Sunday, July 31, 2016

அடையாளம் கரைந்த அவமானம்...! -5



1971--ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் முஸ்லிம் லீக் சார்ந்த 6 நபர்கள் தமிழகச் சட்ட மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தில்லிப் பாராளு மன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தளபதி திருப்பூர் மைதீன் அண்ணன், எம்.. அப்துல் லத்தீப் சாஹிப், வந்தவாசி கே.அப்துல் வஹாப் சாஹிப், பள்ளப்பட்டி அப்துல் ஜப்பார் சாஹிப், கோதர் மைதீன் சாஹிப், அபு சாலிஹ் சாஹிப் ஆகியவர்கள் தமிழகச் சட்ட மன்ற உறுப்பினரானார்கள். பெரிய குளம் தொகுதியில் இருந்து மதுரை ஷரீப் அண்ணன் பாரளு மன்றத்திற்குத் தேர்வானார்.

இந்தத் தேர்தலில்தான் ஒரு தீங்கு தலைதூக்கியது. தென்ஆர்க்காடு மாவட்டப் புவனகிரி தொகுதியில், லால்பேட்டையைச் சேர்ந்த அபு சாலிஹ் முஸ்லிம் லீக் உறுப்பினராக நிறுத்தப் பட்டார்.

ஆனால் இவருக்குள்ளே ஒரு பச்சைத் தி.மு..காரர் விழித்துக் கொண்டே இருப்பார். அது சற்று வெளிப்படையாகவும் தெரியும்.

நான், 1968-69--யில் இருந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவனாக இருந்து வந்தேன்.

அபு சாலிஹ் சிதம்பரத்தில் வடுக நாதன் தியேட்டர் பக்கத்தில் அசைவ ஹோட்டல் நடத்தி வந்தார். எனக்கு அப்போதே சற்று அறிமுகமானவர்தான்.
இவருக் குள்ளே தி.மு..காரன் விழித்துக் கொண்டிருக்கிறான் என்பது என் போன்றவர்களுக்குத் தெரியும்.

லால் பேட்டை நகர் முஸ்லிம் லீக் அதிக அழுத்தம் கொடுத்து இவரைப் புவனகிரி முஸ்லிம் லீக் வேட்பாளராகக் காயிதெ மில்லத் அனுமதியுடன் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்து விட்டது.

அபு சாலிஹ் புவனகிரி தி.மு.. வேட்பாளராகப் போட்டியிட அடி மனத்தில் ஆசைப்பட்டார். ஆனால் தி.மு..கூட்டணியில் முஸ்லிம் லீகிற்கு அத்தொகுதி கேட்டு வாங்கப் பட்டது. அதற்குப் பின்னணியிலும் அபு சாலிஹே இருந்தார். தி.மு.. தொகுதியைப் பெற்றிருந்தால் இவருக்குத் தொகுதி வந்திருக்காது.

தன் தொகுதி வெற்றி வாய்ப்பில் அவருக்கு ஒரு சந்தேகமும் வந்து விட்டது.
முஸ்லிம் லீக் இத் தொகுதியில் புதியதாக நிற்கிறது. தி.மு..உள் வேலை செய்து விட்டால் என்னாவது

அதற்கும் ஒரு வழி கண்டு பிடித்தார்.

நேரே சென்னை சென்றார். காயிதெ மில்லத் டெல்லி செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து விட்டார். இதை அறிந்து, அபு சாலிஹ் அங்கேயே விரைந்து சென்று விட்டார்.

தன் வெற்றி வாய்ப்பு குறித்துள்ள சந்தேகத்தைக் காயிதே மில்லத்திடம் அபு சாலிஹ் விளக்கினார். அதற்கு ஒரு மாற்று வழியையும் அவரே முன் வைத்தார்.

"முஸ்லிம் வேட்பாளராகவும், அதே சமயத்தில் கூட்டணிக் கட்சியான "நம் தி.மு.." வின் உதய சூரியன் சின்னத்திலும் நின்றால் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அனைவரின் வெற்றி வாய்ப்பு நிச்சயமாகிவிடும்" எனக் கூறிக் காயிதெ மில்லத்திடம் அனுமதியைக் கேட்டார்.

காயிதெ மில்லத்திறகுக் கடுங் கோபம் வந்து விட்டது. ஆனாலும் அதைப் பூரணமாகக் காட்டாமல் " தி.மு..வின் சின்னத்தில் நிற்க வேண்டுமானால்
தி.மு.. கட்சியில் போய்ச் சேர்ந்து நின்று கொள்ளுங்கள். முஸ்லிம் லீகில்
இதற்கு நிச்சயம் இடமில்லை" என்று கூறி விட்டுக் காயிதெ மில்லத் வேகமாகப் புகை வண்டி ஏறிச் சென்று விட்டார்.

இறுதியாக அபு சாலிஹ் முஸ்லிம்லீக் வேட்பாளராகவே நின்று வெற்றியும் பெற்றார்.
 
அதன் பின் ஐந்து ஆண்டுகள் சென்றது. பின்னர் முஸ்லிம் லீக் பக்கம் அவரைப் பார்க்க முடியவில்லை. இறுதியில் அண்ணா தி.மு.. கரை வேட்டி கட்டிச் சிதம்பரத்தில் நடமாடிக் கொண்டிருந்தார்.

அபு சாலிஹ் புகை வண்டி நிலையத்தில் காயிதெ மில்லத்திடம் பேசிச் சென்று ஓரண்டு கடந்தது. காயிதெ மில்லத் நம்மை விட்டு மறைந்து விட்டார்.
பலப்பல முஸ்லிம் லீகர்களின் மன நிலையைத்தான் அபு சாலிஹ் அன்று பிரதி பலித்தார். அதனால்தான் காயிதெ மில்லத்தின் கோபமும், முடிவும் கடுமையாக அன்று வெளிப்பட்டது.
 
"முஸ்லிம் லீக் வேட்பாளர்கள், லீக் தரும் சின்னத்தில்தான் நிற்க வேண்டும். தோழமைக் கட்சிச் சின்னங்களே யாயினும் அதில் நிற்கவே கூடாது. அப்படி நிற்பதாயின் அவர்கள் அந்தக் கட்சியிலேயே போய்த் சேர்ந்து கொள்ளட்டும்." என்ற காயிதெ மில்லத்தின் அபாய அறிவிப்பு அன்றே வெளியாகி விட்டது.

காயிதெ மில்லத் உடல் நலமும் பாதிக்கப்பட்டு விட்டது. தொடர்ந்து
மரணமும் நிகழ்ந்து விட்டது.

தோழமை என்பது வேறு. தாய்ச் சபை என்பது வேறு. நமக்குள் கூட்டணிதான் இருக்கிறது. திருமணம் போல கொடுக்கல் வாங்கல் உறவு முறை வைத்துக் கொள்ள வில்லை. இந்த அரசியல் ஞானம் தவறிப் போய்விடுமோ? என்ற அச்சம் காயிதெ மில்லத்திற்குக் கடைசிக் காலக் கட்டத்தில் இருந்திருக்கலாம்...? இறைவனே அதை அறியக் கூடியவன்.

முஸ்லிம் லீக் எப்படிச் சரியப் போகிறது? எங்கே கவிழப் போகிறது? என்ற முன்னறிவிப்பு முஸ்லிம் லீக் கீழ் வானத்தில் அன்றுதான் உதயமானது.

No comments:

Post a Comment