Saturday, May 30, 2015

கவிஞர் பொதிகை ஹமீது (...3...)



கவிஞர் சாகுல் ஹமீது, தமிழகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலக்கட்டம். முஸ்லிம் லீகின் மாவட்டத் தலைவராக அவர் இருந்த நெல்லை மாவட்டத்தை, இந்தியத் துணைக்கண்டமே திரும்பிப் பார்த்த ஒரு நிகழ்வு நடைபெற்றது.

அப்போது தமிழ் மாநிலப் பொருளாளரும் அவர்தான். கவிஞரின் சொந்த ஊரான வாவா நகரத்தின் பக்கத்துக் கிராமமான மீனாட்சி புரம், ரஹ்மத் நகராக மாறியது. இக் கிராமம் முழுவதுமாகத் தேவேந்திர குல வேளாளர் சமுகத்தினர் மட்டுமே இருந்தனர்.

19-2-1981ம் ஆண்டு 220 குடும்பத்தினர் தம் மதத்தை விட்டு விலகி இஸ்லாத்தில் இணைவதாக முடிவு கட்டினர். ஆனால் அன்றைய தினம் அவர்களில் 180 குடும்பத்தினர் இஸ்லாத்தைத் தழுவினர்.

20 குடும்பத்தினர் இன்றைக்கு இல்லை. கொஞ்சம் நாள் கழித்துத் தழுவுவதாகக் கூறி ஒதுங்கி விட்டனர். மேலும் 20 குடும்பத்தினர் இஸ்லாத்திற்கு வரத் தயங்கி விலகிக் கொண்டனர்.

இதன் பின்னர் 23-5-1981 ஆண்டு மேலும் 27 குடும்பத்தினர் இஸ்லாத்தைத் தழுவினர். ஆக மொததம் 207 குடும்ப உறுப்பினர்களான 1500 நபர்கள் இஸ்லாத்தில் சேர்ந்திருந்தனர். இந்நிகழ்வு எதுவுமே ரகசியமாக நடைபெறவில்லை.

இந்தச் செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்திருந்தது.

இதன் பின் விஷ்வ இந்து பரிஷத், ஆரிய சமாஜ் இயக்கத்தினர் மீனாட்சிபுரம் வந்து, மறுமத மாற்றத்திற்குத் தீவிரம் காட்டினர். ஆனால் அம்மக்கள் அவர்களைப் புறமொதுக்கி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து வடபுலத்துத் தலைவர்கள் அக்குக்கிராமத்திற்குப் படையெடுத்தனர். வாஜ்பேயி, முதல் எத்தனையோ தலைவர்கள் இதில் அடக்கம். ஆனாலும் இஸ்லாத்திற்கு வந்தவர்களின் உறுதியை அசைக்க கூட முடியவில்லை.

மீனாட்சி புரம் மக்களின் இந்த மாற்றம் ஏதோ ஒரு " ஜீபூம்பா " மந்திரத்தால் நடந்த திடீர் மாற்றமல்ல.

மீனாட்சி புரம் கிராமத்தில், தேவேந்திர குல வேளாளர் சமுகத்தினராகவே
முழுமை பெற்றிருநதனர். இவர்களில் சிலர் அரசுப் பணியாளர்கள், அதிகாரிகள். ஆண் மற்றும் பெண்களில் இளநிலை (Bachelor Degree) கல்வித் தகுதி பெற்றிருந்தவர்கள் சுமார் இருபதற்கும் (20) மேற்பட்டவர்கள் இருந்தனர்.

முதுகலை(Master Degree) படித்தவர்கள் ஏழு பேர் (7) இருந்தனர். இவர்களில் மூன்று பேர் (3) பெண்கள். சொந்த நிலம் வைத்திருந்தவர்கள் பல குடும்பத்தினர். இத்தனை அந்தஸ்த்தும் 1981- ஆம் ஆண்டின் முந்திய நிலவரம். ஆனாலும் அவர்களின் சமூக அந்தஸ்த்தோ அவலமானது. அதுதான் அவர்களின் மத மாற்றத்தின் அடிப்படை ஆதாரம்.

பல கேவலமான நடைமுறைகளை தாங்கித் தாங்கி வெந்து போயிருந்த மக்களின் மன அழுத்தம் பீறிட்டெழ ஒரு சம்பவம் காரணமானது.
 
தென்காசியில் இருந்து இரண்டு, மூன்று மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் பேருந்து ஏறி மீனாட்சி புரம் வந்து கொண்டிருந்தனர்.

டிக்கட் கண்டக்டரிடம் "அண்ணாச்சி மூணு டிக்கட் தாங்க" எனக் கேட்டுள்ளனர். அவ்வளவுதான்.

கண்டக்டர், மீனாட்சி புரத்தார்களை நையப் புடைத்து விட்டார். கண்டக்டர் கொஞ்சம் மேல் ஜாதிக்காரர். மீனாட்சி புரம் பக்கத்தூர்காரர். மீனாட்சி புரத்தாரோ தேவேந்திர குல வேளாளர். எப்படி கண்டக்டரை அண்ணாச்சி என்று அழைக்கலாம். மேல் ஜாதி ஆண்டையை, அடிமை ஜாதி உறவுமொழியில் அழைக்கலாமா?

இந்த நிலையில்தான் மீனாட்சி புரம், பூரணமாக ரஹ்மத் நகராக மாற்றம் பெற்றது.

வெளியுலகத்திற்கு இது வேறொரு வடிவில் காட்டப்பட்டது.

