Saturday, August 30, 2014

இதெல்லாம் எப்படி நடந்தது!-43

ஞான விருட்சத்தின் கீழ்

நச்சுக் காளான்கள்!!!



1977-க்கு முன்பு வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெறுமனே பாடத்திட்டங்களைக் கூட்டிப் பெருக்கி மாணவ, மாணவியர் மூளைக்குள் திணித்து வைத்த சடங்குக் கூடமாக இருந்ததில்லை.

மேலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு ஒரு தனிப்பெரும் அந்தஸ்து உண்டு. கிட்டத்தட்ட எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து கல்வி பயின்ற வாய்ப்பு தமிழகத்தில் வேறு எங்கும் இருந்ததில்லை. அதிலும் பல்துறைச் சார்ந்த கல்வி பயிலல் இங்கு மட்டும்தான் இருந்தது.

ஒரு பிரம்மாண்டமான ஞான விருட்சத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த விருட்சம் பல நூறு விழுதுகளைப் பூமியில் ஆழப்பதிவு செய்து நிமிர்ந்து நின்ற கோலத்தையும் நினைவில் கொள்ளுங்கள்.

மேலே சொன்ன உண்மையும் சத்தியமானது. அதே நேரம் அந்த உன்னத விருட்சத்தின் கீழ் நச்சுக் காளான்களும் குடை விரித்துக் காட்சி தந்தன என்பதும் சத்தியத்திலும் சத்தியமானது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களின் கலாச்சாரப் பண்பாட்டுத் தூறல்களும், அண்டை மாநில நடைமுறைகளும், பக்கத்து ஈழதேசத்தின் வாழ்க்கை அமைப்புகளும் ஒரே இடத்தில் காட்சிப்படும் இடமும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்தான்.

இந்தக் கலைக் கழகம் பல நூறு ஆளுமைகளைத் தமிழகத்திற்குத் தந்து இருக்கிறது. அந்தப் பட்டியலை இங்கு விரித்து வைக்க முடியாது. அந்த அளவுக்கு விசாலமானது.

தோழர் பாலதண்டாயுதத்தின் ஆளுமை ஒரு காலகட்டம். மதியழகன், அன்பழகம் போன்ற ஆளுமைகளின் வெளிப்பாடு ஒரு காலகட்டம். தோழர் புலவர் கலியபெருமாள், தோழர் மாணிக்கம் போன்ற ஆளுமைகள் இன்னொரு காலகட்டம். பண்ருட்டி ராமச்சந்திரன், தோழர் தியாகு, தோழர் ஆ.சிவ சுப்பிரமணியன், தோழர் ரங்கசாமி, வேலூர் கிருஷ்ணன் அண்ணாச்சி, தர்மபுரி புலவர் நாகு நக்கீரன், நாகர்கோயில் டாக்டர்.மு.ஆல்பென்ஸ் நதானியல் போன்ற ஆளுமைகளின் காலகட்டங்கள் ஒரு விதமானப் போராட்டக் காலகட்டம்.

இந்தப் பட்டியலில் பிந்தைய கடைசிக் காலகட்டத்தில் என் போன்றவர்களுக்கும் ஒரு சின்னப் பங்கு இருந்தது.

1969 – ஆம் ஆண்டுகளில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், அந்த ஞானம் தந்த பூமியில் நடந்த இழி செயல்களைப் பதிவு செய்ய நான் தயக்கப் படவும் இல்லை. வெட்கப் படவும் இல்லை.

தற்போது தக்கலையில் மார்க்சிய கம்யூனிஸ்ட்டு அலுவலகத்தின் முழுப் பொறுப்பைக் கவனித்து வரும் தோழர் ரங்கசாமி, நாகர் கோயில் பயோனியர் குமாரசாமி கல்லூரி தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்த மு.ஆல்பென்ஸ் நதானியல், வேலூர் கிருஷ்ணன் அண்ணாச்சி போன்றவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் விடுதியில் நடைமுறைப்பட்டு வந்த சமூக இழிவை எதிர்த்துப் போராடிய சம்பவங்கள் என் நினைவுக்கு வருகின்றன.

பல்கலைக் கழக விடுதியில், தலித்து மாணவர்கள் பிற ஜாதிய மாணவர்களோடு அமர்ந்து உணவு உண்ண வாய்ப்பு மறுக்கப் பட்ட ஒரு நிலை இருந்தது.

தென்னார்க்காடு மாவட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த, குறிப்பிட்ட ஜாதி மாணவர்களுக்கு அருகில் தலித்து மாணவர்கள் அமர்ந்து உணவு உண்ண முடியாது.

ஞானம் தந்த கல்விக் கூடத்தில் இந்த ஈனமும் நடைமுறையில் இருந்தது.
சக மாணவர்கள் ஜாதி குறித்து விலக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற உணர்வோடு ரங்கசாமி, ஆல்பென்ஸ் நதானியல், கிருஷ்ணன் அண்ணாச்சி போன்ற ஒரு நண்பர் வட்டாரம் செயலில் இறங்கியது.

ஒரு நாள் மதியம், விடுதி உணவு அறையில் ரங்கசாமி, ஆல்பென்ஸ் மற்றும் தோழர்கள் தங்களுடன் படித்த கருப்பையா, மதுரம் பன்னீர்செல்வம், சண்முகம் போன்ற தலித் சமுதாயத்தவர்களை உடன் அழைத்து வந்து, தங்களுடன் அமர வைத்து உணவைப் பரிமாறச் சொன்னார்கள். அங்கிருந்த சில ஜாதிய மாணவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் ஒரு சினிமா சண்டைக் காட்சி அங்கே நிகழ்ந்தது.

விடுதி அடுக்களையில் இருந்த நீண்ட கரண்டிகள், அடுப்பெரிக்கப் பயன்படும் விறகுக் கட்டைகள், பாத்திரம் மூடிய தட்டுக்கள் இவைகள் ரங்கசாமி, ஆல்பென்ஸ் தோழர்களின் ஆயுதங்களாக மாறின.

இந்த நிகழ்வுக்குப் பின் தலித் மாணவர்களுக்குச் சில நம்பிக்கை வந்தது. தாங்கள் போராட வேண்டிய துணிச்சலுக்கு வந்துதான் தீர வேண்டும் என்ற முடிவை அவர்கள் எடுக்கத் தொடங்கினர்.

இதற்குப் பின்னர் இந்த இழிநிலை ஒரு முடிவுக்கு வந்தது.
அடுத்தொரு சூழலும் அண்ணாமலையில் இருந்தது. தி.மு.க. கொஞ்சம் கை ஓங்கி இருந்த காலகட்டம் அது.

காங்கிரஸ் கதி மங்கி இருந்த நேரமும் அது.

மாணவக் காங்கிரஸ் கூட்டம் நடந்தால் தி.மு.க. மாணவர் அணிக்கு தீச்சுட்டது போன்ற வேதனை ஏற்பட்டது. காங்கிரஸ் கூட்டத்தில் புகுந்து தி.மு.க. மாணவர்கள் கலாட்டா செய்யத் தொடங்கினர். காங்கிரஸ் மாணவர்கள் கலங்கிப் போயினர்.

இந்த நேரத்தில் கம்யூனிஸ்டு மாணவர்கள் ஒரு முடிவு செய்தனர். காங்கிரஸ் கூட்டங்களில் தி.மு.க.வினர் தகராறு செய்தால் கம்யூனிஸ்டுகள் தலையிட்டு நிலைமையை சீர் செய்வது என முடிவு கட்டினர்.

காங்கிரஸ் மாணவர்களை அணுகி உங்கள் கூட்டங்களுக்கு நாங்கள் பாதுகாவல் தருகிறோம். நீங்கள் தைரியமாகக் கூட்டத்தை நடத்துங்கள். காங்கிரஸின் கோட்பாடுகள் எங்களுக்கு எப்போதும் உடன்பாடானதில்லை, ஆனாலும் உங்கள் கூட்டங்களைத் தடுப்பது அரசியல் அநாகரிகமானது. அதற்காக உங்களுக்கு நாங்கள் ஆதரவுத் தருகிறோம். எங்கள் கூட்டங்களுக்கு நீங்களும் ஆதரவு தாருங்கள் எனக் கூறி, கம்யூனிஸ்டு தோழர்கள் காங்கிரஸ் கூட்டங்களுக்கு ஆதரவுத் தரத் தொடங்கினர்.

