Monday, June 23, 2014

தீமைகளின் தகாத உறவுகள்..!


ஒரு மனிதக் கொலை மிகக் கொடூரமான நிலையில் நடந்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்ட அம்பத்தூரில் அந்த மாவட்டத்தின் இந்து முன்னணி அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த சுரேஷ் குமார்தான் இந்த படுகொலைக்கு ஆளாகி இருக்கிறார்.

சுரேஷ் குமார், அவரின் அலுவலகத்தின் முன்னால், இரவு 10 மணி அளவில் கொலை செய்யப்பட்டு உள்ளார். சுரேஷ் குமார் கொலை செய்யப்பட்ட சி.டி.எச். சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஜூன் 18ஆம் தேதியும் இந்த நிலைதான் அத்தெருவில் காணப்பட்டது.

சுரேஷ் குமார் வீழ்ந்து கிடந்த இடத்திற்கு அருகில்தான் போலீஸ் இணை ஆணையர் அலுவலகம் இருக்கிறது.

கொலை செய்ய வந்த நபர்கள் பைக்கில் வந்து சுரேஷ் குமாரைக் கோரமாக வெட்டி வீழ்த்திவிட்டுத் தப்பி விட்டனர். இந்தக் கொலை எந்த நோக்கத்திற்குச் செய்யப்பட்டு இருந்தாலும், யார் செய்து இருந்தாலும், ஏற்றுக் கொண்டு நியாயப்படுத்த எவரும் முன் வரக் கூடாது.

உயிர் பிறப்புக்கு யாரும் பொறுப்பெடுத்துக் கொள்ள நியாயம் இல்லை. அதே போல உயிர் பறிப்புக்கும் எந்த நியாயத்தையும் கற்பித்து கொள்ளத் தேவை இல்லை.

சுரேஷ் குமார் கொலை, வெறும் உயிர் பறிப்பு என்ற ஒன்றாக மட்டும் இல்லை. அதைக் கோரக் கொலை என்ற மொழியால்தான் குறிப்பிட வேண்டும்.

செய்தவர் எவரென்று தெரியவில்லை. ஆனால் ஊகங்களும், காரணங்களும் வெளிப்பட்டு இருக்கின்றன. இதில் இரு மதங்கள் சம்மந்தப்பட்டு இருக்கலாம் என்பது யூகம். காவல் துறைக்கு இந்தக் கொலை பற்றிய முன்னறிவிப்பை இந்து முன்னணி தெரிவித்து இருக்கிறது. அது மட்டுமன்றி காவல் துறையிடம் பாதுகாப்பும் ஏற்கனவே கேட்டு இருக்கிறது என்ற காரணங்களைக் கூறி முஸ்லிமாக இருக்கக் கூடியவர்கள் இந்தக் கொலையை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எந்தக் கொலை வெறியனுக்கும் மதத்தைப் பின்னணியாகக் கொள்ளும் தகுதி நிச்சயம் இல்லை. இருக்கவும் கூடாது.

சுரேஷ் குமார், இந்து முன்னணி என்கின்ற காரணத்தால் ஏதோ ஒரு முஸ்லிம் முன்னணி இதைச் செய்து இருக்கிறது என்று உறுதிப்படுத்துவது போல ஒரு மனித அவமானம் வேறு இருக்க முடியாது.

கொலை என்பதுதான் கோட்பாட்டின் உன்னதம் என்ற கருத்தை எவர் முன்வைத்தாலும் அவர் மனித குல விரோதிதான்.

நாளைய தினம் இந்தக் கொலை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடைய பெயர் முஸ்லிம் பெயராகவோ, இந்துப் பெயராகவோ, கிறிஸ்துவ பெயராகவோ அல்லது எல்லாம் கலந்தவர்களின் பெயராகவோ இருந்தாலும் கூட அந்தக் கொலையாளிகளை அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தின் கோட்பாட்டுக்கு உரிமையாளர்கள்கள் என்று யாரும் தயவு செய்து பதிவு செய்யாதீர்கள்.

இந்தக் கேவலமானவர்களுக்கு எந்த மதங்களும் உரிமை கொண்டாடக் கூடாது. இவர்கள் மனித அவலங்கள். மதிப்பிழந்து போன மனிதக் கேவலங்கள். மனிதத்தை மரணிக்கச் செய்து விட்ட இந்த மனிதவடிவப் பிணங்கள், மற்றொரு மனிதரைக் கொலை செய்து இருக்கிறது என்றுதாம் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்துவும் முஸ்லிமும் வாளோடு பிறந்து, தாக்கிக் கொள்ளப் பிறந்த குல விரோதிகள் அல்லர். நேயத்தோடும் பாசத்தோடும் பந்தங்களோடும் வாழ்வதற்காக மண்புறத்தில் வந்த அற்புதமான படைப்புகள்தாம் இந்த மனிதப் படைப்புகள்.

ஏதோ ஒரு திண்ணையில் அமர்ந்து பீடி சுற்றிக்கொண்டு இருக்கும் கதீஜா பீவிக்கும், ஏதோ ஒரு வயலில் களை பிடுங்கிக் கொண்டு இருக்கும் பார்வதிக்கும் எந்த ஒரு குரோதங்களோ விரோதங்களோ பிறப்பில் இல்லை.

ஜவுளிக்கடையில் துணி விற்றுக் கொண்டு இருக்கும் அப்துல் காதருக்கும், மளிகைக் கடையில் வணிகம் செய்து கொண்டு இருக்கும் பரமசிவ அண்ணாச்சிக்கும் பிறப்பிலேயே முன்விரோதமோ பின்விரோதமோ இருந்ததில்லை.

