Sunday, June 23, 2013

உரைச் சித்திரம்:


 நேரம் வந்துவிட்டது!!!

     லகான். பயம் நிறைந்த பிரதேசம். அருகில் வேறு நகரங்கள் கிடையாது. அரபுகளும், பாரசீகர்களும் வணிகத்துக்குப் புறப்பட்டால் தலகான் இடையிலே தடுத்து நிற்கும். சுற்றுப்புறம் எங்கும் ஓர் ஆழ்ந்த அமைதி நிரந்தரம் கொண்டிருக்கும்.
    
     தலகானின் கொள்ளைக் கூட்டம் அந்தப் பிரதேசத்தை குலுக்கிக் கொண்டிருக்கிறது. வணிகக் கூட்டத்தினரும் வேறு மாற்று வழி இல்லாமல் திணறினர்.

     காடுகளும் அடர்த்தி. மனிதன் வாழ்ந்துதான் ஆக வேண்டும். ஆபத்துகளை அனுபவித்துக் கொண்டே ஆதாயங்களை சேகரித்துக் கொள்ளும் கலை மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள மகோன்னதம்.

     மாலை நேரம் இன்னும் சிறு பொழுதில் அங்கே நழுவி நழுவி இறங்கத் தயாராகிக் கொண்டிருந்தது.

     ஒரு வணிகர் குழு தலகான் கானகத்தைப் பத்திரமாகக் கடந்துவிட விரைந்து கொண்டிருந்தது. அந்த வணிகக் குழுவில் ஒரு மனிதன் மட்டும் அளவுக்கு அதிகமாகப் பதறிக் கொண்டிருந்தான். அந்தக் குழுவில் அவனிடம்தான் நாணயங்கள் குவியலாகக் கிடந்தன.

     இதுவரை காத்து வந்த நாணயக் குவியலை இந்தக் கானகத்தின் கள்வர் கையில் ஒப்படைக்க நேரிடுமோ என்ற உள்ளச்சம் அவனை வதைத்தது.

     சுற்றும் முற்றும் பார்க்கிறான். கள்வர்களின் விழிக் கூர்மை, அவர்களின் வாள் முனையை விட வலிமை மிக்கது. அவனுக்கும் இது புரியும்.

     எப்படியும் இந்த வணிகக் குழுவின் வரவுக்கும் எங்கோ ஓர் இடத்தில் கள்வர் கூட்டம் காத்திருப்பதாக உள்ளுணர்வு அவனை உலுக்கிக் கொண்டே இருக்கிறது.

     கள்வர்கள் இந்த வணிகர் கூட்டத்தைக் கவனிக்கும் நேரத்தில் நாம் தனித்து விடுவதே பத்திரமான பாதுகாப்பு என அவனின் பிடரியில் அறிவு அறிவிக்கிறது.

     வணிகக் கூட்டம் கானகத்தை விசுக்கென்று கடந்துவிடத் துரிதம் காட்டுகிறது. அவன் மட்டும் நாணயக் குவியலுடன் கூட்டத்தை விட்டுப் பின் தங்குகிறான். சாதுர்யத்துடன் நழுவுகிறான்.

     ஒரு இலை உதிர்வதால் மரம் மொட்டையாவதில்லை. அவன் தங்கி விட்டதால் அந்த வணிகக் கூட்டம் பலம் குறைந்து விடவில்லை.

     கூட்டம் மேலும் மேலும் முன்னேறி கள்வர்களை ஏமாளிகளாக்கத் தீவிரம் காட்டியது.

     இரவுத் தங்கி மறுநாள் பகலில் தலகானைத் தாண்டுவதே பாதுகாப்பு என்னும் அவனின் முடிவு அவனை வேறொரு திசைக்கு வழி நடத்தியது.

     நாணயக்குவியளுடன் ஒரு ஒற்றை மனிதன்.கண்களுக்கு ஏதேனும் வீடு தென்படாதா என்ற எதிர்பார்ப்புடன் நிற்கிறான்.
    
     தென்புறத்தில் ஒரு கூடாரம். கொஞ்சம் தொலைவில். உறுத்துப் பார்க்கிறான். ஒரே ஒரு மனிதர் மாதிரி ஒரு உருவம் அங்கே புகைத் தோற்றத்தில் படுகிறது.

     அவனுக்குள் முடிவு உறுதியாகிறது. நாணயத்தின் பாதுகாப்பு அங்கே நிச்சயம் இருக்கும். அப்படி ஒரு வெறி நம்பிக்கை.

     கூடாரத் திசையில் பாதங்கள் தடம் பதிக்கின்றன.

     அழுக்கடைந்த ஆடை. இரும்பு மேனி. முறையற்ற மயிர்க்காடு. அழுத்தமான விரல்களுக்கு இடையில் தபசுமணி உருள்கிறது. வாயிதழ் இறை நாமத்தை உச்சரிக்கிறது. கூடாரத்துக்குள் அவரைத் தவிர்த்து எவரும் இல்லை.



     அவனுக்கு பெருத்த மகிழ்ச்சி. ஒரு மஹானிடம் அடைக்கலம் கிடைத்திருக்கிறது. நாணயத்தை இவரைவிட எவரும் இப்போதைக்குப் பாதுகாக்க முடியாது.

     கூடார நுழைவாயிலில் அந்த ஒற்றை மனிதன் நாணயக் குவியலைச் சுமந்து நிற்கிறான்.

     கூடாரத்தின் உள்ளிருந்து குரல் வெட்ட வெளிக்குள் குதிக்கிறது.

     "யாரப்பா அங்கே..?"

     வந்தது கேள்வி அல்ல. அதட்டல்.

     மஹானே நான் வழிப் போக்கன், வணிகன். பெரும் செல்வத்துடன் இங்கே நிற்கிறேன். என்னுடன் வந்த வணிகர்கள் என்னைத் தவற விட்டு விட்டு முன்னேறிச் சென்று விட்டனர். இரவு இறங்கிக் கொண்டிருக்கிறது. தலகான் கள்வர்களின் தலை வாசல். எனக்குப் பாதுகாப்பு வேண்டும். செல்வத்துக்கு சேதாரம் வந்துவிடக் கூடாது. தாங்களே அடைக்கலம்.

     அவன் நடுங்கி நடுங்கி வார்த்தைகளை பிழிந்துக் கொண்டிருந்தான்.

     "என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய்?" கூடார மஹானின் குரலில் கம்பீரம் எழுந்தது.

     "அடைக்கலம். பாதுகாப்பு" அவனின் குரல் வழிந்தது.

     "உன் செல்வத்துக்கு நான் பாதுகாப்பா? நெருப்பிடம் சருகுக்கு அடைக்கலமா? படைத்தவன் கட்டளை அதுவானால் பாதுகாப்பு வழங்கித்தான் ஆகவேண்டும். சரி. உன் கையிருப்பை கூடாரத்தின் உள்ளே என் விழிபடும் தொலைவில் வை".

     உத்தரவு பிறந்து விட்டது.

     வணிகன் தன் நாணயச் சுமையினை கூடாரத்தின் உள்ளே வைக்கிறான். இன்னும் நிற்கிறான்.
    
     "வேறு என்ன? உன் வேலை முடிந்துவிட்டது. நீ செல்லலாம். இங்கே ஈக்களுக்கு இடமில்லை. இது உலைக்களம். போ. விடிந்ததும் வா. அப்போது உன் பொருளை எடுத்துச் செல். அடைக்கலப்பொருளை, இந்த நெருப்பு ஒரு போதும் தீண்டாது. சென்று வா..."

      கூடாரவாசி தன் கைவிரல்களுக்கு இடையில் தபசு மணியை உருட்ட ஆரம்பித்துவிட்டார்.வாயிதழ். இறை உச்சாடனத்தை மௌன அசைவில் வரிசைப்படுத்த ஆரம்பித்துவிட்டது.

     வணிகன் கூடாரத்துக்கு வெளியே மீண்டும் தனி ஒற்றை மனிதனாக நிற்கிறான். அவன் அச்சம் கூடாரவாசியின் முன்னே கட்டுண்டு கிடக்கிறது. அவனுக்குள் இப்போது பழைய மனிதன் சிறுகச் சிறுக முகத்தை நுழைக்கிறான்.கூட வந்த கூட்டத்தை விட்டு விலகியது துரோகமா? பாதுகாப்புக்காக மனித நியதிகளை மீறுவது தப்பாகுமா? இப்போது உள்ள தனிமை தண்டனையா? அல்லது இளைப்பாறலா? இதில் எது சரி? எது தவறு?

     அந்த வணிக மனிதன் அல்லாட ஆரம்பித்துவிட்டான்.

     ஒன்றாக வந்தவர்களின் கதி?

     அப்போது அச்சம் இருந்ததில் அர்த்தம் இருந்தது. இப்போது அச்சப்படுவதில் அவமானம் இருக்கிறது.

     வணிகக் கூட்டம் சென்ற திசை நோக்கி ஓடுகிறான்.

