Wednesday, April 23, 2014

கோணிப்பையிலிருந்து குதித்துவிழும் கரும்பூனைகள்..!


பாஜகவின் கடந்த அகில இந்தியத் தலைவர் ஒருமுறைக்கு இருமுறைத் தொடர்ந்து அந்தப் பதவியில் இருந்தவர் நிதின் கட்கரி. அவர் சொல்லுகிறார்.

காஷ்மீர் 370 சட்டவிதியைத் திரும்பப் பெற நாங்கள் வலியுறுத்த என்ன காரணம் தெரியுமா?” என்று கேள்வி கேட்டு விளக்கம் தருகிறார்.

காஷ்மீரிகளைத் தவிர காஷ்மீரில் ஒரு அங்குல இடம்கூட வேறு எவரும் வாங்க முடியாது. இது மாற்றப்படத்தான் வேண்டும். ஏன் தெரியுமா? அந்நிய முதலீடுகளைக் காஷ்மீரில் போட முடியவில்லை.

இந்தியத்திலுள்ள பெரும் முதலாளிகளின் பெரும் முதலீட்டையும் காஷ்மீரில் போட முடியவில்லை.இதனால் காஷ்மீரில் தொழிற்சாலைகள் அபிவிருத்தி இல்லை. வேலை வாய்ப்புகள் இதன் காரணத்தால் அங்கு இல்லாது போய்விட்டது” – இதுதான் நிதின் கட்கரி முன்வைக்கும் காரணம்.

அதாவது காஷ்மீரத்துக்குள் அந்நிய முதலீடுகள், உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் பெரும் முதலீடுகள் போட முடியவில்லை என்பதுதான் கட்கரியின் பெரும் வேதனை.

அதற்குத் தடையாக உள்ள 370 சட்டவிதி நீக்கப் பட வேண்டும். என்பதுதான் பாஜகவின் அடிமன ஓட்டம்.

இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் காடுகள் மலைகளில், அந்நிய முதலீடுகளை, உள்நாட்டு பெரும் வியாபாரிகளின் கொள்ளை முதலீடுகளைக் கொண்டு போய் குவித்து அங்குள்ள கனிமப் பொருள்களைச் சுரண்டுகிறார்கள்.

அந்தப் பகுதியின் சொந்தப் பூர்வீகக் குடிகளை அடித்து விரட்டி நிலங்களைப் பறித்துக் கொள்கிறார்கள்.

இதுமாதிரி காஷ்மீரில் செய்ய சட்டவிதி 370 வழி செய்யவில்லை. காஷ்மீருக்குள் இருக்கும் ஏதோ பலவகையான கனிமங்களை அந்நிய நிறுவனங்கள் சுரண்டிக் கொழுக்கவும் இங்குள்ள சில கொழுத்த கார்ப்பரேட்டுகள் அள்ளிச் சுவைக்கவும் வசதி இல்லாது போனதே என்பதுதான் பாஜகவின் ஆதங்கம்.

பூர்வீக காஷ்மீரிகளை அடித்து விரட்டி முதலீடுகள், தொழில் மயங்கள் என்ற பெயரில் காஷ்மீர் சுரண்டப் பட வேண்டும். இதற்குத்தான் காஷ்மீரில் முஸ்லிம்களுக்குச் சலுகை என்பது போல கதையைச் சோடித்து தங்கள் காரியத்தைச் சாதிக்கப் பார்க்கிறார்கள்.

_______________________ 2 _______________________

மோடியை ஆதரிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு விரட்டப் படுவார்கள். மோடியை விமர்சிப்பவர்களும் அவர்களுக்குப் பின்னால் ஓடத்தான் வேண்டும்என்று கிரிராஜ் சிங் பேசி இருக்கிறார்.

நிதின் கட்கரி அந்தக் கூட்டத்திலேயே அமர்ந்திருக்கிறார்.

மோடிக்கும் பாஜகவுக்கும்தான் இந்தியா சொந்தம் என்ற ஒற்றைத் திமிர்வாதம் தேர்தல் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் களத்திலேயே முன்வைக்கப் படுகிறது.

பாஜகவை, மோடியை விமர்சிக்கும், கொள்கை ரீதியாக எதிர்க்கும் எவராக இருந்தாலும் அவர்களெல்லாம் முஸ்லிமாகவே கருதப்படுவார்கள் என்ற தோரணையில் கிரிராஜ் வாய் மலர்ந்திருக்கிறார்,

குறிப்பாகப் பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்தவர்களைக் கூட மதம் மாற்றி முஸ்லீமாக்கி காஷ்மீருக்குப் போகச் சொல்லுகிறார்.

மோடி இன்னும் பிரதமர் நாற்காலியில் அமரவில்லை. அதற்கு முன்னே இந்தப் பூனைக் குட்டியும் வெளியே குதித்து இருக்கிறது.

______________ 3 __________________

தொகாடியா இவர் வாய் திறந்தாலே இந்தியாவின் சீரழிவு தாம் திரிகட தாம் திரிகிடஎனக் குதியாட்டம் போடும்.

விஸ்வஹிந்து பரிஷத் தலைவர்தான் இந்த பிரவீன் தொகாடியா.

குஜராத்தின் பாவ் நகர் அருகே இந்துப் பெருங்குடி மக்கள் பெரும்பானமையாக வசிக்கும் மேகானி சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரு வீட்டை முஸ்லிம் வணிகர் ஒருவர் வாங்கி இருக்கிறார்.

இதை எதிர்த்து பஜ்ரங் தள் அமைப்பு சென்ற சனிக்கிழமைப் போராட்டம் நடத்தியது.

இந்தப் போராட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பேசி இருக்கிறார்.