தமிழகத்தின் பெருந்தலைவர்களில் ஒருவரான மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள் ஆப்பனூர் ஆயிஷா பீவி மடியில் அமர்ந்து தாய்ப்பால் அருந்தி வளர்ந்த சரித்திரம் இங்கே உண்டு.

ஹிலால் முஸ்தபா நிக்காஹ் செய்து, தனிக்குடித்தனம் போகும் வேளையில் அடுக்களைக்குத் தேவையான அத்தனைச் சாமான்களையும் சீதனமாக வாங்கித் தந்தவர்கள் செல்வகுமார், கலைமணி, சங்கரன், ஆல்பென்ஸ் போன்ற அருமை சகோதரச் சமுதாயச் சார்பு கொண்ட தோழர்கள்தாம்.

இப்படியெல்லாம் ஒவ்வொரு வாழ்க்கை நிகழ்வுகளிலும் மதங்களும் சமூகங்களும் பின்னிப் பிணைந்து மலர்ந்து திகழ்கின்றன. இங்குதான் எல்லா மதங்களும் வாழ்கின்றன.

இந்து முன்னணிகளும் முஸ்லிம் முன்னணிகளும் மோதிக்கொண்டு கொலைகள் விழுகின்ற இடங்களில் எல்லாம் இந்து தருமமும் வாழவில்லை, இஸ்லாம் மார்க்கமும் முளைத்துவிடப் போவதில்லை. இவர்களுக்கு மதங்களும் மதக் கோட்பாடுகளும் கொலைக் கருவிகளாக மாறிவிடுகின்றன.

மதங்களும் மதக் கோட்பாடுகளும் மானுட வர்க்கத்திற்கு வாழ்வு வழங்க வந்த அருள் வரங்கள். அவைகளை வெறி பிடித்த வீம்பர்கள் கொலைக் கருவிகளாகப் பயன்படுத்தும் போது அந்த வீணர்களை மதத் தன்மையோடு பொருத்திப் பார்க்க வேண்டாம்.

இந்து முன்னணிக்காரர்களைக் கொலைப்படுத்தியவர்களையும் சரி, முஸ்லிம்களையும், பாபரி மஸ்ஜித்தைத் தகர்த்தவர்களையும் சரி, முஸ்லிம்களாகவும் இந்துக்களாகவும் ஒரு போதும் மதத் தன்மையோடு பொருத்திப் பார்த்து புனிதத் தன்மைகளைத் தீயிட்டுப் பொசுக்கி விட வேண்டாம்.

சுரேஷ் குமார் கொலைக்குப் பின்னால் இந்து முன்னணியினர் வழி நெடுக அரசுப் பேருந்துகளையும் கடைகளையும் ஒரு கிறிஸ்தவ சர்ச்சையும் அடித்துத் தாக்கி இருக்கின்றனர். இதைச் செய்த இவர்களை இந்து மதத்தின் பிரதிநிதியாக ஒரு போதும் கருத வேண்டாம். இந்து தர்மம் இதை ஏற்றுக் கொள்ளாது. இவர்கள் மதத்தை வெறியாக்கிச் சமூக விரோதத்தை நிலை நாட்டத் துடிக்கும் சமூக விரோதிகள் ஆவர்.

கொலை என்பது மனிதகுல விரோதச் செயல். சமூக சொத்துக்களைத் தகர்ப்பது சமூக விரோதச் செயல்கள்.

மனித விரோதத்தை செயல் படுத்தினால், சமூக துரோகம் தலைதூக்கும். சமூக விரோதம் தலை தூக்கினால், மனித குல துரோகம் நடைமுறைப் படுத்தப்படும்.

தீங்குகளுக்கு இப்படி ஒரு தகாத உறவு இருப்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

மொழி அரசியல்..!


கடந்த மார்ச் 10 ஆம் தேதியும், மே 27 ஆம் தேதியும் மத்திய உள்துறை அமைச்சகம் இரு உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கிறது.

ஃபேஸ்புக், ட்விட்டர், ப்ளாக், கூகுள் மற்றும் யூ டியூப் போன்ற சமூக வலைதளங்களில் அரசு தொடர்பான தகவல்களை வெளியிடும் பொழுது ஆங்கிலத்துடன் இந்தியையும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இந்தியை முதலிலும் அதற்குக் கீழே ஆங்கில மொழியாக்கத்தையும் வெளியிட வேண்டும்.

இவ்விரண்டையும்தான் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது.

தமிழில் ஒரு பழமொழி உண்டு. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டிஎன்பதுதான் அது.

திமுகவின் தலைவர் , பாஜகவைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது

இது ஆண்டிகளின் கட்சிஎன்றார். இந்த ஆண்டிகளின் அரசுதான் இப்போது சங்கூதிப் பார்த்திருக்கிறது.

இந்தியை ஒரு மொழி என்ற அடிப்படையில் எவரும் எதிர்க்க நியாயம் இல்லை. ஆனால் இந்த மொழிதான் செய்தியை உணர்த்தும் மொழியாக இருக்க வேண்டும் என்று யாரோ சிலர் கட்டாயப் படுத்தும் பொழுது, அந்த மொழி மீது எழக்கூடிய பகை இயல்பானது.

ஆங்கிலம் அந்நிய மொழி. நம்மை அடிமைப் படுத்திய ஒரு வர்க்கத்தினரின் தாய்மொழி. அதிகார வர்க்க மொழி. இதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் நடைமுறையில் ஆங்கிலத்தை உலகச் செய்திகளை அறியும் சாதன மொழியாக ஆக்கிவிட்டார்கள்.