தி.மு.க அணியினருக்கு எரிச்சல் ஏற்பட்டது. இது பற்றி கம்யூனிஸ்டு நண்பர்களிடம் விவாதிக்க வந்தனர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழக நூலகம் அற்புதமான அரும்பெரும் நூலகம். அதன் முன்னே இருந்த புல்வெளியில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.
கம்யூனிஸ்டு இயக்கச் சார்பாக ரங்கசாமி, கிருஷ்ணன் அண்ணாச்சி, ஆல்பென்ஸ் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் தி.மு.க. மாணவர் அணித் தலைவர் பொறியியல் கல்லூரி மாணவர் ராமச்சந்திரன் தலைமையில் தி.மு.க. அணியினர் வந்து இருந்தனர்.

பேச்சு வார்த்தை லேசாகத் தொடங்கிக் காரசாரமாக முன்னேறியது. ஒரு கட்டத்தில் தி.மு.க. அணியினர் தவறான மொழிகளையும் தகாத சொற்களையும் பயன்படுத்தினர்.

கம்யூனிஸ்டு ரங்கசாமி எழுந்தார். கொஞ்சம் ஆவேசப்பட்ட நிலையில் தன்னுடைய கீழாடையை அவிழ்த்துக் காட்டி தி.மு.க.வினர் பாணியிலேயே பதில் சொன்னார். நிலைமை முற்றுப் பெறாமல் முடிவு பெற்றது.

தி.மு.க. சார்பில் வந்த பொறியியல் கல்லூரி மாணவர் ராமச்சந்திரன்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்.

இன்று பண்ருட்டி ராமச்சந்திரன் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர்களில் ஒருவர். கம்யூனிஸ்டு ரங்கசாமியும் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் குறிப்பிடத்தக்கத் தோழர். இந்த இருவரும் இன்றைக்கு நல்ல நண்பர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் இல்லத்திற்கு எதிர்ப்புறம், அன்றைய காலகட்டத்தில் மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியாக இருந்தது. குடி நீர்க் குளம் அங்கு இருந்தது. அதைத் தாண்டி ஒரு ஒதுக்குப்புறம்.

சில சமூக விரோதிகள் தெருவழியே வரும் சில பல்கலைக் கழக மாணவிகளைக் கடத்திச் சென்று தவறான செயல்களில் ஈடுபடத் துணிந்தனர். இதைத் தடுத்து நிறுத்தும் துணிச்சல் எவருக்கும் உடனே வந்து விட வில்லை.
இந்த காலகட்டத்தில் கன்னியாகுமரி - நெல்லை மாணவர் கூட்டமைப்பு ஒன்றை நண்பர்கள் கூடி உருவாக்கினர். இதன் தலைவராக மொழியியல் துறைத் தலைவர், அறிஞர் அகஸ்திய லிங்கனாரை (கன்னியாகுமரி மாவட்டம்) ஏற்றுக் கொண்டனர்.

இந்த இரு மாவட்டக் கூட்டமைப்பினர் மாணவியருக்கு நிகழ்ந்த இந்தக் கோரச் செயலைத் தடுத்து நிறுத்தினர். இதற்கான பெரும் பங்கு ரங்கசாமிக்கும் ஆல்பென்ஸுக்கும் உரியதாகும்.

திறந்தவெளி திரை அரங்கம் அப்போது நடைமுறையில் இருந்தது. மாலை வேளையில் திரை அரங்கில் திரைப்படம் காட்டப்பட்டது. சற்று இருட்டியதற்குப் பின் சில சமூக விரோதிகள் மின்சாரக் கம்பிகளில் வாழை மட்டையைத் தூக்கி ஏறிந்து திறந்த வெளி அரங்கத்தை இருட்டாக்கி விடுவர். இதைப் பயன்படுத்தி மாணவியரிடம் தகாத முறையில் நடந்து கொள்வர்.
இதனைத் தடுத்து நிறுத்த மார்க்சிய மாணவர்கள் முடிவு செய்தனர்.

மார்க்சிய சிந்தனைக் கொண்ட மாணவியரிடம் பாதி பிளேடுகளைக் கொடுத்து இருட்டில் சில்மிஷம் பண்ணுபவர் யாராக இருந்தாலும் பிளேடால் கீறி விட முடிவு செய்தனர். அதை நடைமுறைப் படுத்தினர் அன்றோடு அந்தக் கொடிய பழக்கம் நின்று போனது.

சில மாதங்கள் சென்ற பின் திறந்தவெளி திரையரங்கத் திரைக் காட்சிகளைப் பல்கலைக் கழக நிர்வாகம் நிறுத்தியும் விட்டது.

தலித்தியப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டதற்கும், பெண்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கும் பதிலடி கொடுக்க, சில அமைப்பினர் சமூக விரோதிகளைத் தயார்ப்படுத்தி, ஆல்பென்ஸ் நதானியல் வகுப்புக்குத் தனித்து வந்த ஒரு நாளைக் கண்டறிந்து ஆல்பென்ஸைச் சுற்றி வளைத்து கோரமாகத் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

உள்காயங்கள், வெளிக் காயங்களோடு ஆல்பென்ஸ் நதானியல் திருவள்ளுவர் விடுதி 6ஆம் எண் அறையில் படுத்துக் கிடந்தார். அதுதான் அவருடைய அறை. எந்த மாணவர்களுக்காக அவர் போராடினாரோ அவர்கள் கூட ஆல்பென்ஸை அறையில் வந்து பார்க்கப் பயந்தனர். தங்களுக்கு ஆபத்து வரும் என்று அஞ்சினர்.

ஆனால் தமிழ்த் துறைப் பேராசிரியரான உளுந்தூர்ப் பேட்டை சு.சண்முகம் ஐயா, என் மாப்பிள்ளை இன்ஜினியர் செல்வ குமார், நண்பன் புலவர் தட்சிணாமூர்த்தி, மாமா புலவர் சங்கரன், நண்பன் ஓவியன் புலவன் நாகலிங்கம் போன்றவர்கள் மட்டும்தான் 9 திருவள்ளுவர் விடுதி அறைக்குள் துணிச்சலாக வந்து சந்தித்துச் சென்றனர். கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர்.
நான் எப்பொழுதுமே கல்லூரி விடுதியில் தங்கியதில்லை. சிதம்பரத்தில்தான் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கி இருந்தேன்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த இந்த எங்களின் செயல் பாட்டிற்கு மிச்ச சொச்ச கணக்கைத் தீர்க்க, நான் தங்கி இருந்த என் அறையில் ஒரு நாள் இரவில் ஒரு கோரக் கொலை நடைபெற இருந்தது ஆனால் அது நடைபெறவில்லை.

11, வெல்லப் பிறந்தான் முதலித் தெரு அறைதான் என் அறை. இந்த அறையின் கதவு எப்பொழுதுமே மூடப்படுவது இல்லை. அறை முழுவதும் புத்தகங்கள் கிடக்கும் அதற்கிடையில் எங்களில் யாராவது சிலர் எப்பொழுதும் இருப்போம்.
அன்று ஒரு நாள் இரவு, நானும் என் மச்சான் ஆல்பென்சும் மட்டும்தான் படுத்து இருந்தோம். இரவு ஒரு மணி அளவில் எங்கள் அறை வாசலில் மூவர் கையில் நீண்ட கொலை ஆயுதங்களுடன் வந்து நின்றனர்.

அது நல்ல பனிக்காலம். எங்களில் எவருக்குமே போர்வை கிடையாது. நாங்கள் எப்பொழுதும், கட்டி இருக்கும் வேட்டியை அவிழ்த்துத்தான் போர்த்தி இருப்போம். அன்றும் இதுதான் நிகழ்ந்தது. என் அறையில் ஒரு ஓரத்தில் தட்டி மறைப்பு இருக்கும். அதற்குள்தான் நாங்கள் சிறுநீர் கழிப்போம்.
ஆல்பென்ஸ் அந்த மறைப்பிற்குள் சிறுநீர் கழிக்கச் சென்று இருக்கிறார். நான் தலைவரையிலும் வேட்டியால் மூடிப் படுத்து இருக்கிறேன். நல்ல தூக்கம். அறைக்குள் இருட்டு. வாசலில் ஆயுதத்துடன் நிற்கும் மூவருக்கும் ஒரு சந்தேகம். அறைக்குள் எத்தனைப் பேர் இருக்கின்றனர்? என்று பார்க்கத் தீக்குச்சியை எரித்து வெளிச்சம் உண்டாக்கினர்.

