Sunday, June 7, 2015

ஐ.ஐ.டி. யின் அடுத்த பக்கம்...!


ஐ.ஐ.டி யில், பெரியார்-அம்பேத்கார் வாசகர் வட்டம்--தடை மற்றும் சர்ச்சைப் பற்றிய விவாதங்கள் பலவாறு பல கோணத்தில் தெளிவாகவும், அவரவர்களுக்கும் உரிய சொந்த பாணியிலும், எழுப்பப்பட்டும், எழுதப்பட்டும், வந்து கொண்டிருக்கின்றன.

அவற்றில் சிலசெய்திகள் வெவ்வேறு வார்த்தைகளில் ஒரே கருத்தோட்டத்தில் நிரம்பியிருக்கின்றன.

ஐ.ஐ.டி., சர்வ வல்லமை படைத்த அறிவு ஜீவிகளின் பயிற்சிக் கூடாரம்
என்றெல்லாம் பேசப்படுகின்றன.

இங்கே தேர்வாகி, வெளிப்பட்டவர்கள் எல்லாம் அறிவுலகத்தின் ஆச்சார்யார்கள் போலத் திகழ்கின்றார்கள். அதனால் உலக வரம்பில் இந்தியா தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் பேசுகிறார்கள்

இந்தப் பெருமைக்குரிய நிறுவனம் இந்திய மக்களின் வரிப்பணத்தால்
உயிர்வாழ்க்கை நடத்துகிறது.

இப்படிக் கூடச் சொல்லலாம், இந்தியாவின் 70 சதவிகிதத்திற்கும் மேலுள்ள அன்றாடங் காய்ச்சிகள் கட்டும் வரிப் பணமும், அறிவு வட்டாரத்தில் அறிமுகமே ஆகாத பாமர மக்கள் கட்டும் வரிப் பணமும் இந்த அறிவுலக ஐ.ஐ,டி. நிறுவனத்தின் போஷாக்காகத் திகழ்கிறது.


இப்படி இருந்தும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் விதிகளை முறித்துப் போடும் உரிமைகூட இந்த நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுவிட்டது.

இட ஒதுக்கீட்டை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. அதனாலென்ன?. "இந்தச் சட்ட விதி எங்களை அசைத்துப் பார்த்துவிட முடியாது' என ஐ.ஐ.டி. தலை தூக்கிக் கூக்குரல் போடக் கூட உரிமை பெற்றுவிட்டது. ஏனென்றால் அது ஒரு தன்னாட்சி பெற்ற அரசு நிறுவனம்.

சிலபல செயல்முறைகளின் அடிப்படையில், குறிப்பிட்ட மேல் மட்ட வகுப்பாருக்கு மட்டுமே அங்கு நுழையக்கூடிய வாய்ப்பிருப்பது போல
தன்னாட்சி உரிமையால் அமைத்துக் கொண்டனர்.

ஒருசில மற்ற வகுப்பாருக்கு கொசுரு போலத் தூவி வழங்கியிருக்கிறார்கள்.
இந்த மேட்டுக்குடி தர்பார் நிறுவனத்திடம் இருந்து புறப்பட்டு வெளிவந்த தயாரிப்புகள், அறிவுஜீவிகள் இதுவரை இந்திய தேசத்திற்கு எத்தனை சதவீதம் பயன்பட்டிருக்கிறார்கள்?

இந்த அறிவுஜீவி தயாரிப்புகள், வெளி நாடுகளில் கூலிக் குடிகளாகக் குடியேறி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அவற்றின் முதலாளிகளுக்கும் கோடிக்கணக்கான மில்லியன் டாலர் லாபங்கள் ஈட்டித் தந்திருக்கின்றனர்.

இப்படி எரிகிற அடுப்பின் ஓரக்கொள்ளிகளில் கொஞ்சம் உருவித்
தங்களின் சொந்த வருமானங்களை உப்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பாக்கியமான அறிவுஜீகளை தயாரிக்கத்தான் இந்திய மக்கள் தங்கள் பணங்களை வாரி வாரி வரியாகக் கட்டித் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஐ.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் அறிவு பூர்வமான அமைப்புகளை அமைக்க உரிமை பெற்றிருக்கிறார்கள்.

