Thursday, July 23, 2015

6. வரலாற்றுத் தழும்புகள்...!



மூஸா நபியே...!

ஒரு
கொலை தொடர்காலத்தில்
உங்கள்
ஜனனம் பத்திரம்
இறைவனாலே
பதிக்கப்பட்டது...!

இதழ் கடையிலே
பால்வாடைகள்
மாறும் முன்னம்
தலைப் புஷ்பங்கள்
கிள்ளப்பட்டு

உடற்காம்புகள்
மண்மேடெங்கும்
சிதறிக் கிடந்த

அகாலத்தில்
உங்களின்
பிரசவ
வெளித்தோற்றம்
நிகழ்த்தப்பட்டது...!

கொலைக்கள நிர்மாணியின்
கூடாரத்துக் குள்ளேதான்
உங்களின் பாதுகாவலை
இறைவன்
தயாரித்திருந்தான்...!

உங்களின் ஆரம்பமே
ஒரு
அதிசய அச்சடிப்புத்தான்...!

சிசுக் கொலைகளைச்
சாதரணமாகச்
செய்து முடித்தவர்கள்

பசுப் பாதங்களில்
பாவ மன்னிப்புக்
கோரிக்கைகளைக்
குவித்து வைத்தனர்...!

உங்கள்
சமூகத்தவர்களுக்கு
இரவுகள்
வெளியிலே நிகழவில்லை...!

அவர்கள்
மனப் பொந்திலேதான்
பாய் விரித்துப்
படுத்துக் கிடந்தன...!

உங்கள்
சமூகத்தவர்களுக்குப்
பெண்களைக்
குழந்தைக் குப்பைகள்
கொட்டிக் கிடக்கும்
தொட்டிகளாகத்தான்
தெரிய முடிந்தது...!

அசுத்த வாணிபத்தில்
அவர்களுக்கு
அபார
லாபக் கணக்குதான்...!

நம்ரூதின்
வேறொரு
மறு பதிப்புத்தான்
பிர்அவ்ன்...!

அவமானப் படுத்தலே
நாகரீகமாக
அறிமுகமானதால்
வேதனைகளே
வெகுமானங்களாயின...!

மூஸா நபியே...!

இந்த
மனித மேச்சலைவிட
மாடு மேச்சலே
மரியாதையானதோ...?

ஏனென்றால்
மேய்ப்பவனுக்கு
மாடுகள்
கட்டுப்படுதலையே
கற்றிருக்கின்றன...!

ஏ!
இஸ்ரவேல் கூட்டத்தினர்...!

உங்களைப்
பாவங்கள் கூட
பயந்து பயந்துதான்
வந்துதொட்டன...!

மூஸா நபியே...!

உங்களது இதழ்களுக்குச்
சொர்க்க அந்தஸ்து...!

வேதச் சித்திரம்
உங்கள்
நாக்குத் தட்டிலேதான்
வரையப்பட்டது...!

உங்கள் நாக்கு
"தவ்றாத்" வேதத்தின்
கர்ப்ப வயிறல்லவா...!

அது மட்டுமா...?

இறைவனுடன்
நீங்கள்
மொழி பெயர்ப்பாளர் இன்றி
மொழிப் பரிவர்த்தனை
செய்து வந்தீர்கள்...!

ஆனால்
வார்த்தைக் குழந்தைகள்
உங்கள்
வாய் முற்றத்தில்
குட்டிக் கரணங்கள்
போடுவதுண்டு...!

ஆம்...
மொழிகள் சிக்கி
முறுக்கிக்கொண்டு
உதிரக்கூடிய
"கொன்னல்"
உங்களுக்கு...!

வேத வாக்கியங்களை
வாங்கி வருகையில்
பாரத்தாலே சம்பவித்த
நாக்குச் சுளுக்கல்தான்
கொன்னலானதோ...?

உங்கள் கூட்டத்தார்
வரலாற்று வானில்
வந்து போகிற
எரி நட்சத்திரங்கள்...!

அதனால்தான்
நீங்களே
துணைக்கொரு
நபித்துவத் துணையை
இறைவனிடத்தில்
யாசிக்கக் நேர்ந்தது...!

மூஸா நபியே...!

உங்கள் வர்க்கத்தார்
சூரிய விளிம்பினைத்
தட்டி முறித்து
அடுப்பெரிக்கும்
ஆற்றல்காரர்கள்...!

நிலாத் தட்டையை
உருட்டி வந்து
அன்னம் கொட்டி
அருந்தக் கூடியவர்கள்...!

விழிச் சிமிட்டும்
நட்சத்திரங்களை
வாயாலேயே ஊதி
அணைக்கத் தெரிந்தவர்கள்...!

காற்றிலே
கயிறு திரித்து
விண் முகட்டிலே
ஊஞ்சலாடும்
வித்தைக்காரர்கள...!

அனல் துண்டை
அள்ளி வந்து
மெழுகு கொண்டு
உருக
வைப்பவர்கள்...!

பனித் துளிகளைப்
பொறுக்கி வந்து
சூரிய வெப்பத்தை
உறிஞ்சச்
செய்பவர்கள்...!

ஆம்...
மந்திரமே
அவர்களிடம்தான்
மண்டியிட்டுத்
திண்ணைப் பாடம்
தினம் படிக்கும்...!

இந்த
அற்புதங்களே
அவர்களை
அகந்தைச் சிறுக்கியின்
ஆடைகளாக
மாற்றிவிட்டன...!

அதனால்தான்
சுவன இதழ்களுக்குச்
சொந்தமான
"மனு சல்வா"வையே
மறுதலிக்கச் செய்தன...!

அவர்களுக்கு
வாக்குப் பிரமாணம்
அடிக்கடி
ரத்தாகிப் போகும்
ஒரு
வெற்றுப் பத்திரம்...!

, இஸ்ரவேலர்களே...!

வர்க்கங்களிலே எல்லாம்
நீங்கள்தாம்
மகா பாக்கியவான்கள்...!

ஆனால்
வக்கிரங்களுடன்
ஒரு வகையான
குத்தகை கொண்டதாலே
சபிக்கப்பட்ட
மானிடத்திலே
நீங்கள்தாம்
மகா மோசமானவர்கள்...!

இந்த
மந்திரக்காரர்களுக்கு
வாய்த்திருந்த மரணமே
ஒரு மந்திரம்தான்...!

நீர்ச் சுவர்களின்
நெரிசலிலே
பிர்அவ்ன் கும்பல்
நசுக்கப்பட்டன...!

மூஸா நபியே...!

உங்கள் வர்க்கத்தாரின்
மந்திரங்கள்
மரணத்தாலேயே
மறைக்கப்பட்டன...!

வரலாற்று மடியிலே
இஸ்ரவேலர்களே
அசிங்கத் தழும்புகள்...!

No comments:

Post a Comment