நான் போர்த்திப் படுத்து இருக்கிறேன். உள்ளே வேறு யாரும் தெரியவில்லை வந்தவர்கள் வாசலில் தயக்கத்தோடு நிற்கின்றனர்.

இதையெல்லாம் தட்டி மறைவிற்கு பின் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆல்பென்ஸ் தட்டிக்கு அந்தப் பக்கம் தயாராக இருக்கிறார்.

வந்தவர்கள் அறைக்குள் வந்தாலோ அல்லது படுத்துக் கிடக்கும் என்னைத் தாக்க முயன்றாலோ தட்டியோடு அவர்கள் மீது சாய்த்து அமுக்கிப் பிடிக்கத் தயாராக இருக்கிறார்.

அந்த நேரம் இரவு சினிமாக் காட்சி முடிந்து எங்கள் தெருவுக்குள் ஒரு கூட்டம் வரத் தொடங்கியது. வாசலில் நின்றவர்கள் சற்றுத் தயங்கி ஒதுங்கினர்.
இந்த நேரத்தைப் பயன்படுத்தி ஆல்பென்ஸ் என்னை உசுப்பி விட்டார். நானும் ஆல்பென்ஸும் அவர்களைப் பிடிக்கத் தெருவில் குதித்து
ஓடத்தொடங்கினோம். அவர்கள் அந்த சினிமாக் கூட்டத்தில் கலந்து ஓடி மறைந்து விட்டார்கள்.

அண்ணாமலையில் எங்களுக்கு நடந்த தாக்குதல்களில் கடைசி முயற்சி இதுதான்.

எப்படியோ தப்பிவிட்டோம்.

ஆனால் அண்ணாமலையில் தாக்கப்பட்ட அந்தத் தாக்குதலின் வீரியம், ஆல்பென்சுக்கு இன்றும் அவர் உடலை பாதித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அண்ணாமலை ஞான விருட்சம்தான்.

அன்று அதன் அடிவாரத்தில் சில பல நச்சுக்காளான்களும் குடை விரித்துத்தான் கிடந்தன.

Thursday, August 7, 2014

இதெல்லாம் எப்படி நடந்தது–42

பரிணாமம்!...


சிதம்பரம் கனகசபை நகரின் ஒதுக்குப் புறமாக பாலமான் ஆறு, பெரிய ஓடையாகப் பாய்ந்து ஓடிக் கொண்டிருக்கும். அதன் படித்துறையிலிருந்து மூன்றாவது அல்லது நான்காவது வீடாக இருக்கலாம். 123, கனகசபை நகர் வீடு.

இந்த வீட்டின் மாடியில் அன்று குழுமி இருந்த ஒரு கூட்டத்தினர், தமிழகத்தினுடைய பல பகுதிகளிலும் பேராசிரியர்களாக, தமிழாசிரியர்களாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று இருக்கக் கூடியவர்கள், இன்றுவரை நட்புறவோடு வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய வாய்ப்புப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

தூத்துக்குடி பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம், சென்னை திருவல்லிக்கேணி மாநிலக் கல்லூரிப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற கவிஞர் செல்வ கணபதி, நாகர்கோயில் பேராசிரியர் மு. ஆல்பென்ஸ் நதானியல். தர்மபுரி மாவட்ட மேலப்புலியூர் புலவர் நாகு. நக்கீரன், புலவர் பாவாணன், புலவர் கு.சங்கரன், புலவர் தட்சிணாமூர்த்தி, புலவர். தில்லை. கலைமணி, புலவர் ராமானுஜம், பெங்களூரில் தமிழாசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அங்கு தமிழ்ச் சங்க செயலாளராக இருந்த காமராஜ், ஹிலால் முஸ்தபா, வே.மு. பொதிய வெற்பன், புலவர். ஓவியர் நாகலிங்கம், புலவர். சுந்தரமூர்த்தி(மௌனசாமி மடாதிபதிகள்), சென்னை பாண்டிபஜார் ராமகிருஷ்ணா மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியராகவும் தமிழ்நாடு தலைமையாசிரியர்க் கழக மாநிலத் தலைவராகவும் இருந்த புலவர் அம்மையப்பன், இஞ்சினியர் செல்வம், பெண்ணாடம் அருணா சர்க்கரை ஆலை மேனிலைப் பள்ளி தலைமையாசிரியராக இருந்த புலவர் எழிலன்.

இப்போதைக்கு இந்த அளவுப் பட்டியல் போதுமானது. இந்தப் பட்டியல் நீண்டு கொண்டேதான் இருக்கும்.

123, கனகசபை நகர் இல்லத்தில் உளூந்தூர்ப் பேட்டை சு.சண்முகம் ஐயா குடியிருந்தார். அங்கு நடமாடித் திரிந்து கொண்டிருந்தவர்களைத்தான் மேலே பட்டியலிட்டிருக்கிறேன்.

இந்தப் பட்டியல் விநோதமானது. இவர்களுக்குள்ளே உடன்பட்ட கருத்துகள் எக்கச்சக்கம் உண்டு. நேர் எதிரான கடுமையாக முரண்பட்ட கருத்துகளுக்கும் பஞ்சம் இருக்காது.

ஆனாலும் இந்த நண்பர்களின் நட்பு எப்போதும் சேதாரம் அடைந்ததில்லை.

சண்முகம் ஐயா, பழுத்த பக்திமான். எங்களில் பலருக்கு பக்தியில் உடன்பாடே கிடையாது. உடன்பாடு இல்லையென்பதைவிட, கடுமையான எதிர்மறைக் கருத்துகளோடு, போதும் போதும் என்கிற அளவு விவாதச் சண்டைகளையும் நடத்திக் கொண்டிருப்போம்.

ஆனாலும் என்ன? எங்கள் கூட்டுக்குள் குதர்க்கம் என்றும் தலை காட்டியதே இல்லை. எவரும், எவர் கருத்தையும் விட்டுக் கொடுத்ததும் இல்லை.

123 கனகசபை நகர் வீட்டு மாடியில் ஒரு நீண்ட அறை உண்டு. அங்கே ஐயாவின் ஒரு அற்புதமான நூலகம் இருந்தது. அந்த அறையில் சோபாக்கள், சேர்கள் கிடக்கும்.

ஸ்டீரியோ, ஸ்பீக்கர் இவைகளும் பொருத்தப் பட்டிருக்கும். மத்தளம் போன்ற இசைக் கருவிகளும் இருக்கும். காலையில் சங்கீதம் கற்றுத் தர வித்வான் வருவார். ஐயாவின் மகள் வளர்மதி சங்கீதம் கற்றுக் கொண்டாள். மாலையில் பரத நாட்டிய நட்டுவநார் வருவார். பரத நாட்டியமும் அவள் கற்றுக் கொண்டாள்.

ஐயா மகன் எழில்மணி இசை வாத்தியங்கள் கற்றுக் கொண்டான். இந்த வளர்மதிதான் திருமலைத் தென்குமரி படத்தில் சீர்காழியாரின் கையைப் பிடித்துக் கொண்டு படம் முழுக்க வரும் சிறுமி.

உளூந்தூர்ப் பேட்டை ஐயாவின் மனைவியாரும், சீர்காழியாரின் மனைவியாரும் சகோதரிகள். இந்த வளர்மதிதான் சினிமா பின்னணி பாடகியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் வித்யா.

உழவன் மகன் திரைப்படத்தில் வரும்
செம்மறியாடே செம்மறியாடே
செய்வது சரியா சொல்
செவத்தப் பொண்ணு இவத்த நின்னு
தவிக்கலாமா சொல்
இப்பாடலைப் பாடிப் பிரபல்யமானவள் வித்யா.

அந்த மாடியில் இசைச் சமாச்சாரங்கள் இல்லாத நேரங்களில் ஐயா தலைமையில் எங்கள் தர்பார் ஆரம்பித்துவிடும். இலக்கிய விவாதங்கள். அரசியல் காரசாரங்கள், தத்துவ மோதல்கள், நகைச்சுவை வெடிப்புகள் என அந்த தர்பாரில் குதூகலத்திற்குப் பஞ்சம் இருக்காது.

