Saturday, September 24, 2016

அடையாளம் கரைந்த அவமானம்..! - 9



சில ஆண்டுகளுக்கு முன்னர் ,சென்னை எழும்பூரில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் சிராஜ் மண்டபத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் பொதுக்குழு கூட்டப்பட்டது. தமிழக யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முஹையதீன் சாஹிப் தலைமை தாங்கினார்.

இந்தப் பொதுக் குழு நடைபெறும் போதே நடுவிலே ஒரு வித்தியாசமான கோஷத்தோடு யூனியன் முஸ்லிம் லீகின் பொதுக் குழுவுக்குள்ளே ஒரு கோஷ்டி நுழைகிறது.
 
"தானைத் தலைவர் டாக்டர் கலைஞர் வாழ்க!" என்ற கோஷம்தான் அது.
அந்த ஹாலின் நடுவழி நடைபாதையில் தி.மு.. தலைவர் கருணாநிதி, ஆர்க்காடு வீராசாமி, ஆயிரம் விளக்கு உசேன் போன்றோர் நடந்து மேடைக்கு வருகிறார்கள். பேராசிரியர் காதர் முஹையதீன் சாஹிப் கருணாநிதியை வரவேற்று யூனியன் முஸ்லிம் லீக் மேடைக்குப் பூரிப்புடனும், பெருமிதத்துடனும் அழைத்துச் செல்கிறார். யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் குழு உறுப்பினர்களுக்கு பெரிய தயக்கமும் ஆச்சரியமும்.

நமது பொதுக் குழுவிற்குள் தி.மு.. தலைவரும் அவரது தொண்டர்களும்
ஏன் வருகிறார்கள்? எப்படி வரமுடிந்தது? எனத் திகைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முஹையதீன் சாஹிப் அழைப்பின் பேரில்தான், கருணாநிதியும் அவர்தம் தொண்டர்களும் யூனியன் முஸ்லிம் லீகின் பொதுக் குழுவிற்கு வந்திருக்கிறார்கள்.

இதுவரை லீகின் வரலாற்றில் நடை பெற்றிராத முன்மாதிரி நடந்துள்ளது.
காயிதெ மில்லத், அப்துல் வஹாப் ஜானி சாஹிப், அப்துஸ் ஸமது சாஹிப்
காலங்களில் ஒப்புக் கொண்டிராத இந்தச் செயல் பெரிய ராஜதந்திரம் போல கடைபிடிக்கப் பட்டுள்ளது.

எந்தவொரு அரசியல் இயக்கமும் தன்னுடைய பொதுக் குழுவிற்குள் இன்னொரு இயக்கத் தலைவரை அழைத்த வரலாறு கிடையாது. ஆனால் அன்று நடந்தது.

அரசியல் இயக்க வரலாற்றில் இதுதான் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் அடையாளம் கரையத் துவங்கிய அவமான நாள்.

அதே மேடையில் பேராசிரியர் காதர் முஹையதீன் சாஹிப், கருணாநிதிக்கு
வழங்கியப் பாராட்டு மொழிகள் அடுத்தொரு அவமானம்.
 
"மவ்லானாக்களுக்கு மவ்லானா. ஒலியுல்லாஹ்விற்குச் சமமானவர்." என்றப் பாராட்டு உரைகளைக் கருணாநிதி மீது போட்டார். இது ஒரு அரசியல் அநாகரீகம். ஆன்மீக அத்துமீறல்.

யார் சாபம் தொடர்ந்ததோ? முஸ்லிம் லீகிற்கு அவமானம் ஒன்றொன்றாகத் தொடங்கியது.

இந்த நிகழ்வுகள் நடைபெறுவதற்குப் பல ஆண்டுகள் முன்னாடி, ஜானி சாஹிப் காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
 
யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மாநாடு, சென்னை பூங்கா நகர் (இன்றுள்ள சென்டரல் ரயில்வே நிலையம் டிக்கட் பதிவு அலுவலகம் இருந்த இடம்,) திடலில் நடை பெற்றது.
 
அதற்கு முன்னால் மாநிலப் பொதுக் குழுவும், செயற்குழுவும் கூடித் தீர்மானம் நிறைவேற்றியது. அன்று மாலை பொதுக் கூட்டம். தோழமைக் கட்சி தி.மு.. தலைவர் கருணாநிதி பேசப் போகிறார்.