ஆங்கிலேயர்கள் அப்படி ஆக்குவதற்கு மற்றவர்களை அடிமையாக்கி வைத்திருந்த அடக்குமுறைதான் காரணமாக இருந்தது.

அதே நேரம் ஆங்கிலேயர்கள் தங்கள் தாய்மொழி என்ற புனிதத்தையும் பெருமையையும் அந்த மொழிக்குச் சேர்த்துவிடாமல் உலகத் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் ஆங்கிலத்தில் உள்வாங்கி அதை மக்கள் மத்தியில் உலவ விட்டுவிட்டார்கள். இதுதான் அதிகார மொழியாக ஒரு மொழியை ஆக்குவதற்கான ராஜதந்திர அணுகுமுறை.

இந்த ராஜதந்திரத்திற்குள் நாமும் சிக்கிக் கொண்டிருப்பதால் ஆங்கிலத்தை உடனடியாக விட்டொழிக்கக் கூடாது. நாம் பின்தங்கி விடுவோம் என்று கூறிக் கொண்டிருக்கிறோம்.

இதில் உண்மை இல்லாமல் இல்லை. அதே நேரம் இதுவே முழு உண்மையும் இல்லை.

ஜப்பான், சீனா, பிரெஞ்சு நாடுகள், ருசியா போன்ற நாடுகள் ஆங்கிலத்தை புறந்தள்ளி உலக ஞான தொடர்புகளை நிறைத்து வைத்து இருக்கின்றன என்பது இந்த நிரூபணத்திற்கு முன்னுதாரணங்கள்.

இந்தியா ஆங்கிலத்தைப் புறந்தள்ளுவதில் ஒரு நேர்மையும் நீதியும் இருக்கிறது. அதே நேரத்தில் இந்திய மொழிகளில் எந்த மொழியாவது உலக ஞானங்களை நிரப்பி வைத்திருக்கின்றனவா? அல்லது அந்த முயற்சியிலாவது ஈடுபட்டு இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இல்லை என்று சொல்லி விடலாம்.

இந்தியாவில் ஒரு மொழியை, “நாங்கள் ஆங்கிலத்தை நகர்த்திவிட்டு அந்த இடத்தில் வைக்கப் போகிறோம். அந்த மொழியை அனைவரும் கற்றுத்தான் ஆக வேண்டும். அதுதான் சுதேசி நேர்மை. அந்த தகுதி இந்திக்குத் தருகிறோம்என்று சொல்லும் பொழுதுதான் பிரச்சனை எழுகிறது.

இந்தியை அப்படி தேர்வு செய்வதற்கு என்ன காரணம் என்று கேட்டால் பதில் தருகிறார்கள். இந்தியாவில் நாற்பது சதவிகிதத்திற்கு மேல் இந்தி பேசுபவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் அந்தப் பதில்.

அதாவது எண்ணிக்கை அடிப்படையில் ஒன்றை வலியுறுத்துவது. இது சரியான கணக்கு அல்ல.

அண்ணாதுரை இந்த மொழிப் பிரச்சனைப் பற்றிப் பாராளுமன்றத்தில் பேசும் பொழுது நையாண்டித்தனமாகப் பேசினார் . ஆனால் அதிலும் ஒரு வாத நியாயம் இருக்கிறது.

இந்திய தேசிய விலங்கு புலி. ஆனால் இந்தியாவில் புலிகள் அதிகம் இல்லை. எலிகள்தான் அதிகம். அதே போல் இந்திய தேசியப் பறவை மயில். ஆனால் மயில்கள் இந்தியாவில் அதிகம் இல்லை. காக்கைகள்தாம் அதிகம்.

அதிகம் என்ற அளவில் வைத்துப் பார்த்தால் எலிகளைத்தான் தேசிய விலங்காக அறிவித்து இருக்க வேண்டும். காக்கைகளைத்தான் தேசியப் பறவைகளாக அறிவித்து இருக்க வேண்டும்”. இதுதான் பாராளுமன்றத்தில் அண்ணாவின் வாதம்.

மொழியைப் பொருத்தவரை இந்தியா போன்ற பல மொழிகள் உரிமம் பெற்று இருக்கக்கூடிய ஒரு தேசத்தில் மும்மொழித் திட்டம் நியாயமானதும் வெற்றிகரமானதுமாக இருக்கும்.

மறைந்த மத்திய அமைச்சர் மோகன் குமார மங்கலம் பொதுவுடைமை இயக்கத் தொடர்புடையவராக இருந்த காலத்தில் மும்மொழித் திட்டம் பற்றி ஒரு அற்புதமான நூல் எழுதினார்.

அதில் மொழி பற்றிய தன்மைகளையும் நிலைமைகளையும் சரியாக விவாதித்திருந்தார்.

இந்தியாவினுடைய எல்லா மாநிலங்களிலும் ஆட்சி அதிகார மொழியாக அந்தந்த மாநில மொழிகளே நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

இந்திய தேசிய அளவில் இந்தியைக் கூட அங்கீகரித்துக் கொள்ளலாம். உலக தொடர்புகளுக்கு ஆங்கில மொழியை அமைத்துக் கொள்ளலாம். பள்ளிக் கூடங்களில் குழந்தைப் பருவத்திலேயே மாணவர்களுக்கு மூன்று மொழிகளையும் அறிமுகப்படுத்த வேண்டும்.

மொழியறிவு என்பது குழைந்தைகளுக்கு ஒரு பாரம் அல்ல. இது விஞ்ஞான ரீதியான கருத்தும் கூட என்றெல்லாம் மோகன் குமாரமங்கலம் அந்த நூலில் குறிப்பிட்டு இருந்தார்.