வே.மு. பொதியவெற்பன் தனித்தமிழை, அங்குலம் நழுவாமல் இறுகப் பற்றிப் பிடித்த அழுத்தக்காரர். நல்ல உயரம். உயரத்திற்கேற்ற பருமன். குரல் கணீரென்று கண்டசாலாவையும் சிதம்பரம் ஜெயராமனையும் தழுவிக் கலந்து ஒலிக்கும் சாரீரம்.

திருகி விடப் பெற்ற பெரிய மீசை. இந்த உடம்பிற்குள் இலக்கிய ரசனை எப்படி வந்தது என்று எண்ணும்படியாக ஒரு முரட்டுத் தோற்றம். ஆனால் உள்ளபடியே நயம் நிறைந்த ரசனை மிக்க மென்மையான இலக்கிய உணர்வுக்காரர் அவர்.

அவரிடம் என் போன்றவர்களுக்கு எப்போதுமே ஒன்றுதான் பிடிக்காமல் இருந்தது. அவர் உச்சரிக்கும் தனித்தமிழும் அவர் எழுதும் தனித்தமிழும்தான் அது.

நல்ல சிந்தனையாளர். அவர் சிந்தனை, தனித்தமிழ்ப் புதருக்குள் சிக்கிக் கிடக்கும் கண்ணுக்குத் தெரியாத அற்புதக் கனிகள். பெரியாரின் பூரண பக்தர். தேவநாய பாவாணரின், பெருஞ்சித்திரனாரின் பட்டாளத்துக்காரர். இவையே எதிர் எதிர் தன்மையுள்ள கோட்பாடுகள்தான். ஆனாலும் பொதியவெற்பனிடம் இவைகள் சமமான பலத்தில் அழுந்திக் கிடந்தன.

ஐம்பது வருடங்களுக்கு முன்பே இனிசியலை (அன்று இப்படி சொன்னால் பொதியவெற்பனுக்கு எரிச்சல் வந்துவிடும்) அதாவது தலைப்பெழுத்தை புரட்சிகரமாகப் போட்டுக் கொண்டவர் பொதியவெற்பன்.

அன்னை பெயரின் முதலெழுத்தை முதலிலும், தந்தை பெயர் முதலெழுத்தை அடுத்தும் இனிசியலாகப் பதிவு செய்து கொண்டவர் அவர். தாய் வேலம்மாள், தந்தை முத்தையா. வே.மு. பொதியவெற்பன் என இப்படி அமைத்துக் கொண்டவர்.

அவருக்குப் பிறப்பில் இருந்த பெயர் இது இல்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இதுதான் அவர் பெயர். நேதாஜி, தனித்தமிழ் வெறியால் பொதியவெற்பனாகப் போனார்.

அன்னை வேலம்மாள் குற்றால(பொதிய) மலைக்கு சரிவிலிருக்கும் கடையநல்லூர்காரர். அதனால் அவர் பொதியவெற்பனாகி விட்டார்.

நண்பர் ஆல்பென்சுக்கும், பொதியவெற்பனுக்கும் தனித்தமிழ் விவகாரத்தில் அடிபிடி அளவுக்குச் சென்று சர்ச்சை நடைப்பெற்றுக் கொள்ளும். ஆனாலும் அடுத்த வினாடி கட்டியணைத்துக் கொண்டு கண்ணியம் பாதுகாக்கப்படும்.

சண்முகம் ஐயா, சிதம்பரத்தைவிட்டு முழுவதுமாகக் சென்னைக்குக் குடிமாறிய கடைசிக் காலக் கட்டத்தில் சிதம்பரம் வாகீச நகரில் குடியிருந்தார். அந்த நகர் அப்பொழுதுதான் புதியதாக உருவாகிக் கொண்டு இருந்தது. ஆறு, ஏழு பங்களாக்கள் மட்டுமே அப்பொழுது அங்கு இருந்தன.

இங்கேயும் ஐயா குடியிருந்த பங்களாவின் மாடி எங்களின் இலக்கியக் களம்தான். அந்த பங்களாவின் கீழ்ப்பகுதியில் ஐயா குடும்பத்தோடு இருந்தார். முதல் மாடி எங்கள் அனைவரின் இலக்கியச் சாம்ராஜ்ஜியப் பகுதி. அதற்கு மேல் ஒரு மொட்டைமாடி. மொட்டை மாடிக்குச் செல்லப் படி கிடையாது. மொட்டைமாடியின் மேல் உள்ள தடுப்புச் சுவரில் ஒரு பருத்த இரும்புக் கம்பி ஒன்று இருந்தது.

அங்கே மாப்பிள்ளைக் கலைமணி எப்படியோ தாவி ஏறி அந்தக் கம்பியில் உறுதியான ஒரு கயிறைக் கட்டித் தொங்க விட்டான். இந்தக் குரங்குத் தனம் கலைமணியினுடையப் பிறப்புரிமை.

இரவு ஒரு மணிக்கு மேல் அந்தக் கயிறைப் பற்றிப் பிடித்து நாங்கள் மேல் ஏறிச்சென்று மொட்டை மாடியில் படுத்துக் கொள்வோம். இந்தச் சாகசம் ஐயாவுக்குக் கூடத்தெரியாது.

ஒரு நாள் இரவு 2 மணி அளவு. மொட்டை மாடியில் நான், கலைமணி, ஆல்பென்ஸ், பொதியவெற்பன், பொதியவெற்பனுடைய நண்பர் புதுவையைச் சேர்ந்த அரிமா பாமகன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம்.

அரிமா பாமகனும் பொதியவெற்பனும் தனித்தமிழ்த் தீவிரக்காரர்கள். அவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். நாங்கள் எல்லோருமே புலவர்கள்தாம். ஆனாலும் அந்த இருவர் பேசியப் பேச்சுக்களில் நாங்கள் கலந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள எங்களுக்கு ஒரு தனித் தமிழ் அகராதித் தேவைப்பட்டது.

ஆல்பென்ஸ் ஆரம்பித்தார், “கானாக ஆனாக டானாக மானாகஇப்படி அடிக்கிக் கொண்டு இருந்தார். கலைமணி இதற்கு பதிலாக, “தூனாக்க தேனாக பூனாக பீனாகஎன்று பதிலாகப் பேசிக்கொண்டு இருந்தான். இவர்கள் பேச்சில் ஒரு பொருளும் கிடையாது.

அரிமா பாமகனுக்குக் கோபம் வந்து விட்டது. தங்களைத் தரக்குறைவான இழி சொற்களில் இவர்கள் ஏசிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என அவர் கருதி விட்டார்.

பொதியவெற்பனிடம், “பொதியரே இந்தக் கழிசடையினர் நம்மை ஏகடியம் செய்கின்றனர். இவர்களுக்குப் பதில் சொல்லக் கூடாது, நம் கரங்களால்தான் பேச வேண்டும்என அரிமா பாமகன் ஆவேசமாகப் பேசினார்.

ஆல்பென்ஸ் எதுவும் பேசவில்லை. அரிமா பாமகனை அலேக்காகத் தலைக்கு மேல் தூக்கி மொட்டை மாடியின் சுற்றுச் சுவருக்கு வெளியே வீசச் சென்று விட்டார். அரிமா பாமகன், மரண ஓலம் எழுப்ப ஆரம்பித்து விட்டார். வாகீச நகரே அந்த ஓலத்தை எதிரொலித்தது. கீழே ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஐயாவும் அவர் குடும்பத்தினரும் விழித்தெழுந்து மாடிக்கு ஓடி வந்தார்கள்.

ஐயா வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி மணிவாசகப் பதிப்பக உரிமையாளர் பதிப்புச் செம்மல் பேராசிரியர் ச.மெய்யப்பனாரின் தம்பி குடி இருந்தார். அவர் குடும்பமும் நடு இரவில் ஐயா வீட்டிற்கு ஓடி வந்தது. (மெய்யப்பனாரும் எங்களுக்கு ஆசிரியர்தான்).

ஆல்பென்ஸைப் பிடித்து நிறுத்தி அரிமா பாமகனைக் காப்பாற்றி நாங்கள் கீழேக் கொண்டு வந்தோம். இதனாலெல்லாம் எங்களுக்குள் பகை வந்துவிடவில்லை. மறுநாளே ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டு உலாவிக் கொண்டு இருந்தோம்.


123 கனகசபை நகர் மாடியில் உள்ள அறைக்குள்ளே இரவில் பல நேரங்களில் நாங்கள் அமர்ந்து கொண்டு அறைக் கதவைத் தாழிட்டுக் கொள்வோம். ஐயா ஒரு சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொள்வார். நாங்கள் எல்லாம் விருப்பம் போல் தரையிலும் சேர்களிலும் அமர்ந்தும் படுத்தும் கொண்டும் இருப்போம்.

