Monday, March 4, 2013

கண்டெடுத்த கவிஞன் தா.காசிம் - 4


விஞர் தா.கா.வின் சரவிளக்கு அச்சகம் உதயமாகிவிட்டது. சரவிளக்கு மாத இதழும் புறப்பட்டு வந்து பல சாதனைகள் புரிந்தன.


சரவிளக்கில் எழுத்துகள் இருந்தன என்று சொல்வது ஒப்புக்குக் கூடச் சரியில்லை. தாள்களில் அனல் கங்குகள் பற்றிக் கொண்டு இருந்தன என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு சந்தர்ப்பத்தில் முஸ்லீம் லீகின் மூத்த தலைவர் ஒருவர் சரவிளக்கின் விமர்சனம் தாங்க முடியாமல்
"இந்த செவிடனைத் தெருவில் என் காரை வைத்து ஏற்றி விபத்து போல் காட்டி கொன்றுவிடுவேன். வழக்கும் இல்லாது ஆக்கி விடுவேன்" என அப்பட்டமாகவே கத்தித் தீர்த்தார். சரவிளக்கு அந்த அளவிற்கு கனல் விளக்காக வெளி வந்து கொண்டிருந்தது.

ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சொல்லித்தான் ஆக வேண்டும்.

சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள அரசினர் தோட்டத்திற்குள் ஏழு அடுக்கில் தமிழகச்சட்டமன்ற உறுப்பினர்களின் பழைய விடுதி இருந்தது. இந்த விடுதியில் 5ஆவது மாடியில் தி.மு.க.வின் மேலவை உறுப்பினர் நாகூர்.ஈ.எம்.ஹனிபா அறை இருந்தது. பக்கத்து அறையில் முஸ்லீம் லீகின் மேலவை உறுப்பினர் வடகரை எம்.எம்.பக்கரண்ணன் இருந்தார். அந்த விடுதியில் பாளையங்கோட்டைச் சட்டமன்ற உறுப்பினர் கோதர் மைதீனுக்கும் தங்கும் அறை இருந்தது.

நாகூர் ஹனிபா அண்ணன் அறையில் கவிஞர் தா.கா இசைப் பாடலுக்கு பல்லவி அனுபல்லவி எழுதிக்கொண்டு இருந்தார். ஹனிபா அண்ணன் கவிதை வரிகளுக்கு சுருதி சேர்த்துக் கொண்டு இருந்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரவண சமுத்திரம் எம்.எம். பீர்முகமது அண்ணன் அறைக்குள் நுழைந்தார்.
கவிஞர் தா.கா.வைக் கண்டவுடன் வார்த்தைகளுக்குச் சூடேற்றி ஒருமையில் சொல்லத்தகாத "சின்னச்"சொற்க்களால் தீண்டத் தொடங்கிவிட்டார்.

எம்.எம்.பி.அண்ணன் தன் கையிலிருந்த பைக்குள் கரம் நுழைத்து சரவிளக்கை எடுத்தார். தாறுமாறாக கிழித்து எறிந்தார். அதுவரை பொறுமைக்காத்த கவிஞர் தா.கா சீறி எழுந்தார்.

கவிஞரின் கவிதை எவ்வுளவு இனிமையானதோ , அவ்வுளவு அருவருப்பானது அனுமதிக்கமுடியாத கொடூரமானது கவிஞரின் கோபவெளிப்பாடு. அவருக்கு கோபம் வந்தால் காலில் இருப்பது கையிற்கு வந்து விடும்.

அன்றும் அது தான் நடந்தது.

ஹனிபா அண்ணன், பக்கர் அண்ணண் போன்றவர்கள் ஓடி வந்து கவிஞரை பிடித்துக் கொண்டார்கள். கவிஞர் தன்னைப் பற்றித் தரக்குறைவாகப் பேசும் பொழுது அமைதியாக இருந்தார். சரவிளக்கைக் கிழித்து எறிந்ததை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சரவிளக்கில் வந்த ஒரு கேள்வி-பதில், எம்.எம்.பிர்முகமதை அந்த அளவிற்குக் கீறி இருந்தது.