மொழி என்பது மனித குலத்தின் ரத்த உணர்வுகளோடு சம்மந்தப்பட்டதுதான். ஆனால் அதுதான் புனிதமானது என்று கற்றுத்தரப்படும் தகவலில்தான் ஆபத்து இருக்கிறது.

தொடர்புக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான மிதவைச் சாதனம்தான் மொழி. இதை மறந்துவிடக்கூடாது.

செய்தித் தொடர்புக்கு என்ற அடிப்படையில் மொழியைப் புரிந்து கொண்டால் இந்த மும்மொழித் திட்டம் ஒரு நல்ல தீர்வாகும் வாய்ப்பு இருக்கிறது.

வடபுலத்து இந்தி மொழி வெறியர்கள், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருந்த பொழுது அவர்கள் மொழியை ஆட்சி மொழியாக்க திட்டம் போட்டனர். ஆனால் இதில் கூட குற்றம் இல்லை.

பிற மொழிப் பிரதேசங்களும் எங்கள் மொழியால்தான் ஆளப்படும் என்று திணிப்பு நிகழ்த்திய போதுதான் எதிர்வினைத் தொடங்கியது

இந்தியை இந்தியாவில் எல்லா மாநிலங்களும் முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை.

இந்தியை தாய்மொழியாகக் கொண்ட வடமாநிலங்களிலும் ஒரே மாதிரி இந்தி மொழி இல்லை. பிரதேசத்துக்குப் பிரதேசம் இந்தி பேசுபவர்கள் வேறு வேறு பாணியில் பேசி வருகிறார்கள். ஒரு பகுதியினர் பேசும் இந்தி மற்றொரு இந்தி பேசும் பகுதியினருக்குப் புரிவதே இல்லை.

இந்தியாவில் தேசிய மொழியாக ஒரு மொழியை ஆக்கும் தகுதியை எந்த அடிப்படையில் வரையறுப்பது? அதில் இன்று வரை ஆயிரத்தெட்டு குளறுபடிகள் இருக்கின்றன.

மொழிப் பிரச்சினைப் பற்றிப் பாராளுமன்றத்தில் விவாதிக்கும் பொழுது காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாஹிப் ஒரு கருத்தைப் பதிவு செய்தார்.

இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும் இந்தியை விட அதிகம் அறிமுகமான மொழி இந்துஸ்தானிதான். இந்த அடிப்படையில் இந்துஸ்தானியைத் தேசிய மொழியாக்கிவிடலாம்.

அதே நேரம் இந்தியாவின் தொன்மையான மொழி, இலக்கண, இலக்கியங்களால் செழுமையான மொழி, எழுதக்கூடியதாகவும், பேசக்கூடியதாகவும் இருக்கக் கூடிய மொழி ஒன்றுதான் தேசிய மொழியாகும் தகுதி கொண்டது என நியாயமான முடிவுக்கு வருவோமேயானால், இந்தியாவிலேயே அந்தத் தகுதி உள்ள ஒரே மொழி என் தாய்மொழி தமிழ்தான்”, எனக் காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில் சாஹிப் பாராளுமன்றத்தில் பதிவு செய்தார்.

இந்தி மொழிக்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்த பொழுது ஒரு வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது. இதை நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை இந்தி எதிர்ப்பு என்பது, அரசியல் அடிப்படையிலான ஒரு போலித்தனமான பிரம்மாண்டமாகத்தான் இருந்திருக்கிறது.

வேசி மொழி இந்தி. தாய் மொழி தமிழ். இந்தியைத் தமிழகத்துக்குள் விட மாட்டோம் என்ற உணர்ச்சி வேக சொற்பொழிவுகளால் உந்தப்பட்டு எழுந்த ஒரு போராட்டம்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டம்.

மொழி பயன்பாட்டுச் சாதனம் என்ற உண்மையைத்தாண்டி புனிதத்தனமான சமாச்சாரம் என்ற உணர்ச்சிப் பகுதிக்குள் நுழைக்கப் பட்டதால் பெரும் பிழைகள் தமிழகத்தில் நிகழ்ந்து விட்டன.

அதனுடைய இன்றைய வடிவம்தான் எங்களுக்குத் தமிழ், பள்ளிக்கூடங்களில் தேவையில்லை, ஆங்கிலம் இருக்கட்டும். இதை மறுக்கவோ, மாற்றவோ ஆளுகிற அரசுக்கு அதிகாரம் இல்லை. மொழி தனிமனித விருப்பம். அதில் தலையிட அரசுக்குக் கூட உரிமை கிடையாதுஎன நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து வாதாடுகிற அளவுக்கு நிலைமை முற்றிப்போய் இருக்கிறது.

மாநிலத்தில், இந்தியத்தில் உலகவரம்பில் வேலைவாய்ப்பை ஆங்கிலம் உருவாக்கித் தருவதால் எங்களுக்கு ஆங்கிலம் போதும் என்ற லாப உணர்வு இன்றையச் சமூகத் தலைமுறையின் நியாயமாக மாறிவிட்டது.

மொழி ஒரு தொடர்பு சாதனம்தான் என்பது மீண்டும் இங்கே உறுதிப்படுகிறது.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகளில் பாண்டிச்சேரி ஒன்றையும் சேர்த்து 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் இந்தியில் போஸ்டர் அடிக்கப்பட்டு ஒட்டப்பட்டு இருந்தது. அந்தத் தொகுதிதான் மத்தியச் சென்னை பாராளுமன்றத் தொகுதி.

