Wednesday, December 18, 2013

தமிழகத்து ஒபாமா...!



டெல்லியில் அமெரிக்க தூதரகம் உள்ள தெருவில் போடப்பட்டிருந்த தடுப்புகளை இந்திய அரசு புல்டோசாரால் துடைத்து எறிந்துவிட்டது.

இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிபவர்கள், அவர்கள் குடும்பத்தினர்கள், இங்கே படித்துக் கொண்டிருக்கும் அவர்களின் பிள்ளைகள் போன்றோரின் அடையாள அட்டைகளை அரசிடம் காட்ட உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய விமான நிலையங்களுக்குள் அமெரிக்க தூதரக அலுவலகத்தார்கள் துணிச்சலாகச் செல்ல அனுமதிக்கப் பட்ட பாஸ்அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பள விகிதங்களை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை அமெரிக்க அரசு தன்னிடம் ஒப்படைக்க இந்திய அரசு கேட்டு இருக்கிறது.

அமெரிக்க தூதரகங்களில் பணிபுரியும் இந்தியர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியங்கள் பற்றிய விபரங்கள் பற்றிய தகவல்களை இந்திய அரசு, அமெரிக்க அரசிடம் தீடீரென்று கேட்டு விட்டது.

இந்திய விமான நிலையங்களுக்கு வந்திறங்கக் கூடிய மது மற்றும் பிற பொருள்கள் அனைத்தையும் பிரித்துப் பரிசோதித்தப் பின்னர்தான் அவைகளை வெளியே அனுப்ப முடியும் என இந்திய அரசு சொல்லி விட்டது.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னுள்ள பொது மக்களின் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு இதுவரை தடுப்புகள் அமைக்கப் பட்டிருந்தன. அந்தத் தடைகளைத் தட்டிப் பெயர்த்துவிட்டு பொதுமக்கள் செல்லக் கூடிய பொதுவழியாக்கி இந்திய அரசு, இந்திய மக்களுக்கு நேற்று சுதந்திரம் தந்துவிட்டது.

இப்படி ஏராளப்பட்ட நடவடிக்கைகளை ரொம்பவும் ரோஷத்தோடு இந்தியா எடுத்துவிட்டது.

அமெரிக்காவில் இந்தியாவின் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே ஒரு புகாரின் அடிப்படையில், அமெரிக்காவின் தெருவில் கைது செய்யப்பட்டு கைகளில் விலங்கு மாட்டி அழைத்துச் செல்லப் பட்டார். ஆனால் இப்போது ஜாமீனில் வெளிவந்து விட்டார்.

இந்தச் செயலைக் கண்டு இந்திய அரசாங்கத்துக்கு உள்ளங்காலில் இருந்து உச்சிவரை தீப்பிடித்து விட்ட கொதிப்பு ஏற்பட்டு விட்டது.

இந்திய அதிகாரிக்கு நடந்துவிட்ட அவமதிப்பு இந்தியாவிற்கே தரப்பட்ட அவமதிப்பு என்பதை இந்திய அரசு இன்றைக்குப் புரிந்து கொண்டது.

இந்திய அதிகாரிகளின் மீது இந்திய அரசுக்குள்ள கரிசனை வரலாற்றில் பொறிக்கப் பட வேண்டிய ஒன்றாக இன்று காட்சி தருகிறது.

இந்திய மக்களாகிய நாம் அனைவரும், நம் தோள்களை நாமே தட்டிக் கொண்டு , நம் நெஞ்சை நாமே நிமிர்த்திக் கொள்ளலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி நமது இந்தியாவிற்கு வந்தார். நமது பிரதமர் மரியாதையின் பொருட்டு அவரைச் சந்திக்கச் சென்றார். நம் பிரதமரை அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாவல் பிரிவு சோதனை இட்டது. நம் பிரதமர் தலையில் அணிந்திருந்த அவர் மதச்சின்னமான டர்பனைக் கூட கழட்டிப் பார்த்தது.

நம் பிரதமருக்கு அதில் பேரானந்தம். இந்திய அதிகாரிகளுக்கும் இந்திய மக்களுக்கும் இதில் மகிழ்ச்சி இருந்தது என்று இந்திய அரசு கருதி இருந்தது போலும்.

ஒன்றை மறந்து விடக் கூடாது. இந்த நிகழ்வு வாஷிங்கடனில் நடக்கவில்லை. நமது தலை நகரம் டெல்லியில் நடந்தது. அன்றைக்கு இந்திய அரசை நிர்வகித்தது அமெரிக்க அரசாக இருந்திருக்கலாமோ என்னவோ?

இன்னொரு நிகழ்வு. எல்லோரையும் கனவு காணச் சொன்னார். விழிப்பில் அந்தக் கனவின் பலனை அடைந்துவிட இந்திய மக்களுக்குச் சிபாரிசு செய்தார். அவர்தான் நமது முன்னாள் ஜனாதிபதி விஞ்ஞானி அப்துல் கலாம். அவர் அமெரிக்காவிற்குச் சென்றார். அமெரிக்க விமான நிலையத்தில் சோதிக்கப் பட்டார்.

அணிந்த ஆடை முதல் கழட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டபின் விமான நிலையத்தில் இருந்து வெளியே அனுப்பப் பட்டார். இதில் கூட இந்திய அரசுக்கு சம்மதம் இருந்திருக்கிறது போலும். அன்று இந்திய அரசின் மான நரம்புகள் நோய்வாய்ப் பட்டு நொந்து போய் இருந்திருக்கிறது.இன்றுதான் புஷ்டி மருந்து சாப்பிட்டு புத்துயிர் பெற்று இருக்கிறது.

இந்த நிகழ்வுக்கெல்லாம் என்ன காரணம்?

அன்றைக்கு அமெரிக்காவின் சில பல ரொட்டித் துண்டுகளுக்கு இந்திய காங்கிரஸ் பேரியக்கம் வாலாட்டி தன் நன்றியை தெரிவித்துக் கொள்வதற்காக இந்த இந்திய அவமானங்களைப் பொறுத்துக் கொண்டது.

இன்று ஏதோவொரு பங்கம் அதில் ஏற்பட்டு விட்டது. அதை உணர்ந்து ஆளும் அரசு கொடூரமாகக் குரைத்துக் காட்டி தன் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் அமெரிக்காவிற்கு வழங்கப் பட்டிருந்த அனைத்து சலுகைகளும் நியாயமற்றது, மனித குல விரோதமானது. அத்துமீறலானது என்ற கண்டுபிடிப்பை இந்திய அரசு இன்று வெளிப்படுத்தி இருக்கிறது.

இவற்றில் முழுமையாக அரசியல் இருக்கிறது. என்னதான் நமது காங்கிரஸ் அரசு வாலாட் டி விசுவாசத்தை அமெரிக்காவிற்குக் காட்டினாலும் அமெரிக்கா தன் எஜமான தோரணையைக் காங்கிரஸை விட்டு நகர்த்த முடிவெடுத்து விட்டது.

பிஜேபியை புது விசுவாசத்திற்குத் தயார் படுத்த துவங்கி விட்டது. மோடியின் இன்றைய கர்ஜனை அமெரிக்காவிற்கு நாளைய வாலாட்டும் நன்றி அறிதலின் தொடக்கம்.