அறையில் மின்விளக்குகள் அணைக்கப் பட்டிருக்கும். நீலக் கலர் ஜீரோ வாட்ஸ் பல்பு ஒரு ரம்மியனான ஒளியை அறை முழுக்கப் பரப்பிக் கொண்டிருக்கும்.

பர்வீன் சுல்தானாவுடைய மீரா பஜன் ஆலாபனை ஸ்டீரியோவில் நழுவி நழுவி அறை முழுவதும் தழுவி பரவி எங்கள் அனைவரையும் எதோ ஒரு உலகத்திற்குள் அள்ளித் தூக்கி எறிந்திருக்கும். கிட்டதட்ட தன்னிலை தவறித்தான் போய் இருப்போம்.

இந்த உணர்வுகளில் அதிகம் பதிக்கப் படுபவர் வே.மு. பொதியவெற்பன்தான். கொடூரமான தனித்தமிழ் வெறியர். அந்த வெறித்தனத்தின் பிடிப்பு பர்வீன் சுல்தானாவின் இசை ஒலியில் முதல்முதல் நொறுங்க ஆரம்பித்தது.

பொதியவெற்பன் என்னிடம் ஒருமுறை சொன்னார், “நான் திருமணம் முடித்தபின் எனக்கு ஒரு பெண்பிள்ளைப் பிறந்தால், பர்வீன் சுல்தானாவின் பெயரைச் சூட்டிவேன்என்று.

நான் அவரிடம் கேட்டேன். மதங்கள் ஒருபுறம் கிடக்கட்டும். பர்வீன் ஆகட்டும் சுல்தானாவாகட்டும் தமிழ் இல்லையே. உமது கோட்பாட்டின் மூலையில் இது என்ன ஒரு கீறல்?” என்று.

இசை, மொழியை நொறுக்கிவிட்டதுஎன்று அவர் சொன்னார்.

வெல்லப் பிறந்தான் முதலித் தெருவில் உள்ள என் அறையிலும் நாங்கள் நடத்தும் இந்த மொழிச் சண்டை காரணமாக அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எங்கள் அறை வாசலுக்கு வந்து விடுவார்கள்.

பொதியவெற்பனுக்கு மொழி வெறி இருந்தது. எனக்கோ இவருடைய ஆழமான சிந்தனைகள், மொழியிறுக்கத்தால் தற்கொலை செய்து கொள்ளக் கூடாதே என்ற ஆதங்கம்.

என் அறையில் வைத்துத்தான் முதல்முதலில் நான் வைத்திருந்த புதுமைப் பித்தன் எழுத்துகளைப் படிக்க ஆரம்பித்தார். அந்த நேரத்தில் நெல்லை தனித் தமிழ் சங்கம், புதுமைப் பித்தனை விமர்சித்து தனித் தமிழில் எழுதும் நூலுக்குப் பரிசு அறிவித்தது.

முதல் பரிசு, ஒரு பவுண் தங்க பதக்கம். நான் பொதியவெற்பனைத் தூண்டினேன். தனித் தமிழை ஒப்புக் கொள்ளாத புதுமைப்பித்தனை,

நீர் நேசிக்கும் தனித்தமிழில் எழுதுங்கள் அண்ணாச்சி என்று கட்டாயப் படுத்தினேன்.

எழுதினார், போட்டிக்கு அனுப்பினார். இவர் எழுத்துத்தான் முதல் பரிசு பெற்றது, சிதம்பரத்தில் இருந்து, நானும் அவரும் நெல்லைக்கு வந்து அந்தப் பாராட்டு விழாவில் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டோம்.

நெல்லை தூய யோவான் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் வளன்அரசு அதனை வழங்கினார். புதுமைப்பித்தன் பொதியவெற்பனுக்குள் இறங்கியதற்குப் பின்னால் பொதியவெற்பனுக்குள் ஒளிந்து கிடந்த தனித்தமிழ்க் கொடூரம் உருகத் தொடங்கியது.

தி.க தத்துவத்தை மட்டுமே முழுச் சிந்தனையாகக் கொண்டு இருந்த பொதியவெற்பன், என் அறையில் இருந்த மார்க்சிய புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினார். விவாதிக்க தொடங்கினோம். பின்னர் அவரிடம் பெரியார் மட்டும் இருந்தார். தி.க. தனம் சிதறி விழுந்துவிட்டது.

மார்க்சீயம் பொதியவெற்பனின் விழிப் பார்வையாக மாறியது. தனித்தமிழில் இருந்து வெளியில் வரவும், தி.க விலிருந்து மார்க்சீயப் பாதையில் கால் பதிக்கவும் நானும் அன்று ஒரு சின்ன காரணமாக இருந்து இருக்கிறேன். இதை நான் மகிழ்ச்சியோடுப் பகிர்ந்து கொள்கிறேன்.

நோபல் பரிசு அழைத்தபோது அதைத் தவிர்த்துக் கொண்டான். சிலி தேசத்து மகாகவி. பாப்புலோ நெரூடோ. மீண்டும் நோபல் பரிசு அவனை அழைத்தது. அப்போது அதைப் பெற்றுக் கொண்டான்.

நோபல் பரிசைப் பெற்று கொண்டு, அவன் அமர்ந்திருந்த இருக்கையிலேயே வைத்துவிட்டு வந்து விட்டான். அப்படி ஒரு பிடிவாதப் புரட்சிக்காரன் பாப்புலோ நெரூடோ. அவன் எழுதிய கடைசியாக முப்பது காதல் கவிதைகள்என்ற கவிதை நூலை ஆங்கில வடிவில் பொதியவெற்பன், ஐயா நூலகத்தில் எடுத்துப் படித்தார்.

அந்த முப்பது கவிதைகளும் பொதியவெற்பனை முழுவதுமாக புரட்டிப் போட்டுவிட்டது. அதைத் தமிழில் மொழி பெயர்த்தார்.

ஏற்கனவே இசையால் பர்வீன் சுல்தானா அவருக்குள் இறங்கி இருந்தார். இப்போது கவித்துவத்தால் பாப்புலோ நெரூடோ அவருக்குள் கொலு அமர்ந்துவிட்டார்.

இவைகளுக்கு முன்னால் நடந்த இரு சம்பவங்களை நான் இங்கே குறிப்பிடவேண்டும்.

72-ம் ஆண்டு புலவர் சங்கரனுக்குத் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு மாமா சங்கரன், கவியரங்கம் வைத்திருந்தான். அந்தக் கவியரங்கத்திற்கு நான் தலைமை வகித்தேன். பொதியவெற்பனும் கவியரங்கத்தில் கவிதைப் படித்தார். கவியரங்கத்திற்குப் பொதியவெற்பனை நான் அறிமுகப்படுத்தியபொழுது

பற்களுக்கு இடையில் கற்களைப் போட்டே
பக்குவமாகவே கடிப்பார் - பொதிய
வெற்பனார் தமிழ்ப் படிப்பார்.

என்று குறிப்பிட்டேன்.

அவர் தமிழ் அன்று இப்படித்தான் இருக்கும். அதற்குப் பின்னால் 1975 அல்லது 76 ஆண்டில் பொதியவெற்பனாருக்குத் திருமணம் நடந்தது. அப்பொழுதும் கவியரங்கம் நடந்தது. அந்தக் கவியரங்கத்திற்கும் நான்தான் தலைமை தாங்கினேன்.

ஆனால் இப்பொழுது பொதியவெற்பனார் முழுவதுமாக மாறி இருந்தார். தனித்தமிழ் பொதியவெற்பன் தன்னைத் தொலைத்து விட்டார். அதேபோல் தி.க பொதியவெற்பன் தன்னை விடுவித்துக்கொண்டு விட்டார்.

மார்க்சிய லெனினியச் சிந்தனைக்குள் பிரவேசித்து விட்டார்.

பொதியவெற்பனாருக்கு முதலில் ஒரு மகள் பிறந்தாள். அடுத்து ஒரு மகன் பிறந்தான்.

123 கனகசபை நகர் ஐயா வீட்டு மாடியில் எடுத்த சங்கல்பத்தை அமல் படுத்தினார்.

மகளுக்குப் பர்வீன் என்று பெயர் வைத்தார்.

