Wednesday, July 15, 2015

3. முதல் உலக யுத்தம் !



இறை மறுப்பு
எங்களை
நிலைப்படுத்துகையில் கூட
ஏக நாயகனே...! நீ...!
மனப் பொறுத்தலை
வைத்திருந்தாய். ..!

நாங்கள்
இணைவைப்புத்
தொடங்கையில்
எங்களை நோக்கித்
தூதுத்துவத்தை
அனுப்பி வைத்தாய்...!

அப்போதும் நாங்கள்
அவமானப் படுத்தவே
தண்டனைப் பரிகாரம்
உன்னால்
தரப்பட்டது...!

அருள் பதாகையை
வீசிப் பிடிக்கையில்
அகப்பட மறுத்தோம்...!

தண்டனை வெப்பத்தில்
சாம்பலாகினோம்...!

இது எங்களுக்கு
வண்டிச் சக்கரம் போல
மாறி மாறி வரும்
வாடிக்கைதான்...!

தந்தை ஆதமின்
தலைவிதி
கால காலமாகத்
தொடர்கிறது. ..!

முதல் அனுபவமே
இப்லீசுடன்
ஓர் ஒப்பந்தம்தான்...!

அடுத்து...!

ரத்த ஓட்டங்கள்
ரத்தாகும் காலகட்டத்தில்
மன்னிப்புச் சோற்றுக்குக்
கரப் பாத்திரமேந்தும்
யாசகப் புத்திதான்
இன்றும் இருக்கிறது...!

எங்களின்
வீரதீரச் சாகசங்கள்
எல்லாம்
உன் எதிர்ப்பிலேதான்
ஓங்கி நிற்கின்றன...!

மண் என்ற
பண்டத்தை வைத்துத்தான்
மானிட முதலை
நீ
உற்பத்தி செய்தாய்...!

நீ ஒரு
சரியான சிற்பியில்லை...!

கற்களில் உருவத்தைக்
கவிதையாக்கும்
கலையை நாங்கள்தாம்
உனக்கே
கற்றுத் தரவேண்டும்...!

உன் படைப்பின்
வடிவத்தை விட
ஓராயிரம் விதத்தில்
அழகு நெரிசலிட
எங்களால்
உருவம் சமைத்திட
முடியும்...!

உயிர்க் காற்றுக்குத்தான்
இன்றைய மட்டும்
போராடி வருகிறோம். ..!

அதை நீ
உன்புறத்திலே
பத்திரப் படுத்தி
விட்டாயோ. ..?

உன்
மகத்துவத்தை அறியாத
இறுமாப்பு இதுதான்...!

ஏ! பெரியவனே!
உனது படைப்பை
முடித்து விட்டு
உன்னை
வணங்கச் சொன்னாய்...!

நாங்கள்
எங்கள் படைப்பை
முடித்து விட்டு
எங்கள் படைப்பையே
வணக்கம் செய்தோம். ..

இந்த
ஒன்று போதாதா...
உனக்கு
எதிர் முகாம்
அமைக்கிறோம்
என்பதற்கு...?

மண்ணை வருடினாய்
உருவம் வந்தது. ..!
ஊதி விட்டாய்
உயிரும் கிடைத்தது...!

நாங்களும்
மண்ணை வருடினோம்
வடிவம் கிடைத்தது...!

ஊதிப்பார்த்தோம்
எங்கள் உயிரே
உதிர்ந்து போனது...!

பார்ப்பதைத்
தெரியவைத்த நீ
நாங்கள்
உணர்வதைப் புரியவைக்க
மறந்தா போனாய். ..?

அசல்களை
நாங்கள்
அடையாளம் காணவில்லை...!

அதனால்தான்
ஷைத்தானுக்கு
நகல்களாக
மாறிப்போனோம்...!

மாறு செய்வது
எங்களுக்குத்
தேசியச் சட்டம்...!

உன்னை
மறக்க வைப்பது
நாங்களே
பிறப்பித்துக் கொள்ளும்
அவசரப் பிரகடனம்...!

அநாச்சாரம்
எங்களின் தேசியக் கீதம்...!

விபச்சாரமே
எங்களது தேசியச்
சின்னம்...!

எங்கள் தேசத்திற்கு
உன்னால்
விரட்டப்பட்ட ஒருவனே
ஜனாதிபதி...!

இந்த நிலையிலே...
உன் புறத்திருந்து
ஒரு
அறிவிப்புத்தூக்கி
எங்கள்
தேசத்தின் உள்ளே
இறக்குமதி ஆனார்...!

சேவை செய்யவே
செய்து தரப்பட்டவரின்
வரவே
எங்களுக்குக்
கல்லறை விலாசத்தைக்
காட்டிவிட்டது...!

ஆம்...
அவர் எங்களுக்கு
ஓர்
மரண அறிவிப்புத்தான். ..!

வீதி முழுக்கவும்
அவரின்
விளக்க விளம்பரம்
இனாமாகவே
விநியோகமானது. ..!

