Thursday, August 15, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது?–18

சதா உழைத்த சகாப்தம்!


ஒரு பச்சைத் துண்டு மடிந்து தோளில் தொங்கிக் கொண்டிருக்கும். தலையில் ஒரு தொப்பி. சற்று தடித்த மூக்குக் கண்ணாடி. கொஞ்சம் நீண்ட பருத்த ஹேண்ட் பேக் இடது பக்க அக்குலுக்குள் அடங்கி இருக்கும். சட்டை, கைலி. சட்டைப் பை உப்பிசமாக புடைத்து இருக்கும். வலது கையில் ஒரு கைக் கடிகாரம். சற்று பெரிய வட்டத்தில் பதிந்து இருக்கும். ஒரு பக்கம் கொஞ்சமாக சாய்ந்த நிலையில் நடை. இப்படி ஒரு மனிதரை அந்தக் காலத்தில் நெல்லை மாவட்டத்தில் எங்கேயாவது கண்டால், “கரீம் அண்ணே அல்லது கரீம் வாப்பா” என்று அழைத்து தைரியமாக அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லலாம்.
உடனடியாக கனத்த சாரீரத்தில் “வ அலைக்கும் ஸலாம்என்ற பதில் நம் காதுகளில் வந்து ரீங்காரமிடும்.
இவர்தான் கரீம் அண்ணன். கரீம் வாப்பா.
வெ.கா.உ. அப்துர் ரஹ்மான் சாஹிபின் தயாரிப்பு இவர். வெ.கா.உ.அ வின் அண்டை வீட்டுக்காரர். அணுக்கமான உறவுக்காரர்.
நானெல்லாம் பிள்ளைப் பிராயத்திலிருந்து கொஞ்சம் எம்பிக் குதித்து, இளமைப் பருவத்துக்குள்ளே, மீசையாக பூனை முடி முளைத்திருந்த தருணத்திலிருந்து, கரீம் அண்ணனை இப்படித் தான் பார்த்து இருக்கிறேன்.
இந்தப் பருவத்தில் அவரைப் பார்க்கும் பொழுதும் ஐம்பது வயது போல இருக்கும். அதற்குப் பின் எந்தப் பருவத்தில் பார்க்கும் போதும் ஐம்பது வயது போலவே தோன்றும். கரீம் அண்ணன் நடமாட முடியாமல் வீட்டில் இருந்த தருணத்தில்தான் ஒரு வயோதிகர் அமர்ந்து இருக்கிறார் என்று எங்களுக்கு தோன்றியது.
அப்போதும், “ஸலாம் அலைக்கும் வா வாப்பா” என்ற அழைப்பின் ஓசை அதே பழைய கனத்த சாரீரத்தில் வந்து தழுவும்.
கரீம் அண்ணனுக்கு ஒன்று மட்டும் எல்லாவற்றையும் விட அதிகம் உரிமையாக இருந்தது. அதுதான் உழைப்பு.
கரீம் அண்ணன் அநேகமாக இவ்வுலக வாழ்க்கையை நீத்த பருவத்தில், தொண்ணூற்று மூன்று அல்லது தொண்ணூற்று நான்கு வயது இருக்கலாம்.
சென்னை மெரீனா கடற்கரையில், உழைப்பாளர் சிலை இருக்கிறது. இது சிற்பிகளின் கற்பனைப் பிறப்பு. ஆனால், உழைப்பின் எதார்த்த சின்னமாக அன்று முஸ்லிம் லீகர்களின் மத்தியில் நடமாடிய மனிதர் எங்கள் கரீம் அண்ணன்.
கரீம் அண்ணன். நெல்லை மாவட்டத்தின் சந்து பொந்து, இண்டு இடுக்கு, பட்டி தொட்டி, எங்கெங்கும் அலைந்து திரிந்து சமூகப் பணியாற்றிய சாதனை வடிவம்.
நெல்லை மாவட்டத்தின் முஸ்லிம் லீகின் முதல் தலைவர் எங்கள் தாதா மு.ந.அப்துர் ரஹ்மான் சாஹிபோடும், செயலராக இருந்தவர். அடுத்து தலைவரான என் சிறிய தந்தையார், பொதிகைக் கவிஞர் முன்னாள் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தென்காசி நகர சபையின் முதல் தலைவர் அ.ஷாஹுல் ஹமீது சாஹிப் அவர்களுடனும் செயலாளராக பணியாற்றியவர். என்னுடைய தந்தையார் A..K.. ரிஃபாய் சாஹிப் அவர்களுடனும் செயலாளராகப் பணிபுரிந்து இருக்கிறார். இப்படி நீண்டதொரு, நிரந்திர மாவாட்ட செயலாளர் போல செயலாற்றிய சிறப்பு, நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர் கரீம் அண்ணனுக்குத் தான் உண்டு.