இந்த நிலையில் தலைவர் ஜானி சாஹிப் காலையில் சில பத்திரிகை நிருபர்களிடம் லீக் தீர்மானங்களைப் பற்றிப் பேசி விட்டார். அவை மாலை முரசில் வெளி வந்து விட்டன.
 
கருணாநிதி பேசிய பின்னர் தீர்மானம் பொது மேடையில் லீகர்களால் வாசிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு முன்பே தீர்மானம் வெளி வந்து விட்டது.
 
கருணாநிதி பேச்சைத் தொடரும் போதே லீகின் தீர்மானத்தைப் படித்தார்.
"இந்த மேடையில் லீக் தலைவரால் வெளிப்பட வேண்டிய தீர்மானங்கள்
என்னடா தி.மு.. தலைவரால் வாசிக்கப் படுகிறதே எனச் சிலர் நினைக்கலாம். லீகிற்குப் பக்குவமும் அனுபவமும் போதாதோ என்று கூட நினைக்கலாம். அது தவறு எங்களுக்குள் இடைவெளி கிடையாது என்பதற்கு
இதுதான் அடையாளம்" கருணாநிதி கொச்சைப் பேச்சைக் கூட்டுறவாகப்
பேசினார்.

அன்று ஜானி சாஹிபை லீகின் அத்துணை தலைவர்களும் கண்டித்தனர்.
ஆனால் இன்று கருணாநிதி, பொதுக் குழுவுக்குள்ளேயே கூட்டி வந்து அமர வைக்கப்பட்டார். கருணாநிதி மொழியில் சொல்ல வேண்டுமானால்,
"லீகிற்குப் பக்குவமும், அனுபவமும் பத்தாது" என்ற விமர்சனந்தான் சரியானதாக இருக்கும்.
 
இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே இயக்கம் நடத்திய லீகிற்கு தி.மு.. தலைமைக் கற்றுத் தர வேண்டிய அவமானம் அன்று வந்து சேர்ந்தது.

பேராசிரியர் கே.எம். காதர் முஹையதீன் சாஹிப் இன்னொரு சந்தர்ப்பத்தில் சொன்னார் "முஸ்லிம்கள் தி.மு. விற்கு வாக்களிப்பது ஆறாவது கடமையாகும்" இதை அரசியல் சாதுர்யம் என்று கொள்ளவா? சூபிஸ ஞான முதிர்ச்சி என்று ஏற்கவா

வேலூர் பாராளு மன்றத் தொகுதியில் பேராசிரியர் கே.எம். காதர் முஹையதீன் சாஹிப் முஸ்லிம் லீக் வேட்பாளராக உதய சூரியன் சின்னத்தில் நிற்கிறார். வெற்றி பெறுகிறார்.

இந்தத் தேர்தலுக்குக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் ஆணையம் ஒரு சட்டத்தை வரையறை செய்து விட்டது. தேர்தல் ஆணையம் ஒரு கட்சிக்கு ஒதுக்கியத் தேர்தல் சின்னத்தில் அந்தக் கட்சி உறுப்பினர்தான் நிற்க முடியும். வேறொரு கட்சி வேட்பாளர் நிற்க முடியாது. நிற்கவும் கூடாது. அப்படி நின்று வெற்றி பெற்றால் அந்த வேட்பாளர் வெற்றிச் செல்லாது. கட்சிகளின் சின்னம் கட்சிகளுக்கு உரிமையானதல்ல. தேர்தல் ஆணையத்தின் உரிமை உடையது என்பது போல ஒரு சட்டத்தை நிறைவேற்றி விட்டது.

இந்நிலையில் உதய சூரியன்சின்னத்தில் பேராசிரியர் கே.எம். காதர் முஹையதீன் சாஹிப் வேலூரில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.
 
இந்த வெற்றிக்குப் பின்னால், காயிதெ மில்லத் பேரர் தாவூத் மியான்கான்
ஒரு வழக்கை நீதி மன்றத்தில் பேராசிரியர் கே.எம். காதர் முஹையதீன் சாஹிப் மீது தொடர்கிறார். பேராசிரியர் கே.எம். காதர் முஹையதீன் சாஹிப் அந்த வழக்கில் தன் வெற்றிக்கு ஆதரவான சாட்சியங்களை நிரூபிக்கிறார்.