இந்து வீட்டை முஸ்லிம் வாங்குவது கூடாது. முஸ்லிம் வாங்கிய வீட்டை பஜ்ரங் தள் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். பஜ்ரங் தள் தன் அமைப்பின் பெயர் பலகையை அந்த வீட்டில் தொங்கவிட வேண்டும்.

இதற்குச் சில விழிமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நம் சமூகத்தினர் அசையா சொத்துக்களை பிறர் வாங்காமல் தடுக்க பதட்டம் நிறைந்த பகுதிகள்சட்டத்தை இயற்ற வேண்டும். மாநில அரசை இதற்காக வற்புறுத்த வேண்டும்.

இது முடியவில்லை என்றால் , அவர்கள் வாங்கிய சொத்துக்களை பலவந்தப் படுத்தி கையகப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றால் விசாரணை முடிந்து தீர்ப்புவர பல ஆண்டுகள் ஆகும். இது நமக்கு வசதிதான்.

தற்போது அந்த வீட்டை வாங்கி குடியேறியுள்ள முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அவர் அடுத்த 48 மணி நேரத்தில் காலி செய்ய வேண்டும். மறுத்தால் கற்கள், டயர்கள், தக்காளிகளுடன் அவர்கள் இடத்தை முற்றுகை இட வேண்டும். இதில் தவறேதும் இல்லை.

ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களே இன்னும் தூக்கில் இடப்படவில்லை. எனவே வீட்டை காலி செய்ய வைப்பதால் தொடரப்படும் வழக்கைப் பற்றி பயப்பட வேண்டாம்.இதுதான் தொகாடியாவின் தத்துவ விளக்கங்கள்.

காஷ்மீரத்தில் அந்நிய முதலீடு வேண்டும். அதற்குத் தடையாக உள்ள சட்டத்தை நீக்க வேண்டும் என்று நிதின் கட்கரி பேசுகிறார்.

குஜராத்தில் அந்த மண்ணுக்குரிய மக்களே கூட அவர்களின் நிலத்தை வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். இல்லையென்றால் ஆயுதங்களால் வன்முறை நிகழ்த்த வேண்டும்.

வழக்குப் போட்டால் பயப்பட வேண்டாம். கொலை கூட செய்யலாம். அஞ்ச வேண்டாம். ராஜீவ் கொலையாளிகளே இன்னும் தூக்கில் ஏற்றப் படாமல் இருக்கிறார்கள். இதைப் புரிந்துக் கொள்ளுங்கள் என்று மறைமுகமாகக் கொலை முயற்சிக்கு தூண்டுகிறார்.

பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. தப்பிக் கொள்ளலாம் என்று அறிவுரை சொல்லுகிறார்.

காஷ்மீருக்கு அப்படி. குஜராத்துக்கு இப்படி. இதுதான் முன்மாதிரி கோலம். இதைத்தான் இந்தியா முழுவதும் செயற்படுத்தப் போகிறோம் என்று பாஜக பகிரங்கமாக பிரகடனப் படுத்துகிறது.

பாஜக ஆட்சிக்கு வருகிறதோ இல்லையோ கவலை இல்லை. வந்தால் சட்டப்படி வெறியாட்டம் போடுவோம். வரவில்லை என்றால் கத்தி கடப்பாறை ஆயுத கட்டளைப்படி அணுகி நிற்போம்.

__________________ 4 _____________________

மஹாராஷ்ட்ரத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸால் பாலூட்டி வளர்க்கப் பெற்ற கொடூரப் பிள்ளை கதம். இந்தக் கதம் தேர்தல் பிரச்சார மேடையில் பேசுகிறார்.

முஸ்லிம்கள் காவல்துறை வாகனங்களைக் கொளுத்துகிறார்கள். நம் முன்னோர்களின் தியாகபீடங்களைத் தகர்க்கிறார்கள். இந்த முஸ்லிம்களை முழுவதுமாக அழித்தொழிக்க வேண்டுமானால் மோடி பிரதமராக வந்தாக வேண்டும்” - கதமுடைய கர்ஜனை இது.

ஒரிசாவில், கிருத்துவ பாதிரியாரை, அவரின் இரு பச்சிளம் குழந்தைகளை வேனில் தீ வைத்து கொளுத்தி கோரக் கொலை செய்த, குறிப்பாக உயிரோடு துடிக்க துடிக்க சாகடித்த திருக்கூட்டம் காவல்துறை வாகனத்தை முஸ்லிம்கள் தீ வைப்பதாகக் கதை சொல்கிறது.

கன்னிகாஸ்திரிகளை நடுவீதிகளில் கற்பழித்து, சீரழித்து கொலை செய்த நல்லெண்ணம் கொண்டவர்கள் முஸ்லிம்கள் நினைவிடங்களை தகர்க்கிறார்கள் என்று ஆவேசப்படுகிறார்கள்.

இவைகளை நினைத்து முஸ்லிம்களை அழித்து ஒழிக்க வேண்டும். அதற்கு மோடி, இந்தியத்தின் ஆட்சியில் அமர வேண்டும். கதம் இப்படி கதறுகிறார்.

அந்தக் கூட்டத்தில் மோடி அமர்ந்திருக்கிறார்.

மோடி ஒரு நல்வாசகத்தை வெளியிடுகிறார்.

இப்படிப் பேசுவது நம் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்.” - இவ்வளவுதான் மோடியினுடைய திருவாசகம்.

கதம் போன்றவர்களின் வார்த்தைத் தீவிரம் கண்டிக்கப்படவில்லை. கனிவான அறிவுரை மோடியால் முன்வைக்கப் படுகிறது.

இவர்தான் பிரதம வேட்பாளர்.