     ஏதேதோ விநோதச் சத்தங்கள். முனங்கல்கள். வணிக மனிதன் பதுங்கினான். என்ன நடந்து விட்டது?

     ஒரு கூட்டம் மூட்டை முடிச்சுக்களுடன் திரும்பிக் கொண்டிருக்கிறது. அவைகள் இவனுடன் வந்த வணிகர் கூட்டத்தின் பொருள்கள்.

     கள்வர்கள் தங்களின் வெற்றியை நிலை நாட்டிவிட்டார்கள்.

     வணிக மனிதனுக்குள் மீண்டும் அதிர்ச்சி. முன்னேறுவது மரணத்துக்குச் சமீபம் போவது போலாகும். இப்போதும் பாதுகாப்பு அந்தக் கூடாரம்தான். கள்வர்களின் விழிகளுக்கு விலக்காகிக் கூடாரம் நோக்கி அந்த வணிக மனிதன் பின்னுக்கு நழுவினான்.

     அவன் போகும் திசையில் கள்வர் கூட்டமும் நகர்கிறது.

     கூடாரம் அருகில் கள்வர் கூட்டம் காத்து நிற்கிறது. ஆணை பிறக்க வேண்டும். பின்பே உள் நுழைய முடியும்.

     நேரம் நகர்கிறது. கூடார வாசியிடமிருந்து ஆணை வரவில்லை. கள்வர் கூட்டம் கைப்பற்றிய பொருள்களுடன் காத்து நிற்கிறது. சற்றுத் தொலைவில் வணிக மனிதன் சகல பயங்களின் பிம்பமாக நிற்கிறான்.

     "முடிந்ததா? வாருங்கள் உள்ளே... கூடாரவாசியின் கட்டளை எதிரில் நின்ற வணிக மனிதனின் காதிலும் இடித்தது.

     கள்வர்கள் கொண்டு வந்த பொருள்களை கூடாரவாசியின் முன் வைக்கின்றனர். அவர் கண்ணின் கருவிழிகள் அனைத்துப் பொருள்கள் மீதும் உருள்கின்றன. அதுபோதும். அத்தனையும் மனதுக்குள் பதிந்து கொண்டன.

     வணிக மனிதன் பாதங்களுக்குக் கீழ் பூமி குலுங்கியது.

     "வழிப்பறிக் கள்வர்களின் தலைவனிடமே நாணயக் குவியலை வலிய வந்து ஒப்படைத்துவிட்டேனா"?
     மஹான் தோற்றத்தில் மாபாவியா? இறை வசனம் ஒரு ஏமாற்று ஒலிக்குறிப்பா?" வணிக மனிதன் வாய்விட்டு அலறினான்.

     சப்தம் வந்த திசைக்குள் கள்வர்கள் பாய்ந்தனர். வணிக மனிதனை ஒரு கட்டெரும்பைத் தட்டிவிடுவது போல் தட்டித் தள்ளினர்.

     கூடாரவாசி அவனைப் பார்த்தார்.

     "ஏனப்பா இவ்வளவு அவசரம்? சரி அதோ பார் உன் நாணய மூடை. அதை எடுத்துக் கொண்டு நீ புறப்படு. நீ போகும் நேரம் வந்துவிட்டது. நீ புறப்படு. கள்வர் பயம் இனித் தேவையில்லை. என் உத்திரவு உனக்கு வழங்கப்பட்டப்பின் எந்த கள்வனும் உன் புருவ ஓரத்துப் பூனை மயிரினைக் கூட அண்ணாந்து பார்க்க மாட்டான். போ. உடனே புறப்படு."

     கூடாரவாசியின் பேச்சு முற்றுப் பெற்று விட்டது.

     வணிக மனிதன் தன் மூட்டையைத் தோளில் சுமந்து அந்த கனத்த இருட்டுக்குள் கரைந்து விட்டான்.

     "தலைவா! தங்கள் முன்பே நாணயத்தை வைத்துவிட்டு தங்களையே அதை பாதுகாக்கவும் ஒருவன் துணிந்துவிட்டானா?"

     "இல்லை. அவன் என் அடைக்கலம். அவனுக்கு என் பாதுகாப்பில் பூரண நம்பிக்கை. வழிப்பறி பாதகம். நம்பிக்கைத் துரோகம் படுபாதகம். நான் எப்போதும் படு பாதகத்துக்கு எதிரி. அதனால்தான் அவனுக்கு என் அனுமதி கிடைத்தது."

கள்வர் போர்வையில் ஒரு மஹானின் கர்வம் தெரிகிறது.

*********

     ஒரு நள்ளிரவு. அந்தக் கூடார வாசியான கள்வர் தலைவன் தன் காதலியை நாடி வருகிறான்.

     காதலி வீட்டின் சுவரேறிக் குதிக்கிறான். கள்வன் காதலில் கூட வழிப்பறிப் பழக்கத்தைத்தான் கடைபிடிக்கிறான்.

     அந்த இரவில் எங்கோ ஒரு குடிசைக்குள் இருந்து மெல்லிய ரம்மியமான ஓசையில் திருமறை வசனத்தை ஒருவர் ஓதுகிறார்.

          "விசுவாசங் கொண்டவர்களின் இதயங்கள்
          அல்லாஹ்வை நினைத்தும் அவன்
          இறக்கி வைத்த சத்தியங்களைக் கவனித்தும்
          பயப்படக் கூடிய நேரம் (இன்னும்) வரவில்லையா?"(57;15)


     திருமறைச் செய்தி கள்வர் தலைவன் செவிப்பறைகளைச் சல்லடையாக்கியது.

     காதலியைத் தேடி மதிலேறியவனின் கவனத்தைக் கொக்கி மாட்டி இழுத்தது.

     உள்ளுக்குள் கனன்ற கங்கு மீது குவிந்து கிடந்த சாம்பல் சூறாவளியால் துடைத்தெறியப்பட்டது!

     "ஏக நாயகனே! எங்கள் ரட்சகனே! நேரம் வந்துவிட்டது. இதோ உன் திருமுன் எண்சாண் உடம்பும் துகள் துகள்களாகத் துடிக்கின்றன. என் நேரம் வந்துவிட்டது! என் நேரம் வந்துவிட்டது!."
    
     கள்வர் தலைவன் அந்த ஷணமே இறைஞானத் தடாகத்தில் துள்ளிக் குதித்து, துடித்துக் களித்து முக்குளித்து எழுந்தார்.

     புளைல் இப்னு இயால் (ரஹ்) ஞானத்தின் புதையலை அள்ளி அள்ளி மகிழ்ந்தார். வழிப்பறி தந்த வாழ்வை பறித்த, ஞானத்தின் மஞ்சத்தில் மூர்ச்சை அற்று விழுந்தார்.



     கானகக் கூடாரம் மீண்டும் வந்தது. அங்கே வழிப்பறிப் பொருள்களின் வாசனைக் கூட ஹராமாகிவிட்டது.

     ஹலாளைத் தவிர வேறு எதுவும் இனி அங்கே தலை தூக்க முடியாது. அப்படி ஒரு கட்டாய கட்டுப்பாடு அங்கே விதியாகிவிட்டது.

     *********

     அதே கூடாரம். மக்கள் கூட்டம் தேவைகளுக்காக அங்கே காத்துக் கிடக்கிறது.

     "எங்களின் மஹானே! ஒரு ஊரை நான் கடந்து வரும் போது ஒரு அதிசயம் கண்டேன். ஒரு நீருற்று அங்கே இருக்கிறது. பகலில் அதில் நீர் சுரக்காது. முற்றிலும் வறண்டு விடும். இரவில் இனிய நீர் சுரக்கும். இது என்ன அதிசயம்? மஹானே! இறைவன் உங்களுக்கு அறிவிக்கக் கூடும். நீங்கள் எமக்கு அதைத் தெரிவியுங்கள்."

     இப்படி ஒரு மனிதர் புளைல் அவர்களிடம் கேட்கிறார்.

     மஹானின் விழிகள் மூடிக் கொள்கின்றன. விழி ஓரங்களில் நீர் வழிகின்றன. ஒரு புதுச் சுனை அங்கே சுரந்து ஒழுகுகின்றது. விழி திறந்தார்கள். கண்ணீர் சுனை வற்றவில்லை.

     "அந்த அதிசய ஊரில் ஒரு ஏழைக் குமரிப்பெண் திருமணத்திற்கு வாய்ப்பின்றி வதங்கிக் கொண்டிருக்கிறாள். வேதனையில் அவள் விழித்திருக்கும் போதெல்லாம் கண்ணீர் சிந்துகின்றாள். அதனால் அந்த நீர்ச்சுனையே வறண்டு விடுகிறது. அவள் தன்னை மறந்து உறங்கும்போது கண்ணீர் நின்றுவிடுகிறது. எனவே நீர்ச்சுனையில் தண்ணீர் சுரக்கிறது"


     வார்த்தைகளை முடிக்கும்போது மஹானின் விழிகள் தெப்பத்தில் மிதந்தன. அப்போது எந்தக் கடல் வற்றியதோ..?