அரபு நாடுகளில் இருந்து பணம் மூடைமூடைகளாக வந்து மதம் மாற்றம் நிகழ்ந்ததாகப் பொய் அவிழ்த்து விடப்பட்டது.

மத்திய அரசு,மாநில அரசு நிர்வாக கேந்திரமே ரஹ்மத் நகரைச் சூழ்ந்தது. விசாரணை விசாரணை விசாரணை மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருந்தது.

மத்திய உள்துறை இணைஅமைச்சர் மக்வானா, மாநில அமைச்சர்
R.M.வீரப்பன், பல தலைவர்கள்,நாடாளு மன்ற உறுப்பினர்கள் இறுதியாக விசாரணைக்கு வந்திருந்தனர்.

விசாரணை கூடத்திற்கு வெளியே முஸ்லிமானவர்கள் ஒரு புறமும், முஸ்லிம் ஆகாதவர்கள் மறுபுறமும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தனர். இருவருமே அண்ணன் தம்பி, மாமன் மச்சான்கள்தாம். விசாரணைக்கு இரு தரப்பிருந்தும் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர்.

அமைச்சர் மக்வானா, முஸ்லிம்களிடம் கேட்டார் "நீங்கள் எவ்வளவு பணம் வாங்கினீர்கள்" என்று. அவர்கள் பதில் இப்படி இருந்தது, "அரசுக்கு நாங்கள் நிதி தருகிறோம். எங்களுக்கு மனித மரியாதைப் பெற்றுத்தர நீங்கள் உத்தரவாதம் தருவீர்களா?"என்று.

முஸ்லிம் அல்லாதவர் ஒருவரிடமும் மக்வானா கேட்டார். "உங்களிடம் ஆசை காட்டினார்களா?"என்று.

அதற்கு அவர், சொன்ன பதிலை இங்கே தருகிறேன்.

"ஐயா! கொஞ்சம் அறைக்கு வெளியே வாருங்கள். இரண்டு வரிசை நிற்கிறது. ஒன்று, தாடி ஒதுக்கித் தொப்பியுடன் நிற்கும் கூட்டம்.

மற்றொன்று, என் கோலத்திலேயே உள்ள கூட்டம்.

போலீஸ்காரர், எங்களைப் பார்த்து டேய்! உள்ள எஜமானைப் போய் பார், என்கிறார். அவங்களைப் பார்த்து, பாய்! உள்ளே போங்க என்கிறார்.
இதற்குத்தான்யா ஆசைப் படுகிறோம். அந்த பாய் வேறு யாருமில்லை,
என் பெரியப்பா மகன் என் தம்பிதானையாஎன்று. இத்துடன் விசாரணை முடிந்து விட்டது.


இன்னொரு சம்பவம் சொல்லியாக வேண்டும்.

முஸ்லிமாக மாறிய அன்றைய தினம் கலிமாச் சொன்ன சில மணிகளில் ஒரு மூதாட்டி இறந்து விட்டார். அவர் பெயர் கதிஜா என்று நினைக்கிறேன். உடனடியாக அவரைக் குளிப்பாட்டி இஸ்லாமிய முறைப்படிச் செய்ய வேண்டியவைகளைச் செய்து சந்தூக்குப் பெட்டியில் வைத்துத் தங்கள் தோள் மீது தூக்கி 3 கிலோ மீட்டர் சுமந்து வடகரை ஜமாஅத்தார்கள் தங்கள் மையவாடியில் நல்லடக்கம் செய்தனர்.

இதற்கு இடையில் நடந்ததுதான் கொடுமை.

சாகுல் ஹமீது சாஹிப், அவர் அண்ணன் A.K.ரிபாய் சாஹிப் தென்னந்தோட்டங்கள் இன்னும் உள்ள பல இடங்கள் சில சமூக விரோதிகளால் அழிக்கப்பட்டன, தாக்கப்பட்டன.

தமிழகச் சட்ட மன்றத்தில், பிரச்சனை சூடானதும் சாகுல் ஹமீது சாஹிப் பொறுமையிழந்தார். 

முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்த்து தன் ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டி, "முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களே! ரஹ்மத் நகர் பிரச்சனையில் பணம் வழங்கப்பட்டது உண்மையானால், அதை இந்த அரசு நிருபிக்க வேண்டும். மத்திய அரசின் உதவியையும் நாடிக்கொள்ள வேண்டும். இந்த இரு அரசுகளிடம்தானே அத்தனை அதிகாரமும்,உளவுத்துறை பலமும் குவிந்து கிடக்கின்றன. உடனே நடவடிக்கை எடுங்கள். இல்லை என்றால் அவதூறு பரப்புபவரை அடக்கியாளுங்கள். ஒரு ரூபாய் கொடுக்கப் பட்டிருப்பது நிருபிக்கப் பட்டாலும் நான் இந்தச் சட்ட மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்கிறேன். சட்ட நடவடிக்கைக்கு உட்படுகிறேன் தவறினால் இதற்குத் தாங்கள் தயாராவீர்களா?" என்று கேட்டார். இத்துடன் பிரச்சனை தீர்வுக்கு வந்து விட்டது.

சாகுல் ஹமீது சாஹிபின் ஆவேசத்தின் பகுதி இது.

லீகை விட்டு அவர்களை வெளியேற்றிய காரணம் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் பின்னர் எழுகிறேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநிலச் செயற் குழுவில் தீர்மானம் கொண்டு வந்தவர்கள் கவிஞர் தா. காசிம், அ.ஹிலால் முஸ்தபா (நான்) ஆகிய நாங்கள்தாம்.

No comments:

Post a Comment