தேர்தல் நடைப் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய காலமிது. பல இடங்களில் நடைபெற்றும் விட்டது. இன்னும் பல இடங்களில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாஜகவின் கோணிப்பையிலிருந்து கரும்பூனைகள் ஒவ்வொன்றாக துள்ளிக் குதிக்கின்றன.

இந்த அவமானம் அவர்களுக்கு இல்லை. இந்தியர்கள் என்ற முறையில் நமக்கு இருக்கிறது. இந்தச் செய்தியை நான் பதிவு செய்யும் பொழுது என்னை ஒரு சக மனிதனாக புரிந்துக்கொள்ளாமல் இவன் முஸ்லிம் இப்படித்தான் சொல்வான் எனப் பாஜக பாணி மூளைகள் பேசித் திரியலாம். நம் கவலை அது அல்ல.

நம் இந்தியத்தில் நரமாமிசம் புசிக்கும் கோர மிருகங்களாக சில மனிதர்கள் மாறுகிறார்களே இதைத் தடுத்து நிறுத்த மானுட நெஞ்சம் கொண்டவர்கள் ஒன்று சேர வேண்டாமா? என்ற ஆதங்கத்தால் இதைப் பதிவு செய்கிறேன்.


Monday, April 21, 2014

நரக நெருப்பைப் பசியாறுகிறார்கள்..!


குஜராத் மாடல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நடைமுறைப் படுத்தப்படும். என பா.ஜ.க தெளிவாகவும் விளக்கமாகவும் எல்லா மேடைகளிலும் அறிக்கைகளிலும் அறிவித்து விட்டது.

இன்றைய (20.4.2014) தி இந்து (தமிழ்) நாளிதழ் ஒரு பேட்டியை வெளியிட்டு இருக்கிறது.

குத்புதீன் அன்சாரியினுடைய பேட்டிதான் அது.

குஜராத்தில் 2002 பிப்ரவரியில் நடந்து முடிந்த ரத்தக் களரியின் கோர முகத்தை குத்புதீன் அன்சாரியின் முகம் உலகுக்கு சாட்சி சொன்னது.

முகம் முழுவதும் அச்சம் கொப்புளித்தது, விழிகளில் மரணத்தின் தலைவாசல் விரியத் திறந்து கிடந்தது. முகம் முழுவதும், ஈடேற்ற உலகத்தில் யாராவது இருக்கிறீர்களா? என்ற அவல மொழி புருவங்களின் மயிர்க் கால்களில் எல்லாம் வெளிப்பட்டுக் கொண்டு இருந்தது. இப்படி ஒரு வேதனைத் தோற்றம் பத்திரிகைகளில் வெளி வந்தது. அந்த தோற்றத்திற்கு உரியவர் தான் குத்புதீன் அன்சாரி.

குத்புதீன் அன்சாரி குடியிருந்த வீதியில் உள்ள இல்லங்களையெல்லாம் பற்றி எரிந்த தீ கபளீகரம் செய்தது. குடியிருந்த மக்களில் ஆண், பெண், முதியவர், சிறியவர்கள், குழந்தைகள் பாகுபாடு இல்லாமல் மரணப் படுகுழிக்குள் கருகிக் கிடந்தார்கள்.

இந்தக் கொடூரத்தை கண் எதிரில் கண்டு குலைநடுங்கி, பீதிப் பள்ளத்தாக்கில் பதுங்கிக் கிடந்தார் குத்புதீன் அன்சாரி.

இந்த கோரக் காட்சிக்கு, தான் காரணம் இல்லை. இப்படி நடந்து கொண்டு இருப்பது தனக்குத் தெரியாது என குஜராத்தின் முதல்வர், நிர்வாகத்தில் இணையற்ற வெற்றி வீரர் மோடி உலகுக்கு அறிவித்துக் கொண்டு இருந்தார்.

ஆனால், குத்புதீன் அன்சாரியின் படம் முதல்வரின் பொய் சாட்சிக்கு எதிராக உலகுக்குக் கிடைத்த அத்தாட்சி என்பது போல, பத்திரிகைகளில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்து கொண்டு இருந்த இனப் படுகொலையின் தீவிரச் செய்தியும் பத்திரிகைகளில் பிரசுரமாகின.

குத்புதீன் அன்சாரி சாதாரண தையல் கடை வைத்திருந்த ஒரு தொழிலாளி. அவரையும் அவரைப் போன்ற மனிதர்களையும் இவ்வளவுக் கோரமாகவும் கொடூரமாகவும் தாக்க குஜராத்தில் என்ன காரணம் நிகழ்ந்தது?

முதல்வர் மோடியிடம் கேட்டால், “இப்படி நடந்து கொண்டா இருக்கிறது? இது பற்றித் தகவல் எனக்கு வந்து சேரவில்லையே?” என கப்பில் டீ குடித்துக் கொண்டு பதில் சொன்னார். இவரைத்தான் ஆட்சி செலுத்துவதில் சிறந்த நிர்வாகி என்று பிரச்சாரப் படுத்தி இந்தியப் பிரதமர் வேட்பாளருக்கு இவரே தகுதியானவர் என பா.ஜ.க. சிபாரிசு செய்து இன்று களத்தில் நிற்கிறது.

குத்புதீன், குஜராத்தை விட்டே தலைதெறிக்க ஓடி மஹாராஷ்டிரத்தில் தஞ்சம் அடைந்தார். அங்கு சில இடங்களில் வேலை செய்தார்.

பத்திரிகையில் வந்த அவர் படத்தைப் பார்த்து விட்டு முதலாளிமார்கள் அவரை வேலையை விட்டு விரட்டி விட்டார்கள். துரத்தப்பட்ட குத்புதீனுக்கு மீண்டும் தொடரோட்டம் தொடங்கியது. மேற்கு வங்கத்துக்குள் புகுந்தார். அங்கும் அவருக்கு அடைக்கல நிம்மதி இல்லை.