Sunday, June 9, 2013

சிறுகதை - எரிகொள்ளி!!!


படச்ச ரப்பே துன்யாவை சுருட்டி எங்கேயாவது  எறிஞ்சிடு"


"னுஷப் பிறவி வஞ்சிக்க மட்டும்தான் தெரிஞ்சிருக்கு. அதுக்கு பாசம் பரிவு எதுவும் கிடையாது. சும்மா பசப்பும். மோசமாக நடிக்கும். ஓரவஞ்சனை பிடிச்ச மனுஷப் பிறவி.


     ஒவ்வொருத்தரும் இன்னொருத்தருக்கு எதிரி. நம்பவே கூடாது. கழுத்த அறுத்திடுவாங்க. படச்ச ரப்பே துன்யாவை சுருட்டி எங்கேயாவது எறிந்சிடு"

     ஆசியாவிற்கு ஒரே எரிச்சல். எதைச் செய்தாலும் குறைதான். இரக்கப்பட்டு ஓடி ஓடி நல்லது செய்வாள். வலிய வலிய நுழைந்து பழகுவாள். எல்லாமே கல்லாக மாறி அவள் தலையில் நச்சென்று விழும்.

     தன்னைத் தாக்கும் கல்லைத் தானே தயாரித்து அடுத்தவரிடம் கொடுத்து அதைத் தன் மீது எரிய அவர்களைக் கட்டாயப்படுத்தி, அந்த ஏளனத்தை சுமந்து வருந்திக் கொள்வதில் ஆசியாவிற்கு அசாத்திய ஆர்வம்.

      ஆனால் நேற்றுக் கூட அப்படித்தான் நடந்தது. பஜ்ர் தொழுதுவிட்டு முஸல்லாவில் அமர்ந்து வெள்ளைத் துப்பட்டாவைத் தலை முதல் முழுக்கப் போர்த்தி குட்டியான அசைவுடன் மாமி ஓதுவதே பரக்கத்தான காட்சி. ஆற்றில் அலைகள் அசைந்து அசைந்து நம்மைத் தள்ளிக் கொண்டு இருக்குமே அது போல மாமியின் அரபு உச்சரிப்பு மனுஷர்களை உலுக்கிவிடும்.

     ஒரு சொட்டுத் தண்ணீர் கூட பருகாமல் வெறும் வயிற்றில் மாமி ஓத ஆரம்பித்து விடுவார்கள். வெறும் வயிற்றில் ஓதினால் குடல் காந்தாதா? தொண்டை வறண்டு போகாதா? சூடா ஒரு கப் காபி மிடருக்குள் இறங்கினால் எப்படி இருக்கும்? ஆசியாவிற்கு இந்த எண்ணம் எழுந்துவிட்டது.

     புதுப் பாலில் மூக்கைத் துளைக்கும் வாசனையில் காப்பி போட்டாள். குடிக்கிற சூடான பதத்தில் காப்பி ஊற்றி மாமிக்குப் பக்கத்தில் வைத்தாள். ஓதுகிற வாய்க்கு அவளால் முடிந்த அர்ப்பணம்.

     குர்ஆனில் பதிந்து நகரும் விழிகளை ஒரு மின் வெட்டும் கணத்தில் மாமி நகர்த்திப் பார்த்துக் கொண்டார். ஓதும் சுகத்துடன் ஒரு சின்னத் திருப்தியும் மாமிக்குள் கலந்து கொண்டது. ஆனாலும் ஓதுதல் தொடர்கிறது. பாதியில் நிறுத்த முடியாது. மாமி நிறுத்தவும் மாட்டார். அப்படிச் செய்வது குர்ஆனை அவமதிக்கிறதுக்குச் சமம். மாமியின் பக்கத்தில் காப்பி குளிர்கிறது.

     ஆசியாவிற்கு அடுத்த வேலைகள் அழைப்பு அனுப்பி விட்டன. வேலையில் ஐக்கியம் ஆகிவிட்டாள். நேரம் ஒழுகிக் கொண்டே இருந்தது.

     "ஆசியா.. காப்பிய வாயில வைக்க முடியலேம்மா. ஐஸ் தண்ணியா இருக்கு. சூடு காட்டி எடுத்துட்டு வாம்மா"

     மாமியின் குரல் ஆசியாவிற்கு ஒரு வேலையினைக் கொடுத்தது.

     ஆசியாவுக்குள் இன்னொரு ஆசியா இருக்கிறாள். அவளை மாமியின் குரல் இடித்துவிட்டது.


     "கெழட்டு மூதேவிக்கு வேலயே இல்ல. நான் வேல மெனக்கிட்டு சூடா காப்பி போட்டு குடுத்தா அத ஆறவுட்டுட்டு ஐஸ் தண்ணியா இருக்காம். கொறை சொல்லலேனா கெழட்டுக்கு ரூஹு போயிரும். சுட வைக்கனுமாம். கொழுப்புப் புடிச்ச கெழம். எனக்கு  நல்லா வேணும். ஓதுறதுல கொறச்சல் இல்ல. குசும்புலயும் குறைச்சல் இல்ல"



     ஆசியாவின் மனம் பூராவும் பற்றி எரிகிறது. வார்த்தைகள் மட்டும் உச்சரிப்பு சுத்தமாக வாய்குள்ளே முணகலாக வளைய வளைய வருகிறது. மாமிக்குக் கொழுப்பு அதிகம். வேண்டுமென்றே வேலை வாங்குகிறாள் என்ற நினைப்பு ஆசியாவை உறுத்தியது.

     காப்பிச் சட்டியை எடுத்து அடுப்பில் இடிக்கிறாள். ஆசியாவின் எரிச்சல் காப்பியோடு கிடந்தது கொதிக்கிறது. காப்பிக் கொதிப்பு ஆவியாகிவிடும். ஆசியா கொதிப்பு புலம்பலாக வடியும்.

     "சீக்கிரம் இட்லி ரெடி பண்ணும்மா. தெனம் லேட்டாப் போனா எனக்கே வெட்கமா இருக்கு. சிடுமூஞ்சி மிஸ் வேற வாள் வாள்னு கத்தும்" மகள் காலை டிபனுக்குத் தயாராகினாள்.

     ஆமா இங்கே நான் மெத்தையிலே படுத்து ஆரஞ்சுப் பழம் முழுங்கிக்கிட்டு கால ஆட்டிக்கிட்டு பேப்பர் படிச்சிட்டுக் கெடக்கேன். குத்தங் கண்டுபிடிக்க நீ வந்திட்ட. போளா, இங்கே எல்லாத்தையும் நான் ஒருத்திதான் செய்யணும். எனக்கு மட்டும் அம்பது கையி இருக்கு பாரு. இட்லி லேட்டாத்தான் ஆவும். தின்னா தின்னு இல்லாட்டித் தொலைஞ்சி போ...

     ஆசியாவுக்குள் இருந்து ஆங்காரம் பீறிட்டுத் தெறிக்கிறது.

     மெத்தையில் படுத்து ஆரஞ்சுப்பழம் சாப்பிடும் மாமாவைத்தான் ஆசியா குத்திக் கீறுகிறாள். மாமிக்குப் புருஷன்தானே மாமா. அதுதான் எரிச்சல்.

     மாமா காதில் இது போய் விழுகிறது. அவர் தட்டில் இருக்கும் ஆரஞ்சுப் பழச்சுளைகளைப் பார்க்கிறார். அவைகளையும் கொஞ்ச நேரத்துக்கு முன் ஆசியாதான் அழகாகச் சுளை சுளையாய் பிரித்து எடுத்து மாமாவுக்கு முன் தலையில் தலையில் துணியை இழுத்துப் போர்த்திப் பவ்வியமாகக் கொண்டு வந்து வைத்திருந்தாள்'.

     ஆசியாவின் மகள் எதுவும் பேசவில்லை. அம்மாவுக்கு என்னமோ ஒரு ஷைத்தான் புடிச்சிருக்கு. மக்ரிப்புல மோதினாருட்ட தண்ணி ஓதி கொடுக்கணும். நமக்கு ஏன் இந்த வம்பு. மனதுக்குள் இப்படி நினைப்பு வந்தது. பள்ளிக்கூட புத்தகத்தை பேக்கிற்குள் திணித்துக் கொண்டிருந்தாள் மகள். இட்லிக்கு எப்போது அழைப்பு வரும் என்பது அவளின் எதிர்பார்ப்பு.

     ஆசியாவின் முதுகுத் தண்டு வடத்தின் வலி இப்போது சுரீரென்று கொட்டியது. இரண்டு  வருஷமாக விடாத தொந்தரவு. என்னத்தை விழுங்கினாலும் வலி போகவில்லை. தன்னையே விழுங்கிட்டுத்தான் போகும் என்பது ஆசியாவின் பூரண நம்பிக்கை.

