Monday, July 13, 2015

கல்வியில் இல்லை தவிர்ப்புகள் கற்றல் என்பதே முடிவுகள்...!


மகாராஷ்ட்ர அரசு ஒரு பிரச்சினைக்குத் தீத் தூவி இருக்கிறது.

வேதப் பாட சாலைகளுக்கு மற்றும் மதரஸாக்களுக்கு உரிய உரிமங்களைப் பறித்து விட மராட்டிய அரசு முடிவு செய்திருக்கிறது.
மாநில அரசு உதவிகளையும் மானியங்களையும் பெறத் தகுதி பெறும் கல்வி நிலையங்கள் மாநில அரசின் கல்வித் திட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். இப்படி அரசு முடிவெடுப்பதில் முழுமையான நியாயம் இருக்கிறது.

மாநில அரசின் மானியம் பெறும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களின் பாடத் திட்டத்தில் கல்வித்துறையின் பாடமுறைகளைப் பின்பற்றுவது ஓர் கட்டாயம்தான்.
 
வேதப் பாட சாலைகளில் சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாகப் பயிற்றுவிப்பதற்குப் பூரண உரிமை உண்டு. அதே போல மதரஸாக்களில் அரபி மொழிப் பாடத்தைப் பயிற்றுவிக்கவும் பரிபூரண உரிமை உண்டு.

வேதப் பாட சாலையில் இந்துத்துவா முழுமையாகச் சொல்லித் தரப்பட வேண்டும். மதரஸாக்களில் இஸ்லாமியத்துவம் பூரணமாகக் கற்றுத்
தரப்பட வேண்டும். இவைகளில் பிரச்சனையில்லை.

ஆனால் அந்த இரு கல்விக் கூடங்களிலும் நிச்சயமாகக் கணிதம், விஞ்ஞானம், சமூகவியல், பொருளாதாரம், அரசியல் போன்ற பாடத் திட்டங்களும் கட்டாயமாக இருந்தாக வேண்டும். இதை ஏற்க மறுக்கும் கல்வி நிலையங்கள் உரிமத்தை உடனடியாக ரத்துச் செய்வது அரசின் கட்டாயக் கடமைதான்.

மத போதனைக் கூடங்களிலும், மார்க்கக் கல்விக் கூடங்களிலும் உலகியல் கல்விக்குத் தடையுள்ளது என மதவுணர்வாளர்கள் முடிவெடுத்தால் அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இஸ்லாத்தில் கொள்கை ரீதியாக ஒரு தெளிவிருக்கிறது.

நபிகளார் காலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட ஒரு செயல். ஒரு போர் நடைபெறுகிறது. இஸ்லாத்தைக் கொள்கை வடிவில் புறக்கணிப்போர்க்கும் முஸ்லிம்களுக்கும்தான் அந்தப் போர்.

முடிவில் முஸ்லிம்கள் வெற்றி பெறுகின்றனர். எதிர்ப் பக்கத்துப்
படைவீரர்கள் கைதிகளாகப் பிடிபட்டனர்.
 
நபிகளார் முன்பாகக் கைதிகள் கொண்டு வந்து நிறுத்தப் பட்டனர்.
 
நபிகளார் தீர்ப்புத் தருகின்றார்கள்.
 
கைதிகளில் வசதி படைத்தோர் உரிய பணத்தைக் கட்டி விட்டு விடுதலை பெறலாம்.
 
வசதியற்றோர் ஐந்து பெண்களுக்குத் தந்தையாக இருந்தால் விடுதலை பெற்றுச் செல்லலாம்.

மீதமுள்ளவர்களில் கல்வி கற்றவர்கள் இருப்பின் முஸ்லிம்களின் பத்துப் பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுத்து விட்டு விடுதலை பெறலாம்.
இது நபிகளார் அறிவிப்பு.
 
எதிர்க் கொள்கையாளர்கள் கற்றுத் தரும் கல்வியில் எந்த அளவு சம்மதமான கல்வி கிடைக்கும்? விஷமத் தனத்தை அவர்கள் விதைக்க மாட்டார்களா?

நபிகளார் இவைபற்றிக் கவலைப்படவே இல்லை. முதலில் கல்வி அறிவு. அடுத்த கட்டத்தில் அக் கல்வியில் உள்ள விபரங்கள் பற்றிய விவகாரங்கள்.

இப்படி ஒரு தெளிவு.
 
கல்வி எங்கிருந்தாலும் அதைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாம்.
 
சீன தேசம் சென்றேனும் கற்றாக வேண்டும். சிங்கத்தின் வாய்க்குள் அந்தக் கல்வி இருந்தாலும் அதைப் பெற்றுத்தான் ஆக வேண்டும்.
 
இவ்வளவு தெளிவாக உள்ள இஸ்லாம், கணிதத்திற்கும், விஞ்ஞானத்திற்கும், பொருளாதாரத்திற்கும், அரசியலுக்குமா அஞ்சப்போகிறது

மதரஸாக்களில்தான் இத்தனைக் கல்விகளையும் கற்றுத் தந்தாக வேண்டும். அதுதான் இஸ்லாம். ஒரு முஸ்லிமுக்கு உலகமே பக்குவமான கல்விக் கூடம்தான். இக் கூடத்தில் அவன் பக்குவம் பெற்று அவனைப் படைத்தவனை இறுதியாகச் சந்தித்தாக வேண்டும்.
 
அதில் என்ன குழப்பம்? எங்கே குழப்பம்?

மகாராட்டினத்தில் இந்தத் திடீர்த் செயலுக்குப் பின்னால் சதி அரசியல் இருக்கிறது. மத்தியப் பிரதேச வியாபம் கொலைகளைக் கொள்ளைகளைத் திசை திருப்ப, மத வெறிகளைத் தூக்கி இருக்கிறது பா.ஜ. க வும் ஆர்.எஸ்.எஸும் மத வெறியில் தீ வைத்தால் அக்கம் பக்கமெல்லாம் அழிந்தே தீரும்.

பல உண்மைப் பிரச்சினைகள் முகமூடிக்குள் மறைந்து கொள்ளும். ஆம். வியாபம் மறைந்து கொள்ள முகமூடியை ஆர்.எஸ்.எஸும் மற்றும் பா.ஜ.க வும் சேர்ந்தே தயாரிக்கிறது.

முஸ்லிம்கள் சின்னத் தனமான உணர்வுகளில் சிக்கித் திசை தப்புவது நிச்சயம் வரலாற்றுப் பிழையாகத்தான் இருக்கும்.

மதரஸாக்களில்தான் அரபும், திருமறையும், நபி மொழியும்,இஸ்லாமியச் சட்டங்களும் பொருளாதாரங்களும், விஞ்ஞானமும், கணிதமும் இன்னுமுள்ள அனைத்து ஞானங்களும் கற்றுத் தரப்பட வேண்டும். அது தானே இஸ்லாம்!

இவைகளை மறுத்து விட்டு இஸ்லாத்தை வேறு எங்கு போய்த் தேடப்
போகிறார்கள்?

No comments:

Post a Comment