பொதியவெற்பன் மட்டும் முடிவெடுத்துவிட்டால் இது நடந்துவிடுமா? அவர் வீட்டார் ஏற்றுக் கொள்ள மாட்டார்களே.

ஆனாலும் பொதியவெற்பனின் பிடிவாதம் குறையவில்லை. வீட்டாரைத் திருப்திப்படுத்த ஒரு வழி செய்தார். அனுராகம் என்ற பெயரை இணைத்துக் கொண்டார். பர்வீன் அனுராகம்.

பர்வீன் இசைப் பெயராகிவிட்டது. அனுராகம் இந்துப் பெயராகிவிட்டது. குடும்பத்தின் தயக்கமும் விலகிக் கொண்டது.

பொதியவெற்பன் தன் முழு சொத்துக்களையும் விற்று பதிப்பகம் ஆரம்பித்தார். பதிப்பகத்திற்கு அவர் வைத்த பெயர் , “சிலிக்குயில்பதிப்பகம்.

சிலிக்குயில் என்ற சொல் பாப்புலோ நெரூடோவைக் குறிக்கும். சிலிக்குயில் பதிப்பித்த நூல்கள் தமிழுக்குக் கிடைத்த வரப் பிரசாதங்கள்.

மருத்துவம் என்ற தலைப்பில் அ.மார்க்ஸ் எழுதிய புத்தகத்தை சிலிக்குயில் பதிப்பித்தது. மார்க்ஸுக்கு அதுதான் அறிமுகப் புத்தகம். தி.க.காரர் மார்க்ஸையும் மார்க்சியத்தைப் பார்க்க வைத்தவர் பொதியவெற்பன்.

பொதியவெற்பன் ஒரு சரியான சாதனையாளர். இன்று சித்தர் மரபில் நீண்டநெடிய ஆய்வு செய்து கொண்டு இருக்கக் கூடிய ஆய்வாளர். சூபியிசம், சித்தரிசம், ஜென்னிசம் போன்ற தத்துவப் பாதைக்குள் ஒரு பிரம்மாண்ட நடை நடந்து கொண்டிருக்கிறார்.

பொதியவெற்பன் எத்தனையோ புனை பெயரை வைத்திருந்தார்; என்றாலும் பொதியஎன்ற சொல்லோடு இணைத்து ஒரு புனை பெயரை வைத்ததில்லை.

இப்போது பொதியவெற்பன் பொதிகைச் சித்தராகி இருக்கிறார்.

பரிணாமங்கள் எப்படியோ... எங்கோ... நடந்து கொண்டுதான் இருக்கிறது.

Monday, August 4, 2014

இதெல்லாம் எப்படி நடந்தது–41

நண்பர்கள் தினம்..!


நாங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் நான்காம் ஆண்டு நிறைவு செய்யப் போகிறோம். எங்கள் வகுப்பில் அறுபத்து மூன்று பேர் படித்ததாக நன்றாக நினைவு இருக்கிறது. ஒருநாள் மாலை நான்கு மணிக்கு மேல் பல்கலைக் கழகத்தை விட்டுப்பிரிகிற, பிரிவு உபச்சார விழா நடக்கிறது.

இந்த அனுபவம் மாணவர்களுக்கு எத்தனை எத்தனையோ மன உணர்வுகளைக் கொப்பளிக்கச் செய்கிற நிகழ்வாகும்.
எங்கள் நான்காம் ஆண்டு மாணவர்கள், பிரிவு உபச்சார நிகழ்வில் ஆர்வமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

புலவர் இரண்டாம் ஆண்டு தேர்வில் தவறிப் போனவர்கள் மூன்றாம் ஆண்டு தொடர முடியாது. அந்தத் தேர்வைப் பூர்த்தி செய்துவிட்டுதான் அடுத்த ஆண்டு தொடர முடியும்.

அதே போல் எங்களுக்கு முந்தைய ஆண்டில் இதே நிலை அடைந்த மாணவர்கள் எங்களோடு மூன்றாமாண்டில் தொடருவார்கள். இந்தக் கூட்டல் கழித்தல் கணக்கில் அதிகமான வித்தியாசம் இருக்காது.

முதாலாமாண்டு முதல், எங்களோடு படித்த மாணவ மாணவியர் மூன்று நான்கு பேர்தான் இரண்டாம் ஆண்டு தவிர்க்கப்பட்ட நிலைக்கு உள்ளானார்கள்.

மூன்றாமாண்டில் எங்கள் பழைய மாணவர்களுக்குப் பதிலாக, எங்களுக்கு முந்தைய மாணவர்கள் நான்கு பேர் வந்து எங்களோடு இணைந்து கொண்டார்கள். இந்த நாங்கள்தான் பிரிவு உபச்சார விழாவில் அன்று மாலை மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தோம்.

எங்கள் பேராசிரியர் தமிழ்ப் பெருங்கடல் வ.சுப. மாணிக்கனார் அமர்ந்திருக்க, எங்கள் பேராசிரியர்கள் அண்மையில் அமர்ந்திருக்க எங்கள் மாணவ மாணவியர்கள் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றிருக்க, புகைப் படம் எடுக்கப்பட்டது.

எனக்கு அந்தக் காலகட்டங்களில் சில வித்தியாசமான, கொடூரமான தீர்மானங்கள் உண்டு. அவற்றில் ஒன்று குரூப் போட்டோ (குழு புகைப்படம்) எடுப்பதில் உடன்பாடு கிடையாது. அதனால் இந்தப் புகைப்படத்தைத் தவிர்த்துக் கொண்டேன்.

எங்கள் பேராசிரியர் வ.சுப.மா இதைக் கவனித்துவிட்டார்.
இதற்குப் பின்னால், விருந்து உபச்சார நிகழ்வு தமிழ்த்துறை வகுப்பறையில் நடந்தது. அதில் நான் கலந்து கொண்டேன். மாணவ மாணவியர்கள் பாடினார்கள். ஆடினார்கள். பேசினார்கள். கடைசியாக வ.சுப. மாணிக்கனார் பேச எழுந்தார்.

சற்று ஓரத்தில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து, “ஏய் தமிழ்த் துரோகி, இலால் முசுதபா வாஎன்றார்.

எங்கள் பேராசிரியர் என்னை அப்படித்தான் அழைப்பார். எனக்கு அன்றிருந்த தனித் தமிழ் இயக்கத்தில் எள் நுனி அளவு கூட உடன்பாடு கிடையாது.

எங்கள் பேராசிரியர் அதில் தீவிரமான பிடிப்பு உள்ளவர். இதனால்தான் அவர் என்னைத் தமிழ்த் துரோகி என்று செல்லமாக அழைப்பார். நான் அவருக்குச் செல்லமான மாணவன்.

நான் அவர் அருகில் சென்றேன். அவர் பக்கத்தில் என்னை அழைத்து என் கழுத்தில் அவர் கரத்தைப் போட்டு இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். ஓரத்தில் இருந்த புகைப்படக்காரரை வேகமாக அழைத்து, “இப்படியே படம் எடு, இப்படியே படம் எடுஎன்று சத்தமாகச் சொன்னார். புகைப்படம் எடுக்கப் பட்டது.

சிதம்பரத்தில் உள்ள கெம்பு ஸ்டூடியோகாரர்கள்தாம் இந்தப் படங்களை எடுத்தார்கள்.

இவனுக்குக் கூட்டமாய் இருந்தால் பிடிக்காது. அது அவன் தத்துவம். எனக்கு இவனோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளணும். இது எனது ஆர்வம்.என எங்கள் பேராசிரியர் அந்தக் கூட்டத்தில் பேசினார்.
என் கண்கள் சற்று கலங்கின. டாக்டர் வ.சுப.மா அவர்கள், அவர் வாழ்வில் இப்படி நடந்திருப்பார்களா? என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் கெம்பு ஸ்டூடியோவில் என் உறுதிபாட்டின்படி அந்தப் புகைப் படத்தை நான் கடைசிவரை வாங்கவே இல்லை. (அந்த வேதனை 40 ஆண்டுகளுக்குப் பின் இன்றும் என்னை உறுத்துகிறது).