காயிதே மில்லத், மாநிலத் தலைவர் திருச்சி ஜானி பாய் M.L.C., சிராஜுல் மில்லத் சமது சாஹிப் உள்ளிட்ட தலைவர்களின் மாநில செயற்குழுவில், அசைக்க முடியாத இடம் பிடித்து இருந்தவர் கரீம் அண்ணன்.
தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபையின் செயலாளர், தெற்குப்பட்டி நூருல் இஸ்லாம் கல்வி நிலையத்தின் தாளாளர், நெல்லை முஸ்லிம் அனாதை நிலையத்தின் நிரந்திர செயற்குழு உறுப்பினர். இப்படி பலதரப்பட்ட சமூக பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட பொறுப்பாளர் கரீம் அண்ணன்.
சமூகத்துக்கென்று ஒரு அர்ப்பணிப்பை வாழ்க்கையாக்கிக் கொண்டிருந்த அவரை நையாண்டி செய்த நபர்களும், இந்த சமூகத்தில் உண்டு.
தென்காசி மரைக்காயர் பள்ளி வாசல் தெரு. இது எங்களின் பூர்வீக தெரு. இந்தத் தெருவில் ஜங்க்ஷன் மாதிரி ஒரு முக்கு (சந்தி) இருக்கும். அங்கே சாயங்காலம் மாலை வேளைகளில் சிலர், நின்று கொண்டோ, சாக்கடை பாலத்தின் சுற்றுத் திண்டில் அமர்ந்துக் கொண்டோ பேசிக் கொண்டிருப்போம்.
அப்படி நானும் ஒரு நாள் நின்று பேசிக் கொண்டிருந்தேன். அந்த முக்கின் மேற்கில் நேரெதிரில் எங்கள் பள்ளிவாசல் இருக்கும்.
அந்தப் பள்ளிவாசல் வலது பக்க சந்து வழியாக, பஜாரில் இருந்து வருபவர் எங்கள் தெருவுக்குள் நுழைவார்கள்.
அப்படி, கரீம் அண்ணன் ஒரு நாள் அஸர் தொழுகைக்கு முன்னே,  அவர்களின் அந்தத் தோற்றப் பொலிவோடு அசைந்த நடையில் எங்கள் தெருவுக்குள் வருகிறார்கள். அவர்கள் வருவது, சின்ன வாப்பா ஷாஹுல் ஹமீது சாஹிபை பார்க்கத்தான்.
நாங்கள் நின்று பேசிக் கொண்டிருக்கும் முக்கை ஒட்டி உள்ள பெரிய வீடு, முஸ்தபா சாஹிபுக்கு உரியது. இவர் தாசில்தாராகப் பணிபுரிந்தவர். சென்னை கிரசன்ட் பொறியியல் கல்லூரியின் டைரக்டர்களில் ஒருவராக இருந்த இன்ஜினியர் பீர் முஹம்மது சாஹிபின் மூத்த அண்ணன். நெல்லை முஸ்லிம் அனாதை நிலையத்தின் செயலாளர். எனக்கு சுற்றி வளைத்து பெரிய வாப்பாமுறை. நெருக்கமாக சொன்னால், என் தம்பியின் (ஷாஹுல் ஹமீது சாஹிப் மகன்) மனைவியின் தந்தையார்.
இவர், அவர் இல்லத்தை விட்டு இறங்கி, தொழுவதற்கு பள்ளிவாசல் நோக்கி வருகிறார். எதிரே சற்று தூரத்தில் கரீம் அண்ணன் வருவதைப் பார்க்கிறார்.
நான் முக்கில் நிற்பதை கவனித்து விட்டு, என்னிடம்
“ஏய் ஹிலால், எதுக்க என்னடேய் பச்சைத் துண்டு வருதுஎன சொன்னார்.
அவர் சொன்னதின் பின்னால்தான் நான் எதிரெ பார்த்தேன். கரீம் அண்ணன் வந்துக் கொண்டிருந்தார்.