கொஞ்ச காலத்திற்குக் காங்கிரஸை புழக்கடையில் கட்டிப் போட்டுவிட்டு பாஜகவை வாசலில் அவிழ்த்துவிட அமெரிக்கா திட்டம் வகுத்துவிட்டது.

இந்தப் புகைச்சல்தான் அரசின் இன்றைய நடவடிக்கைகள். அரசியல்வாதிகளின் அவமானத்தினாலோ, அதிகாரிகள் மீது நடத்தப் பட்ட அசிங்கமான நடவடிக்கைகளாலோ ஏற்பட்டுவிட்ட கொதிப்பு இது அல்ல.

இன்னொன்றையும் இங்கே இணைத்துப் பாருங்கள். தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதி காங்கிரஸோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அறிவித்துவிட்டார்.

காங்கிரஸ் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது (தன் மகள், மனைவி குடும்பத்தினருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது) என்ற கண்டுபிடிப்பை முன்வைத்து காங்கிரஸை வெறுத்துவிட்டார்.

காங்கிரஸ் அரசு, அமெரிக்கா மீது எடுத்துவிட்ட நடவடிக்கையைப் போலவே கருணாநிதி, காங்கிரஸ் அரசு மீது பாய்ச்சலைத் தொடங்கிவிட்டார்.

அமெரிக்காவை, பிஜேபி அரசு இன்று எதிர்ப்பது போல பாவனைக் காட்டிக் கொள்கிறது.

அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவர்களின் நட்புக்காக என்று சிலரை அமெரிக்காவிலிரிந்து உடனழைத்து வந்திருக்கிறார்கள். இந்த வருகை அவர்களின் ஓரினச் சேர்க்கைகாகத்தான்என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பேசி இருக்கிறார்.

இதை வைத்துக் கொண்டு பாஜகவும் அமெரிக்காவை எதிர்த்து விட்டது என்று கருதக் கூடாது. அமெரிக்கா, இந்தியாவை நிர்பந்தங்களால் சிதைத்து கொண்டிருக்கிற உண்மையை வெளிப்படுத்தாமல் அமெரிக்காவின் கலாச்சார சீரழிவைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் அமெரிக்காவிற்குப் பாஜக பச்சைக் கொடி காட்டுகிறது.

கலைஞர், பாஜகவையும் நாங்கள் நேசிக்க முடியாது என்று சொல்கிறார். வாஜ்பாய் மாமனிதர். அத்வானி அதற்கு அடுத்த மனிதர் என ஒரு சர்ட்டிபிகேட்டையும் வழங்கி இருக்கிறார்.

அமெரிக்காவை பிஜேபி எதிர்ப்பதுபோல காட்டிக் கொள்ளும் எதிர்ப்பும் , கலைஞர் பாஜகவை எதிர்க்கும் எதிர்ப்பும் தராசின் சம தட்டில் கிடக்கும் ஒரே எடையான பொருள்கள்தாம்.

அமெரிக்கத் தூதரகங்கள் இந்தியாவில் இருக்கும் எல்லாப் பகுதிகளிலும் மனித அவமதிப்புகளை வெளிப்படையாக காட்டிக் கொண்டுதான் வந்திருக்கின்றன.

குறிப்பாகத் தமிழகத்தில் சென்னையில் ஜெமினி மேம்பாலத்திற்குக் கீழ் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் வெளிப்புறத்தில், வீதியில், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக் கொண்டு, தரமான ஆடை அணிகளை அணிந்து கோப்புகளைக் கக்கத்திலும் கைகளிலும் சுமந்து கொண்டு ரஜனிகாந்த் புதுப்படம் வெளியாகும் தியேட்டரில் வரிசையில் காத்துக் கிடக்கும் ரசிகர் கூட்டத்தைப் போல பட்டம் பல பெற்ற பட்டதாரிகள் காத்துக் கிடப்பார்கள்.

இதைப் பார்த்து கொண்டிருப்பவனுக்கும் அவமானம் வருவதில்லை. வரிசையில் நின்று கொண்டிருப்பவனுக்கும் இது கேவலமாகப் படுவதில்லை. ஆனால் இந்திய அரசுக்கு இன்று இது தெரிந்துவிட்டது.

திமுக தலைவர் கருணாநிதி கூட்டணி பற்றி எடுத்த முடிவில் உள்காரணங்கள் மட்டுமல்ல வெளியேயும் காரணம் தொங்கிக் கொண்டிருக்கிறது. நம் தேசத்தைத் தாண்டியும் காரணம் முகம் காட்டிக் கொண்டிருக்கிறது.

திமுகவிற்கு எப்பொழுதுமே ஒன்றில் ஆசை அதிகம். தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்வதில் அவர்களுக்கு நிகராக இன்றுகூட ஒரு சிசு பிறக்கவில்லை.

காஞ்சி கரிபால்டி, தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால் இப்படியெல்லாம் அண்ணாவைச் சொல்லிக் கொள்வதில் அவர்களுக்கு ஆசை அதிகம். திமுக தொண்டர்களுக்கு எத்தணைப் பேருக்கு கரிபால்டியைத் தெரியும், இங்கர்சாலைத் தெரியும், ரூசோவைத் தெரியும் என்பது நமக்குத் தெரியாது.

தமிழகத்து முஜிபுர் ரஹ்மான், இன்றைய ராஜராஜ சோழன், மானங்காத்த கரிகாலன் என்றெல்லாம் கலைஞரைப் புகழ்ந்துக் கொள்வதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம்.

அவர்கள் ஆர்வத்தைக் குறைத்துவிடாமல் நாமும் ஒன்றை சொல்லிவைப்போம். தமிழகத்து ஒபாமாகலைஞர். இப்படி நாம் சொல்லி வைப்போம். ஆனால் இதில் பொருள் இருக்கிறது. ஒபாமா அரசு காங்கிரஸை கழட்டி விடுகிறது. கருணாநிதி காங்கிரஸ் நம்பிக்கையை நகர்த்திவிட்டார். இப்படி பொருத்தம் இருக்கிறது இதில்.

இதற்கொரு செய்தியை முன்வைக்கிறேன். இலங்கையில் இறுதி கட்ட யுத்தம் நடக்கிறது. கருணாநிதி முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். தீடீரென்று பிரபாகரனைப் பற்றி ஒரு செய்தி சொன்னார்.

ஒருக்கால், பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்தால் இலங்கை அரசு, மாவீரர் அலெக்ஸாண்டர், மன்னர் புருஷோத்தமனை நடத்தியது போன்று மரியாதையுடன் நடத்த வேண்டும்என்றார்.

அதையடுத்து உண்ணாவிரத நாடகம் நடந்தது. பின்னர்,

மத்திய அரசை நம்பினேன். அது பொய் சொல்லி விட்டதுஎன்றார். ஆனாலும் கூட்டணியில் தொடர்ந்தார். இறுதியில் பிரபாகரனின் பிரேதம் மீடியாக்களில் வெளியானது.