கவிஞர்.தா.கா. நேராக மண்ணடியில் உள்ள மரைக்காயர் லெப்பை தெருவில் உள்ள முஸ்லீம் லீகின் தலைமையகத்திற்கு வந்து விட்டார்.

அப்போதைய முஸ்லீம் லீகின் தலைமை அகம் எங்களுக்கெல்லாம் தாய் வீடு. விவாத மேடை. சொற்போர் களம். பட்டினியோடு படுத்து உறங்கும் படுக்கை பீடம் . இரவில் கவிஞ்ரால் தூங்க முடியவில்லை. நான் இரண்டு மூன்று முறை விழித்துப் பார்த்த போதும் அந்த பெரிய ஹாலில் நடமாடிக்கொண்டே இருந்தார்.
விடிவெள்ளி அடி வானில் முளைத்து இருக்க வேண்டும்."டேய் மருமகனே எந்திரி...நான் வெளியே செல்கிறேன்...கதவடைத்துக் கொள்..." என எனக்கு எரிச்சலை மூட்டி என்னை எழுப்பினார்.
நான் எழுந்து கதவடைக்க வரும் பொழ்து " பஜ்ர் பாங்கு" ஒலித்தது...கதவை யாரோ தட்டும் ஓசையும் இணைந்து வந்தது.

கதவைத் திறந்து பார்த்தால் எதிரே இரவண சமுத்திரம் எம்.எம். பீர்முகமது அண்ணன் நிற்கிறார். கவிஞ்ர் அலறிக் கொண்டு ஓடி அவரை அணைத்து அழுதார். அவரும் விசும்பினார். " உங்களை பார்க்கத்தான் புறப்பட்டு கொண்டு இருக்கிறேன்... என்னை மன்னித்துவிடுங்கள். இதில் கூட நீங்கள் முந்திக்கொண்டீர்களே." என கவிஞர் கதறிக் கதறிக் அழுதார். எம்.எம்.பி அண்ணனும் " நான் சரவிளக்கை கிழிக்கவில்லை... சமுதாயக் கவிஞ்சன் இதயத்தை அல்லவா நார் நாராக கிழித்து விட்டேன்...கவிக்குயிலே மன்னித்துவிடுங்கள்" என விம்மி அழுதார்.

இந்த இரு பண்பாளர்களின் ஆவேசமும், அறிவார்ந்த நடைமுறையும், அன்பார்ந்த பண்பாடும் இப்பொழுது நினைத்தாலும் எனக்குள்ளே இனம் காட்ட முடியாத உணர்வலைகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றது.

சென்னையில் கவிஞருடன் பணிபுரிந்த நாகர்கோவில் குளச்சலை சார்ந்த செய்யது என்பவரின் உறவுக்காரப் பெண் பாத்திமா என்பவரைத்தான் குளச்சலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

மணப்பெண் சென்னைக்குக் குடும்பம் நடத்த வர வேண்டும்...ஏற்பாட்டை கவிஞ்ர் சரியாகத்தான் செய்து இருந்தார்.

அப்போது சைதாப்பேட்டையில் வாடகை வீட்டில் குடியிருந்த எ.கே.ரிஃபாய் இல்லத்தில்தான் முதன் முதலாக வந்து தங்குவது என ஏற்பாடாகி இருந்தது.

இந்த ஏற்பாட்டை கவிஞர் செய்து விட்டு குளச்சலில் இருந்து முன்னரே சென்னைக்கு வந்து விட்டார்.குறிப்பிட்ட தேதியில் மணப்பெண்ணை உறவுக்காரர் சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னை எழும்பூரில் வரவேற்க வேண்டிய மணமகனைக் காணவில்லை. மணப்பெண் பயந்து விட்டார்.

