Sunday, July 31, 2016

அடையாளம் கரைந்த அவமானம்...! -6



திராவிடக் கட்சிகளுடன் 1960 ஆம் ஆண்டுகளில் இருந்து ஏற்பட்டிருந்த நட்புத் தொடர்பு முஸ்லிம்கள் மத்தியில் கொஞ்சம் கூடுதலாகவே பங்கெடுத்தது.
 
நெருக்கம், முஸ்லிம்கள் பக்கம் சற்று அதிகம் இடம் பிடித்தது.

லீகின் நட்பை தன்வசம் நிலைப்படுத்திக் கொள்ளத் தி.மு.,வும் அந்தரங்கத்
தீவிரம் காட்டியது. அதன் லாபத்தைத் தி.மு.. மிகச் சரியாகவே கணித்திருந்தது. தி.மு..வின் பெரிய லாபகரமான அரசியல் வணிகம் அதுவாக இருந்தது.

முஸ்லிம் லீகின் எல்லா மேடைகளிலும் தி.மு..விற்குக் கிட்டத்தட்ட நல்லதோர் பங்கு தரப்பட்டது. காயிதெ மில்லத் மறைவுக்குப் பின்தான் இது அதிகம் அதிகம் சாத்தியமானது.

முஸ்லிம் லீக் நடத்தும் மீலாது மேடைகளிலும் தி.மு..வுக்குக் கூடுதலாக வாய்ப்பு வாரி வழங்கப்பட்டது. முஸ்லிம் லீக் மாநாடுகளில் தி.மு..விற்குக் கட்டாய இடம் இருந்தது, ஒரு சில இடங்கள் தவிர.

இதனால் தி.மு..வுக்கத்தான் படுபயங்கர லாபகரமான பாக்கியம் கிடைத்தது. தி.மு..வும் இவற்றைப் பூரணமாகச் சுவீகரித்துக் கொண்டது.
ஒரு கணிசமான வாக்கு வங்கி தி.மு..வின் கோட்டைக்குள் குவிந்தன.

தி.மு.. பெற்றுக் கொண்ட அளவில் மூன்றில் ஒரு பங்குக் கூட முஸ்லிம் லீகிற்கு எதுவும் வந்து சேர்ந்து விடவில்லை. மாறாக லீகின் கோட்டைச் சுவர்களில் பொத்தல்கள் விழத் துவங்கின.

முஸ்லிம் லீக் இளைஞர்கள், முஸ்லிம் லீகின் சில பல தலைவர்கள், முஸ்லிம் சமுதாய மக்களில், ஒரு கணிசமான பகுதியினர் தி.மு..தான் தம்மின் ஆத்ம பந்த நம்பிக்கை என நம்பத் தொடங்கினார்

தி.முக.வின் தலைவர் மு.கருணாநிதி, முஸ்லிம் லீக் மாநாட்டு மேடைகளில் தோன்றி, "முஸ்லிம்களைத் தாக்க நினைப்பவர்கள் எங்கள் பிரேதத்தின் மீது ஏறிச் சென்றுதான் தாக்க முடியும்" என்று அவருக்கே உரிய பாணியில் வார்த்தைப் பின்னல்களைச் சரம் கோத்து வீசினார். என்ன நடக்கும் எனக் கருணாநிதி நினைத்தாரோ அது நடந்தேறியது.
 
கூட்டத்திலிருந்து முழு நம்பிக்கையோடு "நாரே தக்பீரும் அல்லாஹ் அக்பரும் மேகத்தைத் தொட்டுச் சிதறிச் சரிந்தன.

கருணாநிதி என்ன என்ன நினைத்துச் சொன்னாரோ அவைகள் நடக்கத் துவங்கின.

"தமிழக முஸ்லிம்கள் நாலா பக்கம் இருந்து தாக்கப்படப் போகிறார்கள் .அவர்களுக்குப் பாதுகாப்பு அரணே தி.மு..தான்" என்ற ஜோடனைக் கட்டி
எழுப்பப் பட்டது. முஸ்லிம்கள் மத்தியிலும் இப்படியொரு விநோத உணர்வு
வேர் பிடிக்கத் துவங்கியது.