அந்தத் தொகுதி வேட்பாளராகத் திராவிட முன்னேற்றக் கழகத்தால் நிறுத்தப்பட்டவர் தயாநிதி மாறன். இவர் டி.வி. சாதனங்களின் மூலம் உலகம் முழுவதும் தொடர்பு கொண்டு இருக்கும் வணிகக் குடுப்பத்து உரிமைக்காரர். வேறொரு வகையில் சொன்னால் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி குடும்பத்துப் பேரர்.

இவர் போட்டியிட்டத் தொகுதியில் மார்வாரிகளும் இந்தி பேசுபவர்களும் கொஞ்சம் கணிசமான வாக்காளர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் வாக்குப் பெற மொழி ஒரு சாதனம் என்று புரிந்து கொண்டு போஸ்டர்களையும் நோட்டீஸ்களையும் இந்தியில் அடித்துப் பயன்படுதினார்.

அந்தத் தொகுதியில் வாக்குச் சேகரிக்கப் பொது மேடையில் கருணாநிதி நான்கு வரி இந்திக் கவிதையினை எழுதிவைத்துப் படிக்காமல், மனனமாகவே உச்சரித்துப் பேசி இருந்தார்.

இவைகள் குற்றமல்ல. மொழி ஒரு தகவல் பரிமாற்றச் சாதனம் என்ற உண்மைக்கு இதுவும் நிரூபணம்.

மொழியை வெறியாக்கி, புனித உணர்வாக்கி, திணிக்க நினைப்பதுதான் மகத்தான குற்றம். திணிக்க நினைக்கும் பொழுது, அதே அளவு எதிர்ப்பைச் சந்தித்துத்தான் தீரவேண்டும்.

நியூட்டனின் மூன்றாவது விதி எவ்ரி ஆக்ஷன் ஹஸ் எ ஈகுவல் அண்டு ஆப்போஸிட் ரியாக்ஷன்”, (ஒரு வினை அதற்குச் சமமான எதிர்வினை கொண்டு இருக்கும்).

இதுதான் அறிவியல் நடப்பு.

தமிழைப் புனிதப்படுத்தி இன்னொரு மொழியை எதிரியாக்குவது அரசியல் தன்மை கொண்டது. இந்த அரசியல் தன்மையில் சிலர் ஆட்சிபீடம் ஏறலாம். ஆனால் தமிழர்கள்தாம் தலைமாறித் தாழ்ந்து விடுவார்கள். அந்த விளைவைத்தான் இன்றைய இளைய தலைமுறையினர் வடிவில் காண்கிறோம்.

இதெல்லாம் சரி, இந்திக்கு பா.ஜ.க. ஆட்சி ஏன் ஒரு முக்கியத்துவத்தைத் திடீரென்றுத் தூக்கி முன் வைக்கிறது?. இன்றையப் பிரதமரின் தாய் மொழி குஜராத்தி. ஆனாலும் வெளி நாட்டுத் தூதர்களிடம் கூட இந்தி மொழியைப் பயன்படுத்துகிறார். அது ஏன்?.. இதிலும் ஒரு அரசியல் இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் ஒரு சுலோகம், “ இந்துத்துவா, இந்தியா, இந்திஎன்பதுதான் அது.

இந்தியை, அவர்கள் வைத்து இருக்கும் இந்துத்துவாவின் மொழியாகத் தீர்மானித்துக் கொண்டார்கள். இந்துத்துவாவை ஒப்புக்கொள்ளும் ஒவ்வொருவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதில் மதம் சார்ந்த அடையாளம் இருக்கிறது என்பதுதான் அவர்களின் கொள்கை.

இந்தியும் தொடர்புசாதனம் என்ற அடிப்படையில் புகுத்தப்படவில்லை. அதற்குரிய எந்த முயற்சியும் இதுவரை எடுக்கப்படவும் இல்லை. இந்தி என்பது இந்துத்துவாவின் மொழி என்ற ரகசியத்தைத்தான் மோடி அரசு வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போல நுழைத்து இருக்கிறது. இந்தி, சமஸ்கிருதத்தின் குட்டி வடிவம்.

Sunday, June 22, 2014

சமமான தராசுத் தட்டுகள்..!


இந்தக் கட்டுரையைப் படிப்பவர்களுக்கு ஒரு எளிய வேண்டுகோள்.

நம்மில் பலர் வளமையாகச் சில முடிவுகளுக்கு உடனடியாக வந்துவிடுகிறார்கள்.

ஒன்றை சொல்பவன் அல்லது எழுதுபவன் தருகிறத் தகவல்களைத் தகவல் என்ற அடிப்படையில் புரிந்து கொள்வதற்குப் பதிலாக, தகவலைத் தந்தவனின் பெயரையும், பிற அடையாளங்களையும் வைத்து அவனை ஒரு மதத்துக்கோ அல்லது ஜாதிக்கோ உரியவனாக்கி அவன் தரும் தகவலை அறிகிற வாசகர்கள் அவனை ஜாதி வெறியனாக்கி அல்லது மத வெறியனாக்கிப் புரிந்து கொள்கிறார்கள்.

இப்படி ஒரு அடையாளப் படுத்தலோடு இந்தக் கட்டுரையினைப் புரிந்து கொள்ள வேண்டாம் என முன்மொழிந்து கொள்கிறேன்.

மதம், வெறியூட்டப் படுவதற்கு மிகச் சரியான ஒரு கருவி. மதத்தை அரசியல் படுத்துவது மனித குலத்துக்கு ஒரு சுலபமான நடவடிக்கை.