இந்த நிகழ்வு முன்னாடியே கருணாநிதிக்கு தெரிந்திருந்தது. அதனால்தான் அலெக்ஸாண்டர் புருஷோத்தமன் கதையைச் சொன்னார். இது அமெரிக்காவிற்கும் முன்னாடியே தெரிந்து இருந்தது. தமிழகத்து ஒபாமாவும் அதை வெளிப்படுத்தி இருந்தார்.

சுருக்கமாக நடப்பவைகளை மேலோட்டமாக விவாதித்துக் கொண்டிருக்காமல் ஆழமாக சிந்திக்கத் தொடங்குவோம்.

Tuesday, December 17, 2013

ஆழ்ந்திருக்கும் கவியுளம்..!


நான் நேற்று பதிவு செய்திருந்த மானுடக் கடமை என்ற தலைப்பில் வந்த கட்டுரையைப் படித்துப் பார்த்துவிட்டு நண்பர் ரசூல் HG, பாரதியாரின்

பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்என்ற வரிகள் பல சர்ச்சைகளைக் கிளப்பி இருக்கின்றன. இதை எப்படிப் புரிந்துக் கொள்வது? என ஒரு அற்புதமான கேள்வியைக் கேட்டிருந்தார்.

ஒரு பாடலை அல்லது ஒரு வார்த்தையை, ஒரு வரியை எப்படிப் புரிந்து கொள்வது? என்ற வினாவிற்கு இதுதான் விடை என்று ஒரு பதிலைச் சொல்லிவிட முடியாது.

எழுதியவர் பற்றி ஓரளவுக்குத் தெரிந்திருக்கும் விஷயங்களைக் கொண்டும், அந்த ஒரு சொல்லின் பயன்பாட்டின் விரிவுகளைப் புரிந்தும், படிப்பவருடைய கொள்ளும்தன்மையினை இணைத்தும் ஒரு பதிலை உருவாக்கிக் கொள்கிறோம்.

இதுதான் புரிதல் முறை எனச் சாதித்து விடவும் முடியாது. பாரதியே ஒரு பாணியினைச் சொல்லிக் காட்டுகிறார்.

ஆயிரம் நூற்கள் கற்பினும், ஆழ்ந்திருக்கும் கவியுளம் கண்கிலார்என்று ஒரு விமர்சன முறையைக் கற்றுத் தருகிறார். 

அகல ஆழமான ஆயிரம் நூற்களைக் கற்று இருப்பதனால் ஒரு குறிப்பிட்ட அறிவை, ஞானத்தைப் பெற்று இருக்கலாம். ஆனால் அவை மட்டுமே ஒரு கவிதையைப் புரிந்து கொள்ளப் போதுமானதாக இருக்காது.

கவிஞனின் உள்ளம் என்ன என்பதை இன்னும் பல கூறுகளுக்குள் புகுந்து தெரிந்து கொள்ள வேண்டும் எனப் பாரதி தன் கவிதைகளுக்கே ஒரு விமர்சனத்தைத் தருகிறார்.

இப்போது, பள்ளித்தலமனைத்திற்கு வருவோம். இங்கே, “பள்ளிஎன்ற ஒரு சொல் பல விதமான சர்ச்சைகளை உருவாக்கித்தான் இருக்கிறது.

அண்மையில் மறைந்த திரைக் கவிஞர் வாலி, யாரும் சொல்லாத ஒரு விளக்கத்தைச் சொல்லி வைத்தார். 

பாரதியார், சொல்லிய பள்ளி, ஒரு சாதியைச் சார்ந்த சொல்லாடல் எனவும், பள்ளர்கள் என்ற ஒரு குறிப்பிட்ட சாதியினர் வாழ்கின்ற பகுதி சேரி. சேரி என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் உறைவிடம்.

அந்தச் சேரியில் வாழும் பெண்பாலருக்கு பள்ளியர் என்று பெயர். அந்தப் பள்ளியர் வாழக்கூடிய தலத்தை, அதாவது சேரியைக் கோயிலாக்கி உயர்த்துவோம் எனப் பாரதி கருதி இருக்கிறார் என்பது கவிஞர் வாலியின் விளக்கமாக வெளி வந்திருக்கிறது.

இன்னும் சிலர் பள்ளி என்பதற்கு மற்றும் ஒரு சொல்லாடலைக் கைக்கொண்டுள்ளனர். RSS, BJP போன்ற மதவெறி வாதங்களை முன்னெடுத்துச் செல்லும் இயக்கங்களின் அஜெண்டாவில் எப்பொழுதும் இருக்கக்கூடிய முஸ்லிம் வணக்கத் தலங்களை மாற்றி இந்துத்துவ வணக்கத்தலங்களாக அமைக்க வேண்டும் என்கின்ற திட்டத்திற்குப் பாரதி, அன்றே கவிமுகமன் செய்து விட்டார் என்ற ஒரு புரிதலை ஒரு பாலார் கொண்டு இருக்கின்றனர்.

பள்ளியைசாதியாக்கிப் பார்த்தார் ஒரு கவிஞர். மற்றொரு பிரிவினர், பள்ளி என்பதை பள்ளிவாசல் என்று எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். பள்ளிவாசல்களைக் கோயிலாக்குவோம் என்ற நேரடி தூண்டல்தான் பாரதியின் நாட்டமாக இருந்தது என்பது போல சொல்கிறார்கள்.

ஆனால் இந்த மாதிரியான சர்ச்சைகளில் பாரதியைக் காண முடிவதில்லை. ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தை அறியமுடியவில்லை. இந்தச் சர்ச்சைகளுக்குத் தேவையான அளவிற்கு ஆயிரம் விளக்கங்களை முன்வைத்தாலும், அவைகள் அவர்களின் புரிதல் சம்பந்தப் பட்டதே தவிர கவிதை சம்பந்தப்பட்டதுதான் என்று சாதித்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை.

பாரதியை அல்லது அவரின் மொழிகளை பொருள் கொள்ள, புரிந்து கொள்ள முற்படும் பொழுது பாரதியின் ஆளுமையைக் கூடுமான வரை நாம் கண்டெடுத்தாக வேண்டும். அந்த நிலையில் நமக்கு ஒரு புரிதல் ஏற்படும்.அந்தப் புரிதல் பாரதியோடு சம்பந்தப்பட்ட புரிதலாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

பாரதி வாழ்காலத்தில் இந்தியாவினுடைய மக்கள் தொகையாக முப்பது கோடி பேர் இருந்ததாகக் கணக்கு இருக்கிறது. இதை, “வாழ்வதெனில், முப்பது கோடியும் வாழ்வோம். வீழ்வதெனில் முப்பது கோடியும் வீழ்வோம்என்று கூறுகிறார்.

இங்கே முப்பது கோடியில், இந்துக்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள் போன்ற இன்னும் பல மதம் சார்ந்தவர்களும் இருந்திருக்கின்றனர். இந்த மக்களின் கூட்டுத் தொகைதான் முப்பது கோடி. அவர்களை இந்தியர் என்று குறிப்பிட்டார் பாரதி. இதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

செப்பும் மொழி பதினெட்டுடையாள் எனின் சிந்தனை ஒன்றுடையாள்என்று இந்தியத்தில் வழங்கப் பட்ட பதினெட்டு மொழிகளையும் இந்திய மொழிகளாக, மொழியினமாக ஏற்றுக் கொண்டவர் பாரதி. இதையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே வெள்ளைப் 
பரங்கியரை துரை என்ற காலமும் போச்சேஎன்று பாரதியார் சொல்லி வைத்ததை ஈரோட்டு ஈ.வே.ராமசாமி பெரியார் ஒருமுறை தந்திருக்கும் விளக்கம் அவர் புரிதல் சம்பந்தப் பட்டது.