அந்த உழைப்பின் அடையாளம் லீகின் அசைத்து பார்க்க முடியாத ஒரு தூண், முஸ்தபா சாஹிபுக்கு நையாண்டித் தனமாக, ”பச்சைத் துண்டாக“ தெரிகிறார். அதுவும் என்னிடமே அதைச் சொல்லுகிறார்.
“வாப்பா கொஞ்சம் நில்லுங்கள், எதிரே வருவது பச்சைத் துண்டு என்றால், அந்தப் பச்சைத் துண்டு யாரைப் பார்க்க வருகிறது தெரியுமா? இதோ மூணாவது வீட்டில் இருக்கும் “பச்சைச் சட்டையைத்” தான் பார்க்க வருகிறார். (பச்சை சட்டை – அ.ஷாஹுல் ஹமீது சாஹிப்)”
கரீம் அண்ணன் பச்சைத் துண்டென்றால் உங்கள் தம்பி, ஷாஹுல் ஹமீது சாஹிப் பச்சைச் சட்டை என்பது உண்மையாகும். இனிமேல் ஷாஹுல் ஹமீது சாஹிபை பச்சைச் சட்டை என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு இருந்தால், கரீம் அண்ணனை பச்சைத் துண்டு என்று நீங்கள் சொல்லுங்கள்” என்று கடுமையாக நான் சாடிவிட்டேன்.
இந்த நிகழ்வு நடந்த அரைமணி நேரத்துக்குள் எங்கள் ஷாஹுல் வாப்பா வீட்டிற்குள் செய்தி போய் விட்டது. ஷாஹுல் வாப்பா என்னை கூப்பிட்டு அனுப்பினார்கள்.
“நாங்கள் கேள்விப் பட்டது சரி தானா?” என்று கேட்டார்கள்.
“நூறு சதவிகிதம் சரிதான்”என்றேன்.
“ரொம்பச் சரியா சொல்லி இருக்கிற”என ஷாஹுல் வாப்பா சொன்னார்கள்.
கரீம் அண்ணன் வருத்தப்பட்டார்கள்.
“ஹிலால், அவர் கிட்ட போய் இப்படி நீ பேசி இருக்க வேண்டாம். பேசுறவன் பேசிட்டு போறான். பச்சைத் துண்டுன்னு தான சொன்னார். அது நம்ம கொடி தானே, ஆனால் அவர் எதையும் மறக்க மாட்டார். உனக்கு ஏதாவது இடைஞ்சல் பின்னால் தருவார்என அக்கறையோடு கரீம் அண்ணன் வருத்தப் பட்டார்.
அவர் சொன்னது மாதிரிப் பின்னர், எனக்கு சில நிழந்தது. அது இங்கே தேவை இல்லை.
சமூகத்தின், சேவைகளை நினைத்து பூரிப்பு அடைகிற ஒரு திருக்கூட்டம் இருப்பது போல, சேவையை நையாண்டித் தனம் செய்யும் சின்னக் கூட்டமும் இருக்கத் தானே செய்கிறது.
கரீம் அண்ணன் உறுதியில், கொள்கைப் பிடிப்பில், செயல் புரியும் வீரியத்தில் எவருக்கும் சளைத்தவர் அல்லர்.
நெல்லையில் முஸ்லிம் அனாதை நிலையத்தில் கல்வி மாநாடு, சமூக இணக்க மாநாடு என்ற இருபெரும் மாநாடு, ஒரே மாநாடாக இரு தினங்களில் நடந்தன.
முதல் நாள் மாநாட்டிற்கு A..K.. ரிஃபாய் சாஹிப் தலைமை தாங்கினார். சிறப்பு சொற்பொழிவு ஆற்ற யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவர் சுலைமான் சேட் சாஹிப் M.P. வந்திருந்தார். தமிழ் மாநிலத் தலைவர், சமது சாஹிப் M.P. வந்திருந்தார்.
ஆனால், முஸ்லிம் அனாதை நிலையத்தார், முஸ்லிம் லீகர்களை வரவேற்பதில், சற்று கவனக்குறைவாக நடந்துக் கொண்டார்கள். அதாவது, MOC மைதானத்தில் ஒரு மரத்தடிக்கு கீழே தலைவர் சுலைமான் சேட்டுக்கும், தலைவர் சமது சாஹிபுக்கும் இரு சேர்களை போட்டு அமர வைத்திருந்தனர். இது லீகர்கள் மனதைப் புண்படுத்தி விட்டது.