எங்களின்
படைப்புத் தெய்வங்களில்
அவரது
வார்த்தை எச்சில்கள்
கறைகளாகக்
காட்சி தந்தன...!

கோடுகளின் உள்ளே
அடக்கப்படாத
எங்களின்
வாழ்வு மைதானத்திற்கு
ஒழுக்கக் கோடுகள்
உருவாக்கப் பார்த்தார்...!

அவரோ
எங்களுக்கு அல்லவா
மாறு செய்கிறார்...?

எங்கள் தேசத்தின்
தலைவிதியை அல்லவா
திருத்தத் தீர்மானிக்கிறார்...?

தேசீயவாதிகளே!
திரண்டு வாருங்கள்...!

அந்நியர் வருகை
ஆபத்தானது...!

ஏகத்துவம் என்பது
எம்மை
ஜீரணிக்க வந்த
ஓர் கொடூர சுலோகம். ..!

நபித்துவம் அவருக்கு
நல்கப்பட்டதாக
எம்மை
நம்ப வைப்பது
சொர்க்கவாதிகள் என்னும்
கற்பனாவாதிகளின் சூழ்ச்சி...!

எளிய ஜீவன்களை
ஒன்று திரட்டி
வைதீக வாழ்க்கையை
அவமானப்படுத்தலே
அவரின்
அந்தரங்க நோக்கம்...!

எமது
பண முடிச்சுகளுக்கு
எதிரே படைதிரட்டி
ஒரு
பாட்டாளிப் புரட்சியைப்
படைக்க இருக்கிறார்...!

நூஹு நபியே!
உங்கள் அறிவிப்பு
எங்கள்
சாம்ராஜ்யத்திற்குக்
காலக் கெடு...!

புராதன பூமியின்
எதிராளியை
வாழ அனுமதிப்பது
எமது
சாவுக்கு நாங்களே
சம்மதப்படுதலாகும்...!

நூஹு தத்துவம்
சரியான மோசடி...!

எமது
பாவையர்கள்
படுக்கை மகத்துவம்...!

அவர்களைக் கெடுத்து
ஒழுக்க முகவரி
அவர்களுக்குக் கொடுக்க
நினைப்பது
பெண்களுக்கு எதிரே
தொடுக்கும் பயங்கரம்...!

நூஹு வே. ..!

நீர் ஓர்
சமூக விரோதி. ..!

எங்களின்
இன்ப வாழ்வுக்கு
முடிவுரை எழுதும்
அதிகாரம்
உமக்கு
யாரால் தரப்பட்டது...?

இதோ...! நாங்கள்
முதல் உலகப் போருக்கு
முகமன் தந்துவிட்டோம்...!

இந்த நிலையிலும்...!

நபி நூஹு
அல்லாஹ்வின்
அடையாளங்களை
அறிமுகம் செய்தார்கள்...!

ஏ!

சமூகத் துரோகிகளே...!
இதோ ஓர்
இறுதியான
அறைகூவல்...!

உற்பத்தியாளனுக்கு
எதிரிடையாக
உற்பத்திப் பொருள்கள்
அணிவகுப்பு நடத்துதல்
அழிவுக்குக்
கைலாகு கொடுப்பதாகும். ..!

செல்வப் பரிவர்த்தனை
கண்ணியமாகச்
செலாவணி யாகட்டும். ..!

வட்டிக் கால்வாய்கள்
உங்கள்
முற்றங்களிலே
நடமாட வேண்டாம்...!

பெண்மை உணர்வுகள்
நேசிக்கப்படட்டும்...!

காமக் கலாசாலைகளாகக்
கன்னியர்கள்
மாற்றப்படும்
சமூகத்திற்கு
இறைக் கோபமே
இறுதி முடிவாகும்...!

இதுதான்
உங்களுக்கு
இறுதியான அறைகூவல்...!

அந்த
நபித்துவம் முற்றுப்பெறும்
நாள் வரையிலும்
நாங்கள்
செவி வாயில்களைச்
சாத்தி விட்டோம்...!

ஒரு நாள்...
அல்லாஹ்வின்
அவசரச் சட்டம்
எங்கள்
இல்லக் கதவுகளை
இலக்கு வைத்துப்
பாய்ந்து வந்தது...!

மன்னிப்புப் பதாகையே
அப்போது
சங்கிலிகளாய்
எங்களைப்
பிணைத்து விட்டன...!

மண்பாண்டங்கள்
நீரலைகளாலே
பொட்டல்களாயின. ..!

நூஹு நபித்துவத்தை
நோகடித்த நாங்கள்
நீர் அறிவிப்பால்
நிர்மூலமானோம். ..!

விலக்கப்பட்ட
ஷைத்தானால்
நேசசிக்கப்பட்டோம். ..!

நீரில்
குளியல் நடத்தி
நெருப்புத் துண்டங்களால்
விசாரிக்கப்பட்டோம்...!

ஆம்...!

அது
படைப்பாளன்
படைப்புகள் மீது
நடத்தி முடித்த
முதல்
உலக யுத்தம்...!

No comments:

Post a Comment