அவ்விதம் உரிமைபெற்ற மாணவர்களில் மிகச் சிலர் "பெரியார்-அம்பேத்கார் வாசகர் வட்டம்"அமைத்தனர்.

இந்திய தேசத்தின் மக்கள் பிரச்சனைகள், சமூகத் தாக்கங்கள், அரசியல் போக்குகள், இந்திய இலக்கிய மரபுகள் இவை போன்ற தரமான பிரச்சனைகள் பற்றிக் கூடிக் கலந்து விவாதித்து வந்தனர்.

இப்படி விவாதித்துக் கொண்டிருந்த மாணவர்களைப் பற்றி ஒரு புறம்போக்குக் கடிதம்--தன் கருத்துகளைத் துணிச்சலுடன் எழுதி, தன் எழுத்துக்குத் தானே பொறுப்பேற்றுக் கீழே கையொப்பமிட வக்கற்ற கடிதம்--மத்திய அரசுக்குச் செய்தி சொல்லுகிறது.

உடனே மத்திய அரசு கூடுதல் பொறுப்பெடுத்து அந்த அனாமதேயக் கடிதத்திற்கு அபரிமித மதிப்புக் கொடுத்து அக் கடிதச் செய்தியைப் பற்றி "உடனடி கவனம் செலுத்துங்கள்" எனப் பரிந்துரை வழங்கி சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்திற்கு அனுப்புகிறது.

நல்ல வேளை, இப்பரிந்துரையில் மத்திய அரசு முத்திரையிருந்தது.
உடனடியாக ஐ.ஐ.டி. நிறுவனம் "பெரியார்--அம்பேத்கார் வாசகர் வட்டத்திற்குத் தடை விதித்து ஆணை பிறப்பித்துவிட்டது.

இந்நிலையில் தமிழக மாணவர் அமைப்புகளும், அரசியல் இயக்கங்களும், இந்திய மாணவர் அமைப்புகளும் ஐ.ஐ.டி. ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இது நல்லதொரு சரித்திரச் சமிக்ஞை.

ஐ.ஐ.டி.க்குள் இதுவரை இருவர் பெயர்களில் அமைப்புகள் இல்லை. ஒருவர், இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வடிவமைப்புக்குழுவின் தலைவரான அம்பேத்கார். மற்றொருவர் சமூகச் சீர்திருத்வாதியான பெரியார்.

இவ்விருவர் பெயர்களையும் இணைத்து வாசகர் வட்டத்தை ஐ.ஐ.டி. மாணவர்களில் சிலர் துணிச்சலுடன் முன்னெடுத்தனர்.

இந்தியாவின் உச்சமட்ட அறிவு ஜீவிகளுக்கு இச்செயல் குமட்டலைத்
தந்துவிட்டது. அந்தக் குமட்டல் கக்கியிருக்கும் வாந்திதான் நாற்றமெடுக்கும் ஐ.ஐ.டி.யின் இந்தத் தடைச்சட்டம்.

நாம் இங்கே கவனிக்கக் கூடியது, வெளிப்படையாகத் திசைத்திருப்பும்
சாதுர்யம் நிறைந்த குற்றச் சாட்டுகள் பற்றிய வெறும் விவாதங்களாக
மட்டும் இருக்கக் கூடாது. அதனுடைய அடிவாரத்தில் கிடக்கும், உண்மையின் உச்சி முடியைப் பிடித்து இழுத்து வெளிக்கொணர்வதாக இருக்க வேண்டும்.


பெரியார்--அம்பேத்கார் இவர்கள் வழியே இருவேறு சரித்திரப் போக்குகள் இந்திய வரலாற்றில் நிகழ்ந்திருக்கின்றன. இந்த இருவேறு வரலாறுகள் ஒன்றிணைத்துப் பார்க்கப்பட வேண்டும் எனச் சிந்திக்கும் மாணவர்களின் போக்கு, யாருக்கோ அடிவயிற்றில் கொள்ளியைச் சொருகிவிட்டது. அந்த அலறல்தான் இத்தடைச்சட்டத்தின் திருமுகத்தோற்றம்.