     இட்லிப் பானையை அடுப்பிலிருந்து இறக்கி வைத்தாள். வேலை முடிந்து விடவில்லை. இட்லி மாவு இன்னும் கொஞ்சம் இருக்கிறது. இன்னும் இரண்டு அடுக்கு சுடலாம். கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் இட்லி சட்டி அடுப்பில் ஏறத்தான் வேண்டும். கொழுந்தனுக்கு இனிமேல்தான் சுடனும். இது ஒரு அதிகபட்ச வேலை.

     "அவரு டாட்டா பேரன். சூடாத்தான் சாப்பிடுவாரரு. ஆறிப்போனா உடனே எந்திரிச்சிருவாரு. ஏன் எந்திருக்க மாட்டாரு? நான் ஒருத்தி கெடச்சிட்டேனில்ல. இந்த வூட்டு மருமவளாவா வந்திருக்கேன். வேலக்காரிக்குப் பதிலா நான் வந்திருக்கேன். இந்த மனுஷனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி ஒரு பொண்டாட்டி வந்து அவட்ட இப்படி சூடா தனியா எனக்கு சுட்டுத்தான்னு சொன்னா அப்பத் தெரியும். தொடப்பக் கட்டயெ தூக்கிட்டு வருவா. எல்லாரும் என்ன மாதிரி இளிச்சவாயளாவா இருப்பா. அண்ணன் பொண்டாட்டின்னு கூட ஒரு மதிப்பு இல்ல. நான் ஒரு பேமலக்கு"

     ஆசியாவுக்கு எரிச்சலைப் பிடுங்கிக் கொண்டு வர இன்னும் எத்தனையோ விஷயங்கள் அங்கே பட்டியல் போட்டுக் காத்திருக்கின்றன.

     "எம்மா ஆசியா தொப்பிக்கு நீலம் முக்கும்போது பாத்து முக்குமா. திப்பித் திப்பியா நீலம் நிக்குது. அசிங்கமா இருக்கும்மா" வெள்ளிக்கிழமை குளியலுக்குச் செல்லத் தயாராகும் மாமனாரின் அட்வைஸ் வருகிறது.

     "இருக்கும்லா. ஏன் இருக்காது. கெழட்டு வயசிலயும் ராத்திரிக்குப் பொண்டாட்டி பக்கத்துல உட்கார்ந்து காலமுக்கி விட்டு சுகமா தூங்குற கொழுப்புலத்தானே இப்படிப் பேசுறது. மருமவ இருக்காளேன்னுக் கூட வெக்கமில்லாம பொண்டாட்டிக் கூட ஒரே ரூம்புல படுக்குற மானங்கெட்ட மனுஷனுக்கு மண்ட நிறைய கொழுப்புலா இருக்கு. நீலம் திப்பித் திப்பியா இருக்காம். முதுகு வலிக்கிற வலி எனக்கில்லா தெரியும்"





     ஆசியா தன் இதழ்களுக்குள் தன் வார்த்தைகளால் தன்னையே அவித்துக் கொள்கிறாள்.

     அடுக்களையில் வெக்கை காந்துகிறது. ஆசியாவுக்குள்ளும் கனல் பொங்குகிறது. எரிச்சல் எழுந்து குதியாட்டம் போடுகிறது. மனதுக்கு நிம்மதி வேண்டும். வாசல் கட்டுக்கு வருகிறாள்.

     எதிர் வீட்டில் பல்கீஸ் தன் கணவனை ஆபீஸுக்கு வழி அனுப்புகிறாள். இது தினம் நடக்கும் ஒரு சம்பிராதயம். அவன் ஸ்கூட்டர் ஸ்டார்டரை உதைக்கிறான். கரிய புகைத்துண்டு சைலன்சர் வாயிலிருந்து கொப்புளிக்கிறது. ஒரு குலுக்கல். ஒரு உந்தல். ஸ்கூட்டர் புறப்பட்டுவிட்டது. முகம் நிறைய சிரிப்பு பல்கீஸிடம் தங்கி நிற்கிறது.

     ஆசியாவையும் அவள் பார்க்கிறாள். பழக்கத்தால் ஒரு குறுஞ்சிரிப்பை உதிர்க்கிறாள். ஆசியாவும் பதிலுக்கு ஒரு சிரிப்பை எடுத்து எறிகிறாள்.

     "மூஞ்சியப் பாரு. பெரிசா புருஷன் வேலைக்குப் போறான். ஊரு உலகத்துல எவனுமே இதுவரை போனதே இல்ல. டாட்டா காட்டி அனுப்புறாளாம். திருட்டுக் கழுதை. ஒரு ஸலாஞ் சொல்லி அனுப்பலாமுல்லோ. இவளல்லாம் ஒரு துலுக்கச்சி. வெள்ளைக்காரன் பேத்தின்னு நெனப்பு. வெக்கங்கெட்டவ. ரோடுன்னுக் கூட நெனைப்பில்ல. கொஞ்சிகிறாகெ. மூதேவிக்கு ஏம்மேலே பொறாமை அதிகம். ஏம்மாதிரி நெறமா அழகா இல்லேன்னு அந்த நாயிக்கு பொறாம. இதுக்கு நான் என்ன செய்ய முடியும். அவங்க அவங்க படைப்பு அப்படி. நா இங்கே நிக்கேன்னு தெரிஞ்சிக்கிட்டே அவ அவனுக்கு டாட்டா காட்டி அனுப்புறா. அவ புருஷன அவா அனுப்பிட்டுப் போவட்டும். எனக்கென்ன வந்துச்சு. என்னைப் பாத்து அந்த நாசமா போறவ ஏன் சிரிக்கணும்? கொழுப்புத்தானே.

     ஆசியாவுக்கு வாசலிலும் கதகதப்பு அதிகரிக்கிறது. வீட்டுக்குள் வருகிறாள். நடுவீட்டில் சீப்பு கிடக்கிறது. பள்ளிக்கூடத்துக்குப் போகும் அவசரத்தில் மகள் விட்டுப்போய் இருக்கிறாள். ஆசியா அந்த சீப்பை எடுத்தால். தூக்கித் தூர எறிந்தாள். அந்த சீப்பு இரண்டு ஜம்ப் பண்ணி மூன்றாவது ஜம்ப்பில் பொத்தென்று விழுந்து, நான் என்ன செய்தேன்னு கேட்டுக் கிடக்கிறது.

     ஆசியாவின் எரிச்சல் அடங்க வில்லை. பெட்ரூமில் போய்ச் சரிகிறாள். வடக்குப் பக்கச் சுவரில் ஆசியாவும் அவள் கணவனும் இணைந்து போட்டோவில் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அவள் பார்வை போட்டோவில் பதிகிறது.

     "ரெண்டு வருஷம் ஆச்சி. துபாயில் என்ன செஞ்சுகிட்டு இருக்காகளோ..? என் நெனப்பு அவுகளுக்கு அடிக்கடி வருமா? வராமலா இருக்கும். பொண்டாட்டி நெனப்பு இல்லாம புருஷன் இருப்பானாக்கும். அவகெ செல்லமா கன்னத்தெ தட்டுறதே தனிதான். நமக்குத்தான் இங்கே ஊருலாப்பட்டெ வேலே. அவகள நெனக்கக் கூட நேரமில்ல. அவுகளுக்கும் அப்படியா இருக்கும்? அதுவேன்னமோ தெரியலே. எல்லா வேலைகளுக்கு நடுவுலயிலும் ஆம்பிளைக்கு பொம்பள நெனப்பு வந்திர்து. பொம்பளைக்கு அப்படி இல்ல. என்னெ பத்தி ரொம்பத்தான் நெனச்சிக்கிட்டே இருப்பாக. எழுதுற கடிதத்தில எல்லாம் எப்படி தேடித் தேடி ஏங்குறாகெ.

     ஆமா பெரிய நெனப்பு? நெனச்சா மட்டும் போதுமாக்கும். அவ எப்படி இருக்கா..? என்ன பாடு படுறான்னு ஓடியாந்து பாக்காத ஆம்புள ஒரு ஆம்புளையா? அந்த மனுஷனுக்கு ஆசையே இல்ல. சனியன் புடிச்சவன் அங்கெ கிடந்தது வெட்டி முறிக்கிறானாம்.




     ஆசியாவுக்குள் கனன்று கொண்டிருக்கும் இன்னொரு ஆசியா நெம்பித் தள்ளி மேலுக்கு வருகிறாள். ஆசியா எரிச்சல் படுகிறாள்.
    
     ஆசியாவின் இந்த நெருப்பை மூட்டும் எரிகொள்ளி எங்கே கிடக்கிறது?

     ஆசியாவின் விழிகள் வடக்குப் பக்கச் சுவரில் சிரித்துக் கொண்டிருக்கும் தன் கணவன் முகத்தை இழுத்துப் பிடித்து விழுங்கிக் கொண்டே இருக்கின்றன. அவளுக்குள் எரிச்சல் கத்தை கத்தையாக இறங்கிக் கொண்டே இருக்கிறது.
*********

படங்கள்: நன்றியுடன் – bing images.