மணமகளுடன் வந்த உறவுக்காரர் முஸ்லீம் முரசு மாத இதழ் ஆசிரியர் ரஹீம்சாகிப்பின் தொலைப்பேசி எண் வைத்து இருந்தார். உடனே தொடர்பு கொண்டார். ஏன் என்றால் அப்போது கவிஞர் முஸ்லீம் முரசில்தான் வேலைப் பார்த்தார். ஆசிரியர் ரஹீம்சாகிப் செய்தி அறிந்து எழும்பூருக்கு ஓடி வந்தார். மணப்பெண்ணையும் அவரது உறவுக்காரரையும் சைதாப்பேட்டை எ.கே.ரிஃபாய் இல்லத்தில் விட்டு சென்றார்.

கவிஞர் இருதினம் கழித்து பத்திரமாகச் சென்னை வந்து சேர்ந்தார். ஒன்றும் பாதகம் நடந்துவிடவில்லை. மணப்பெண் வரும் தேதியை மறந்துவிட்டார்,ஒரு சொற்பொழிவுக்காக இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுவிட்டார் அவ்வுளவுதான்.

4 comments:

  1. இளைய தலைமுறை அறிந்திராத பல்வேறு வரலாற்று நிகழ்வுகள்....அண்ணே தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம். /////"அப்போது சைதாப்பேட்டையில் வாடகை வீட்டில் குடியிருந்த எ.கே.ரிஃபாய் இல்லத்தில்தான் முதன் முதலாக வந்து தங்குவது என ஏற்பாடாகி இருந்தது".//////

    சரீ....எ.கே. ரிபாயி முதலாளியின் பிள்ளை நீங்கன்னு சொல்லனும்....அல்லது எங்க வாப்பா....அப்படீன்னாவது சொல்லணும்....இதைப் படிக்கிற வாசகனுக்கு அது தெரியவேண்டுமே அதுக்காகச் சொன்னேன்.
    அருமை அருமை.

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் தா.கா.வைப்பற்றி எழதினேன்.வாப்பாவைப்பற்றி எழுதும் போது என்னையும் தேவைப்பட்டால் இணைத்துக்கொள்வேன்.

      Delete
  2. ஹிலால் முஸ்தபா அவர்களே...உங்க எழுத்த பாத்து எவ்வளவு நாளாச்சு ....உங்க மேடை பேச்சும் அப்படி இருக்கும் ...எனக்கு , காயல் மஹபூப் அண்ணன் , ஜபருல்லாஹ் அண்ணன் , உங்க பேச்சு ஒரு inspiration ஏற்படுத்தும் . முதலாளி ரிபாய் அவர்களின் அருந்தவ புதல்வர் ன்னு உங்கள அறிமுகம் காட்டி எழுதுங்க...இல்லன ...ரிபாய் ex. M.P. எங்க வாப்பா தான் ன்னு இப்போ இருக்கிற தலைமுறைக்கு சொல்லி காட்டுங்க...உங்க முகத்த பாக்க ரொம்ப ஆவலா இருக்கு அண்ணே ... M.O.C. நடந்த முஸ்லிம் லீக் மாவட்ட மாநாட்டுல தான் நான் வுங்கள கடைசியா பாத்தது. கிட்ட தட்ட 30 வருடம் இருக்குமா? இன்ஷா அல்லாஹ் , நான் இந்தியா வாறபோ என் மச்சான் , மேலப்பாளையம் L.K.S. குடும்பத்திலிருந்து உதித்த சமுதாய நன் முத்து, மீரான் மொஹிதீனிடம் உங்க விலாசம் கேட்டு ஒன்னா வருவேன். அதுவரை உங்க எழுத்து மூலமா உங்களோடு உறவாடும் அன்பு தம்பி காயல் ஹபீப். கத்தார்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்புக்கு நன்றி.நிறையப்பேசுவோம்.இறைவன் நாடினால் நேரிலும் பேசுவோம்.

      Delete