மாவட்டத் தலைவர், அ. ஷாஹுல் ஹமீது சாஹிப், செயளாலர் மேலப்பாளயம் சட்ட மன்ற உறுப்பினர் சாச்சா கோதர்மைதீன் சாஹிப் போன்றோர்களுக்கு மிக எரிச்சலைத் தந்து விட்டது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என தலைவர்களிடம் முறையிட்டனர். கரீம் அண்ணன் கிட்ட தட்ட வானத்துக்கும், பூமிக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டார்.
இறுதியாக தலைவர் சுலைமான் சேட் மட்டும் மாநாட்டில் பேசுவது என்றும், மற்ற தலைவர்கள் அனைவரும் தென்காசிக்கு சென்று அப்போதுதான் உருவாகி இருந்த ரஹ்மத் நகரில் சென்று முஸ்லிம் லீக் கூட்டமாக நடத்திக் கொள்ளுவது என முடிவெடுத்து, சுலைமான் சேட் பேசியவுடன், அவரையும் அழைத்துக் கொண்டு லீக் தலைவர்கள் தென்காசிக்கு புறப்பட்டு விட்டனர்.
அடுத்து அதே மேடையில் கவியரங்கம். பேராசிரியர் மர்ஹூம் கா. அப்துர் கபூர் சாஹிப் தலைமையில் கவியரங்கம் நடக்க இருக்கிறது. இது அண்ணலாரைப் பற்றிய மீலாது கவியரங்கம்.
இதில் நானும் கலந்து கொள்கிறென். ஆனால் லீகர்கள் யாரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு எடுத்து தென்காசிக்கு செல்கின்றனர்.
சமது சாஹிப் என்னைத் தனியே அழைத்து,
“கவியரங்கத்தில் நீங்கள் கலந்துக் கொள்ளுங்கள், ஒரு லீகன் என்ன செய்ய வேண்டுமோ அதை கவியரங்கத்தில் செய்துக் கொள்ளுங்கள் என சொல்லி சென்று விட்டார்.
இது கரீம் அண்ணனுக்கு தெரியாது. நான் கரீம் அண்ணனிடம் தென்காசிக்கு வரவில்லை. கவியரங்கத்தில் கலந்து கொள்ள போகிறேன் என்று சொன்னேன்.
கரீம் அண்ணன் விழிகள், அந்த பருத்த கண்ணாடியையும் தாண்டி என்னை வந்து குத்தின.
“நீ கலந்து கொண்டால், கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்” என்று கடுமையாக கூறி விட்டு சென்று விட்டார்.
கவியரங்கம் நடந்தது. நான் கவிதை படித்து முடித்த உடன், கூட்டத்தில், பெரிய கலகலப்பு. அதே நேரத்தில் ஆதரவு ஆரவாரம்.
தலைமை தாங்கிய பேராசிரியர், கபூர் சாஹிபுக்கு அதிர்ச்சியும் மனவருத்தமும். என்னுடைய சின்ன வாப்பா முஸ்லிம் அனாதை நிலையத் தலைவர் ஜமால் முஹம்மது சாஹிப், மிகுந்த கோபம் அடைந்தார். இதனால், அவர்களும் நானும், கிட்டதட்ட பதினாறு ஆண்டுகள் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தோம்.
கவியரங்கத்தில் நடந்தவை மறுநாள் கரீம் அண்ணனுக்கு தெரிந்து விட்டது. அதற்கு அடுத்த நாள், குற்றாலம் பயணியர் விடுதி இல்லத்தில் சமது சாஹிபிடம் நடந்தவைகளை சொல்லிக் கொண்டிருந்தேன்.
கரீம் அண்ணன் அப்பொழுது அங்கு வந்தார். என்னை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார்.
“நம் தலைவர்களை அவமதிப்பவர்களை நாம் அவமதிக்கத்தான் வேண்டும்” என்றார்.
அந்தப் பசுமையை, இதைப் பதியும் பொழுதும் என்னால் உணர முடிகிறது.
கரீம் அண்ணன் லீக் கொள்கையில் எப்பொழுதும் உறுதியாக இருக்கக் கூடியவர்.