அவர்கள் யார் ?

நாம் குறிப்பிடும் அவர்கள் பெரியார், அம்பேத்கார் அல்லர்.

அந்தப் பெயர்களைக் கண்டு, கேட்டு அவ்விருவரின் வரலாற்று விளைவுகளைச் சந்தித்து வெம்பிப்போய் இருக்கக் கூடிய "அந்த அவர்களை"த்தாம் நாம் குறிக்கிறோம்.

"அந்த அவர்கள்" யார் ?

நாம் மறைத்துப் பேச விரும்பவில்லை."அந்த அவர்களதாம்" R.S.S., மற்றும் அது சார்ந்த துக்கடாக்கள்.

அம்பேத்கார் ஒரு வாசகத்தை முன் வைத்தார். "நான் இந்துவாகப் பிறந்தேன். ஆனால் நிச்சயமாக இந்துவாக மரணிக்க மாட்டேன்"--இதுதான் அவர் முன் வைத்த வாசகம்.

இந்துவாகத் தாம் பிறப்பதற்குத் தான் காரணமல்ல. ஆனால் எந்த நிலையில் மரணிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கத் தான் முயற்சித்துக் கொள்ளலாம் என அம்பேத்கார் அறிவுபூர்வமாக முடிவெடுத் திருக்கிறார்.

இதனடிப்படையில் அவர்தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்திருக்கிறார். பௌதராக மரணித்திருக்கிறார்.

இவ்வளவு தெளிவான வரலாறு நம் கண் முன்னே விரிந்து கிடக்கிறது.
வரலாற்றைப் பொய்யாக ஜோடித்து அதைத் திரித்துக் கூறும் தத்துவத்தையே கோட்பாடாகக் கொண்டிருக்கும் R.S.S. இங்கேயும் தன் கைவண்ணத்தைக் காட்டத் தொடங்கி விட்டது

சம நேர்கோடுகளாக-- ரயில் தண்டவாளங்கள்போல சிந்தித்துச் செயல்பட்டுக் கொண்டிருந்த பெரியார், அம்பேத்கார் கோட்பாட்டின் மீது இங்கே ஒடுக்கப்பட்ட மக்கள் பயணப்படுவார்களே யானால் அதிகாரப் பீடத்திலிருக்கும் மேல்மட்ட வகுப்பாரின் ஆணிவேர் கெல்லி எறியப்பட்டு விடும் என்னும் பேருண்மையைச் சகிக்க முடியாத "அவர்கள்" இந்த இரு பெரும் தலைவர்களையும் இந்திய வரலாற்றின் தீண்டப்படாதவர்களாக மாற்றிவிட வேண்டும் என முடிவெடுத்தனர்.


பெரியாரும் அம்பேத்கரும் வாழும் வரலாறாக இருப்பதனால், அந்த வரலாற்றைச் சிதைத்தால்தான் அவர்களின் கோட்பாடுகள் குப்பைகளாக ஆக்கப்படும் என்ற உண்மையைச் சரியாகப் புரிந்து கொண்டு நடவடிக்கையில் இறங்கி விட்டனர்.

அந்த இருபெரும் தலைவர்களை ஒரே நேரத்தில் சிதைப்பதென்பது தங்கள் சவக்குழியைத் தாங்களே தோண்டிக் கொள்வதற்குச் சமமாகும்.

இதனைப் புரிந்து கொண்டு இரு தலைவர்களையும் வேறு வேறாகப் பிரிக்க வேண்டும் எனும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர்.

அம்பேத்காரை இவர்கள் அவர் ஒரு இந்துதான் என்று சாதித்து வலியப் பிடித்து இழுத்துத் தங்கள் பக்கத்தில் ஆணி வைத்து அடித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்

அம்பேத்கார்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிதாமகர். இந்திய தேசியவாதி. இந்துத்துவாவின் நம்பிக்கையாளர் என உயர் பதவிகளை வழங்கி அவரைத் தங்கள் வசமாக்கிக் கொள்கிறார்கள்.

