கண்களில் மழைநீர் பொழிகிறது -மனம்
கணத்தால் நொறுங்கிச் சரிகிறது !
எண்ணம் நெருப்பாய் எரிகிறது -என்
இதயம் துயராய் வடிகிறது !
மானிடப் பதர்கள் வாசலிலே -கரம்
மலர்த்திக் கேட்பது பழியல்லவா !
தானெனும் ஆணவப் பேர்வழிகள் -தீத்
தனலில் நெளியும் புழுவல்லவா !
எனக்குச் சமமாய் எவனுண்டு -என
எண்ணித் திரிந்த நபரெல்லாம் !
கணக்கு முடிந்து மறைகின்றார் - சிறு
கரையான் நக்கக் கரைகின்றார் !
மனிதன் தந்து நிறைவதில்லை - அந்த
மனிதன் மறுத்துக் குறைவதில்லை !
பனிநீர் தாகம் தணிப்பதில்லை - சின்னப்
பானையில் பூமி உறைவதில்லை !
எவரையும் பழிக்கும் நோக்கமில்லை - பிறர்
என்ன தான் செய்யினும் கவலையில்லை !
சுவர்கள் எழுப்பி சூரியனை - நாம்
தொட்டு விடவும் முடியவில்லை !
கேட்பதை தருபவன் நீயல்லவா - என்
கேள்வியும் காற்றில் கறைவதுவா !
ஆட்சியின் அதிபன் சன்னிதியில் - துயர்
அறுபடும் என்பது விதியல்லவா !
இறைவா உன்தன் முன்னிலையில் - என்
எண்சாண் உடம்பால் பணிகின்றேன் !
நிறைவாய் அருள்வாய் அருளாளா - உன்
நினைவே கதியெனக் கிடக்கின்றேன் !
No comments:
Post a Comment