ஒரு துணிச்சலான முடிவுக்கு வருகிறார். விடாமல் துரத்தினால் பூனைகூட எதிர்த்தாக்குதலுக்குத் தயாராகி விடுவது போல, குத்புதீனும் ஒரு முடிவுக்கு வந்தார்.

தான் பிறந்து, வளர்ந்த, தன் மூதாதையர்கள் வாழ்ந்து மறைந்த குஜராத்துக்கேத் திரும்ப முடிவு கட்டினார். தனக்குத் தெரிந்த ஒரே தொழில், தையற் தொழிலையும், தையல் எந்திரத்தையும் சரணடைந்தார்.

அந்த குத்புதீன் அன்சாரியின் பேட்டிதான் தி இந்துநாளிதழில் இன்று வெளிவந்து இருக்கிறது.

பத்திரிகையாளர் அவரிடம் கேட்கிறார், கலவரத்தின் அந்த நாளை நினைவு கூர முடியுமா?”

அந்த நாள் நினைவுகூர வேண்டாத ஒன்று. நான் அன்றைக்கு செத்து விட்டேன். அப்படியான நிலையில் உயிர் மட்டும் உள்ள ஒரு பிணமாகத்தான் இருந்தேன். இறைவன் அருளால் பிழைத்தேன் இது குத்புதீன் பதில்.

2002, பிப்ரவரி மாதத்தின் குஜராத்தின் தோற்றம் இதுதான்.

பத்திரிகையாளர் கேள்வி : ஆளும் கட்சியிலிருந்து (பா.ஜ.க.) உங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிரதா?

நான் இது பற்றி பேச வேண்டாம் என நினைக்கிறேன். எனக்கு மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். மீதமுள்ள காலத்தை கொஞ்சம் நிம்மதியுடன் வாழ நினைக்கிறோம் இது குத்புதீன் பதில்.

2002 - இன்னும் குஜராத்தில் மாறி விடவில்லை.

அன்று எல்லம் வெளிப்படையாக நடந்தது. இன்று அதனுடைய நிழல் உருவம் குஜராத் முழுவதும் பரவிக் கிடக்கிறது. உண்மையைச் சொல்ல இன்று கூட அச்சம் நீங்கிவிடவில்லை. இது தான் மோடியின் நிர்வாக நேர்த்தி.

கேள்வி : கலவரத்தில் முற்றிலுமாகத் தீக்கிறையான பகுதி இது. இப்போது ஓரளவுக்கு எல்லா வீடுகளுமே புதுப்பித்துக் கட்டப்பட்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. அரசாங்கம் உதவியதா?

நாங்கள் முன்பைவிட மேம்பட்டு இருக்கிறோம். முன்பைவிடக் கடுமையாக நாங்கள் உழைக்கிறோம் என்பது தான் இதற்கு அர்த்தம். எங்கள் வாழ்க்கைக்காக குழந்தைகளுக்காக எதிர் காலத்திற்காக மிகக் கடுமையாக உழைக்கிறோம். அது ஒன்றே தான் காரணம் இது குத்புதீன் பதில்.

இன்று கூட பாதிக்கப்பட்டவர்களின் மேம்பட்டிற்கு அவர்களின் திடமான மனநிலையும், கடுமையான உழைப்பும்தான் காரணமாக இருக்கிறது. அரசாங்கம் என்ற எந்திரம் அங்கே குஜராத்தில் தன் சொந்த மக்களை சிறிதும் கண்டு கொள்ளாமல் ராஜ கிரீடம் சூடிக்கொண்டு இந்தியாவின் வளர்ச்சி மாநிலம் குஜராத் என்று அறிவித்துக் கொண்டு இருக்கிறது.

கேள்வி : மிகக் கடுமையான வன்முறையைப் பார்த்த நீங்கள், அந்த அரசாங்கமும் உங்களுக்குச் சாதகமாக இல்லாத நிலையில், எந்த நம்பிக்கையில் மீண்டும் குஜராத் திரும்பினீர்கள்?

இரண்டு நம்பிக்கைகள் தான். ஒன்று, குஜராத் எங்கள் பூர்வீக மண். என் தந்தை, தாத்தா, அவர் முன்னோர்கள் பிறந்து வளர்ந்த மண். இத்தனைத் தலைமுறைகளாக எங்களைக் காத்த மண் கை விட்டு விடாது என்ற நம்பிக்கை. இன்னொரு நம்பிக்கை, தலைமுறைகளாக இதே இந்து சகோதரர்கள் மத்தியில் தான் நாங்கள் இணைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இனியும் அவர்களுடன் இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கை.

ஒரு தீயசக்தி எல்லோரையும் இயக்கி விட்டது. கலவரத்துக்குப் பின் இந்தச் சம்பவம் அனைவரையும் சங்கடப்பட வைத்தது. எங்களுக்கு நிறைய இந்து சகோதரர்கள் அன்றும் உதவினார்கள், மீண்டும் எங்களை குஜராத்திற்கு அழைத்தவர்களில் இந்து நண்பர்களும் உண்டு. என் நம்பிக்கைக்கு இவைகள் தான் அடிப்படை இது குத்புதீன் பதில்.

குஜராத் மக்கள் ஐக்கியமாக இருந்தார்கள். சில அரசியல் சமூக கோட்பாட்டுக்குரியவர்கள் மக்களின் மத்தியில் துவேஷத்தைத் தூவி இருக்கிறார்கள். இந்தக் கொடுமைக்கு முதல்வர் மோடிதான் அந்தரங்கத் தலைவர். இவரைத்தான் இந்தியப் பிரதமராக அமரவைக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் தலைவர்கள் (வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் போன்றவர்கள்) மேடைகளிலே சிபாரிசு செய்து வாக்குக் கேட்கிறார்கள்.