ஈராக் இன்று ஒரு புதிய போர்க்களத்துக்குத் தயாராக்கப்படும் பிரதேசமாகக் காட்டப்படுகிறது.

சதாம் உசேனை தொலைத்து விட்ட ஈராக் அந்த நாளில் இருந்தே நிம்மதியை நழுவவிட்ட நாடாகத்தான் இருக்கிறது.

சதாம் உசேனின் அமெரிக்க எதிர் நடவடிக்கையை ஒரு பயங்கரவாதம் போல முன்னெடுத்து அமெரிக்க வல்லரசு, சில அரபு நாட்டுத் துணைகளுடனே ஈராக்கைக் கலவர பூமியாக்கி இரத்தக் காட்டேறி போல மாறி ஈராக்கிய இரத்தத்தை உறிஞ்சியது.

அமெரிக்க ஆதரவோடு ஈராக்கில் ஒரு ஆட்சி முறை வழங்கப்பட்டது.

இன்று இந்த ஆட்சி முறைக்கு எதிராக ஒரு புரட்சி தலைதூக்கும் போது அந்தப் புரட்சிக் கருத்துடையவர்களை மத வெறியர்களாகச் சித்தரிக்கிறார்கள்.

ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் களத்தில் இறங்கி விட்டதாக உலக வரம்புக்குச் செய்திகள் தரப்படுகின்றன.

அதாவது அமெரிக்காவை ஆதரித்தால் அவர்கள் முற்போக்கு சிந்தனை கொண்ட முஸ்லிம்கள். அமெரிக்கக் கோட்பாட்டை முறியடிக்க முயல்கின்றவர்கள் மதவெறி முஸ்லிம் தீவிரவாதிகள். இதுதான் அமெரிக்க ஃபார்முலா.

இந்தியாவில் மோடியுனுடைய நேர்மை மீது நம்பிக்கை வைக்கும் முஸ்லிம்கள் புதிய, நவீன மதச் சிந்தனை கொண்ட முஸ்லிம்கள் ஆகிவிடுகிறார்கள். இவர்கள்தான் இன்றைய இந்திய முஸ்லிம்களின் அடையாளம் என்பது மோடி முன்வைக்கும் நவீன ஃபார்முலா.

இந்த அணுகுமுறை முஸ்லிம்களுக்கு எதிரான தூண்டுதல் என்ற தகவலை முன்வைத்து போராட்ட வியூகம் வகுக்கும் முஸ்லிம்கள் பிற்போக்கான மத வெறி கொண்ட தீவிரவாத முஸ்லிம்களாக அடையாளம் காட்டப் படுகிறார்கள்.

இந்த இடத்தில் நடத்தப்படும் சதியின் வடிவத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய ஷியாப் பிரிவு முஸ்லிம்களில் பெரும் எண்ணிக்கைக் கொண்ட பிரிவினர் மோடியை, அவர் அரசியல் நேர்மையை, ஆளும் திறமையை ஏற்றுக் கொள்கிறார்கள். இதனால் ஷியா முஸ்லிம்களை தரக் குறைவாக விமர்சிக்க முடியாது. அது அவர்களின் அரசியல் பார்வை.

மோடியின் கடந்த கால வரலாறு வெளிப்படையாகவும், நடைபெற்றுக் கொண்டு இருக்கக் கூடிய அவரின் இன்றைய வரலாறு திரை மூடிய சீரழிவாக இருக்கக் கூடிய வாய்ப்பாகவும் இருக்கிறது, இனிமேலும் இருக்கும் என்று புரிந்து கொண்டு மோடியை விமர்சிக்கும் முஸ்லிம்கள் மத வெறியர்களாகவும், தீவிரவாதிக் கும்பல்களாகவும் காட்டப்படுகிறார்கள்.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, மோடி அரசின் ஒரு செய்தி நமக்குத் தகவல் தருகிறது.

மதரசாக்களை நவீனப் படுத்துவோம், முஸ்லிம்கள் மீது இந்த அரசுக்கு ஆழமான அக்கறை இருக்கிறதுஎன்று மோடி அறிவித்து இருக்கிறார்.

மோடி சொல்லுகின்ற நிமிடத்திற்கு முன்பு வரை, முஸ்லிம்களின் மதரசாக்கள் பழமை வாதத்திலும் அறியாமைக் கால அசட்டுத்தனத்திலும் கிடந்து கொண்டு இருப்பது போன்ற ஒரு எண்ணத்தை இந்திய மக்கள் மனதில் மோடி அரசு பிரபகண்டா படுத்துகிறது.

சரி, மதரசாவை நவீனப்படுத்த என்ன மாதிரியான திட்டங்கள் வைத்து இருக்கிறார்?..

அந்தத் திட்டங்கள் ஐரோப்பிய அறிவியல் பாணியிலான திட்டமா? அல்லது மனுதர்மத்தில் இருந்து எடுக்கப்பட்ட முற்போக்கு சிந்தனை கொண்ட திட்டமா?

அல்லது கிறிஸ்தவப் போதனைகளில் இருந்து எடுக்கப்பட்ட அதி நவீனத் திட்டமா?.. அல்லது புத்தக் கோட்பாட்டில் இருந்து பொறுக்கி எடுத்துத் தரப்பட்டத் திட்டமா?.. அல்லது சமண தத்துவத்தில் இருந்து தயாரிக்கப் பட்டத் திட்டமா? ஒரு வேளை ஆர்.எஸ்.எஸ். யுடைய பிதாமகர்கள் முன்வைக்கும் இந்துத்துவத் தத்துவ விசாரணைகளில் இருந்து தயாரிக்கப் பட்ட நவீனத் திட்டமா?

