பாலைவனப் பூமியிலே
பால்நிலவு
பவனிவந்த வேளையிலே
ஓர்இரவு
வானவர் ஜிப்ரீல்
வந்து நின்றார் – நபியே
வான்மறை வாசகம்
ஓதுமென்றார்!
ஓதவும் படிக்கவும்
நானறியேன் – ஒரு
உச்சரிப்புக் கூடத் தெரிந்தறியேன்!
நான்எதை ஓதுவேன்
என்றார்கள் – நபி
நாதர் ஒடுங்கியே
நின்றார்கள்!
உம்மைப் படைத்தான்
ஓரிறைவன் – ஒரு
உருவம் இல்லாத
மாபெரியோன்!
தம்மை நினைத்துப்
பேர்சொல்லி – உம்
தளிரிதழ் அசைப்பீர்
என்றுசொன்னார்!
திருமறை வெளிச்சம்
சுடர்விட்டது – பல
தீமைகள் வெந்து
எரிபட்டது!
அருள்மழை எங்கும்
துளிர்விட்டது – அந்த
ஆண்டவன் கருணை
முளைவிட்டது!
வட்டியின் கழுத்து
அறுபட்டது – மதுத்
தொட்டியும் வெடித்து
உடைபட்டது!
கெட்ட ஒழுக்கம்
தடைபட்டது – இறைக்
கிருபை எங்கும் நடைபோட்டது!
பிறந்தது பெண்ணாய்
இருந்துவிட்டால் – மண்
பிளந்தது அன்றுடன்
முடிவுற்றது!
சிறந்தது தாயின்
பாதமென்று – ஒரு
சிறப்பும் வந்தே
துணைநின்றது!
இறைவன் ஒருவன்
அவன்அல்லாஹ்!
இணையும் துணையும்
பெற்றில்லான்!
மறையைப் பெற்றவர்
அவன்தூதர் – அவர்
மனிதர் புனிதர்
மஹ்மூதர்!
No comments:
Post a Comment