சின்ன வாப்பா ஷாஹுல் ஹமீது சாஹிப், கரீம் அண்ணன் இரட்டையர் போல ஒருவருக்கொருவர் வைத்திருந்த நம்பிக்கையும் தோழைமையும் பிரிவில்லாதது. “விடுதல் அறியா விருப்பு” என்று தமிழில் ஒரு சொல் உண்டு. இதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தனர்.
ஒரு கட்டத்தில், மாநில முஸ்லிம் லீக், ஷாஹுல் ஹமீது சாஹிப் அவர்களை இயக்கத்தை விட்டு ஆறாண்டுகள் விலக்கி வைத்தது. இந்த விலக்கல் செயற்குழுவிலும், கரீம் அண்ணன் கலந்து கொண்டிருந்தார்.
அந்த நிமிடத்தில் இருந்து, ஷாஹுல் ஹமீது சாஹிபை ஆறாண்டுகள் கரீம் அண்ணன் பார்க்கவும் இல்லை. அவர்களிடம் பேசவும் இல்லை. எந்தத் தனிப் பகையும் கிடையாது. இயக்கம் விலக்கியதை தனக்கும் விலக்கலுக்குரிய சட்ட விதியாக ஏற்றுக் கொண்டார் கரீம் அண்ணன்.
இன்னும் ஒரு நிகழ்வு சொல்லித் தான் ஆக வேண்டும்.
சென்னை வாலாஜா பள்ளிவாசலில், காயிதே மில்லத் அடக்கத் தலம் இருக்கிறது. இந்தப் பள்ளிவாயில் சுற்றி உள்ள இடங்கள் ஆற்காடு நவாப் குடும்பத்தினர்களுக்குரியது.
அங்கே ஆற்காட்டு நவாப் குடும்பத்தினர்கள் மட்டுமே அடக்கம் செய்ய அனுமதி பெற்றவர்கள். காயிதே மில்லத் மட்டுமே அங்கே அடக்கமாகி இருக்கும் அன்னியர்.
காயிதே மில்லத்துடைய அடக்கத் தலம் எது என்றே கண்டறியாதபடி நாய்களும் பிற உயிரனங்களும் அங்கு நடமாடிக் கொண்டிருந்தன. அங்கே ஜியாரத் செய்ய சென்ற முஸ்லிம் அனாதை நிலையத் தலைவர் ஜமால் முஹம்மது சாஹிப் இந்த நிலைக் கண்டு ரொம்ப வேதனைப் பட்டார்.
சில லீக் தலைவர்களிடம் காயிதே மில்லத் மறைவிடத்தை வெளித் தெரிகிற மாதிரி உயர்த்திக் கட்ட கோரிக்கை வைத்தார்.
அந்த இடம், ஆற்காட்டு நவாப் குடும்பத்தினர்களுக்கு உரியது. அங்கே நாம் எதுவும் கட்ட முடியாது என்ற பதில்தான் லீகர்களிடம் இருந்து வந்தது.
ஜமால் முஹம்மது சாஹிப் உடனடியாக ஒரு தனிக் குழு அமைத்து, ஆற்காட்டு இளவரசரைச் சென்று சந்தித்து, அனுமதிப் பெற்று அந்தக் குழுவினரின் செலவில், உயர்த்திக்கட்டி அடையாளப் படுத்திக் காட்டினார்.
அந்த கபுறில்தான், அத்தனை அரசியல் கட்சி காரர்களும் முஸ்லிம் லீகர்கள் உட்பட ஜூன் 5 அன்று, ஒவ்வொரு ஆண்டும் சென்று, துஆவும் மரியாதையும் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் காலகட்டத்தில் லீகர்களுக்கும், முஸ்லிம் அனாதை நிலையத்தினர்களுக்கும் கொஞ்சம் மனமுரண்கள் இருந்தன.
கரீம் அண்ணன் அவர்கள், ஜமால் முஹம்மது சாஹிப் அவர்களை சந்தித்து, தன் மனம் நிறைய வாழ்த்து சொன்ன முதல் முஸ்லிம் லீகராக இருந்தார்.

கரீம் அண்ணன் கண்ணோட்டத்தில், காயிதெ மில்லத், முஸ்லிம் லீக், சமூகப் பணி, சதா உழைப்பு இவை மட்டுமே இறுதி வரை அவரிடம் நேர்கோட்டில் இருந்தன.

No comments:

Post a Comment