இப்படி எல்லாம் கேள்விகள் எழுப்பப்படும் பொழுது இவைகளில் எதுவுமே நிச்சயமாக இருக்காது என்று என் போன்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

மதரசாக்கள் இஸ்லாமிய நெறிமுறைக்கு உட்பட்டது. அதனை நவீனப் படுத்த இஸ்லாத்தில் இருந்துதான் கோட்பாடுகளை எடுத்தாக வேண்டும். மோடி நிச்சயம் இந்த அறிவு நிலையில் தெளிவாக இருக்கிறார்.

முஸ்லிம்களுக்கு விரோதமாக மோடி செயல்பட மாட்டார். அவரைப் பொருத்தவரை எல்லா மதத்தவர்களும் அந்தந்த மதத்தில் பேணுதலாகத்தான் இருக்க வேண்டும் எனக் கருதுகிறார் என்றெல்லாம் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளத் திட்டத்தைதான் மோடி கைவசம் வைத்து இருக்கிறார்.

இதில் இருந்து என்ன புரிந்து கொள்ள முடிகிறது?..

மோடியை அதிகளவில் ஆதரிக்கும் ஷியா முஸ்லிம்கள்தான் முஸ்லிம்கள். அல்லாதவர்கள் தாலிபான் பெற்றெடுத்துப் போட்டு இருக்கக் கூடிய தீவிரவாத மதவெறி முஸ்லிம்கள். இதற்கு மதரசாக்கள்தான் காரணமாக இருக்கின்றன. எனவே இந்த மதரசாக்களில் நவீனமய சிந்தனை தேவைப்படுகிறது. இந்தத் தேவையை மோடியின் முஸ்லிம்களான ஷியாக்களின் மதரசாக்களில் இருந்து தத்துவங்களைப் பெயர்த்தெடுத்து மற்ற மதரசாக்களில் புகுத்தி நவீனப் படுத்த ஒரு திட்டம் மோடியின் கண்டுபிடிப்பாக இருக்குமோ என்ற சிந்தனை எம் போன்றோருக்கு ஏற்படுகிறது.

ஒருக்கால் இப்படி நடந்து விட்டால், இந்திய முஸ்லிம்களின் அடுத்து வரும் வரலாறும் நிகழ்வுகளும் எப்படி இருக்கும்?..

படிப்பவர்கள் பதிவு செய்யுங்கள்.

மதரசாக்கள் நவீனப்படுத்துவது இருக்கட்டும். பழமையே இல்லாத அதி நவீன இந்து வேதப் பாடசாலைகளில்மோடி மேலும் நவீனப்படுத்த திட்டம் வைத்து இருக்கிறாரா?.. என்ற எதிர்மறைக் கேள்விகளை முன்வைத்து நான் விமர்சிக்க தயாரில்லை.

மதங்கள் என்ற பெயரில் ஷியாக்களையும் சன்னி முஸ்லிம்களையும் வைத்து ஈராக்கில் அமெரிக்கா எப்படி அரசியல் நடத்துகிறதோ அந்த அரசியலைத்தான் இந்தியாவுக்குள் மோடி அமைதியாகச் சாதிக்க முனைகிறாரோ? என்கிற கருத்து என் போன்றவர்ளுக்கு எழுகிறது. இது தவறானதாகவும் தெரியவில்லை. குற்றமானதாகவும் படவில்லை.

புதிய தராசில் ஒரு தட்டு அமெரிக்கா, மறு தட்டு மோடி இந்தியா. அப்படி என்றால் தராசைத்தூக்கிப் பிடிக்கும் கரம் யாருக்குச் சொந்தமானது?..

Tuesday, June 3, 2014

ஸ்ரீருங்கேரி மடம் ஒரு சிறந்த உதாரணம்..!


சங்கர மடம் இந்தியாவில் மொத்தம் ஆறிடங்களில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.

இந்த ஆறில் ஒன்று ஸ்ரீருங்கேரி சாராதா பீடம் என்கிற சிறப்போடு திகழ்கிறது. ஸ்ரீருங்கேரி கர்நாடக மாநிலத்தில் உள்ளது.

1790 ஆண்டுகளில், ஸ்ரீருங்கேரி மடத்துக்கு நிகழக் கூடாத பெரும்பிழை ஒன்று நிகழ்ந்துவிட்டது.

பக்திபீடங்களாகவும் ஆன்மிகத் தலைமையகமாகவும் இருக்க வேண்டிய மடங்கள் தரமிழந்து சாதாரண குடும்பங்களில் நிகழ்ந்து விடக் கூடிய வாரிசுரிமை, சொத்துரிமை சிக்கல்களில் சிக்கித் திணறியது.

ஸ்ரீருங்கேரி சாரதா மடத்தின் தலைமைப் பீடத்தை அலங்கரித்த மடாதிபதிக்கு மடத்துக்குள்ளே பெரும் பகை மூண்டுவிட்டது.

இந்தப் பகை ஒரு கட்டத்தில் மடாதிபதியைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தது. இன்னொருவர் அந்தப் பீடத்தைக் கைப்பற்றச் சதியும் நடந்தது.

அங்கீகரிக்கப் பட்ட ஒரிஜினல் மடாதிபதி சாரதா பீடத்தைவிட்டு உயிர் பிழைத்தால் போதுமென்று தப்பி ஓடிவிட்டார்.

சாரதா பீடத்தைக் கைப்பற்றிய போலி மடாதிபதி பீடத் தலைமையை ஏற்று அவருக்குரிய பணியை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.