கேள்வி : மோடியைப் பற்றி, அவருடைய ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை இது குத்புதீன் பதில்.

இது பெருமிதத்தின் பண்பாடாக வந்த பதில் இல்லை. மோடி இன்று அன்றைய சூழலை உணர்ந்து திருந்தி விட்டார் என்ற உணர்விலும் வந்த பதில் இல்லை.

2002 னுடைய பீதி இன்றும் கூட பாதிக்கப் பட்டவர்களை விட்டு நீங்கவில்லை. அது எந்த நிலையில் வேண்டுமானாலும் மீண்டும் வந்து விடலாம் என்கிற அடியாழமிக்க அச்சத்தினால் வந்த அக்கறைப் பதிவு.

கேள்வி : குஜராத் கலவரங்களுக்குப் பின் மோடி முஸ்லிம்களுக்காக நிறைய செய்து இருப்பதாகவும் அவருக்கு முஸ்லிம்களின் ஆதரவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறதே?

எனக்குத் தெரியாது. இங்கு முஸ்லிம்களில் ரியல் எஸ்டேட்காரர்களைப் போன்ற பெருவியாபாரிகள், தரகர்கள் சிலர் தங்கள் பிழைப்புக்காக அவரை ஆதரிப்பது உண்டு. மற்றவர்கள் யாருடைய நம்பிக்கையையும் அவர் பெறவில்லை இது குத்புதீன் பதில்.

மோடி முஸ்லிம்களுக்கு செய்திருக்கும் நல்லவைகள் பற்றி பாதிக்கப் பட்டவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. மோடியால் உருவாக்கப் பட்டு இருக்கும் சில முஸ்லிம் ரியல் எஸ்டேட் வியாபாரிகளும், அதற்கு உறுதுணையான புரோக்கர்களும் மோடிக்கு ஆதரவு தருகிறார்கள். இந்தத் தரகர்களைத்தான் மோடி வகையறாக்கள் மேடையில் ஏற்றி, “பாருங்கள் எங்களுக்கு முஸ்லிம்களின் ஆதரவைஎனப் படம் காட்டுகிறார்கள்.

குஜராத்தில் உள்ள முஸ்லிம்கள் இன்றும் பீதியிலும், நிலைமையை முழுவதுமாக வெளிச் சொல்ல முடியாத வேதனையிலும் தான் தங்கள் வாழ்க்கையை உருட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

குத்புதீன் படம் அன்றைய காலகட்டத்தில் குஜராத்தின் பீதி நிலையின் வெளிப்பாடாக இருந்தது போலவே, இன்னொரு படமும் கோரத்தின் அடையாளமாக வெளியிடப்பட்டது.

பின்புறத்தில் பற்றி எரிந்து கொழுந்துவிட்டு தீ ஜ்வாலை உக்கரமாக எரிய அதற்கு முன்னே தலையில் காவித்துணிகட்டி வலது கையில் நீண்ட வாள் ஏந்தி உக்கரமான தோற்றத்தோடு ஒரு இளைஞனின் படம் வெளிவந்தது. குஜராத்தின் கொடூரச் செயலின் அடையாளச் சின்னமது.

அந்த இளைஞன் எத்தனை முஸ்லிம்களை வெட்டினான், எத்தனை முஸ்லிம் வீடுகளை தீக்கிறையாக்கினான் என்றப் பட்டியல் தெரியாது.

அவன்தான் அசோக் மோச்சி. அவனுக்குத் தொழில் செருப்புத் தைப்பது. இந்தப் பாமரன் உள்ளத்துக்குள் பயங்கரத்தையும், படுபாதகத்தையும் உற்பத்தி செய்தவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்து இந்தியா முழுவதும் இதைக் கொண்டு செல்லத் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அந்த அசோக் மோச்சி மீண்டும் செருப்புத் தைத்துக் கொண்டு இருக்கிறான்.

பத்திரிகையாளர் கேள்வி : கலவரத்துக்குப் பின் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நம்பிக்கையைப் பெற அவர் (மோடி) ஒன்றுமே செய்யவில்லையா?

உங்களுக்கு அசோக் மோச்சியைத் தெரியும் தானே. அவர் பின்னாளில் மனம் மாறினார். முஸ்லிகளுக்குத் தான் இழைத்த கொடுமைகளுக்காக முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டார்.

இன்றைக்கு என் குடும்பத்தில் அவரும் ஒருவர். மோடி ஜீ அப்படி எல்லாம் ஒரு வார்த்தை வருத்தம் கூட இன்றுவரை தெரிவிக்கவில்லை என்பது தான் உண்மை இது குத்புதீன் பதில்.

அறியாமையில் செய்த உணர்ச்சி வேகத்தில் உக்கரமானவர்கள் தெளிந்த நிலையில் தாங்கள் செய்த கொடூரத்திற்காக மன்னிப்புக் கேட்டு இருக்கிறார்கள். அந்த மனிதநேய மனிதர்களை குத்புதீன் அன்சாரி போன்றவர்கள் கட்டி அணைத்து தங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தழுவிக்கொண்டார்கள். இந்த மகத்துவம் குஜராத்தில் வாழும் சாமானியர்கள் மத்தியில் நடந்து இருக்கிறது.

இனப் படுகொலையின் சூத்திரதாரி மோடி போன்ற அடிப்படை மானுட உணர்வு செத்துப் போனவர்கள் இந்தியப் பிரதமராக ஆக ஆசைப்படும் நேரத்தில் கூட, நிகழ்த்தப்பட்ட தீங்கிற்கு ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவிக்கவில்லை.

