Tuesday, June 23, 2015

எப்போதோ கொட்டிய மழைத்துளிகள்!!!



இந்தச் சமுதாயம் யாருக்கும் தாழ்வில்லை
இந்திய வரலாற்றில் எம்பங்கும் குறைவில்லை! (இந்தச்)

சிந்திய ரத்தம் சரித்திரம் சொல்லும்--அந்தச்
சிவந்த வானமும் எம்புகழ் பாடும்!
அந்நியக் காலடி மண்ணில் பதிந்தது--அவர்
ஆதிக்கம் அழிக்கத் தன்னுயிர் தந்தது! (இந்தச்)

திப்புவின் வீரம் மறப்பது துரோகம்--அதைத்
திரித்துப் பேசுதல் தேச விரோதம்
கப்பிய அடிமைத் தளைகளை அறுத்தார்--வெள்ளைக்
காரர்கள் தம்மைச் சிறையிலும் அடைத்தார்! (இந்தச்)

பரங்கியர் தலைக்கு நாளினைக் குறித்தார்--அவர்
பதறக் கதற வாளினை எடுத்தார்
உரிமைப் போரில் ஷகீதாய் முடிந்தார்--திப்பு
உலகுக்கு வீர அதிசயம் ஆனார்! (இந்தச்)

மலபார் பக்கம் மாப்பிள்ளை மார்கள்--தம்
வரலாறு படைக்கப் போர்க்களம் புகுந்தார்
தலை,கால் சிதறித் தம்முயிர் இழந்தார்--இத்
தாய்த்திரு நாட்டின் மானம் காத்தார்! (இந்தச்)

பாக்கிஸ் தான்படை எல்லையில் நின்றது--நம்
பாரதப் படையே முடிவில் வென்றது
தாக்கும் டாங்கியைத் தன்மேல் ஏற்றார்--எம்
ஹவில்தார் ஹமீதே இன்னுயிர் நீத்தார்! (இந்தச்)

மானம் காக்க அனைத்தும் தருவோம்--எம்
மார்க்கம் தழைக்கத் தியாகமும் புரிவோம்
ஈனர் எம்மை இழிவுகள் செய்தால்--இங்கே
இருப்பதோ ஓருயிர் இழக்கவும் தயங்கோம்! (இந்தச்)

தேசம் காக்க ஆயுதம் தூக்குவோம்--எதிரி
தெரிந்தவர் எனினும் அவர்சிரம் நீக்குவோம்
வேசம் புனைபவர் மோசம் கலைப்போம்--எம்மை
வேற்றவர் என்னும் கோஷம் அழிப்போம்! (இந்தச்)

No comments:

Post a Comment