Tuesday, June 23, 2015

எப்போதோ கொட்டிய மழைத்துளிகள்



இஸ்லாம் எங்கள்
இதயம் கனிந்த வாழ்வுரிமை -- எம்
இந்தியம் எமது
தோற்றம் நிகழ்ந்த பிறப்புரிமை! (இஸ்லாம்...)

சுவனமே நாங்கள்
சுற்றித் திரிந்து தங்குமிடம் -- சுகச்
சோபனம் நிறைந்து
இறையருள் கனிந்து பொங்குமிடம்! (இஸ்லாம்...)

கடமைகள் ஐந்தும்
கருணை யாளன் கட்டளைகள் -- நபி
நடைமுறை அவற்றில்
சுடரும் ராஜ முத்திரைகள்! (இஸ்லாம்...)

வாழும் தேசம்
வல்லவன் வழங்கும் அருள்கொடைகள் -- அதை
வாழ வைப்பதே
வசிக்கும் மக்கள் நடைமுறைகள்! (இஸ்லாம்...)

அடிமைச் சங்கிலி
நொறுங்கிச் சிதற உடைத்தெறிவோம் -- நாம்
ஆதமின் மக்கள்
அனைவரும் சமமென தலைநிமிர்வோம்! (இஸ்லாம்…)

அடுத்தவர் நெறியை
அவரது வாழ்வை மதித்திடுவோம் -- இதை
தடுப்பவர் எவரே
ஆயினும் அவரை எதிர்த்திடுவோம்! (இஸ்லாம்...)

மறைவிலும் குற்றம்
புரியும் எண்ணம் எமக்கில்லை -- பிறர்
குறைகள் பேசி
குதர்க்கம் செய்யும் வழக்கமில்லை! (இஸ்லாம்...)

உரிமை என்பதை
என்றும் நாங்கள் விடுவதில்லை -- பிறர்
உடைமை கவரும்
கேவலம் எம்மைத் தொடுவதில்லை! (இஸ்லாம்...)

கல்வியில் ஆண் பெண்
என்னும் இரண்டு பிரிவில்லை -- மனக்
கள்ளம் புகுவது
மட்டும் இங்கே சரியில்லை! (இஸ்லாம்...)

ஆண்டவன் கிருபையில்
அவனது கருணையில் தடையில்லை--அவன்
அருளினை இழந்தே
வாழவும் இங்கே இடமில்லை! (இஸ்லாம்...)

No comments:

Post a Comment