Friday, June 7, 2013

உரைச் சித்திரம் - நம்பிக்கை



"திருட்டைத் தெரிந்திருக்காத திருடன்.
  கஸ்தூரியின் வாசனையை அள்ளிவரக்
  கஸ்தூரியில் கன்னக் கோல் போடும் அறிவிலி"



     ஸ்ரா நகரத்தின் ஒதுக்குப் புறமான வீதி. வீதியின் கடைக்கோடியில் ரம்மியமான குடில். எளிமையான எடுப்பான குடில். சுற்றிலும் பசுமை. எத்தனை வண்ணத்தில் பூக்கள். குப்பென்று தளைத்துக் கிடக்கும் பசிய செடிகள். அது ஒரு ஞானப் பர்ணசாலை.

     இரவு வானம். மேகக் குப்பைகளைக் கூட சற்று நேரத்துக்கு முன்னே வீசிய காற்று துடைத்து ஒதுக்கித் தூர எங்கேயோ தள்ளி இருந்தது.

     நிர்மலமான வானத்தில் வெளிச்ச உருண்டையாக நிலா. ஒரு விதவையைப் போல் எளிமையாகத் தனித்துக் கிடந்தது. புள்ளி நட்சத்திரங்களுக்கும் என்ன போதாத காலமோ? ஒன்றைக் கூட வான வட்டாரத்தில் காண முடியவில்லை.

     ஞானப் பர்ண சாலைக்குள்ளும் ஒரே ஒரு ஒற்றை நிலா. அருள் பழுத்த அப்பழுக்கற்ற பிரகாச மேனி. பாலாற்றின் ரோஜாப் படகு.

     இறை வணக்கத்தில் ஒரு உருவம். எத்தனை ரக்அத் தொழுகை இதுவரை நிறைவேறி இருக்கிறதோ? - அது இறை ரகசியம்.


     தொழுது கொண்டிருந்த ரக்அத்தின் முடிவு வருகிறது.  இருந்த நிலையில் தலை வலப்பக்கம் ஸலாம் கொடுக்கத் திரும்புகிறது. அப்பாடா... சொர்க்கத்தின் ஜன்னல்திரை அசைவது போல்...

     மௌனம் குடிகொள்கிறது. கண் மூடிவிட்டது. இதழ்கள் அசைகின்றன. புஷ்பத்திற்குள் காற்று புகுவது போல சின்னச் சலனம்.

     நட்டநடு இரவில் இறைவணக்கத்தில் இருப்பவர் ராபியத்துல் பஸரியா. அவரின் ஞான விருட்சம் குடில் முழுவதும் நிழல் பரப்பிக் கிடக்கிறது. நிழலே அதிகாலைச் சூரிய வெளிச்சம்தான். இறைக் கிருபைக்கும் அவருக்கும் இடையில் ஈச்சிறகு கனத்தில் கூட திரையில்லை.

     குடிலுக்குள் எவனோ ஒரு மூன்றாமவன். அம்மையாரின் மோனப் பார்வை அவனுக்கு உறக்கம் போலத் தோன்றுகிறது. தனி மனுஷி. ஆளே இல்லாத குடில். அக்கம் பக்கத்தில் எவரும் இல்லை. வந்தவன் முன் ஜாக்கிரதையுடன் சுற்றிச் சுற்றி வேவு பார்த்துக் கொள்கிறான்.

     குடிலுக்குள் துழாவுகிறான். எதுவேமே இல்லை. ஞானக் குடிலுக்குள்ளும் திருடனா?

     திருட்டைத் தெரிந்திருக்காத திருடன். கஸ்தூரியின் வாசனையை அள்ளி வர கஸ்தூரியில் கன்னக் கோல் போடும் அறிவிலி. முகவரி தப்பிப் போன திக்குத் தெரியாத காட்டில் நிற்கிறான்.

     திருடனுக்கு எதுவுமே இல்லை. திருட வேண்டிய பொருள் இல்லாத வீட்டில் தனியே திணறுகிறான் திருடன். அவனுக்குள் எரிச்சலுக்குப் பதிலாக வெட்கம் வேர் பரப்பி ஸ்திரமாகிறது.

     மெதுவாகக் குடிலின் வாசலைக் கடக்க இடது காலை வெளியில் வைக்கிறான்.

     "அப்பனே, ஏன் அவசரம்? நில். நிதானம் தேவை. திருடுவதற்கு முன்னும் அது தேவை. தீர்மானம் இல்லாமல் இந்தத் தொழிலில் இறங்கக் கூடாது. திருட வேண்டிய பொருளின் இருப்பை அறிந்து கொள்ளாமல் திருட வருபவன் மட்டி. திருடத் தெரியாதவன் ஏன் திருட வேண்டும்? குருடனுக்கு ஏன் பட்டுப் பீதாம்பரம்? அப்பனே பொறுமையாக நில்".

     ராபியத்துல் பஸரியா நிதானமாக இதழை மலர விடுகிறார்.

     திருடனுக்குள் வேர்த்துவிட்டது. அங்கமெல்லாம் படபடக்கிறது. தலை தெறிக்க ஓட வேண்டும். கால்கள் பலமிழந்து விட்டன. அப்படியே நிற்கிறான்.

     "அப்பனே! திருட்டு எண்ணம வரும் போதே அச்சமும் அதில் கரைந்து கலந்து விடுகிறது. நீ இப்போது அச்சப்படுகிறாய். நீ இன்னும் மனுஷனாகத்தான் இருக்கிறாய். மிருகம் உனக்குள் இப்போதுவரை வரவில்லை. மனுஷன் இப்படித்தான் இருப்பான். இங்கே வா... என் அருகில் வா...

     அம்மையாரின் மொழிகளில் சங்கிலி பின்னிக் கிடக்கிறது. அது அந்தத்  திருடனை விடாமல் பிடித்து இழுத்து வந்து அம்மையாரின் அருகில் அவனை நிறுத்துகிறது.

"அப்பனே! இறைவன் படைப்புகளில் மகா பலஹீனமான பெண் படைப்பு நான். பண இருப்பில் மகா கேவலமான ஏழை நான். என் குடிலில் எதை எதிர்பார்த்துத் திருட வந்தாய்? நான் உனக்கு எதையாவது திருடத் தரவேண்டும். ஒரு கடினமான பொறுப்பை என் மீது சாட்டிவிட்டாயே. அப்பனே! அதோ பார் ஒரு பழம் ஈச்சம் பாய், அதை எடுத்து வா.

ஏவிய திசையில் ஒரு நாயைப் போலத் திருடன் ஓடுகிறான். ஈச்சம் பாயை ஏந்தி வந்து ஏந்தியபடியே அம்மையாரின் எதிரில் ஒரு ஓரத்தில் ஒடுங்கி நிற்கிறான்.

     “அப்பனே அதை உதறி இப்படி விரித்துப் போடு

     தரையில் காட்டிய இடத்தில் பாயை விரிக்கிறான்.

     “தகரக் குவளையை எடுத்துக் கொள். தண்ணீர் அங்கே இருக்கிறது. அதை மொண்டு கொள். உடலை ஒளூ செய்து தூய்மைப் படுத்திக்கொள். பட்டியல் இட்ட படி பணிகளை முடிக்கிறான்.

     “அப்பனே! வா. அந்தப் பாயில் நின்று தொழு. நான் பிரார்த்திக்கிறேன். அதற்குப் பின் தொழுகையைத் தொடர். எனக்கும் உனக்கும் என் எண்ணத்துக்கும் உன் எண்ணத்துக்கும் இறைவனான ரப்புல் ஆலமீன் உன்னை இங்கிருந்து வெறுமனே அனுப்ப மாட்டான். நம்பு. நான் தினம் தினம் இடைவெளி இல்லாமல் இதனை அனுபவிக்கிறேன். நம்பு.

     அம்மையாரின் கைகள் தாழம் பூவைப் போல மேல் ஏந்தி நிற்கின்றன. செதுக்கி வைத்த விழிகள் இமைகளால் தாழிடப்படுகின்றன.

     “என் இறைவனே! உன் அடிமையின் குடிலுக்குள் ஏதுமற்ற இன்னொரு அடிமை திருட வந்துவிட்டான். என் குடிலில் எதுவுமே இல்லை. இப்போது அவனை உன் குடிலுக்கு கூட்டி வந்து நிறுத்திவிட்டேன். அங்கே இல்லாதது எதுவுமே இல்லை. அவன் தேவையை அவனைவிட நீ நன்கறிவாய். அதனை அவனுக்கு வழங்கி அருள். என் நம்பிக்கை உன் அருளால் எப்போதும் குறையாது. அவனின் நம்பிக்கை குறைவால் அவனை நீ புறக்கணித்து விடாதே! என் இறைவா! என் வேலை இவ்வளவுதான். இனி உன் வேலைதான் தொடர வேண்டும்

     வார்த்தைகள் தானே முற்றுப் பெற்றுக் கொண்டன. அமைதி நிலவுகிறது. கபுருக்குள் (மண்ணறைக்குள்) இருக்கும் தனிமை அமைதி. இந்த கபுரமைதிக்குப் பின் தானே இறை தரிசனம் கிடைக்கும். அமைதியே அங்கு அமைதியாக ஒடுங்கி நிற்கிறது.

