Sunday, July 24, 2016

அடையாளம் கரைந்த அவமானம்...! -4



ஒருசில நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை சமூகங்களுக்கு, இறைவன் வழங்கியருளும் தலைவர்களில் ஒருவராக வாழ்ந்து காட்டியவர், காயிதெ மில்லத்.

பலப்பலச் சோதனைக் காலங்களில் வேதனைகளைத் தானே ஏற்றுக் கொண்டும் தன்னுடைய ஆளுமையைத் தக்க வைத்துக் கொண்டும் இறையருளால் நிலைகுலையாத உன்னத மனிதர் காயிதெ மில்லத்.

பென்னம்பெரிய உச்ச நிலை கண்டறிந்தவர். அப்போதும் தகுதி மீறித் தலை கனத்துக் கொள்ளாதவர். பல சில்லறை மனிதர்களால் அவருக்கு வீழ்ச்சிக் குழிகள் வெட்டப் பட்ட போதும் அதில் விழுந்தும் சாதனைப் படைத்தவர்.  
அப்போதும் பதறித் துடித்து நொந்து கொள்ளாதவர்,காயிதெ மில்லத்.

இன்றைக்குச் சுமார் 60, 70 வயதைத் தொட்டவர்கள் நேரில் பார்த்து பழகும் வாய்ப்புப் பெற்றிருந்த அந்த மாமனிதர், நம் கண் முன்னே சாதரணமாக நடமாடிய மனித மாணிக்கம்.

காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் கண்டெடுத்துக் கட்டிக் காத்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், அவர் காலத்தில் ஏற்றப் படிக் கட்டுகளிலேயே ஏறிச் செனறது.

எந்த மனிதரும் இந்த உலகில் ஒர் நாள் இல்லாது போகித்தான் ஆக வேண்டும். அந்த இறை நியமப்படி இன்று காயிதெ மில்லத் நம்மிடையே இல்லை.

காயிதெ மில்லத் தூக்கிச் சுமந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், காயிதெ மில்லத்தின் தோள்களை இழந்த பின்னர், உச்சத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கீழ் நோக்கி உருண்டு வருவதைச் சரித்திரம் நம் கண் முன் சித்திரம் தீட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்தச் சரிவுக்குச் சமுதாயம் காரணமா? சமுதாயத்தை வழி நடத்திய தலைமைகள் காரணமா? எனற பட்டி மன்றங்களைச் சுவாரசியமாக
ஏசியும், பேசியும் கொண்டிருப்பது ஒரு கால விரையம்தான். காலத்தை அவமதிப்பது வரலாற்றின் வக்கணையாகும்.
 
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எடுத்து வந்த சில நிகழ்வுகளையும்,
முஸ்லிம் லீகின் தலைமைகள், தங்களைத் தங்கள் இயக்கத்தவர்களிடம்
மௌனமாகப் பெருமைப் படுத்திப் பிரச்சாரப் படுத்திய அணுகு முறைகளையும், தலைமைகளின் தனி அபிலாஷைகளையும் நாம் நம் கண்முன் நிறுத்திப் பார்க்கும் போது, வீழ்ச்சியின் விகிதாச்சாரம் படீரென வெளிப்பட்டு விடுகிறது.

காயிதெ மில்லத்திற்கு அடுத்து வந்த லீகின் அகில இந்தியத் தலைவர்களைத் தனியே இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசிக் கொள்ளுவோம்.

காயிதே மில்லத் காலத்திற்குப் பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தமிழகத் தலைமைகளையும், இயக்க நடவடிக்கைகளையும், ஜன்னல் வழியே வெளியே தெரியும் காட்சிகளைப் போல ஓரளவுக்கு இங்கே பார்த்து வைப்போம்.

ஏனென்றால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தொடக்கக் காலத்தில் இருந்து முஸ்லிம் லீகின் தலைமையை அகில இந்தியத்திலும், தமிழ் ராஜ்யத்திலும் காயிதெ மில்லத்தான் ஏற்றிருந்தார்.

இன்றையத் தமிழ் மாநிலம் என்னும் அன்றையத் தமிழ் ராஜ்யம் பெயரை முதலில் புரிந்து கொள்வதிலிருந்து, நமது கண்ணோட்டம் தொடங்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

தமிழ் ராஜ்யம் என்ற பெயரில்தான் தமிழ் மாநிலம் செயல் பட்டது. இந்தப் பெயரை முஸ்லிம் லீக் விடாப்பிடியாக வைத்திருந்தது. இதற்கு முக்கியக் காரணம், தமிழ் ராஜ்ய முஸ்லிம் லீக் பொதுச்செயலாளராக வாழ்வு முழுவதும் தொடர்ந்து பதவி வகித்து வந்த, காயிதெ மில்லத் சகோதரர் (தம்பி) K.T.M. அஹமது இப்றாஹிம் சாஹிப்தான்.
 