அதாவது இரு பெரும் சத்தியங்களை வைத்துவிட்டு இறுதியாக முள் கிரீடத்தை அவர் தலையில் அணிவித்துச் சிலுவையில் பொருத்த ஆணிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த முட் கிரீடந்தான் இந்துத்துவா. அதை அம்பேத்கார் தலையில் சொருகி விட்டார்கள்.

அதுசரி... அம்பேத்காரை ஆதிசங்கரர்போல பாவித்து பூஜை சடங்குகளை நடத்தத் தயாரா? அடுத்த கட்டத்தில் இந்துவாக சேர்த்துக் கொள்ளலாம். இதை அவரே வரவேற்கக் கூடும்.

அம்பேத்கார் பாடலை ரிங் டோனாக வைத்திருந்தவரை மகாராஷ்டிரத்தில்
அண்மையில் வெட்டிக் கொன்றுவிட்டு அம்பேத்காரை மட்டும் இந்துவாக்கிக் கொண்டார்கள்.

"நான் இந்துவாகப் பிறந்தேன். அது உண்மை. நான் இந்துவாக வாழ விரும்பவில்லை இது அதைவிட உண்மை. நான் இந்துவாக ஒரு போதும் மரணிக்க மாட்டேன் இது எல்லாவற்றையும் விடப் பேருண்மை." என்று பிரகடனப்படுத்தி விட்டு, வாழ்ந்து மரணித்திருக்கக் கூடிய ஒரு தலைவரின் வாழ்வை நம் கண்முன்னாலேயே மாற்றி எழுதுகிறார்கள், இந்த R.S.S.காரர்கள்.


பெரியாரில் இருந்து பிரித்து அம்பேத்காரை ஒரு ஓரத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டார்கள். வரலாற்று மோசடி புரிந்து விட்டார்கள்.

பெரியாரின் புரட்சிச் சிந்தனைக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாத
இவர்கள், நம் கண் முன்னே வாழ்ந்து மறைந்திருக்கக் கூடிய பெரியாரின் வரலாற்றையும், "இந்தத் திரிபு வரலாற்றுத் திருடர்கள்" தங்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள்.

பெரியாரின் மீதுள்ள முதற் குற்றச் சாட்டு "இவர் பிரிவினைவாதி."
இரண்டாம் குற்றச் சாட்டு "இவர் வாழ்வு முழுவதும் மோசடிகள் நிறைந்த கேவலங்கள் நிறைந்தது " எனத் தமிழக மண்ணில் நின்றே பேசத் துவங்கி விட்டார்கள். நம் கண்ணை விட்டு முழுவதும் மறைந்து விடாத பெரியாரையே மோசடிக்காரர் என்கிறார்கள்.

மத மனிதர்களின் ஒற்றுமைகளைக் குலைக்க ஜாதிப் பிரிவினைகளை
உற்பத்தி செய்திருக்கும் ஒரு அமைப்பை நடுவீதிக்குக் கொண்டு வந்து வெளிச்சம் போட்டார். அந்தப் பிரிவினைவாதிகளை அடையாளம் காட்டிய பெரியாரை, இந்தப் பிரிவினைவாதச் சக்திகள் "பிரிவினைவாதி" என விஷம் கக்குகின்றன

"பெரியார்--அம்பேத்கார் வாசகர் வட்டம்" அமைத்த அறிவு ஜீவிகளான
ஐ.ஐ.டி. மாணவர்கள் ஒரு சரியான பார்வையைத்தான் முன்வைத்திருக்கிறார்கள், என்பதை உண்மையாக விளங்க முடிகிறது.
இவர்களை இணைத்துப் பார்ப்பதால், எவரெவர்கள் கதிகலங்குகிறதோ
அவர்கள் நடவடிக்கைகளை உற்றுப் பாருங்கள்.

