Monday, May 4, 2015

மதம் மரணத்தின் அடையாள முகவரியில்லை. ..!



நேற்று (02-05-2015) இரவு 10 மணிக்கு தந்தி டிவி யில் "கேள்விக்கு
என்ன பதில்?" நிகழ்ச்சியில் துரைமுருகன் பேட்டி தந்தார். பேட்டி கண்டவர் பாண்டே.

"நீங்கள் உங்களின் சுயமரியாதைக் கருத்துகளில் இருந்து, சற்று நகர்ந்து, இறைமறுப்புக் கொள்கையில் காம்பரமேஸ் ஆகி விட்டீர்களா?
இந்துத்துவாவுடன் சமரசம் கொண்டு விட்டீர்களா?" எனப் பாண்டே கேள்வி தொடுத்தார்.

"இல்லை. நாங்கள் பெரியார் பாசறைக்காரர்கள்.இதில் மாற்றம் இல்லை." இது துரைமுருகன் பதில்.

"உங்கள் தலைவர் ராமானுஜர் சரிதம் படைக்கிறாரே? இதன் நோக்கம்
என்ன?"

"ராமானுஜர் சீர்திருத்தவாதி.மதப் புரட்சியாளர்.ஜாதி எதிர்ப்பாளர். அதனால்தான் எங்கள் தலைவர், ராமானுஜர் வரலாற்றைப் புதுப்பிக்கிறார்."
இது துரைமுருகன் விளக்கம்.

இங்கேதான் துரைமுருகன், அவரின் தலைவரைப் பற்றி, நமக்குள் சில சந்தேகங்களைத் தோன்றச் செய்கிறார்.

ராமானுஜரைப் பற்றி இந்தத் தகவலைத்தானே நம் சகோதர வைணவப்
பெருமக்கள் காலகாலமாகச் சொல்லி வருகிறார்கள். அந்தச் சகோதரப்
பெருமக்கள் எந்த இடத்திலும் இதனை மறுத்துவிட வில்லையே?

மதமே பித்தலாட்டம். கடவுளா? அது அறியப்படாத, அவசியமற்ற ஒன்று, எனக்கூறி வந்த இயக்கத்தில் தலையெடுத்த நீங்கள், ஏதோ புதிய கண்டுபிடிப்புப் போல மதப்புரட்சியாளர் என ராமானுஜரைத் திடீரென்று கண்டுபிடிக்கக் காரணம் என்ன?

ராமானுஜரை ஒப்புக் கொண்ட பெருமக்கள் அவரைப் போற்றுவதும்,
வணங்கி வழிபடுவதும் அவர்களின் பூரணமான உரிமை. இதனை வெளிப்படுத்துவது அவர்களின் கடமை. திராவிடப் பாரம்பரியவாதிகள்
ராமானுஜரை அங்கீகரித்துக் கொள்வதில் எந்தத் தடையையும் எவரும்
உருவாக்கி விடமுடியாது. ஆனால் அங்கே அரசியல் செய்வதுதான்
அக்கிரமமாகப் படுகிறது.

இத்தனைக் காலம் கண்டுபடிக்காததைக் கருணாநிதி இப்போதுதான் கண்டறிந்தாரா? ஒரு முத்தமிழ் அறிஞர்,எதன் காரணமாக இத்தனைப்
பின்னடைந்துள்ளார்?

சமீப காலமாக நிறையப் புத்தகங்களைப் படித்தார், அதன் விளைவாக
இக் கண்டுபிடிப்பைக் கருணாநிதி கண்டறிந்திருந்தார். மறைந்த கவிஞர் வாலி, ராமானுஜரைப் பற்றி எழுதியது கருணாநிதிக்கு ஒரு உந்து சக்தியாக இருந்தது என்றும் கூட துரைமுருகன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதிக்கு இப்போதுள்ள தெளிவு, இங்கே பலருக்கும் ஏற்கனவே பலப்பல நூற்றாண்டுகளாக இருந்தது என்ற உண்மையைக் கருணாநிதி ஒப்புக் கொள்வதில் ஏன் தயக்கம்? இவர் கண்டுபிடித்தால் புரட்சி.ஏற்கனவே அதை ஒப்புக் கொண்டிருந்தால் அது அஞ்ஞானம்.

பாண்டே இன்னும் ஒரு கேள்வி கேட்டார். "நெற்றியில் திலகம் தரித்திருந்த கட்சிக்காரரைப் பார்த்து, 'இது என்ன நெற்றியில் ரத்தம்' எனக் கேட்டுக் கருணாநிதி பரிகசித்தாரே"? இது தர்மமா.? என்று.