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சேஎன்று பாரதி சொல்வது , மகிழ்ச்சியால் அல்ல. போச்சேஎன்று வேதனைப் படுகிறான் பாரதி என்று இந்த போச்சேவிற்கு பெரியார் பாணி புரிதல் இது.

அடுத்த வரியில் வெள்ளைப் பரங்கியரை துரை என்ற காலமும் போச்சேஎன்று சொல்லும் அந்தப் போச்சேவிற்கு பெரியார் பொருளையே எடுத்துக் கொண்டு பார்த்தால், பாரதி வெள்ளைத்துரைமார்களுக்கு லாலி பாடி இருக்கிறார் என்றுதானே புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் கொஞ்சம் சொற்புரிதல்களை பார்த்து வைப்போம். 

கோட்டாற்று மகாமதி சதாவதானி பாவலர் திருவள்ளுவர் விழாவில் பேசுகையில், ஒரு நேரத்தில் குறிப்பிட்டார். 

திருவள்ளுவர் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், வள்ளுவர் பாடிய கடவுள் வாழ்த்துப் பகுதியில் இடம் பெற்றுள்ள பத்து குறள்களில் ஐந்து குறள்களில் இறைவனைப் பற்றிய சிறப்பு பேசுகிறார். ஐந்து குறள்களில் இறைவனைத் தொழ வேண்டும் என்று சொல்கிறார். 

இது இஸ்லாமியப் பாணி. ஐந்து வேளைத் தொழுகையும் இறைப் புகழ்ச்சியும் திருக்குறள் கடவுள் வாழ்த்தில் காணப்படுவதால், அவர் முஸ்லிமாக இருக்கலாம்என்றார்.

கொல்லான் புலால் மறுத்தானை கைக்கூப்பி 
எல்லா உயிரும் தொழும்

சதாவதானியார், இந்தக் குறளில் உள்ள சொற்களைத் தன் புரிதலில் பிரித்து விளக்கம் தருகிறார்.

கொல் + ஆன் = பசுவைக் கொல். மறுத்தான் = மல் + துத்தான். இரண்டும் சேரும் பொழுது மறுத்தான் என்று வரும். மல் துத்தான் என்றால் அதிகம் உண்டவன். அவனை எல்லா உயிரும் கைக்கூப்பித் தொழும். மல் துத்தான் என்பது, மறுத்தான் என வந்ததற்குக் கம்ப ராமாயண ஒரு சொல்லை மேற்கோள் காட்டி உறுதிப் படுத்துகிறார்.

செல்+தம்பி = செறம்பி என்று வந்தது போல, மல் துத்தான் என்பது மறுத்தான் என வந்தது என விளக்கம் வேறு தந்திருக்கிறார்.

இப்படி நகைச்சுவைக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ ஒரு சொல்லாடலைப் பிரித்தெடுத்து அவரவர் நோக்கத்திற்குப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் சொற்களைப் பயன்படுத்திய கவிஞன் என்ன நினைத்திருப்பான் என்று பார்ப்பது முக்கியம். பாரதி, பள்ளித்தலமனைத்தும் என்ற வரிகளில், பள்ளியர்தலம் என்ற ஒரு சாதியினரையும் குறிப்பிட்டிருக்க வாய்ப்பில்லை, பள்ளிவாசல் என்ற ஒரு வணக்கத்தலத்தையும் குறித்திருக்க நியாயம் இல்லை. 

தெருக்கூட்டும் சாஸ்திரம் கற்போம்”. பாரதியின் இந்த வரிகளில் தெருக்கூட்டும் தாழ் நிலை வகுப்பாரின் செயலைச் சாஸ்திரம் என்கிறார். மேல்மட்ட வகுப்பார்கள் கோயில்களில் முணுமுணுக்கும் மந்திரங்களைக் குறிப்பிடும் சாஸ்திரம் என்ற சொல்லாடலை தெருக்கூட்டலுக்கு வழங்கி அதையும் நாம் கற்க வேண்டும் எனச் சிபாரிசு செய்கிறார் பாரதி.

அவர் வடிவமைத்தத் தேசியக் கொடியில், “துருக்கரின் இளம்பிறை ஒர் பால்என்று வடிவமைக்கிறார். இங்குத் துருக்கர் என்ற சொல்லாடல் முஸ்லிம்களைக் குறித்தத் தவறான சொல்லாடல் என்றாலும், முஸ்லிம்களுக்கும் தேசியக் கொடியில் இடம் இருக்க வேண்டும் என்ற அந்த உணர்வு பாரதிக்கு இருந்திருக்கிறது. 

அன்றைய இந்தியத்தில் இப்படி ஒரு தேசிய கொடி வடிவை இந்த நாட்டில் எவரும் சொல்லவில்லை.

பாரதியார், இறுதி காலத்தில் பொட்டல்புதூரில் மீலாது மேடையில் நபிகளாரைப் பற்றிப் பேசிய பேச்சினை நினைவு கூரும்பொழுது பாரதியின் ஆழ்மனம் புரியும்.

அதே மேடையில் பாரதியார் தானே எழுதிய அல்லா, அல்லா..பாடலை அவரே பாடிக் காட்டினார். இந்தப் பின்புலங்களை வைத்தெல்லாம் பார்க்கும் பொழுது பாரதியார் பாடியிருக்கும், “பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்என்ற வரிகளைக் கீழ்க் காணும் கருதுகோளில் புரிந்து கொள்வது சரியாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

கற்கின்ற கல்விச்சாலையைக் கோயிலாக்கிப் பார்க்க வேண்டும். அதாவது அது ஒரு வழிபாட்டுத்தலமாக ஆக வேண்டும் எனப் பாரதி கருதுகிறார்.

ஒரு வணிக தலத்தில் அங்கே இருப்பவர்கள் செல்வம் புரளும் இடமான அந்த இடத்திற்கு மரியாதைக் கொடுக்க வேண்டும். அதைப் போற்றி மகிழ வேண்டும் என்பது தமிழக மண்ணின் பழக்கம். செல்வத்தின் குறியீடாக லட்சுமியைக் குறிப்பிடுவர். லட்சுமி வாழுமிடத்தில் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற கருதுகோளைக் கடைபிடிப்பர்.

அதேபோல கல்விக் கூடம் கல்வியின் குறியீடான சரஸ்வதி வாழுமிடம். அந்த உணர்வோடு ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றுமுளோர் கண்ணியப் படுத்த வேண்டும். ஏனென்றால் சரஸ்வதி கடாட்சம் ஏழ்மையையும் தாழ்மையையும் நீக்கும் என்ற கருத்து இருப்பதால், 

பள்ளித்தலமனைத்தையும் கோவில்களாகப் புதுப்பிக்கலாம் எனப் பாரதி கருதி இருக்கலாம்.