     திருடன் அனிச்சை செயல் போல தக்பீர் கட்டுகிறான். தொழுகை தொடர்கிறது. இரண்டு. அடுத்தும் இரண்டு. மேலும் இரண்டு. பிறகும் இரண்டு ரக்அத்துகள் நீடித்துக் கொண்டே போகின்றன. அம்மையார் அவனையும் இறைவனையும் விட்டுவிட்டு நகர்ந்து நிற்கிறார்கள்.

     அதிகாலையின் இளம் காற்று பனித் துவாலையை இழுத்து வந்து பூமி மீது அனாவசியமாக வீசி விரிக்கிறது. பரா நகரத்துப் பள்ளிவாசல் மினாராவுக்கு மேலே பரவி நகரம் முழுவது பாங்கு ஒலிக்கிறது.

திருடன் தொழுகை நின்று விட்டது. அமைதி. பஜ்ரின் தொழுகை கடமையாகிறது. எல்லாம் நிறைவேறி விட்டன.

     “தாயே! என் இறைவன் எனக்கு எல்லாம் தந்துவிட்டான். திருட வந்தேன். ஆம். சரியான இடத்தில்தான் நான் திருட வந்திருக்கிறேன். என் இறைவன் மகத்தானவன். என் தேவைகளை அவன் அறிந்தவன். அதனை உங்கள் குடிலில் மறைத்து வைத்திருந்தான். என்னைத் திருட அனுப்பினான். இப்போது திருடியே விட்டேன். தாயே ஞானத்தின் விழிகளைத் திறப்பது எவ்வளவு சுலபமாக இருக்கிறது. ஆனால் ஞானத்தின் முகம்தான் எங்கெங்கோ மறைந்து கிடக்கிறது. என் ஞான முகம் இந்தக் குடிலுக்குள்.

தாயே! உங்களையும் என்னையும் படைத்தவன், ஞானத்தாலேயே உங்களை ஆசிர்வதிக்கிறான். இரவில் வந்தத் திருடன் பஜ்ரில் ஞானியாகக் கனிந்து விட்டான். எது எப்போது நடக்கும்? ரகசியம் படைத்தவனின் பொக்கிஷம்.




அம்மையாரின் பொன்விழி இமைகள் மடிக் கொள்கின்றன. இப்போது அங்கே      அம்மையாருக்கும் ஆண்டவனுக்கும் இடையில் மனித நெடி குறுக்கிடப் போவதில்லை. அமைதி... சாந்தம்... கபுரடிக்குள் இருக்கும் தனிமை அமைதி.
*********

    ஞானக் குடில் வாசலில் இருவரும் வந்து நிற்கின்றனர். மதியத்தின் சூரியன் வான உச்சியில் தன்னைச் சுட்டுக் கொண்டே எரிகிறது. அம்மையாரின் விழிகளுக்குள் வாசலில் நிற்பவர்களின் நிழல் விழுகிறது.

     “யாரங்கே..?
    
     அம்மையாரின் மொழி எல்லாப் பக்கமும் மணக்கிறது.

     “தாயே..! கோரிக்கையுடன் வாசலில் நிற்கிறோம். அனுமதித் தாருங்கள் உள்ளே வருகிறோம்.

     “இடம் மாறி வந்துவிட்டர்கள். கோரிக்கையைத் தீர்க்கக் கூடியவன் எங்குமே நிறைந்திருக்கிறான். இந்தக் குடில் மட்டுமா வாசஸ்தலம்? படைத்தவனை இடத்துக்குள் சுருக்க முடியாது

     அம்மையாரின் வார்த்தைகளில் மெத்தென்ற சூடு படர்கிறது.

     “தாயே..! உங்களிடம்தான் கேட்க வேண்டும். அந்த அல்லாஹுவுக்காக அனுமதித் தாருங்கள். நாங்கள் உள்ளே வருகிறோம்

     “என் ரப்புக்காகவா அனுமதி..? இமைக்கும் முன் உள்ளே வாருங்கள்

     குடிலுக்குள் இருவர் நுழைகின்றனர். அம்மையாரின் வெளிச்சம் வந்தவர்கள் விழிகளை கூசச் செய்கின்றன.

     “தாயே! எங்களுக்கு ஒரு ஆசை. நிறைவேற்றுங்கள். நாங்கள் யாசிக்கின்றோம்

     “ஆசைகளே இல்லாத குடிலுக்குள் ஆசைகளுடன் நீங்கள். மனிதர்களிடம் யாசிக்காத இந்த இறையடிமையிடத்திலா யாசகம்? ரப்பே! இதற்கு அர்த்தம் என்ன? சரி கேளுங்கள்...!

     அம்மையார் மௌனம் காக்கிறார்கள்.
    
     “தாயே! வாழ்நாளில் ஒருவேளையாவது நாங்கள் ஹலாலான உணவை உண்ண வேண்டும். எங்களுக்கு உங்கள் குடிலில் உள்ள உணவில் துளியைத் தாருங்கள். மறுக்கத் தெரியாத உங்களிடம் யாசிக்கிறோம். தாருங்கள்

     அம்மையாரின் மனத்துக்குள் தாய்மை குளிர்கிறது. சுவனத் தென்றலின் துணுக்கு ஒன்று நெஞ்சுக்குள் சுழல்கிறது.

     அருகில் இருக்கும் தட்டின் மூடியை நீக்குகிறார்கள். இரண்டு ரொட்டிகள் இருக்கின்றன.

     “என் இறைவனே! நீ மகா கிருபையாளன். கேட்பவர்களின் தேவையை பூர்த்தி செய்யத் தேவையானவைகளை என்னிடத்தில் அருள் செய்திருக்கிறாய். என் ரப்பே! நன்றியும் வணக்கமும் உனக்கே சொந்தம்

     அம்மையார் தட்டை எடுத்து வந்தவர்கள் பக்கம் நீட்டப் போகும் நொடியில்...

     குடிலின் வாசலில் “அம்மா! தாயே! பசிக்கிறது. பசிக்குத் தாருங்கள் உண்மையான யாசகக் குரல் ஒலிக்கிறது.

     ஹலாலுக்குத் தருவதா? பசிக்குத் தருவதா?

     அம்மையார் யோசிக்க நேரம் எடுக்கவில்லை. இரண்டு ரொட்டிகளையும் யாசகனுக்குக் கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்.
    
     வந்தவர்கள் மனத்தில் கல் விழுந்துவிட்டது. ஹலாலுக்கு இறைவன் இன்னும் தங்களுக்கு நாடவில்லையா? வேதனையில் வார்த்தைகள் வெடுக்கென்று விழுகின்றன.

     “இறைவன் மீது இவ்வளவு அவ நம்பிக்கை கூடாது. பொறுமை நம்பிக்கையின் கர்ப்பவயிறு

     அம்மையாரின் மொழிகளில் நம்பிக்கைச் சமுத்திரம் அலையடித்தன.

     நேரம் லேசாக நகர்ந்தன. பணிப்பெண் ஒருத்தி மூடிய தட்டுடன் குடிலுக்குள் நுழைகிறாள்.

     “தாயே! எங்கள் எஜமானி அம்மாள் தங்கள் சமூகத்திற்கு இந்த ரொட்டிகளை அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்கள். அதை இங்கே வைப்பதற்கு அனுமதித் தாருங்கள்

     வந்தவர்களின் முகத்தில் குதூலம். அம்மையாரைப் பார்கிறார்கள்.

     “பெண்ணே..! அதை இங்கே கொண்டு வா... திறந்து காட்டு..! எண்ணிக்கை எத்தனை என்று சொல்..!

     அம்மையாரின் மனத்தில் ஏதோ ஒரு தீர்மானம்.

     “தாயே! தட்டில் மொத்தம் பதினெட்டு ரொட்டிகள் பணிப்பெண் பணிவுடன் பதில் தருகிறார்.

     “அப்படியானால் இது எனக்குரியதன்று. எடுத்துச் செல்...

     அம்மையாரின் ஆணை பிறந்துவிட்டது.

     ஹலால் உணவுக்காக வந்தவர்களின் முகத்தில் கருமேகம்.

     பணிப்பெண் பயந்து தட்டுடன் ரொட்டிகளை எடுத்துச் சென்றுவிட்டாள்.

     அமைதி... கபுரடிக்குள் இருக்கும் அமைதி...

     நேரம் நகர்கிறது. மீண்டும் பணிப்பெண் வருகிறாள்.

