Sunday, June 2, 2013

நிறைவாய் அருள்வாய் அருளாளா !


                                          


கண்களில் மழைநீர் பொழிகிறது -மனம் 
கணத்தால் நொறுங்கிச் சரிகிறது !
எண்ணம் நெருப்பாய் எரிகிறது -என் 
இதயம் துயராய் வடிகிறது ! 

மானிடப் பதர்கள் வாசலிலே -கரம் 
மலர்த்திக் கேட்பது பழியல்லவா !
தானெனும் ஆணவப் பேர்வழிகள் -தீத் 
தனலில் நெளியும் புழுவல்லவா !  

எனக்குச் சமமாய் எவனுண்டு -என 
எண்ணித்  திரிந்த நபரெல்லாம் !
கணக்கு முடிந்து மறைகின்றார் - சிறு 
கரையான் நக்கக் கரைகின்றார் ! 

மனிதன் தந்து நிறைவதில்லை - அந்த
மனிதன் மறுத்துக் குறைவதில்லை !
பனிநீர் தாகம் தணிப்பதில்லை - சின்னப் 
பானையில் பூமி உறைவதில்லை ! 

எவரையும் பழிக்கும் நோக்கமில்லை - பிறர்
என்ன தான் செய்யினும் கவலையில்லை !
சுவர்கள் எழுப்பி சூரியனை - நாம் 
தொட்டு விடவும் முடியவில்லை ! 

கேட்பதை தருபவன் நீயல்லவா - என்
கேள்வியும் காற்றில் கறைவதுவா !
ஆட்சியின் அதிபன் சன்னிதியில் - துயர்
அறுபடும் என்பது விதியல்லவா !

இறைவா உன்தன் முன்னிலையில் - என்
 எண்சாண் உடம்பால் பணிகின்றேன் !
 நிறைவாய் அருள்வாய் அருளாளா - உன் 
நினைவே கதியெனக் கிடக்கின்றேன் ! 

           
      



No comments:

Post a Comment