இந்தப் புரிதல் என் சார்பான புரிதல்.

Monday, December 16, 2013

மானுடக் கடமை!!!


11.12.2013 மகாகவி பாரதியின் பிறந்த நாள்(11.12.1882). பாரதி, தமிழ்ச் சமூகத்தால் மரியாதையோடு நினைவுகூரப் பட வேண்டிய பெருமைக்குரியவர்.

அன்றைய தினம் பாரதியைப் பற்றி மீடியாக்கள் நல்லவிதமாகச் செய்திகள் வெளியிட்டன.

அன்றைய தினத்தில் பொதிகை தமிழ்த் தொலைக்காட்சி , பாரதியை ஆறு கோணத்தில் , ஆறு விமர்சகர்கள் நிகழ்த்திய நிகழ்ச்சி ஒன்றைப் பதிவு செய்தது. உள்ளபடிக்கே சிறப்பாக இருந்தது. சில அரிய தகவல்களை அந்த ஆறு பெருமக்களுமே வெளியிட்டனர்.

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அறுவரில் இறுதியாக பேசிய ஒரு கல்லூரியின் முதல்வர், சில செய்திகளைச் சொல்லிக் காட்டினார். அவர் பெயரை நிகழ்ச்சியில் எழுதிக் காட்டினார்கள். ஆனால் என்னுடைய கவனக் குறைவின் பிழையால் இந்தச் சில நாட்களிலேயே மறதியாகி விட்டது.

அந்தக் கல்லூரி முதல்வர், சொன்ன சில தவல்களை நானிங்கே பதிவு செய்யவும், அது பற்றி சில உண்மைகளைச் சொல்லிக் காட்டவும் முனைகிறேன்.

அந்தக் கல்லூரி முதல்வர் சொன்ன தகவலில் எப்படியோ தவறு கலந்து விட்டது. அதுபற்றி அவரைக் குற்றம் சாட்ட நான் இங்கே நிச்சயம் பதிவு செய்யவில்லை.

தவறுவது , மனித இயற்கை. திருத்திக் கொள்வது மானுடக் கடமை என்ற அடிப்படையிலேயே என் பதிவுகளைத் தயவு செய்து புரிந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் , போப் ஆண்டவர் இந்தியாவிற்கு வருகைத் தந்திருந்தார். அப்போது அவர் டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய உடன் சில அடிகள் மெல்ல நடந்து வந்து , பூமியை நோக்கி பணிந்து , இந்திய மண்ணுக்கு முத்தமிட்டார்.

அவர் கூறினார் , “இந்த இந்திய பூமி, ஞானம் பிறந்த பூமி . எனவே இந்த மண்ணை நான் முத்தமிட்டேன்.என சொன்னார்.

இந்த நிகழ்வைக் கல்லூரி முதல்வர் நினைவு படுத்தினார். இது நடந்தது உண்மை.

அன்றைய தினம் இந்திய மீடியாக்களும், உலக மீடியாக்களில் பலவும் இதைப் பதிவு செய்தன. இந்தியப் பூமிக்கு இந்தப் பெருமைத் தகும்.

அந்தக் கல்லூரி முதல்வர் அடுத்தொரு தகவலைச் சொன்னார். அந்தத் தகவலில்தான் பிழை இருக்கிறது.

அந்தத் தகவல் வரலாற்றுப் பிழை மட்டுமல்ல. கோட்பாட்டு பிழையும் கூட.

முஹம்மது நபி எல்லா திசைகளிலும் வணங்கும் வழக்கமுடையவர். ஒரு முறை அப்படி வணங்கிக் கொண்டிருக்கும் போது , அவர் நாட்டில் இருந்து இந்திய திசையை நோக்கி நின்று கொண்டு, இதோ இந்த திசையில் இருக்கும் ஹிந்து தேசம் ஞானங்கள் பிறந்த பூமி. எனவே இங்கிருந்தபடியே ஹிந்து தேசத்திற்கு என் வணக்க வழிபாட்டைச் செலுத்துகிறேன் என சொல்லி இந்தியாவை நபிகள் வணங்கினார்எனக் கல்லூரி முதல்வர் குறிப்பிட்டார்.

இதுமாதிரி தகவல்கள் தரப்படும்போது சரியாகவும், தெளிவாகவும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு தகவல் தருபவருக்கு இருக்க வேண்டியது கட்டாயம்.

ஒன்றைச் சிறப்பிப்பதற்காக , அழுத்தம் கொடுத்து சொந்தச் சரக்குகளை வரலாற்று நிகழ்வில் கலந்து விடுவது மேடைப் பேச்சுக்கு நன்றாக இருந்தாலும் , முற்றுமான தவறுக்குப் பொறுப்பாக நேரிடுகிறது.

கல்லூரியின் முதல்வர் இரண்டு பிழைகளை இந்தத் தகவலில் பதிவு செய்து விட்டார்.
 

பொதுவாகவே ஏனோ தெரியவில்லை, இஸ்லாமியர் வரலாறை புரிந்துக் கொள்வதிலும் படித்துக் கொள்வதிலும் நமக்கு ஒர் அசட்டைத்தனம் இருக்கிறது. இந்த அசட்டைத் தனம் அவரவர் மனப் போக்கிற்கு ஏற்ப அதிகப்படியாக இட்டுக் கட்டப்பட்டு விடுகிறது.

முஹம்மது நபி வாழ்க்கை வரலாற்றில் , கல்லூரி முதல்வர் குறிப்பிட்டது போன்ற வணக்க வழிபாடு நடந்ததே இல்லை.எல்லா திசைகளையும் முஹம்மது நபி தொழுவார் என்ற தகவல் முழுவதுமான பிழையாகும்.
 

இறைவன் ஒருவனைத் தவிர , எவரையும் , எதனையும் யாரும் வணங்க, வழிபட கூடாது என்பது முஹம்மது நபி கற்றுத் தந்த வணக்க வழிமுறையாகும்.

திசைகளைத் தொழுவது என்பது இஸ்லாத்தைப் பற்றி தவறுதலான புரிதலாகும்.
 

எந்த பாரதி பிறந்த நாளை நினைவு கூருகிறோமோ , அந்த பாரதிகூட இஸ்லாத்தைப் பற்றிச் சரியாக அறிமுகமில்லாத நேரத்தில்,

திக்கை வணங்கும் துருக்கர்..என்று பிழையாக , தவறுதலாக பதிவு செய்திருக்கிறார்.

இதை ஆதாரமாகக் கொண்டுதான் கல்லூரி முதல்வர் திசைகளைத் தொழும் பழக்கம் முஹம்மது நபிக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் என நம்புகிறேன்.

பாரதி இரண்டு பிழையை ஒரே வரியில் செய்து விட்டார். திக்கைத் தொழுவது இஸ்லாமியர்களுக்கு ஆகாதது. இது ஒன்று.
 

துருக்கர் என்ற சொல், இஸ்லாமியர்களைக் குறிப்பதாக பாரதி முடிவு கட்டியது மற்றொரு இமாலயப் பிழை.