இப்படி எல்லாம் ஒரு காலக் கட்டம் உருவாகத் துவங்கும்போது நம்மிடையே காயிதே மில்லத் இல்லை. காயிதெ மில்லத் காலத்தில் கருணாநிதியும் இப்படி எல்லாம் பேசியிருக்க மாட்டார். அந்த அரசியல் நரிக்கு அதெல்லாம் தெரியம்.

காயிதே மில்லத் காலத்திற்குப் பின்னர் தமிழகத்திற்குத் திருச்சி அப்துல் வஹாப் ஜானி சாஹிப் தலைமை ஏற்றார்.
 
இவர் தலைமை ஏற்ற விதமே ஒரு தினுசானது. மாநிலச் செயற் குழுவிலோ, பொதுக் குழுவிலோ இவருக்கு ஆதரவாக ஐந்து உறுப்பினர்கள் கிடையாது. இயக்கத்தினரிடையும் எந்தப் பெரும் செல்வாக்கும் இருந்தது இல்லை. ஆனாலும் காயிதே மில்லத்தால் இவருக்கு எம்.எல்.சி.பதவி பெற்றுத் தரப்பட்டு இருந்தது.

பிறகு எப்படி மாநிலத் தலைவரானார்? அது தனிக் கதை. இங்கு அவசியமில்லை. மாநில முஸ்லிம் லீகின் உறுப்பினர்கள், மற்றும் தலைவர்களின் அந்தரங்க முடிவு அது. ஒரு தகவலாக மட்டும் இங்கே இருந்தால் போதுமானது.
 
ஆனாலும் ஒரு வகையில் ஜானி சாஹிப் உறுதியானவர். "முஸ்லிம் லீகை, முஸ்லிம் லீகாத்தான் வைத்துக் கொள்ள வேண்டும். கூட்டணிகளுடன் பிணைந்து விடக் கூடாது." என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார்.
 
கூட்டணி தி.மு..விடம், உள்ளாட்சித் தேர்தல்களிலோ, சட்ட மன்றத் தேர்தல்களிலோ, பாராளு மன்றத் தேர்தல்களிலோ முஸ்லிம் லீகிற்கு உரிய பிரதிநிதித்துவத்தையும், உரிய தொகுதிகளையும் தி.மு..விடம் சண்டை போட்டே வாங்கி விடுவார்.

"கலைஞர் பாய் கலைஞர் பாய்" என்று அழைத்துக் கொண்டே காரியத்தைச்
சாதித்து விடுவார்.

அப்துல் வஹாப் ஜானி சாஹிபின் இந்த அணுகு முறையால் முஸ்லிம் லீக் இளைஞர்களுக்கு வேறு ஒரு வகையான உத்வேகம் தலையெடுக்க ஆம்பித்தது.

இனிமேல் லீகர்களுக்குப் பதவி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அது வந்தே ஆக வேண்டும் எனும் உணர்வு நன்றாக எழுந்தது. பதவி பெறுவதற்குத்தான் முஸ்லிம் லீக் என்னும் உணர்வும் கூடவே வளர்ந்தது.

இப்படி ஒரு காலக் கட்டம் துவங்கும் வேளையில், அப்துல் வஹாப் ஜானி சாஹிப் தலைமைப் பதவி மாற்றப்பட்டது. அப்துல் வஹாப் ஜானி சாஹிபும் தமிழகச் சட்ட மன்ற மேலவை (எம்.எல்.சி.) உறுப்பினராக மூன்று முறைப் (18 ஆண்டுகள்) பதவி வகித்திருந்தார்.

இப்படிப் பதவி வகித்தவர்களால் சமுதாயத்திற்கு என்ன நம்மைகள் கிடைத்தன

தமிழக இயக்கத் தோழர்களே தனியே அமர்ந்து விருப்பு வெறுப்பின்றி இதற்கான பதிலைத் தேடிக் கொள்ளட்டும்.

No comments:

Post a Comment