ராஜ்யம் என்பதை மாநிலம் எனத் தமிழ்ப் படுத்த வேண்டுமெனப் பலரும் அவரிடம் கேட்டுக் கொண்டார்கள்.கேட்டுக் கொண்ட அனைவரும் அன்றைய இளைஞர்கள். ஆனால் K.T.M. அதற்கு ஒப்புக் கொள்ள
மறுத்து விட்டார்.

ராஜ்யம் என்ற சொல்லுக்கு மாநிலம் என்பது சரியான மொழிபெயர்ப்பே இல்லை. மாநிலம் என்றால் விசாலமான இடம் என்று பொருள். உலகம் என்றும் பொருள்.
 
அதனால்தான் உமறுப் புலவர் சீறாப்புராணத்தில் நபிகளாரைக் குறிப்பிடும் பொழுது,
 
"மாநிலம் தனக்கோர் மணிவிளக் கெனலாய்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"அண்ணல் நபி ஏதாவது ஒரு மாவட்டத்திற்கு மட்டுமா மணிவிளக்கு?" எனக் கேள்வி கேட்டு, மாநிலம் எனும் மொழிபெயர்ப்பில் உள்ள குறைபாட்டைச் சுட்டிக் காட்டி மறுத்து விட்டார். அவர் சிறந்த அட்வகேட் அதனால் ஒரு சொல் முழுப் பொருள் தரவேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்.

K.T.M. அஹமது இப்றாஹிம் சாஹிப் காலம்வரை மாநில முஸ்லிம் லீக் என்ற வார்த்தைப் பிரயோகப் படுத்தப்பட வில்லை.

K.T.M., காயிதே மில்லத்திற்கு முன்பே மரணித்து விட்டார். இதற்குப் பின்பு
தமிழ் மாநிலமும், தமிழ் ராஜ்யமும் கலந்தே பிரயோகிக்கப்பட்டது.

காயிதெ மில்லத் காலத்திற்குப் பின்னர் ராஜ்யம் என்ற பதம் முழுவதும் பூரணமாகப் புறம் ஒதுக்கப்பட்டது.

தமிழ் மாநிலம் என்ற சொல்லாக்கம் மட்டுமே இயக்கத்தின் பெயரோடு ஒட்டிக் கொண்டது.

இந்த இடத்தில் இருந்துதான் நம் கவனத்தை ஆழாகமாகக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

இந்தக் காலக் கட்டம் தமிழகமெங்கும் சில சொல்லாடல்கள் தமிழாக்கம் பெற்றன. செந்தமிழ் என்ற முழக்கத்தோடு மக்களைச் சந்தித்தன.
மக்களிடம் செல்வாக்கும் பெற்றன.

அப்பொழுது அழகுத் தமிழ், பொது மேடைகளிலும் ஆரவாரம் செய்தது.
மக்கள் பயன்பாடு அதிகம் பெற்றிராத, மேட்டுக்குடி மக்களே பயன்படுத்திய சமஸ்கிருத சொற்கள் அதற்குரிய கிழட்டுத்தனத்தோடு தற்கொலை செய்ய ஆரம்பித்தன.

இதற்குத் திராவிட முன்னேற்றக் கழகமே முக்கிய காரணம். அண்ணாவும் அவரின் சொற்பொழிவு பட்டாளமும் மேடைகளில், எழுத்து ஊடகங்களில், திரைத் துறைகளில் தமிழ்ச் சொல்லாடலையும், ஒரு தினுசான நாத்திகத்தையும் அதிக அளவில் மேலும் மேலும் முன்னெடுத்துச் சென்றார்கள்.

காங்கிரஸ் பேரியக்கம் மேட்டுக்குடிகளோடும் அவர்களது மொழியாடல்களோடும் சங்கமமாகிக் கிடந்தது.

பொது மக்கள் காங்கிரஸை வெறுக்கவும் ஜமீன்தார் கட்சி எனப் புறம் தள்ளவும் இது போதுமான காரணமாக உறுதியானது.

ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் செல்லப் பிள்ளையாகத் தி.மு.. வளர்த்தெடுக்கப் பட்டது.
 
நவீனமாக அண்ணாவின் தலைமையில் புறப்பட்டு வந்த அந்த இயக்கம் ஆழமாகவே வேர் பதிக்க ஆரம்பித்தது.

தமிழக மக்கள் மத்தியில் இது ஒருமாதிரியான உத்வேகம்தான்.

இந்தக் காலக் கட்டத்தில், அதாவது 1960 --ஆம் ஆண்டுகளின் பக்கத்தில் காயிதெ மில்லத்தும் அண்ணாவும் ஒரு புதிய கூட்டணிச் சிந்தனைக்குள்
வரத் துவங்கினர்.

காங்கிரஸ் எப்போதுமே தமிழகத்தில் பாதிப் பலத்துடன் கூடிய வாக்குகள் கூடப் பெற்றிராத கட்சி. ஆனால் அதுதான் அரசாண்ட கட்சி.காங்கிரசின் எதிர்ப்புகள் சிதறிக் கிடந்தன. அதனால் வெற்றி பெற்று ஆளும் கட்சியாகக்
காங்கிரஸ் அரசாண்டது.

 
எதிர்ப்புகளை ஒன்றிணைத்தால் காங்கிரஸ் காணமற் போய்விடும். இந்தச் சூத்திர விதியைக் காயிதெ மில்லத் முன் வைக்க, தி.மு.. முழுச் சம்மதம் தெரிவிக்க, சற்றுப் பொறுத்து இராஜ கோபாலச்சாரியார் பக்கம் வர, பொது உடைமை இயக்கங்களும் ஒரு மாதிரி ஒத்துழைக்கத் தமிழகத் தேர்தல் களத்தைக் கூட்டணியினர் சந்தித்தனர்.

இதன் முழு வெற்றியை 1967--ஆம் ஆண்டு சந்தித்தது. தி.மு.. தமிழக ஆட்சியில் வந்து அமர்ந்தது. அன்று சரிந்த காங்கிரஸ், சல்லடை போல ஓட்டைகள் பெற்று இன்னும் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் லீக், தி.மு.. கூட்டணி, 1962--யில் முதல் முதலாகத் தேர்தலைச் சந்தித்தது. அதில் தி.மு.. முன்னேற்றம் கண்டது. ஆனாலும் முஸ்லிம் லீக் அதைச் சந்திக்க வில்லை.

1967--யில் கூட்டணிகளின் சாதனைப் பலத்தால் தி.மு..வுககு தமிழகத்தின் ஆட்சி கைக்கு வந்துவிட்டது.
 
இந்தக் காலக் கட்டங்களில் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு சோதனையும் கலந்து கூடவே வந்தது.

முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் தி.மு..வினரின் பேச்சாலும், எழுத்தாலும் அதிகமே கவரப்பட்டார்கள்.
 
முஸ்லிம் லீக் --தி.மு.. அரசியல் கூட்டணிதான் என்ற உண்மை உணர்வு சற்று மங்கியது. கிட்டத்தட்ட தாயத்தார் உறவு போல நெருக்கம் சற்று அதிகரித்தது.

காயிதெ மில்லத் இதில் கவனம் செலுத்தினார் என்றே சொல்ல வேண்டும். உறவின் நட்பு குறையாமலும் தம் சமுதயத்தவர்கள், இயக்த்தவர்கள் திசை தப்பிப் போகமலும் கவனமாக, நுணுக்கமாக அரசியல் காயை நகர்த்தி வந்தார்.

 1967--ஆம் ஆண்டு தி.மு.. ஆட்சி காலத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் இந்தச் சேதாரம் சற்றுக் கூடியது.
 
1971--யில் மு.கருணாநிதி தி.மு.. கட்சி மற்றும் ஆட்சித் தலைமையை ஏற்றார். இவர் காலத்தில் இந்தச் சேதாரம் இன்னும் கொஞ்சம் மேல் நோக்கிப் படியேறியது.

இறைவன் நாட்டப்படி 1972--ஆம் ஏப்ரல் 4--ஆம் தேதி காயிதெ மில்லத்தும்
மறைந்து விட்டார்.

தி.மு..--முஸ்லிம் லீக் கூட்டணி தி.மு.. ஆட்சிக்கு வலுசேர்த்தது. ஆனால் தாய்ச்சபைக்குச் சலனத்தைக் கூடவே கூட்டியும் வந்தது.

No comments:

Post a Comment