இந்தச் சொல் முஹம்மது நபியை துருக்கர் என்று குறிப்பிடுவது போல் இருக்கிறது. முஹம்மது நபி, தேசத்தால் அரபியர். துருக்கர் அல்லர். துருக்கர், துலுக்கர் என்பது துருக்கியர் என்பதின் மரூஉ. துருக்கியில் உள்ள அனைவரும் துருக்கர். அதாவது துருக்கியில் உள்ள யூதர், கிருத்துவர், முஸ்லிம் அனைவருமே துலுக்கர்தாம். முஸ்லிம்களைத் துருக்கர் என்று கூறுவது வரலாற்றுப் பிழை.
 

இந்திய திசையைப் பார்த்து நின்று முஹம்மது நபி அரபு நாட்டிலிருந்தே இந்த ஞான பூமியை வணங்கியதாகக் கல்லூரி முதல்வர் குறிப்பிடுவது மகத்தான அறியாமை.

இறைவன் ஒருவனைத் தவிர வேறு எந்த மனிதனையோ சொந்த நாடாக இருந்தாலும் சரி, அந்த நாட்டையோ இறைவன் படைப்புகளான ஐந்து பூதங்களையோ ( மண், நெருப்பு, காற்று , ஆகாயம், நீர்) வணங்குவது என்பது பூரணமான குற்றத்திற்குச் சமமாகும் என்று இஸ்லாம் தன் கோட்பாட்டைத் தெளிவு படுத்தி விட்டது.

இந்தக் கோட்பாட்டைத் துல்லியமாக வெளிப்படுத்தியவர்கள் முஹம்மது நபி.

தாயின் பாதத்தடியில் சொர்க்கமிருக்கிறது எனச் சொன்னவர்கள் முஹம்மது நபி. தாய்மைக்கு இதை விட பென்னம்பெரிய சிறப்பைத் தந்து விட முடியாது. ஆனாலும்கூட அந்தத் தாயை வணங்குவதுகூட மகத்தான குற்றம்.

சொர்க்கத்தை பாதத்தில் தூக்கி சுமந்து திரிவதாக உருவகப் படுத்தப் பட்டுள்ள தாயைக் கூட ஆண்டவனாக வணங்குவது குற்றமாகி விடும். இவ்வளவு தெளிவாக இஸ்லாம் சொல்லி விட்டதற்குப் பின்னால் , அந்த இஸ்லாத்தைப் பற்றி தவறுதலான பதிவுகளைச் செய்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் மட்டுமே இதை நான் பதிவு செய்கிறேன்.

இதை ஒரு மத நெறியாகவோ, வெறியாகவோ பிறழ யாரும் நினைக்க வேண்டாம்.
 

கல்லூரி முதல்வர் குறிப்பிட்ட இந்த நிகழ்வு சொல்லப் பட்டிருக்கிறது. எப்படியென்றால்....

ஸாரே ஜஹான்சே அச்சா ,
ஹிந்துஸ்தான் ஹே ஹமாரா

என்று எழுதிய மகாகவி அல்லாமா இக்பால், இப்படிக் குறிப்பிடுகிறார்..

ஒரு முறை முஹம்மது நபி மக்காவில் உள்ள கஃபதுல்லாவில் அமர்ந்து இருக்கும் பொழுது , தான் அமர்ந்திருந்த திசையில் இருந்து சிறிது மாறி இதோ இந்தத் திசையில் ஹிந்து தேசத்தில் இருந்து ஏகத்துவ நறுமணத் தென்றல் வீசுகிறது. இங்கும் அது பரவுகிறதுஎன்று நபிகள் நாயகம் சொன்னதாக அல்லாமா குறிப்பிடுகிறார்.

இந்த நிகழ்விற்கு ஆதாரம் இருப்பதாக சில முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். சில வரலாற்று ஆசிரியர்கள் தெளிவான ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர். அப்படி இருந்தாலும் முஹம்மது நபி பூமிக்கு வணக்கம் செலுத்தினார் என்று சொல்லுவது புரியாமையின் பிரம்மாண்டமாகும்.
 

மகாகவி பாரதியார் , “திக்கை வணங்கும் துருக்கர்என்று ஆரம்பக் கட்டத்தில் குறிப்பிட்டு இருந்தாலும், பிந்தைய அவருடைய காலக்கட்டங்களில் இந்தப் பிழையான கருத்தில் இருந்து தன்னை மாற்றிக் கொண்டார் என்றும் சில குறிப்புகளும் உள்ளன.

பாரதியாருடைய இறுதி காலத்தில், கடையத்திற்குப் பக்கத்தில் உள்ள பொட்டல்புதூரில் அவர் பேசிய மீலாது பொதுக்கூட்ட உரையில் பாரதியார் இஸ்லாத்தைத் தெளிவாகப் புரிந்து இருந்தது நன்றாகத் தெரிகிறது.

முஸ்லிம்களை துருக்கர் என்ற வார்த்தையிலேயே பாரதியார் ஆரம்ப காலத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
 

பாரதியார் வடிவமைத்த இந்திய தேசியக் கொடியில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர் பால்என்று குறிப்பிட்டிருந்தார். இஸ்லாமியர்களை இங்கும் துருக்கர் என்றார்.

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி!- பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;”

இங்கேயும் பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்கிற செயல் தில்லித் துருக்கர் வழக்கம் என்கிறார்.

துலுக்கர் துலுக்கர்தான் . அது என்ன தில்லி துலுக்கர் தென்காசி துலுக்கர். பெண்கள் முகமலரை மூடிக் கொள்ளல் குஜராத்தி, ராஜஸ்தானி, பணியாக்கள் பேன்ற பிற சமூகத்தினரின் பழக்க வழக்கங்களும் கூட.

பாரதி, தென்னாட்டு முஸ்லிம்கள் போடுகிற முக்காட்டையும் பார்த்தவர். டெல்லியில் அணிந்த கோஷா காட்சியையும் பார்த்தவர். கோஷாவை துலுக்கர் வழக்கம் என்று விட்டார். அதனால்தான் தில்லி துருக்கர் என்று சொல்லி இருக்கிறார் போலும்.

கல்லூரி முதல்வரை நான் பிழைப் பிடிக்கவில்லை. பாரதியிடமும் இந்த வரலாற்றுப் பிழை இருந்திருக்கிறது. ஆனால் அதைப் புரிந்து கொண்டு தன் கருத்தை மாற்றிக் கொள்கிறார். சரியான தகவலை ஏற்றுக் கொள்வதுதானே ஞானத்தின் வெளிப்பாடு.
 

ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்று சொன்னால் , பொதுவாகத் தாய் மண்ணை வணங்காதவன் இந்தியனல்லன் என்ற முரட்டுவாதம் தேவையில்லாமல் மதவாதமாக மாறி விடக்கூடாது.

தாய் மண்ணை வணங்குபவர்கள் தாராளமாக வணங்கிக் கொள்ளட்டும். அது அவர்களின் கோட்பாடு, அவர்களின் உரிமை. தாயே ஆனாலும், தாய் மண்ணே ஆனாலும் வணங்க முடியாது. வணக்கம் என்பது இறைவன் ஒருவனுக்கு மட்டுமே எனச் சொல்பவர்கள் சொல்லிக் கொள்ளட்டும். அது அவர்கள் கோட்ப்பாடு. அவர்கள் உரிமை.