பின்னர் 63 மாணவர்களுக்கும் குரூப் போட்டோ தரப் பட்டது. சிதம்பரத்தில் என் அறையிலேயே அதைப் போட்டுவிட்டு வந்துவிட்டேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் மாப்பிள்ளை கலைமணி இல்லத்தில் அந்த குரூப் போட்டோவைப் புத்தகக் குப்பைகளுக்கு நடுவே கண்டெடுத்தோம். அந்தப் புகைப்படத்தில் நான் இல்லை. முதலாமாண்டு எங்களோடு படித்த இன்னும் இருவரும் அந்தப் படத்தில் இல்லை. அந்த இருவரையும் இன்றைக்கும் நினைக்கும் பொழுது ஒரு வேதனையாக வந்துவந்து போகிறார்கள்.

அந்த இருவரும் எங்கள் இரண்டாமாண்டிலேயே எங்களை விட்டுப் போய் விட்டார்கள். போய் விட்டார்கள் என்றால் தேர்வில் தோற்றுப் போய்விட்டார்கள் என்பது அல்ல. வாழ்வைத் தொலைத்துப் போய்விட்டார்கள்.

அண்ணாமலைத் தெற்கு இருப்பில் வாழ்ந்தவன் சோமு. எங்கள் புலவர் வகுப்பிலேயே அவன்தான் சின்னப் பயல். என் மீது , கலைமணி, பாண்டியன், ராமானுஜம் மீதெல்லாம் ஆழமான நேசம் வைத்தவன். அவன் மீது எங்களுக்கும் அழுத்தமான அன்பு உண்டு.

அவனுக்குத் தந்தை உண்டு. தாய் இல்லை. அவன் அண்ணனுக்குக் கடந்த இரண்டாண்டுக்கு முன்னால்தான் திருமணம் நடந்தது. அண்ணிதான் அவர்கள் வீட்டுத் தலைமைப் பெண்மணி. ஆனால் அந்த இளம் வயது அண்ணிக்கு அந்தக் குடும்பத்தில் சோமுவையும் அவன் அப்பாவையும் அதாவது கொழுந்தனையும், மாமானாரையும் பிடிப்பதில்லை.

மாமாவை வெளிப்படையாக வருத்த முடியாது. கொழுந்தனைச் சித்திரவதைப் படுத்தலாம். நமது சமூக அமைப்பு அப்படித்தான் இருக்கிறது.
சோமுவைத் தினம் தினம், எச்சில் பாத்திரங்கள் கழுவுவதற்கும், துணிமணிகளைத் துவைப்பதற்கும், இல்லத்தைக் கூட்டிப் பெருக்குவதற்கும், முற்றத்தில் கோலமிடுவதற்கும் அந்த இளம் அண்ணி கட்டளைப் பிறப்பித்து இருந்தார்.

இந்தத் தொழில்களில் ஏதும் அவமானமில்லை. இதை நீதான் செய்ய வேண்டும்என்று சொல்வதுதான் கேவலமானது.

சோமுவின் தந்தையால் அந்த வயோதிகத்தில் இதைத் தடுக்க முடியவில்லை. அவன் அண்ணன், மனைவியை மீற வாய்ப்பில்லை. சோமுவுக்கு வேதனையும் நெருக்கடிகளும் அதிகமாகிக் கொண்டே வந்தன.

சோமு அதிகப்படியான வேதனைப் படும்பொழுதெல்லாம் சிதம்பரம் வெல்லப் பிறந்தான் தெருவில் இருந்த என் அறைக்கு ஓடி வந்துவிடுவான். நான் அவனுக்கு ஆறுதல் கூறி ஏதாவது ஒரு சினிமாவிற்கு அழைத்துச் சென்று அவனைச் சற்று மாற்றி அவன் வீட்டிற்கு அனுப்பி வைப்பேன்.

இரண்டாமாண்டு படிக்கும் பொழுது ஒரு நாள் மதியம், கலைமணி, பாண்டியன், நான் வடுகநாதன் தியேட்டரில் சினிமாப் பார்க்கச் சென்று விட்டோம்.

நண்பன் சோமு, தாங்கிக் கொள்ள முடியாத வேதனையால் துடிபட்டு வழக்கம் போல என் அறைக்கு ஓடி வந்திருக்கிறான். எங்களில் எவரும் அங்கு இல்லை. என்ன நினைத்தானோ தெரியவில்லை? அவன் இல்லத்திற்கு திரும்பச் சென்று இருக்கிறான்.

அங்கே அவன் அண்ணன், அவன் மனைவியின் சொல்லைக் கேட்டு அவனை அடித்து துவம்சம் பண்ணி இருக்கிறார். சோமுவும், கொடுமை தாங்காது நான் ஹிலால் அறைக்குத்தான் போனேன் போனேன்என்று கூறி அழுது இருக்கிறான்.

அதன்பின், சற்று நேரம் வீட்டு திண்ணை ஓரம் உட்கார்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறான். பக்கத்தில் எங்கோ சென்று அரளிச் செடியில் இருந்து கொத்தாக அரளி விதையைப் பிடுங்கி வந்து அரைத்துக் குடித்து விட்டான். திண்ணையின் ஒரு ஓரத்தில் அப்படியே படுத்துவிட்டான்.

எப்பொழுது இறந்தான் என்று அவன் வீட்டாருக்கும் தெரியவில்லை. மாலையில் கடைக்குச் செல்ல அவனை எழுப்பும் பொழுதுதான் அவன் இறந்து கிடப்பது தெரிந்திருக்கிறது.

நாங்கள் வடுகநாதன் தியேட்டரில் சினிமாப் பார்த்துவிட்டு உளூர்ந்துப் பேட்டை சண்முகம் ஐயா அவர்கள் இல்லத்திற்கு இலக்கிய விமர்சனங்கள் நிகழ்த்தப் போய் விட்டோம்.

சோமுவைப் பற்றிய எந்தத் தகவலும் திங்கள் கிழமை காலைவரை எங்களுக்குத் தெரியவில்லை.

திங்கள் கிழமை பல்கலைக் கழக்த்திற்குச் சென்றோம். சோமு நேற்றே முடிந்து விட்டான் என்ற தகவல் எங்களை அதிர வைத்தது. அதிலும் நேற்று மதியம் என் அறைக்கு ஓடி வந்து, நாங்கள் இல்லாததால் திரும்பி, அவன் இல்லம் வந்து, பட்ட வேதனையால் அரளி விதைக்கு ஆயுளை இழந்திருக்கிறான் என்ற செய்தியைக் கேட்ட போது எங்கள் பாதங்களுக்குக் கீழிருந்த பூமி நழுவது போன்ற ஒரு தோற்றம். உள்ளபடியே என் தலை சுற்றியது.

பேராசிரியர் அறைக்குச் சென்று இரண்டாமாண்டு புலவர் வகுப்பிற்கு விடுமுறை இன்று விடவேண்டும். நாங்கள் எல்லாம் சோமுவின் வீட்டிற்குச் சென்று அவனைக் கடைசியாக வழியனுப்பிவிட்டு வருகிறோம் என்று கூறினோம்.

வ.சுப.மா அவர்கள் அனுமதி தந்து, விடுமுறையும் தந்து எங்களை அனுப்பிவிட்டார்கள். மாணவ மாணவியர் அனைவரும் சோமுவின் அந்தச் சின்ன இல்லத்திற்குச் சென்றோம்.

அவன் திரும்ப முடியாத பயணத்திற்குப் புறப்பட்டு விட்டான். அவன்கூட கொஞ்ச தூரத்திற்குச் சென்று வழி அனுப்பிவிட்டு நாங்கள் வந்துவிட்டோம்.

கலைமணி வீட்டில் சமீபத்தில் கண்டெடுத்த குரூப் போட்டோவில், “சோமு, அந்தப் புகைப் படத்தில் நின்று இருந்தால் எந்த இடத்தில் நின்று இருப்பான்?” கலைமணி இப்படி ஒரு கேள்வியைக் கேட்டான். கலைமணி விழிகள் பனித்தன. சோமு இங்குதான் நின்றிருப்பான் என்று ஒரு வெற்றிடம் என் கண்ணில் பட்டது.

அதே புலவர் இரண்டாம் ஆண்டு. நண்பன் சோமு மரணத்திற்குப் பின்னால் இரண்டு மாதங்கள் கழித்து நடந்திருக்கவே கூடாத ஒரு வேதனை நடந்துதான் முடிந்தது.

சிதம்பரத்தில் மௌனசாமி மடத்திற்கு அண்டையில் உள்ள லால்பேட்டைத் தெருவில் மாணவி அன்னபூரணி குடும்பம் இருந்தது. பேணுதலான பிராமணக் குடும்பம். எங்கள் வகுப்பில் அட்டெண்டென்சில் முதல் பெயர் அன்னபூரணி பெயர்தான்.