இந்த மோடியைத்தான் முன்மாதிரிப் பிரதமராகவும், இந்த மோடியின் குஜராத்தைத்தான் எடுத்துக்காட்டு மாநிலமாகவும் சிறிதளவு கூட வெட்கமற்றவர்கள் பிரச்சாரப் படுத்துகிறார்கள்.

கேள்வி : இன்றைக்கு இந்தியா முழுவதும் மோடியைப் பற்றியும், அவர் குஜராத்தில் கொண்டுவந்து இருப்பதுமாக சொல்லப்பட்டு இருக்கும் வளர்ச்சியைப் பற்றித்தானே பேசுகிறார்கள்?

ஒரே ஒரு உதாரணம். என் சகோதரர் அசோக் மோச்சியையே எடுத்துக் கொள்வோம். அன்றும் அவர் செருப்புத்தான் தைத்துக் கொண்டு இருந்தார். இன்றும் அவர் செருப்புத்தான் தைத்துக் கொண்டு இருக்கிறார். வசதியானவர்கள் மேலும் வசதியாவதை நான் வளர்ச்சியாக நினைக்கவில்லை இது குத்புதீன் பதில்.

குஜராத் பற்றிய அருமையான ஒரு ப்ளூ ப்ரிண்டை (வரைபடம்) குத்புதீன் அன்சாரி வெளிப்படுத்தி விட்டார். குஜராத்தின் இன்றைய வளர்ச்சி என்பது இதுதான். செருப்புத் தைத்தவர்கள் ஏதோ ஒரு வெறியில் நெருப்பு வைத்தார்கள். ஆனால் அவர்கள் இன்றும் செருப்புத் தைப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஆனால் மன்னிப்பு கேட்டு மனந்திருந்திய மனிதர்களாக மாறி இருக்கிறார்கள்.

அன்று பணம் கொடுத்தவர்களாக இருந்தவர்கள் மோடிக்கு ஜால்ரா போட்டு இன்றும் பணம் பெருக்குபவர்களாக இருக்கிறார்கள். இதுதான் குஜராத்தினுடைய வளர்ச்சி. இதைத்தான் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கொண்டு வர தேர்தல் அறிக்கையாகவே முன்மொழிகிறார்கள்.

கேள்வி : இந்தப் பேட்டியில் கேள்விகள் முடிந்து விட்டன. இந்த கேள்விகளுக்கு அப்பாலும் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

நாம் எல்லோரும் சேர்ந்து வாழத்தான் இறைவன் இவ்வளவு பெறிய உலகத்தைப் படைத்து இருக்கிறான். இந்த நாட்டின் விசேஷமும் அதுதான். யாருக்காகவும் எதற்காகவும் நாம் பிரிந்து நிற்கக் கூடாது. இந்த நாட்டை சிதைத்து விடக் கூடாது இது குத்புதீன் பதில்.


பாதாளத்தில் தூக்கி எறியப்பட்டு பாதிப்புக்கு உள்ளான மனிதர்கள் விண்முட்டும் பெருந்தன்மையோடு ஆரத்தழுவி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஆட்சி வெறியின் காரணத்தால் ஆளத் துடிப்பவர்கள் நரக நெருப்பை வாரி வாரி விழுங்கி பசி தீர்த்து விடலாம் என்ற பரிதாபத்தை விளைவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Sunday, April 20, 2014

மோடி ராஜ்யம்..!


ஜார்கண்ட் மாநிலம் தியோகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிஹார் மாநில பாஜகவின் மூத்த தலைவர் கிரிராஜ் சிங் பேசுகிறார்.

நரேந்திர மோடியைப் பிரதமராக விடாமல் தடுப்பவர்கள், பாகிஸ்தானுக்குச் செல்லத் தயாராக இருங்கள். மோடியை விமர்சிப்பவர்களுக்கு வருங்காலத்தில் (தேர்தலுக்குப் பிறகு) இந்தியாவில் இடமில்லை. அவர்கள் வசிக்கப் பாகிஸ்தானில்தான் இடம் கிடைக்கும்.

கிரிராஜ் சிங் அந்தக் கூட்டத்தில் இப்படி அறிவித்து இருக்கிறார்.

இனி கிரிராஜ் சிங், இரண்டு கேள்விகளை இங்கே தருகிறார். பாகிஸ்தான் நம்மை விட்டு பிரிந்துபோன ஒரு நாடு. அந்த நாட்டிற்கு நீங்கள் போங்கள் என்று இந்தியர்களுக்கு விஸா கொடுத்து அனுப்ப இவருக்கு ஒரு உரிமையை யார் தந்தது? மற்றொரு கேள்வி, பாகிஸ்தான் பிரிந்து போவதற்கே இந்த கிரிராஜ் சிங் கூட்டம்தான் ஏற்கனவே காரணமாக இருந்திருக்கிறது என்கிற உண்மையை இவர் ஒப்புக் கொண்டு விட்டாரா?

இவர்களை ஆதரிக்காதவர்களுக்கு ஏற்றதொரு இடம் என்று ஒதுக்கித் தள்ளிய வரலாற்று இடம்தான் பாகிஸ்தான் என்ற உண்மை இப்போதைக்கு வெளிவந்துவிட்டது.

இவர்களுக்கு ஆகாதவர்கள் என்று விரட்டப்படுபவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தால் பாகிஸ்தான் நிலை என்னவாகும்? அது வல்லரசாகி விடாதா? அப்பொழுது யாருக்குத் தலைவலி? இவர்களை மட்டுமே நம்பி இருக்கும், இந்தப் பிரதேசத்து மக்களுக்குத்தானே அது சோதனையாகும்.