தலைமறைவாகி உயிருக்கு பயந்து பதுங்கி இருந்த ஒரிஜினல் பீடாதிபதி சில காலங்கள் மறைந்து இருந்துவிட்டு அன்றைய அரசாட்சி புரிந்த மன்னரிடம் அடைக்கலம் அடைந்தார்.

சாரதா பீடத்தில் தனக்குள்ள அதிகார உரிமைக்குரிய ஆவணங்களை மன்னனிடம் சமர்ப்பித்து நீதி தேவை என்று முறையிட்டார்.

மன்னன் தரப்பட்ட ஆவணங்களை ஆழமாகப் பரிசீலித்து இவர்தான் ஒரிஜினல் பீடாதிபதி என்ற முடிவுக்கு வந்தான்.

பதவி இழந்திருக்கும் சாரத பீடாதிபதி மன்னனிடம்,

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒருவர், எவ்வித வெறுப்புமின்றிப் பிரஜைகளின் பிரச்சனைகளைப் பரிசீலித்து நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய ஆதிகாரத்தில் இருக்கிறார். நீதி எக்காரணத்தினாலும் வரலாற்றில் அவமானப் பட்டு விடக் கூடாது. ஆகவே தெளிவாகத் தேர்ந்து நீதி வழங்க வேண்டும்என்று கேட்டுக் கொண்டார்.

அந்த மன்னனும் நீதிக்குப் புறம்பான எதையும் செய்தறியாத பேராளன். எனவே சாரதா பீடத்தின் தலைமை பீடத்தில் அமர்ந்திருக்கக் கூடிய போலித் தலைவரை முற்றுகையிட்டு கைது செய்து ஒரிஜினல் தலைவருக்கு அந்தப் பொறுப்பை வழங்கினான்.

இந்தத் தகவல் சாரதா பீடத்திற்கு உள்ளே நுழைவாயிலில் நன்றி உணர்வின் பெருக்கால் அந்தப் பீடாதிபதியால் பதிவு செய்யப் பட்டது. காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

அரசியல் நடத்தும் ஆட்சியாளன், அவனுக்கென்று ஒரு தனிக் கொள்கைகள் மதக் கடைபிடுப்புகள் இருக்கலாம். ஆனால் அதை அவன்தான் பின்பற்றிக் கொள்ள வேண்டும். அவன் ஆட்சிகுட்பட்ட பிரஜைகளிடம் அது பற்றிய கணக்குத் தீர்ப்பை பயன்படுத்த கூடாது.

தனிப்பட்ட மன்னனுக்கு மதம் இருக்கலாம். அரசாட்சி புரியும் நீதி பரிபாலன மன்னனுக்குப் பிரஜைகளின் மதங்களில், உரிமைகளில் தன் கோட்பாட்டைத் திணிப்பது என்பது மிகவும் கொடூரமானது.

மதமாச்சரியங்களால் பிரஜைகளிடம் மாறுபட்டு ஒரு மன்னன் நடப்பானேயானால், ஒரு தனி மனிதன் ராஜதுரோக குற்றம் செய்தால் அவன் எப்படிக் கருதப் படுவானோ அவனுக்கு எந்த அளவு உச்சகட்ட தண்டனை தர முடியுமோ அதைப் பெறும் குற்றவாளியாகத்தான் அவன் இருக்க முடியும்.

ஆன்மீக பீடங்களின் தலைமை, அல்லது மத பீடங்களின் தலைமை, ஆட்சி அதிகாரத்திற்குள் தலை நுழைத்து தங்கள் கோட்பாட்டுக்களை அங்கே நுழைத்தால் அவர்களும் ராஜ துரோகத்திற்குரியவர்கள்தாம்.

சாரதா பீடத்தினுடைய தலைமைப் பிரச்சனைகளைச் சீர்தூக்கிப் பார்த்து மதமாச்சரியங்களின்றி நீதி வழங்கிய அந்த மாமன்னன் மைசூர் வேங்கை தீரன் திப்பு சுல்தான்தான்.

அதே நேரம் மன்னன் வழங்கிய நியாயத்தை மதிப்போடு ஏற்று தர்மபரிபாலனம் செய்த பீடாதிபதி சாரதா மடத்தின் நுழைவாயிலில் நன்றி பெருக்கோடு இதைப் பதிவு செய்து இருக்கிறாரே அந்த மகானும் சரித்திரத்தின் மேலான சிறப்புக்குரியவர்.

அரசியல் அமைப்பும் , மத பீடங்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஸ்ரீருங்கேரி சங்கர மடமான சாரதா பீடத்தின் அந்த தலைவர் ஒரு முன்மாதிரி.

இன்றைய செய்தித்தாளில் ஒரு செய்தி. ஆறு சங்கர மடங்களில் மற்றொரு மடமான பூரி கோவர்தன பீட சங்கராச்சாரியார் நிசலானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், அரசியல் சாசனத்தில் பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கக் கூடிய 370 சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்று கோரி, பாஜக உறுப்பினரைப் போலவும், ஆர்.எஸ்.எஸ் ஊழியனைப் போலவும் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

மதபீடங்கள் அரசியலுக்குள் வரத் துவங்கிவிட்டன. அரசியல் மதபீடங்களுக்குள் சுற்றுலா வர துவக்கம் நிகழ்ந்து விட்டது.

இந்தியாவிற்கு முன்மாதிரியாக இருக்கும் என் அரசுஎன்று அறிவித்த மோடியின் ராஜபரிபாலனம் துவங்கிவிட்டது.