கருணாநிதியின் இந்தச் சொல்லாடலுக்குப் பின் ஒரு நையாண்டித்தனம் இருக்கிறது.

சிவன் தலையில் கங்கா தேவி இருக்கிறார். இது ரகசியமாக இருந்த நிலையில், அதாவது சிவன் உடலில் சரிபாதியான பார்வதியும் தெரிந்திராத நிலையில், தலையில் மறைந்திருந்த கங்கா தேவிக்கு மாதவிலக்கு வெளிப்பட்டு விட்டது. அது வடிந்து முகத்துக்கு இறங்கினால், பார்வதிக்கு ரகசியம் அம்பலமாகி விடும். இதனைத் தடுக்க, சிவன் அந்த ரத்தத்தை நெற்றி நடுவில் நிறுத்தினார்.

இப்படி ஒரு செய்தி உண்டு. இதனை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம். கருணாநிதி இதைத்தான், "இது அந்த ரத்தம்" என்று அவமானப்படுத்தினார்.

ஆனால் கருணாநிதி இல்லத்தவர்கள் நெற்றியில் உள்ள திலகம் புனிதமானது. கட்சிக்காரர் நெற்றியில் இருந்தால் அது அந்த ரத்தம்.

"பாஜக மதவாதக் கட்சி. அது மதக்கலவரங்களை உருக்கும் கட்சி என்றெல்லாம், பாஜக வுடன் கூட்டணி காண்பதற்கு முன்பும்,கூட்டணியை விட்டு விலகிய பின்பும் நீங்கள் கூறி வருகிறீர்களே? இதனை எப்படிப் புரிந்து கொள்வது? அடுத்து பாஜக வுடன் கூட்டணி வைப்பீர்கள்? மாட்டீர்களா?" இது பாண்டேயின் இன்னொரு கேள்வி.

துரைமுருகன் இதற்குச் சொல்லும் பதில், அவரின் சொந்தப் பதிலா? அல்லது அவரின் இயக்கப் பதிலா? என திமுக தான் சொல்ல வேண்டும். அவரின் சொந்தப் பதில் எனத் திமுக சொன்னால், திமுக வின் இந்த மூத்த தலைவர் மீது, திமுக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

பாஜக மதவாதக் கட்சிதான். அதனால்தான் நாங்கள் விலகி நின்றோம்.
பின்னர் அந்த கட்சி திருந்தியது. அதனால் கூட்டணி வைத்தோம்.
அமைச்சரவையிலும் பங்கு வகித்தோம். ஆனாலும் பாஜக திருந்தவில்லை. எனவே வெளிவந்து விட்டோம்.

அதே வேளையில் அரசியலில் பகையும் நிரந்தரமில்லை. உறவும் நிரந்தரமில்லை. _ இப்படி அரிய பதிலை துரைமுருகன் தந்திருக்கிறார்.

திமுக வுக்கு எதுவும் நிரந்தரமில்லை. இது சரிதான். திமுக வின் தத்துவக் கோட்பாட்டுக்கும் எதுவும் நிரந்தரமில்லை எனப் புதிய தகவலைத் துரைமுருகன் வழங்கி விட்டார்.

மோடியின் குஜராத்தில் நடந்த இன அழிப்புக் கலவரம், சாதாரணமான
சட்ட ஒழுங்குப் பிரச்சனைதான்.அதனால் அது பற்றிப் பெரிய அளவில்
எதுவும் சொல்லத் தேவை இல்லை.எனவும் சொல்லி விட்டார்.

இங்கே உள்ள முஸ்லிம் அமைப்புகள் அத்தனையும்தாம் இது பற்றிக்
கருத்துச் சொல்லத் தகுதி பெற்றுள்ளன. அவை அனைத்தும் அமைதி காத்தால், துரைமுருகன் செய்தியை எல்லோரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கு இடையிலே மதில் சுவரைக் கெட்டியாக உயர்த்தி உருவாக்கி விட்டுத்தான், இந்திய ஆட்சி பீடத்தை எந்த ஒரு இயக்கமும் அலங்கரிக்க முடியும் என்றொரு வரலாற்றைத் தெளிவாக நடப்புகளாக்கின்றன, இங்கே உள்ள அரசியல் கட்சிகள்.

மக்கள் மதங்களின் உள்ளேயும் வெளியேயும் மந்த நிலையில் கிடக்கும் வரையில் கொண்டாட்டங்கள் கும்மாளம் போடத்தான் செய்யும்.

மதம் வாழ்வின் பாதையாக இருக்கவேண்டும். அது மரணத்தின் அடையாள முகவரியாகக் கூடாது.

No comments:

Post a Comment