பாஜகவை நம்பாதவர்களை விரட்டுகிறார்கள். நம்பியவர்களை சோதனைக்கு உள்ளாக்குகிறார்கள். வேதனைக்குள் சிக்க வைக்கிறார்கள். பாஜகவின் முகமூடி இல்லாத சுயரூபம் இதுதான்.

மோடியினுடைய அதிதீவிர ஆதரவாளர் கிரிராஜ் சிங், பிஹார் நவாடா தொகுதியில் தற்போது பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இது மட்டுமல்ல 2005 முதல் 2013 வரை பிஹார் மாநில அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

இப்படி ஒரு வலுவான அரசியல் பின்னணி உள்ளவர் கிரிராஜ் சிங்.

பாஜகவின் ஏதோ ஒரு அடிமட்ட அவசரக் குடுக்கைத் தொண்டனின் அவேசப் பேச்சு என்று இதைக் கருதிவிடக் கூடாது. இந்தப் பேச்சுக்குள் ஒரு செயல்திட்டம் இருக்கிறது.

ஆழ்ந்து புரிந்துக் கொள்ளப்பட வேண்டிய மறைமுகத் தகவல் இந்த அறிவிப்புப் பேச்சில் மறைந்திருக்கிறது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நிதானம் தவறிப் போன மேடை அலங்கார வீரவசனங்களாக இதைக் கருதிவிட வேண்டாம்.

கிரிராஜ் சிங் பேசிய இந்தக் கூட்டத்தில் இன்னும் சில மூத்த பாஜக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர், இப்போது பாஜகவின் அகில இந்தியத் தலைவரான ராஜ்நாத் சிங்கிற்கு முன்னர் அகில இந்திய தலைவராக இருமுறைத் தொடர்ந்து பதவி வகித்த நிதின் கட்காரியும் அமரிந்திருக்கிறார்.

இந்தத் தேர்தல் பிரச்சார மேடையின் பின்புலத்தையும் கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது பிரச்சனைக்கு வருவோம்.

மோடி பிரதமராக முடியாது போனால் இந்தியா இரண்டு கோட்பாடுகளுக்குள் வந்தாக வேண்டும். ஒன்று, பாரதிய ஜனதா இந்துக்களின் கூட்டம் ஒன்று, மற்றொரு கூட்டம் அவர்கள் இந்துவாக இருந்தாலும், கிருத்துவராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பார்ஸியாக, புத்தராக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் மோடிக்கு ஆதரவு தராததனால் அவர்கள் அனைவரும் இந்திய மக்களாக கருதப்பட மாட்டார்கள்.

இவர்களுக்கென்று ஏற்கனவே ஒரு தேசத்தை ஒதுக்கி இருக்கிறோம். அந்தத் தேசம்தான் பாகிஸ்தான். அங்கே மீதமுள்ளவர்கள் ஓடி விடுங்கள். இல்லையென்றால் ஓட்டப் படுவீர்கள் என்ற செய்தியைத்தான் கிரிராஜ் சிங் வெளிப்படுத்தி இருக்கிறார்.

மோடி பிரதமாரவதற்கு எதிராக இருப்பவர்கள் தேச விரோதிகள். மோடியின் செயல்பாட்டை விமர்சிப்பவர்கள் ராஜ துரோகிகள். இதுதான் கிரிராஜ் சிங் பிரகடனப் படுத்தும் செய்தி.

பாஜக சொல்லத் தயங்குகிற, ஆனால் உண்மையாக தங்களுக்குள் உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிற இந்தக் கோட்பாட்டை மோடி ஆட்சிக்கு வந்தால் நடைமுறைப் படுத்துவார். அது எப்படி என்றால் சட்டத்தின் அடிப்படையில் அந்த நடைமுறை பகிரங்கமாக இருக்கும்.

மோடி பிரதமராக முடியாது போனால் இதே கோட்பாடு ஆயுதங்களின் மூலம் இந்தியாவில் வன்முறையாகவும் கலவரங்களாகவும் கொடூர தாக்குதல்களாகவும் செயல் படுத்தப்பட்டு குழப்பங்களை இந்தியா சந்தித்தாக வேண்டும் என்ற இரு செய்திகள் இங்கே முன்வைக்கப் படுகின்றன.

மோடி இரு தினங்களுக்கு முன் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார்.

முழு பலத்தோடு நாங்களே தனித்து ஆட்சி அமைக்கும் நிலை தேர்தலுக்குப் பின்னால் வந்தாலும்கூட எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தருவோம்.என்று அறிவிக்கிறார்.

அதனுடையப் பொருள், கிரிராஜ் சிங் பேச்சிற்குப் பின்னால் புரிய ஆர்ம்பிக்கிறது.

மோடிக் கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகள் கிரிராஜ் சிங்கின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவித்துவிடாமல் இருக்க ஆசைக் கறித்துண்டுகளை முன்னரே வீசி எறிந்துவிட்டார்.

கூட்டணிக் கட்சிகள் வாலாட்டி வந்து புசித்துக் கொள்ளுங்கள் என்பதுதான் அமைச்சர் பதவி என்பதன் அர்த்தம்.

நிதின் கட்கரி நேற்று ஒரு கூட்டத்தில் பேசுகிறார்.
பாஜக தனித்து ஆட்சிக்கு வந்தால் மட்டுமே 370 ஆவது சட்டப் பிரிவு நீக்கப் படும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். அயோத்தியில் பாபர் மஸ்ஜித் தகர்க்கப் பட்ட அதே இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும்.என்று பேசி இருக்கிறார்.