அன்னபூரணி என்ற மாணவி புலவர் வகுப்பில் படிக்கிறாள் என்பதே எல்லோருக்கும் ஒரு ரகசிய தகவலாகத்தான் இருக்கும். அப்படி ஒரு அமைதி. ஒரு ஒடுக்கம். ஒரு ஒதுக்கம்.

மூன்று மாணவிகள் ஒன்றாகத்தான் வகுப்பிற்கு வருவார்கள். பத்மாவதி, இந்திரா, அன்னபூரணி. இவர்களுக்கு எங்கள் வகுப்பில் ஆயுத எழுத்து என்று ஒரு பட்ட பெயர் உண்டு. இவர்களில் ஒருவர் வகுப்பிற்கு வரவில்லையென்றாலும் மற்ற இருவரும் வர மாட்டார்கள்.

வெளியில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு வரும் மாணவிகள் மதியம் உணவருந்த பெண்கள் விடுதிக்கு பக்கத்தில் மரங்கள் நிறைந்த கிரவுண்டும் கட்டிடமும் உண்டு. அங்குதான் மாணவியர் மதியம் உணவு அருந்துவார்கள்.

எங்கள் வகுப்பு ஆயூத எழுத்துக்கள் எந்த மாணிவிகளோடும் கூட்டாக அமர்ந்து உண்ணாமல் தனியே ஒரு மரத்தடியில் அமர்ந்து மதிய உணவை முடித்துக் கொள்வார்கள்.

அப்படி தனித்துப் போய் அமர்ந்து உண்பதற்கு அவர்கள் சொல்லிய காரணம் சக மாணவியருக்கு மகா எரிச்சலைத் தந்தது.

இந்த மூவரும் சைவர்களாம். ஆச்சாரம் பேணுபவர்களாம். பிற சாதி மாணவியரோடு கலந்து உண்ண மனம் ஒப்பாதவர்களாம்.

இந்தத் தகவல் எங்கள் வகுப்பில் பரவ ஆரம்பித்தது. எல்லோருக்குமே அந்த ஆயுத எழுத்துகளுக்கு மேல் ஒரு வெறுப்பு இருந்தது.

அதேபோல ஒரு ஞாயிற்றுக் கிழமை இரவு 12 மணிக்கு மேல், லால் பேட்டைத் தெருவில் உள்ள தன் வீட்டில் மண்ணெண்ணெய் கேனில் இருந்த மண்ணெண்ணெயை வயிறு முட்டக் குடித்துவிட்டு அன்னபூரணி தன் படுக்கைக்குச் சென்று படுத்து விட்டாள்.

நேரம் கடக்க கடக்க வேதனையில் துடித்து இருக்கிறாள். ஆனாலும் அதை வெளிப்படுத்தாமல் மறைத்து விடிகாலை ஐந்து மணியைத் தொட்டு இருக்கிறாள். அந்த நேரம் அன்னபூரணியின் அன்னை அவளை எழுப்ப, அன்னபூரணி ஏதோ மாதிரி படுத்து இருக்க, இல்லத்தில் கூப்பாடு எழுந்து விட்டது.

அன்னபூரணி பயணப்பட்டு விட்டாள். எங்கள் வகுப்பறையில் அட்டண்டன்சு முதல் பெயர் முற்றுப் பெற்று விட்டது. திங்கள் காலை நாங்கள் பல்கலைக் கழகத்திற்குச் செல்கிறோம். எங்கள் வகுப்பு ஆயுத எழுத்துக்களில் இரு எழுத்து வந்து தகவலைச் சொல்லி கதறிக் கொண்டிருக்கிறார்கள். மண்ணெண்ணெய் குடித்தும் மரணிக்கலாம் என்று அன்றுதான் எனக்குத் தெரிந்தது.

பேராசிரியர் வ.சுப. மாணிக்கனார் அறைக்குச் சென்றோம். தகவல் தந்தோம். நாங்கள் ஒட்டு மொத்த வகுப்பும் அண்ணாமலை நகரிலிருந்து சிதம்பரத்திற்குப் பயணமானோம்.

சிதம்பரம் லால்பேட்டைத் தெருவில் அன்னபூரணி இல்லத்தின் முன் ரோடு முழுக்க நாங்கள்தான் நின்று இருந்தோம்.

அங்கே நாங்கள் தெரிந்த தகவல்கள் எங்களை கசக்கிப் பிழிந்தது. அன்னபூரணியின் அந்தப் பிராமணக் குடும்பம் வறுமையைத் தவிர எதையுமே சந்திக்காத குடும்பம். அவள் இல்லம், பஞ்சம் பசியைத் தவிர காற்றுக்கூட உள்வர முடியாத ஒரு இறுக்கமான இல்லம்.

அன்னபூரணியுடன் உடன்பிறந்த பெண்கள் பலர். அன்னபூரணிதான் படிக்க வந்திருக்கிறாள். எங்கள் வகுப்பு ஆயுதஎழுத்துக்கள் தனியே இருந்து மதிய உணவை சாப்பிட்டதின் ரகசியமும் அன்றுதான் தெரிந்தது.

அன்னபூரணி, பல நாட்கள் வெறும் டிபன் பாக்சை மட்டும்தான் எடுத்து வருவாளாம். மற்ற மாணவிகளுக்கு இது தெரிந்து விடக் கூடாது என்பதற்காகத் தனியே மரத்தடியில் அமர்ந்துக் கொள்வார்களாம்.

அன்னபூரணி, தன் அணுக்கமான இரண்டு தோழிகளிடமும் அவர்கள் கொண்டு வரும் மதிய உணவைச் சாப்பிட மாட்டாளாம். அதற்கு அவள் நாங்கள் பிரமணாள்என்று தட்டிக் கழித்து விடுவாளாம். ஆதாவது அன்னபூரணி சாஸ்திரத்தைப் பேணவில்லை. தனக்கென்று ஏற்படுத்திக் கொண்ட ஒரு நிலைப்பாட்டை, தோழிகள் மத்தியிலும் கடைப் பிடித்து இருக்கிறாள்.

வள்ளுவன் சொல்வான்,

ஆவிற்கு நீரென் றிரப்பினும்தன் நாவிற்கு
இரவின் இழிவந்த தில்

தங்கள் வீட்டு பசு மாட்டிற்குப், பக்கத்தில் வீட்டில் கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் என்று பிச்சை கேட்பது கூட தன் நாவிற்கு நிகழ்த்தப்படும் இழிவானது என்பது இந்தக் குறளின் கருத்து. இப்படி ஒரு வெற்று கௌரவப் போர்வையை அன்னபூரணி தன் வாழ்வாக்கிக் கொண்டிருந்திருக்கிறாள்.

பசியையே சந்தித்துக் கொண்டிருந்த அன்னபூரணி அந்த இரவு வயிறு நிரம்ப மண்ணெண்ணெய் அருந்தி இருக்கிறாள். அன்னபூரணி வயிறு நிரம்பியது. ஆனால் அந்த மண்ணெண்ணெய், அவள் வீட்டில் இருந்த பலருடைய பசியைத் தீர்க்க வாய்ப்பில்லாமல் அன்னபூரணியோடேயே ஆவியாய் கலந்து விட்டது.

பெயரோ அன்னபூரணி.

அவளுக்கோ மண்ணெண்ணெய் நிவாரணி!.

கலைமணி இல்லத்தில் அன்று நாங்கள் கண்டு எடுத்த குரூப் போட்டோவில் அன்னபூரணி இன்று இருந்தால் அவளுக்கு எந்த இடம்? என்று நான் கேட்டேன். ஆயுதஎழுத்தில் இரு எழுத்து அமர்ந்து இருந்தது. அந்த இருவருக்கு மத்தியில் என்று கலைமணி கை காட்டினான். அந்த இடத்தில் எனக்கு நெருக்கடிதான் தெரிந்தது.

சுருக்கமாக அந்தப் புகைபடத்தில் சோமு, அன்னபூரணி இல்லை. அவர்கள் இல்லவே இல்லை. நானும் அந்தப் படத்தில் இல்லை. ஆனால் படத்திற்கு வெளியே இன்றும் இருந்து கொண்டு இருக்கிறேன்.

இல்லாத நண்பர்களுக்கு இந்தத் தினம்..!