     “தாயே! தவறு நடந்துவிட்டது மன்னியுங்கள். முதலில் தங்களுக்கு என்று எடுத்துவைத்த தட்டில் அவசரம் காரணமாக இரு ரொட்டிகளை வைக்க மறந்துவிட்டோம். தங்களுக்கு என்று தீர்மானித்தவை இருபது ரொட்டிகள். அவசரம் இரண்டு ரொட்டிகளை மறைத்துவிட்டது. மன்னிப்புக் கேட்டு மீண்டும் இருபது ரொட்டிகளைத் தங்கள் சமூகத்தில் சமர்ப்பிக்க என் எஜமானி பணித்து விட்டார். எங்களை மன்னியுங்கள்.

     அம்மையாரின் இதழ்கள் விரிகின்றன.

     “இதுதான் சரி. இதுதான் எனக்குரியது. அதனை இங்கே வைத்துவிட்டுச் செல். பெண்ணே! என் இறைவன் உனக்கும் உன் எஜமானிக்கும் பரக்கத்துகளை சொரிந்தருள்வானாகவும்

     அம்மையாரின் அனுமதி அங்கே தவழ்ந்தது.

     ரொட்டித் தட்டுகளை நகர்த்தினார்கள். வந்தவர்களுக்கு வழங்கினார்கள்.

     “தாயே! மன்னிக்க வேண்டும். அதிகப்படியாக பேசவில்லை. ஆனாலும் ஆவல் எங்களை இடிக்கிறது. ஒரு சந்தேகம் கேட்க அனுமதி வேண்டும்

     “கேளுங்கள்அம்மையாரின் உறுதி எழுந்து நின்றது.

     “முதலில் பதினெட்டு ரொட்டி வந்தன. அவை தங்களுக்கு உரியதல்ல என்று சொன்னீர்கள். இதுவென்ன கணக்கு?

     “ஒரு அறச் செயலுக்கு இறைவன் பத்து பங்காகத் திரும்பத் தருகிறேன் என்று சொல்லியுள்ளான். சற்று நேரத்திற்கு முன் வாசலில் பசித்த வயிறுக்கு இரண்டு ரொட்டிகள் வழங்கினேன். இறைவன் பத்து மடங்காக எனக்குத் திருப்பித் தரக் கடமைப்பட்டுவிட்டான்.

     பதினெட்டு ரொட்டிகளில் பத்து மடங்கு பூர்த்தியாகவில்லை. அப்படியானால் அது எனக்குரிய தன்றுதானே.

திருப்பி அனுப்பினேன். இருபது ரொட்டிகள் வந்தன. பத்துப் பங்கு கணக்கு முழுமையாகப் பூர்த்தியாகிவிட்டது. இப்போது அது நிச்சயம் எனக்குச் சொந்தமானதுதான்.

     இறைவனின் சொல் ஒரு போதும் பொய்யாவதில்லை

     அம்மையாரின் இதழ்கள் மூடிக் கொண்டன. விழி இமைகள் சாத்திக் கொண்டன.



நம்பிக்கை... நம்பிக்கை...அங்கே எங்குமே நம்பிக்கை நிரம்பி வழிந்தது.

Tuesday, June 4, 2013

பக்கீர்!!!




     ஷா தொழுகை முடிந்து வெகு நேரமாகிவிட்டது. பள்ளி வாசலின் உள்பிரகாரத்தின் வலது மூலையில் அவன் மட்டும் இருக்கிறான். தொழவில்லை. அமர்ந்த நிலையில் அவன் உடல்  குலுங்குகிறது. சப்தம் இல்லாத அழுகை. அழுகையும் ஒரு தொழுகையா? அதெல்லாம் அவனுக்குத் தெரியாது. அழுகிறான். மனதில் குற்றச் சூடு தகதகக்கும் போது விழிகள் கரைகின்றன.

     இறைவனுடன் ஒரு மன்றாட்டு பிழைகளுக்கு பரிகாரம். மனிதனின் வேதனைகளை இறைவனுக்கு அறிவிக்கும் ஆடையாளம். அழுகையில் மனத்தை கழுவிய திருப்தி இருக்கிறது.

     அவனிடம் சில சமயங்களில் சன்னமான விசும்பல் ஒலியும் வெளிப்படுகிறது. ஒரு மனிதன் ஏன் இப்படியெல்லாம் தவிக்கிறான்.

     போனவாரம் வெள்ளிக்கிழமை கடைக்கல்லாவின் ஓரம் ஒரு மர ஸ்டூலில் அமர்ந்திருந்தான். அந்த மர ஸ்டூலுக்கு வயது முப்பது இருக்கும். இவனுக்கு முன்பு அதில் எத்தனையோ பேர்கள் இருந்துவிட்டனர். காலம் அந்த ஸ்டூலை அங்கும் இங்குமாக சேதப்படுத்தி இருந்தது. ஒரு தினுசான ஆட்டம் அதில் இருக்கும். உட்காருவதற்கே பதன உணர்வு தேவைப்பட்டது.

     வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு அதில் அமர்வான். பன்னிரெண்டு மணியைக் கடையின் கடிகாரம் ஓசையுடன் ஒலிக்கும் போது எழுந்து விடுவான். வெள்ளிக்கிழமை ஜும்ஆ நாள். யாசகத்துக்கு விதவிதமான மனிதர்கள் வருவார்கள். கெஞ்சலாகச் சப்தம் இடுவார்கள். கைகளை அவனை நோக்கி நீட்டுவார்கள். அலுமினியக் கிண்ணியில் இருந்து ஐம்பது பைசா அல்லது ஒரு ரூபாய் நாணயங்களை வந்தவர்களின் தரத்திற்கு ஏற்ற மாதிரித் தருவான். இப்படி ஆறு வருடங்களின் வெள்ளிக்கிழமைகள் மாமூலாக கழிந்து வருகின்றன.

     மைதீன் ராவுத்தர் கடை என்றால் கர்ப்பத்துக்குள் லேசாக நகரும் பருவமுள்ள பிள்ளைகளும் தெரிந்திருப்பார்கள். இப்படிச் சொல்வதில் மைதீன் ராவுத்தருக்கு அலாதியான ஒரு கிக்.

     வெள்ளிக்கிழமை தருமம் மைதீன் ராவுத்தரின் சுவாசம் போன்ற ஒன்று. முதல் நாள் வியாழக்கிழமை இரவே நூற்றி ஐம்பது ரூபாய்க்கு எட்டணா ஒரு ரூபாய் நாணயங்களை அதற்கென்று உள்ள அலுமினியக் கிண்ணியில் சேர்த்து விடுவார். மறுநாள் வெள்ளிக்கிழமை அதற்கென்றே ஒரு வேலைக்காரன் பழைய மர ஸ்டூலில் அமர்வான். தரும பரிபாலனம் நடக்க ஆரம்பித்துவிடும். இந்த வேலைக்கு அவனைத்தான் மைதீன் ராவுத்தர் பணித்திருந்தார்.

     'பக்கீரு காசு. அது அவங்களுக்குத்தான் சேரனும். அதில் தப்பு நடந்துட்டா அல்லா மறுமையில திடலுக்குத் திடல் அலைய வச்சிருவான். ஜாக்கிரதை'. ஒவ்வொரு ஜும்ஆ நாளிலும் மைதீன் ராவுத்தர் உச்சரிக்கும் சுலோகம் இது.

     அவனுக்கும் அச்சம் இருந்தது. தப்பு நடப்பதே இல்லை. என்ன கொஞ்சம் சிலுமிஷம் நடக்கும். பிச்சைக்கு வருகிறவர்களில் கூட நல்ல வாளிப்பான வசீகரமான குட்டிகளும் உண்டு. இதுகள ஏன் பிச்சை எடுக்க ரப்பு உட்டுட்டான்? அவனுக்குள் இப்படி சில சந்தர்ப்பங்களில் தோன்றும். ஒரு நாணயம் என்பது மீறப்படும். வாளிப்புக்கு ஏற்ற மாதிரி இரண்டு மூன்று நாணயங்கள் அவர்களுக்கு போய் சேர்ந்து விடும். பக்கீரு காசு பக்கீருக்குத்தானே போகிறது. என்னா கொஞ்சம் கூடப் போகுது. சிலருக்கு போவது நின்னு போகுது. அவ்வளவுதான். அவனுக்குள் இப்படி ஒரு சமாதானம்.

     அவன் அந்த வெள்ளிக்கிழமையும் வழக்கம் போல மர ஸ்டூல் சாம்ராஜ்யத்தில் அமர்ந்து விட்டான். மனத்தில் ஒரே ஆத்தமாட்டாமை.

     அம்மா ராத்திரி எல்லாம் இருமித் தொலைத்தே தூக்கத்தைக் கெடுத்து விட்டாள். பாவம் அவள் என்ன செய்வாள்?  அவன் பால்குடி காலத்தில் வாப்பா சம்சுகனி மவுத்தாகி விட்டார். அம்மா துடித்துப் போனாள். யார் துடித்தால் என்ன, உலகம் தேவைகளை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கும்.