முழு பலத்தில் பாஜக வந்தால் இத்தணையும் நடக்கும். இது பாஜகவின் திட்டமே தவிற பாஜக அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திட்டமல்ல. இதைக் கூட்டணிகள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

கூட்டணியில் உள்ள கட்சிகள் கூக்குரல் போட்டு எதிர்க்காமல் அடங்கி ஒடுங்க இதோ உங்களுக்கு அமைச்சர் பதவிகள் என்ற கோஷம் முன்வைக்கப் பட்டு இருக்கிறது.

அதற்கு மேலும் நிதின் கட்காரி அதே கூட்டத்தில் சொல்கிறார்.

குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்ட மாதிரியை தேச முழுமைக்கும் கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்என்று.

பாஜக தெளிவாக வெளியில் வந்து முகம் காட்டிவிட்டது. ஆட்சிக்கு வந்தால் சட்ட அடிப்படையில் சிறுபான்மை மக்களை அழித்துச் சிதைப்போம். ஆட்சிக்கு வரமுடியாது போனால், எங்களை வராமல் தடுத்த அந்நியர்களே ஓடுங்கள் பாகிஸ்தானுக்கென்று ஆயுத பலத்தால் ரத்த களேபகரம் செய்வோம்.

இதுதான் பாஜகவினுடைய தேர்தல் கட்டத்தின் கடைசி செய்தி.

மோடியை ஆதரித்தால் மட்டுமே இந்தியர்கள். அவரை ஆதரிக்க மறுப்பவர்கள் இந்தியர்களே அல்லர். இப்படி ஒரு கோஷம் வந்தாகி விட்டது. ஆதரவு தந்தால் இந்தியாவை மோடியின் ஏக இந்தியாவாக சட்ட ரீதியாக ஆக்குவோம். இல்லாது போனால் எதிர்த்தவர்களையும் விமர்சித்தவர்களையும் ரத்தக் குளியல் நடத்தில் விரட்டி அடிப்போம்.

இப்படித் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.

இந்த நிலையில் மோடியை விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், ஆழமான ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்.

சரியான புரிதலுடன் எந்தக் கட்டத்திலும் இந்தக் கொடூரமான மோடியிஸத்தை எப்பொழுதேனும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் இருக்கக் கூடிய இயக்கங்கள் கூட்டமைக்க வேண்டும்.

கடந்தக் காலத்தில் மோடி நடமாடித் திரிந்துக் கொண்டிருந்த பாஜகவுடன் உறவு கொள்ளாதவர்களும் எதிர்காலத்தில் நிச்சயமாக உறவு கொள்ள மாட்டார்கள் என்ற தெளிவும் கொண்டவர்களும் யாரெனக் கண்டறிந்து அவர்கள் ஒரு கூட்டணிக்குள் வர வேண்டும்.

தேர்தல் 24 ஆம் தேதி , இதற்குள் ஒரு கூட்டணி அமைக்கவா முடியும்? சாத்தியமில்லாத தகவல் இது என புறந்தள்ள வேண்டாம்.

மோடியின் வெற்றிக்குப் பின்னாலும் சரி. மோடியின் தோல்விக்குப் பின்னாலும் சரி, இந்தியாவிற்கு மோடி கும்பல் குழப்பங்களையும் கலவரங்களையும் உருவாக்கத்தான் போகிறார்கள். அப்போது தேர்தலுக்கு முன் உள்ள இன்றைய மோடியின் எதிர்ப்புற கூட்டணிகள் ஒன்றிணைந்து அதைச் சந்திக்குமா? நிச்சயம் சந்திக்காது. ஏனென்றால் இதற்கு முன் இது மாதிரி சந்தர்ப்பங்களில் இந்தக் கூட்டணிகள் தங்கள் சுயத்தை ஏற்கனவே காட்டி இருக்கிறார்கள்.

அதனால்தான் எதிர் வரும் காலங்களில் ஒரு தெளிவான பாசிஸ எதிர்ப்பு இயக்கங்களோடு சரியான கூட்டு முயற்சி நடந்தாக வேண்டும் என்று கருதுகிறேன்.

நிபந்தனையோடு பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம். நிபந்தனையோடு இப்பொழுதும் கூட்டணியில் இருக்கிறோம்என சாதுர்யப் பேச்சுப் பேசும் இயக்கங்களை ஒதுக்கிவிட்டுப் பிற உறுதியாக இருக்கக் கூடிய இயக்கங்களின் கூட்டணி அடையாளம் காட்டப் பட வேண்டும்.

குஜராத் போல வளர்ச்சித் திட்டம் நாடெங்கும் கொண்டுவரப்படும் என்ற நிதின் கட்கரி வார்த்தையின் பொருளைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

மோடி எல்லா நேரங்களிலும் மனிதகுல விரோதியாகத்தான் இருந்திருக்கிறார். அவரை எனக்கு நண்பர் என்று சொல்கிறவர்களும் அவர் எனக்கு சகோதரர் என்று சொல்பவர்களும் எந்த நோக்கத்தில் இருக்கிறார்கள். என்ன சுயலாபக் கணக்கு போடுகிறார்கள் எனத் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

சுருக்கமாக மோடி வேரோடு அழிக்கப் பட வேண்டிய விஷ விருட்சம்.


அதே நேரம் மோடியென்ற பூச்சாண்டியைக் கண்டு பதறி ஓடி, “நீங்கள் காப்பாற்றுங்கள், நீங்கள் காப்பாற்றுங்கள்என்று சில கூடாரங்களுக்குள் தஞ்சம் அடைய எத்தனிப்பது மோடிக்கு நாம் வழங்கும் மகத்தான பகிரங்கமான ஆதரவாக அமையும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.