எந்த நிர்பந்தங்களும் கலவரங்களைத்தான் கண்டெடுத்து இருக்கின்றன.
 

ஏற்றுக் கொள்வதை அங்கீகரித்துக் கொள்ள வேண்டும். நிர்பந்தங்களை நிராகரித்து விட வேண்டும்.

Wednesday, December 4, 2013

சங்கடம்தான்

சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் – 3


விடுதலைக் காலத்து இந்திய முஸ்லிம் சமுதாயத்தினரிடம் தனித்தன்மை தழும்பி நின்றது. அரசியல் தெளிவு இருந்தது. மார்க்க ஞானமும் மதிக்கத் தக்க விதத்தில் மலர்ந்திருந்தது.

அகில இந்திய முஸ்லிம் லீக் பலப்பல பெரும் தலைவர்களின் வழிகாட்டலில் திகழ்ந்திருந்தது. கிலாஃபத் இயக்க அறிஞர்களின் கவனிப்பில் வளர்ந்து வந்தது. இந்தியச் சுதந்திரக் காலக் கட்டத்தில் அகில இந்திய முஸ்லிம் லீகின் தலைமைப் பொறுப்பை முஹம்மதலி ஜின்னாஹ் ஏற்றிருந்தார்.

முஹம்மதலி ஜின்னாவின் தோற்றத்தில் இஸ்லாமியக் கோலத்தைக் காண முடியாது. ஒரு பிரிட்டானிய பிரபுத் தோற்றம்தான் முஹம்மதலி ஜின்னாவைப் பார்க்கும் பொழுது தோன்றும்.

இஸ்லாம் மார்க்கத்தின் நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் இவைகளும் முஹம்மதலி ஜின்னாவின் நடைமுறை வாழ்க்கையில் காணக் கிடைப்பதில்லை.

இஸ்லாத்தைப் பொறுத்தளவிலே, ஜின்னாஹ் புதியதாக வந்த தலைமுறையைச் சார்ந்தவர்தான். ஜின்னாவின் தந்தையார் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். அவரைத் தொடர்ந்து ஜின்னா வருகிறார். ஜின்னாவின் மகளார் இஸ்லாத்தில் இல்லை. ஜின்னாவின் இஸ்லாமியக் குடும்பத் தொடர்ச்சி அவர் மகளாரோடு முடிந்து விட்டது.

ஜின்னாவின் மகள் பார்ஸியைத் திருமணம் செய்துக் கொண்டவர். அவர்தான் பாம்பே டையிங்கின் அதிபர். அதாவது இன்றைய பாம்பே டையிங்கின் வாதியா குடும்பத்தினர் ஜின்னாவின் பேரப் பிள்ளைகள்.

ஜின்னாவின் மனைவியார் கிறிஸ்துவ சமுதாயத்தைச் சார்ந்தவர். ஜின்னா குஜராத்திக்காரர். காந்தி அடிகளும் குஜராத்தி.

ஜின்னா என்கின்ற பெயர் முஸ்லிம்களின் அடையாளப் பெயர் அல்ல. குஜராத்தி மொழியில் நெட்டையன் என்று பொருள். ஜின்னா குடும்பத்திற்கு நெட்டையன் குடும்பம் என்று பெயர். காந்தி என்பதும் குடும்பப் பெயர்தான். நேருவுக்குக் கூட நெஹ்ரு என்ற சொல் ஏரிக்கரைக்காரர் என்று அர்த்தம் கொள்ளும். இது கஷ்மீரிய மொழி.

ஜின்னா முஸ்லிம் லீகின் தலைவராக இருந்தார். ஜின்னாவைப் பொறுத்தளவில் ஆழமான இறை நம்பிக்கை இருந்ததில்லை என்று கூட சொல்லுவது உண்டு.

இந்தியாவில் முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் சுன்னத் வல் ஜமாஅத் அமைப்பைச் சார்ந்தவர்கள். முஹம்மதலி ஜின்னா ஷியாக்கள் பிரிவைச் சார்ந்தவர். ஜின்னாவிற்கு முன்னும் , பின்னும் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் ஷியா பிரிவில் உள்ள ஒருவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டதே இல்லை.

அதாவது ஜின்னா முஸ்லிம்களின் தலைவர் அல்லர். முஸ்லிம் லீகின் தலைவர். இன்னும் தெளிவாகச் சொன்னால், முஸ்லிம் லீக் என்ற அரசியல் அமைப்புக்கு ஜின்னா தலைவர். அந்தத் தலைமையை சுன்னத் வல் ஜமாஅத் ஏற்றுக் கொண்டது.

மார்க்கத் தலைமையையும், அரசியல் தலைமையையும் பிரித்தறிந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம், அந்தத் தனித்தன்மை முஸ்லிம்களிடம் அன்று இருந்தது.

விடுதலைக் காலகட்டமான 1947 இல் அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் பொறுப்பை மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஏற்றுக் கொண்டிருந்தார்.

இப்படி காங்கிரஸ் ஒப்படைத்ததற்கு அடியோரத்தில் வேறோரு காரணமும் உண்டு. மௌலானா அபுல் கலாம் ஆசாத், மகா மேதை. திருக் குர்ஆனுடைய ஞானம் நிரம்பப் பெற்றவர். அரசியல் விற்பன்னர். பேச்சாற்றலில் மகா சமர்த்தர்.

அவரின் தோற்றத்தில் கனியக் கனிய இஸ்லாமியக் கோலம் இருக்கும். சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்தவர். அவர் பிறந்தது மக்கமா நகரம். ஆனாலும் பெரும்பான்மை முஸ்லிம்கள் தங்கள் அரசியல் தலைவராக அவரை ஒப்புக் கொள்ளவில்லை. முஹம்மதலி ஜின்னாவைத்தான் ஏற்றுக் கொண்டனர்.

காங்கிரஸ் பேரியக்கம், மௌலானா அபுல் கலாம் ஆசாத்தைக் காங்கிரஸ் இயக்கத்தின் தலைமையாக்கியதன் உள்நோக்கம், முஸ்லிம் லீகைப் பலகீனப் படுத்த மௌலானா நல்லதொரு அடையாளம் என்று நம்பி இருந்தது.

முழுமையாக முஸ்லிமாக இருப்பவரை பின்னொற்றி முஸ்லிம்கள் காங்கிரஸுக்குள் வந்து விடுவார்கள் என்று எதிர்ப்பார்த்தது.

ஆனாலும் முஸ்லிம் சமுதாயம் தனித்தன்மையோடு தெளிவாக இருந்தது. அரசியல் தலைமைக்கு மௌலானா அபுல் கலாம் ஆசாத்தை விடவும், முஹம்மதலி ஜின்னாவைத்தான் ஒப்புக் கொண்டது.