     அம்மா இங்கு வந்து பிச்சைக் கேட்கும் ஒருத்தியைப் போல இல்லாமல் ரோஷத்தொடு பீடி சுற்றி இவனை வளர்த்தாள். அவளுக்குள் எத்தனை சுகங்கள் இன்பங்கள் தானே உதிர்ந்து செத்துக் கருகி இருக்கிறதோ - அந்த ரஹ்மான்தான் அறிவான். பீடி சுற்றி வருமானம் வந்தது. டிபியும் நானும் வரேன்னு சொல்லி கூப்பிட்டாமலே கூட வந்துவிட்டது.

     அம்மா ரொம்ப நாள் இருக்கமாட்டா. அவள் ஆசைகள் எல்லாம் அவளுக்கு முன்பே மைய்யத்தாங் குழியில் அதாபு பட்டுக் கொண்டிருக்கின்றன.

     டிபிக்கு மருந்து வாங்க வேண்டும். தினம் முட்டை மூன்று சேர்க்கச் சொல்லி  டாக்டர் கட்டாயப்படுத்துகிறார். வழிதான் தெரியவில்லை.


     அவனுக்குள் தாய்மையின் பாசக்கசிவு சொட்டுச் சொட்டாக விழுகிறது. அம்மா இருமல் அவன் காதுக்குள் வந்து கத்துகிறது.

     "வாப்பா”... - அந்தக் கிழவி அவனிடம் கையை நீட்டுகிறாள். அந்தக் கைகளில் விரல்கள் கரைந்து போயின. சீழ்வடிவதை கந்தத் துணி சுற்றிக்கிடந்து மறைத்திருக்கிறது. பதிவாக  வரும் கிழவிதான்.

     அவன் எதுவும் பேசாமல் மூன்று ஐம்பது பைசா நாணயங்களை அவளின் உள்ளங்கைகளில் போடுகிறான். வழக்கத்தைவிட ஒரு நாணயம் அதிகம் அது. சின்னப் பையன்கள், குமரிகள், பிய்ந்த தொப்பிக்குள் தலையினைத் திணித்துக் கொண்டு வரும் பக்கீருகள் வருகிறார்கள். அவன் அலுமினியக் கிண்ணியில் இருந்து போட்டுக் கொண்டே இருக்கிறான்.

     அம்மாவின் காறித் துப்பும் சளியில் ரத்தம் திப்பித் திப்பியாக விழுகிறது. தொண்டையைத் தடவிக் கொள்கிறாள். அவன் கண்ணுக்கு இது தெரிகிறது. மனசில் மிளகாய்த் தூளை வாரிவாரி யாரோ எறிகிறார்கள். காந்துகிறது.

     இன்றைக்கு அம்மாவுக்கு முட்டை, ஆப்பிள், மாதுளை பழங்கள் வாங்கிப் போனால் என்ன? பணம்? அதுதான் அலுமினியக் கிண்ணத்தில் மின்னுகின்றனவே. - பக்கீருக் காசு. பாவம் முதலாளி, நம்பிக்கைத் துரோகமில்லையா?

     அம்மாவுக்கு நாக்கு பல நேரங்களில் வரண்டு போகுது.எச்சிலைக் கூட்டிக் கூட்டி உதட்டை மடக்கி நக்கிக் கொள்கிறாள். லேசான ஈரப் பதப்பு உதட்டில் அப்புகிறது. கொஞ்ச நேரத்தில் அவளின் உள்ளுக்குள் இருந்து எதையோ பிடுங்கி வெளியே தள்ளுவது மாதிரி கொடூரமான இரும்பல் வருகிறது. அவள் கண்களில் கண்ணீர் அரும்பு அரும்பாய் கோர்த்து, நிற்க இடமில்லாமல் உதிருகிறது. அம்மா தினம் தினம் ஸக்கராத்து ஹாலுலெ நெழிகிறாள். அவளின் ஒரு நிமிஷத் தெம்புக்கு ஒரு முட்டை தேவைப்படுகிறதோ?

     தாய்ப்பாசம் ஜெயித்துவிட்டது. தர்ம நேர்மை பிச்சை எடுக்கப் போய்விட்டது.

     "அத்தா இன்னிக்கு ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? உடம்புக்கு ஆவலையா?" ஒரு கையில் பிள்ளையினைத் தூக்கி இடுப்பில் இடுக்கிக் கொண்டு கொஞ்சம் வயிறு உப்பிய கர்ப்பிணிப் பெண் - ஒருத்தி அவனிடம் குசலம் விசாரிக்கிறாள். அவளும் வெள்ளிக்கிழமை பக்கீருதான்.

     அவன் அவளுக்கு பதில் சொல்லவில்லை. அலுமினியக் கிண்ணியைக் கவிழ்த்துக் காட்டுகிறான்.

எல்லாம் கொடுத்து ஆகிவிட்டது என்பதின் அர்த்தம். இடுப்புப் பிள்ளையினைச் சற்று உயர்த்தி ஒரு இடுக்கு இடுக்கிக் கொண்டு அவள் பக்கத்துக் கடைக்கு போகிறாள். அவளுக்கென்ன ஆயிரம் கடை இருக்கிறது.

அவன் பக்கீரு பணத்தின் மீதியை வேட்டியின் இடுப்பு மடிப்பில் பத்திரமாக இறுக்கிக் கட்டிக் கொண்டான். அன்றைய வெள்ளிக்கிழமை தர்ம ராஜ்ஜியம் நிறைவு பெற்றுவிட்டது. ஜும்ஆ தொழுகை நெருங்கிவிட்டது. ஓட்டமும் நடையுமாகப் பள்ளிக்கு ஓடுகிறான். வக்த்து கிடைத்துவிட்டது.

மூன்று முட்டை மூன்று ஆப்பிள் மாதுளை ஒன்று ஒரு கேரி பேக்கில் கனக்கிறது. அவன் வீட்டுக்குள் நுழைந்து விட்டான்.

அம்மா விடாத இருமலுடன் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறாள். அவளின் முன்னாள் கேரி பேக்கை வைக்கிறான். அம்மா திறந்து பார்க்கிறாள். அவள் விழிகளில் இப்போது உதிர்வது வேதனைக் கண்ணீர் இல்லை. பிரசவ காலத்து வேதனைக்குப் பின் பெற்ற பிள்ளையை முதலில் பார்க்கும் தாய்மைப் பார்வையில் அவனைப் பார்க்கிறாள்.

“நேரம் ஆகியிடுச்சி. கடையில முதலாளி திட்டுவாங்க. நான் வரேம்மா – அவனின் அம்மா சிரிக்கிறாள். எத்தனை நாளாகி விட்டது. இந்தச் சிரிப்பு அவளில் முகிழ்த்து.

     அவன் கடை வாசலில் ஏறுகிறான்.

     “எலே இன்னிக்கு ஒழுங்கா பக்கீரு காசுகள போட்டியா? ரொம்ப சீக்கிரமா இன்னிக்கு முடிந்தாப்புல தெரிதே... இல்ல கொஞ்சம் ஒசத்திட்டியா... பக்கீரு காசுலே... ஜாக்கிரதை.

     முதலாளி மைதீன் ராவுத்தர் ஒரு குறுஞ்சிரிப்பில் கேட்டார்.

     அவன் தலையைச் சாய்த்துச் சிரித்துக் கொண்டே கடைக்குள் புகுந்து கொண்டான்.

அவன் மனதுக்குள் நெருப்பு கொதிக்கிறது. முகத்தில் கருகின சாயல் படர்கிறது. பக்கீரு காசு அம்மாவை சுடுமா? தன்னைச் சுடுமா? யா அல்லாஹ்! யாரைச் சுடுவாய்? அவன் விழிகளில் கண்ணீர் சுடுகிறது.

     மஹசரில் வதைக்கிறது கிடக்கட்டும் – இந்த மண்ணிலேயே  தகிக்கிறதே.

அவன் இப்போது கடையில்தான் இருக்கிறான். ஆனால் கபுரின் நெருக்குதலில் கதறுகிறான். நட்டுவாக்காலி, தேள் பிடுங்குகிறது. கைகளில் மலக்குகள் நெருப்புக் கம்பியை பாளம் பாளமாக சொருகுகிறார்கள்.

பக்கீரு காசு திரும்பக் கொடுத்தால் பிழைக்கலாம். யாரிடம் கொடுப்பது? கொடுப்பதற்குப் பணத்துக்கு எங்கே போவது?


அவனும் கிட்டத்தட்ட பக்கீருதான். ஆனால் பக்கீரு காசை எடுத்து அதை ஏன் உறுதி செய்துக் கொண்டான். பக்கீரு நிலை வேண்டாம்.

  



அவன் விழிகள் மடமடவென்று கண்ணீரைக் கொட்டுகிறது. எழுந்து விட்டான். கண்ணீர் மழை நிற்கவில்லை.

மழை பெய்யும்போது பிரார்த்திக்கிறான். அல்லாஹ் மன்னிக்கலாம்...