இந்தியாவில் கண் முன் நடந்த வரலாறுகளையே திரித்துப் பேசி நடவடிக்கை எடுக்கத் துவங்கி விட்டார்களே இதில் இருந்தே உண்மை புரியவில்லையா?
பெரியார் தேசவிரோதியாகி விட்டார். பிரிவினைவாதியாகி விட்டார்.
அம்பேத்கார் இந்துத்துவாவாதியாகி விட்டார். இன்னும் கொஞ்ச நாட்கள் சென்று, அம்பேத்கார் காவி அணிந்து, சாவர்க்கரின் அந்தரங்கக் காரியதரிசியாக இருந்தார் என்ற வரலாறும் வரலாம் நம் பிள்ளைகள் அதைப் பாடமாகவுப் படிக்கலாம்.

ஒரு கொள்கையையோ மதத்தையோ ஏற்றுக் கொள்வதானால் அவர்தான் அந்த உரிமையை அவருக்குள் வைத்திருக்க வேண்டும்.

வெளியிலிருந்து இன்னொருவர், மற்றொருவரை "இன்னார் நீ "எனத் தீர்மானிக்க உரிமையற்றவர்.

ஒருவன் இந்துவா? முஸ்லிமா? பவ்த்தனா? சமணனா? சீக்கியனா?
கிருஸ்துவனா? என்று தீர்மானிக்கும் உரிமை அவனுக்குத்தான் இருக்கிறது.

அவனுக்குள் இதை வேறு யாரும் திணித்தால் அது அடாவடித்தனம். அது வற்புறுத்தி மத மாற்றம் செய்யும் குற்றமாகும்.

மீடியாக்களில் சமீப காலங்களில், பேசும், எழுதும் R.S.S. மற்றும் பாஜக உறுப்பினர்கள் ஒரு பிரபகண்டா பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

அம்பேத்கார் ஒரு இந்துதான். ஏன்? பெரியார் கூட இந்துதான். முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள் கூட இந்துகள்தாம் எனத் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். மறுக்கிற உரிமை அவர்களுக்குக் கிடையாது. ஏற்கிற, மறுக்கிற உரிமை எங்களுக்குத்தான் உண்டு என அத்துமீறி அக்கிரமம் செய்கிறார்கள்.

இதுதான் கட்டாய மத மாற்றக் குற்றச் செயல். தண்டனைக்குரியது.
இந்தியத்தின் மக்கள் அனைவரும் இந்தியர்கள்தாம். இது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் பெருமிதமான சட்ட வரம்பின் உச்சம்.
இந்தியர்கள் அனைவரும் இந்துகள் என்று சொல்வது ஆதிக்க அதிகார
ஆணவத் திணிப்பின் அதள பாதாளப் படுகுழி.

காந்தியை உச்சியில் அழுத்தி, கீழ புதைக்கத் துவங்கி இருக்கிறார்கள்.
கோட்சேக்கு மாலை போட்டுச் சிலை சமைக்கிறார்கள்.

ஆசிய ஜோதி நேருவை அசிங்கப் படுத்துகிறார்கள். நேருவை மதித்த அவர் நண்பர் பட்டேலைக் காங்கிரஸில் இருந்து பிடுங்கி, நேருவுக்கு எதிரியாக்கிப் பிரமாண்டச் சிலை நிறுவுகிறாரகள்.

அம்பேத்காரை சாவர்க்கருக்குப் பக்கத்தில் குந்த வைக்கிறார்கள். பெரியாரைத் தேசத் துரோகியாக்கி அவர் உருவப் படத்தில் சிறுநீர் கழிக்கிறார்கள்.

மத்தியில் முழு அதிகாரம் பெற்று ஆட்சியில் அமர்ந்த ஒரு ஆண்டிற்குள்ளேயே இந்திய வரலாறு சல்லடையாகத் துளையிடப்பட்டுச் சீரிழிந்து சிதைந்து போனது. இந்த அடையாளத்தின் வெளிப்பாட்டைச் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திற்கு உள்ளேயும் உருவாக்க பிள்ளையார் சுழி இட்டுவிட்டார்கள்.

No comments:

Post a Comment