கிராமத்து 8வது வகுப்பிற்குள் நுழைந்தேன். நான் மாணவனாகத்தான் நுழைந்தேன். வகுப்பறையில் இருந்த பொடிப்பொடி மாணவர்கள் தரையில் அமர்ந்து இருந்தனர். நான் வகுப்பறைக்குள் நுழைந்ததும், எழுந்து நின்று புது வாத்தியார் என்று வணக்கம் சொன்னார்கள்.

பிறகென்னப் படிப்பு?.. 8ஆம் வகுப்பு கல்வி முறிந்துவிட்டது.

நெல்லை பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற ஆ.ஜெபரத்தினம் ஐயா அவர்களோடு தொடர்பு கொண்டு ஒரு நல்ல மாணவனாகவே அவர்களுக்கு இருக்க முயற்சித்தேன்.

ஜெபரத்தினம் ஐயாதான் என்னைப் பதப்படுத்தியவர். அவருக்கு சிகரெட் பிடிப்பது சுத்தமாக ஆகாது. சிகரெட் பிடிப்பவரைக் கண்டால் அவர் கண் பார்வையில் கூட நிற்க அனுமதிக்க மாட்டார். அவரின் மகன் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து விட்டு கடைசிவரைத் தன் மகனை வீட்டிற்குள் அனுமதித்ததே இல்லை. அவ்வளவு கடுமையானவர்.

நான், ஐயாவோடு பழகுவதற்கு 6,7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவன். இந்தப் பழக்கத்தை அவரோடு இருக்கும் பொழுதும் நான் கைவிட்டதில்லை. ஒரு போதும் அவர் இதைத் தெரிந்து கொண்டு இருக்கவும் இல்லை. அவ்வளவு கள்ளத்தனமானவனாக இருந்தேன்.

அவர் உயரிய ஆசிரியப் பெருந்தகையார். நான் அவரையும் ஏமாற்றிய அரைகுறை மாணவன்.

ஒரு கட்டத்தில் ஜெபரத்தினம் ஐயா என்னை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் வகுப்பில் சேர்க்க ஏற்பாடு செய்தார். எந்த முறையிலும் மாணவனாக இருக்க வாய்ப்பற்று இருந்த நான், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை மாணவனாகச் சேர்ந்தேன்.

அண்ணாமலைக்கு வந்த உடன் நான் ஒரு விநோதத்தைக் கண்டு கொண்டேன். அன்றைய தினமே தமிழ் முதுகலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுதச் சொல்லி இருந்தால் அனைத்துத் தேர்வும் எழுதி இருப்பேன். எண்பது சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்து வெற்றியும் பெற்று இருப்பேன். விதிமுறைப்படி இது நடவாத காரியம். அந்த அளவிற்கு ஜெபரத்தினம் ஐயா என்னைத் தயார்ப் படுத்தி இருந்தார்.

புலவர் வகுப்பில் நான்கு ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சியில் ஓராண்டு, ஆகமொத்தம் 5 ஆண்டுகள் அண்ணாமலையில் மாணவனாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அங்கேயும் வகுப்பறைகளில் அதிகமாக நான் இருப்பதில்லை. என்னவோ தெரியவில்லை மாணவச் சட்ட திட்டங்களுக்குள் நான் உட்படாமலேயே வந்து இருக்கிறேன்.

ஆனால் என் ஆசிரியப் பெருமக்களை நினைவு கூரும் பொழுது என் அங்கமெல்லாம் புல்லரித்து இன்று கூட சிலிர்க்கிறது.

தமிழ்ப் பேரறிஞர் டாக்டர்.வ.சுப.மாணிக்கனார். இவரின் பாசத்தை அதிகம் பெற்ற செல்லைப் பிள்ளை நான்.

உளுந்தூர் பேட்டைப் சு.சண்முகம் ஐயா. இவர் எனக்குத் தந்தையாக, ஆசிரியராக, சக தோழராக, இன்னும் தாண்டி தமிழ் வார்த்தைகளில் சரியாக சொல்லிக் காட்ட முடியாத பண்பாளராக நிறைந்து இருக்கிறார்.

பேராசிரியர் டாக்டர். சோ.ந. கந்தசாமி ஐயா. உயர்ந்த தமிழ் அறிஞர். என் மீது ஆழமான உள் அன்பு கொண்டவர்.

பேராசிரியர் டாக்டர்.வைத்தியலிங்கம் ஐயா. நுண்கலை ஞானம் மிக்கவர். என் மீது அதிகம் பாசம் காட்டியவர்.

பேராசிரியர். சிந்தாமணியார், பேராசிரியர். டாக்டர்.மு.அண்ணாமலையார், பேராசிரியர். புலவர். ச.தண்டபாணி தேசிகனார், பேராசிரியர் வெள்ளைவாரனார், போன்ற பெருமைக்குரிய தமிழறிஞர்கள் அனைவருக்கும் பிடித்தமான அன்புக்குரியவனாக நான் இருந்து இருக்கிறேன்.

என்னுடைய ஆசிரியர் பெருமக்கள் எல்லாம் மதிப்பும், மரியாதையும் மிக்க மேன்மைக்குரியவர்கள்.

அவர்கள் அனைவரும் நம்பி இருந்த படி, இன்றுவரை மாணவனாக இருக்கும் முழுத்தகுதியும் இல்லாதவனாகத்தான் நான் இருந்து வருகிறேன்.

எப்படியாவது ஒரு நல்ல மாணவனாக ஆகிவிட இன்று கூட ஆசைப் படுகிறேன். என்னுடைய ஆரம்பப் பள்ளியிலிருந்து இன்று வரை அந்த வாய்ப்பு நழுவிக் கொண்டே போகிறது.


பள்ளிக்கூடம் எனக்கு எப்போதும் ஒத்துவரவில்லை. பரந்த வெளிக்கு மிகப் பொருத்தமாக பறந்து திரியும் சின்னச் சிட்டாகத்தான் இருந்து வருகிறேன். இந்தப் படைப்பு ரகசியம்தான் எப்போதும் எனக்குள் பதிவாகி இருக்கிறது போலும்.