இந்திய சுதந்திர உடன்படிக்கையில் நம் இந்தியத்தை விட்டு துண்டாகிப் போன பாகிஸ்தான் நாட்டின் சார்பாக முஹம்மதலி ஜின்னா கையொப்பம் இட்டார். இந்தியத் திருநாட்டின் சார்பாக காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கையொப்பம் இட்டார். பிரிட்டிஷ் ராணியின் சார்பாக மவுண்பேட்டன் பிரபு கையெழுத்திட்டார்.

இந்தியாவின் துண்டாடிய பகுதியான பாகிஸ்தான் உதயமாகும் வரை அகில இந்திய முஸ்லிம் லீகின் தலைமை ஜின்னா வசம் இருந்தது. அது உதயமான பின்னால் பாகிஸ்தானுக்கும் அதன் தலைமைக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று இந்தியப் பகுதி முஸ்லிம்களின் பெரும்பான்மையோர் கருதினர்.

அவர்களின் எண்ணப் பிரதிபலிப்பாக காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகை உதிக்கச் செய்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று வழி நடத்தினார்கள்.

முஸ்லிம் லீகின் தனித்தன்மை எந்த நிலையிலும் கெட்டு விடாமல் யாருடைய சாயலும் தொட்டுவிடாமல் ஏன், ஜின்னாவின் சாயல் கூட இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் பட்டு விடாமல், தெளிவான தனித்தன்மையுடன் வழி நடத்தினார்கள்.

R.S.S இயக்கமும், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அதன் கிளை அமைப்புகளும் முஹம்மதலி ஜின்னாவை, முஸ்லிம் மதத் தீவிரவாதி போன்ற தோற்றத்தில் பொய்ப்படம் காட்டித் தங்கள் இயக்கங்களுக்குத் தீனி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

இவ்வளவு துல்லியமான கணிப்போடு அரசியல் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டிருந்த இஸ்லாமிய சமுதாயம், பின்னால் சுயத்தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக நழுவ விட்டு விட்டது.

இது கசப்பாக இருந்தாலும் விழுங்கித்தான் ஆக வேண்டும்.

தன்னைச் சார்ந்திருந்த இயக்கங்களின் கூட்டுறவால், தன் சுய முகத்திற்குப் பக்கத்திலேயே இரவல் நிழல் முகத்தையும் தூக்கித் திரிய ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் நிழல் முகத்தைப் பிரகாசமாகக் காட்டினால்தான் அதை நிஜமுகமாக சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் என்கின்ற தப்புக் கணக்கைத் தன் வசம் எடுக்கத் தொடங்கியது.

குறிப்பாகத் தமிழக அரசியல் வரலாற்றில் இந்த நிலை தூக்கலாகவே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தி.மு.க வின் முகத்தின் பாணியை முஸ்லிம் லீகும் கொஞ்சம் கொஞ்சமாகத் தழுவிக் கொள்ளத் தொடங்கிவிட்டது. இப்படித் தழுவிக் கொள்வதால் சமூகத் தலைமையின் அந்தஸ்த்துப் பிரபலப் படுவதாகவும் கருதப் படுகிறது.

கொஞ்சம் வெளிப்படையாகச் சொன்னால் அண்ணா பேசியது மாதிரி நம் தலைவர்களும் பேச வேண்டும். கருணாநிதி பதில் சொல்வது மாதிரி நம் தலைமையும் நச்சென்றுப் பதிவு செய்ய வேண்டும் என்ற பாணி வளர்க்கப் படுகிறது.

இதில்தான் அரசியல் ராஜ தந்திரம் இருப்பதாக இயக்கத் தோழர்களும் பூரணமாக நம்பத் தலைப்பட்டு விட்டனர்.

கருணாநிதியிடம் கேள்வி கேட்டால் பதிலில் ஒரு நையாண்டித்தனம் இருக்கும். தப்பித்துக் கொள்ளும் சாகசம் தென்படும். இப்படிப் பதில் தருவது தான் அரசியல் சாதுர்யம், சாமர்த்தியம் என்ற கருத்துத் தமிழகத்தில் பரவி விட்டது.

முஸ்லிம்களிடமும் இந்தக் கசடு எப்படியோ தழுவிப் பதிந்து விட்டது.

காயிதே மில்லத்திற்கு ஏன் பாரத ரத்னா இன்னும் தரப்படவில்லை?” என்று கேட்டால், “அவர் ஜகத் ரத்னா, பாரத ரத்னா என்று அவரைச் சுருக்கி விடக்கூடாதுஇப்படி பதில் தரப்படுகிறது. இதுதான் தி.மு.க தனம். கருணாநிதி பாணி.

சட்டமன்றத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த அந்தக் காலத்தில் கருத்திருமன் காங்கிரஸ் இயக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் என நினைக்கிறேன். அவர் ஒரு வினா கேட்டார்.

புளி விலை தமிழகத்தில் உயர்ந்து விட்டது. என்ன காரணம்?” என்று கேட்டார்.

கருணாநிதி சட்டென்று எழுந்து, “இந்தக் கேள்வியைப் புளிய மரத்திடம் கேட்க வேண்டும்எனப் பதில் சொன்னார்.

சட்டசபை சிரிப்பில் அலறியது. இந்தப் பாணிதான் இப்பொழுதும் பாரத ரத்னா, ஜகத் ரத்னாவில் விளையாடுகிறது.

தி.மு.க, பாரதிய ஜனதா கூட்டேற்பட்டு விடலாமோ?” என்ற ஐயக் கேள்விக் கேட்கும் பொழுது,

பாரதீய ஜனதா, தி.மு.க வை ஆதரித்தால் ஆபத்தில்லை. தி.மு.க, பாரதீய ஜனதாவை ஆதரித்தால்தான் யோசிக்க வேண்டும்என்ற தொணியில் பதில் தரப்படுகிறது.

இது சுத்தமான சொல் விளையாட்டு. இந்த விளையாட்டு முஸ்லிம் அரசியல் சாயைக் கொண்டது அல்ல.

கருணாநிதியின் காட்சிதான் இங்கும் தெரிகிறது.

மனைவி கணவனை அழைத்தால் ஆபத்தில்லை. கணவன் மனைவியை அழைத்தால் யோசிக்க வேண்டும் என்று ஒரு பதில் தந்தால் அது எப்படி நல்ல நகைச்சுவையாக இருக்குமோ? இது அப்படி இருக்கிறது.

சுன்னத் வல் ஜமாஅத் ஒப்புக் கொள்ளாத ஷியா பிரிவைச் சார்ந்த ஜின்னாவை இயக்கத் தலைவராக ஏற்றுக் கொண்ட சமுதாயம், இஸ்லாமிய கோலத்தோடும் கோட்பாட்டோடும் வாழ்ந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

காரணம் மௌலானாவிடம் காங்கிரஸ் அரசியல் தெரிந்தது. ஜின்னாவிடம் லீக் அரசியல் இருந்தது. இப்படித் தெளிவான புரிதலோடு தனித்தன்மையோடு இருந்த சமூக அமைப்பு, இன்னொரு முகச் சாயலைத் தாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டதற்குத் திராவிட இயக்கத்தின் வசீகரம் வெளிக் காரணமாகவும், வேறு பல ஆசை அபிலாஷைகள் உள்காரணங்களாகவும் இருக்கிறது.

இதுபற்றி இன்னும் சிந்திப்போம். விவாதிப்போம்.