திருச்சி நகரில் ஒரு வட்டத்தில் தி.மு.. உறுப்பினர் அடையாள அட்டைத்
தன்னிடம் உள்ளதாகச் சாட்சி கூறி நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கிறார். அந்த அடையாள அட்டையில் பேராசிரியர் கே.எம். காதர் முஹையதீன் சாஹிப் படம் பொறிக்கப் பட்டிருந்தது. நீதி மன்றமும் இதை ஏற்றுக் கொண்டது.

அதாவது திருச்சியின் .திமு..கிளைக்கழக அடிப்படை உறுப்பினர் ஒருவர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநிலத் தலைவர். மீண்டும் முஸ்லிம் லீகின் அடையாளம் கரைந்து அவமானம் சேர்ந்தது.

அடுத்தும் ஒரு வாதம் வைக்கிறார். தமிழ் மாநில முஸ்லிம் லீக், தி. மு..வின் சிறுபான்மைக் கிளைத்தான் எனவும் சொல்கிறார். நீதி மன்றம் இதையும் ஏற்றுக் கொள்கிறது. அவரது பாராளு மன்ற உறுப்பினர் பதவி உறுதி செய்யப் படுகிறது. அடுத்தும் அவமானம் அடுக்கப்படுகிறது.

இந்த முடிவு அரசியல் அடிப்படையிலும் மகாப் பிழையானது. ஆன்மீக அடிப்படையிலும் கோரமான குழறு படியானது. சூபிஸப் பார்வையிலும் அவமானகரமானது.

அப்துஸ் ஸமது சாஹிப் காலத்தில் மாநிலப் பொருளாளராக இருந்த .சாகுல் ஹமீது சாஹிப் எம்.எல்.. மக்கள் மத்தியில் ஒரு திட்டத்தை முன் வைத்தார்.

"கால நிர்பந்தத்தின் காரணத்தால் இஸ்லாமியப் பேரவை என்ற அமைப்பில் அனைத்துக் கட்சிகளிலும் உள்ள முஸ்லிம்கள் ஒன்று சேருவோம். முஸ்லிம் லீக் இதை வழி நடத்தும்." என்ற ஒரு கோட்பாட்டை முன் வைத்தார்.

இதை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் செயற்குழு விவாதித்தது.
இந்த அமைப்பில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகர்கள் சேர முடியாது.
 
இரட்டை உறுப்பினர் பதவி முஸ்லிம் லீக் பைலாப் படிச் செல்லாது. எனவே முஸ்லிம் லீகர்கள் இதில் கலந்து கொள்ள முடியாது என முஸ்லிம் லீக் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.

ஆனால் சாகுல் ஹமீது சாஹிப் எம். எல். . "நான் அந்த அமைப்பிற்குத் தலைமை ஏற்று நடத்துவேன" என உறுதியாகச் சொல்லி விட்டார். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதை அவர் கேட்க வில்லை.

மீண்டும் மாநிலச் செயற்குழு கூட்டப்பட்டது. தஞ்சை விளாரில் உள்ள சாகுல் ஹமீது சாஹிப் தாய்வழி மாமாவான மாவட்டத் தலைவர் ஜமால் முஹையதீன் பாப்பா சாஹிப் பண்ணையில் கூட்டம் நடந்தது. கூட்டத் தலைமையை சாகுல் ஹமீது சாஹிப் அண்ணன் .கே.ரிபாய் சாஹிப் ஏற்றார். சாகுல் ஹமீது சாஹிப் பேச்சுக்களுக்குச் சாட்சிகள் கவிஞர் தா.காசிம், .ஹிலால் முஸ்தபா, கவிஞர் ஜபருல்லாஹ்.

சாகுல் ஹமீது சாஹிப் 6 - ஆண்டு காலம் லீகிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப் பட்டார்.

லீகின் கொள்கை அடிப்படை என்று முடிவுக்கு வந்து விட்டால், உறவுகள் முழுமையாகப் புறக்கணிக்கப் படவேண்டும் என்ற முன்மாதிரி ஏற்கனவே
லீகில் இருக்கிறது. இது இன்றையத் தலைமுறையினருக்குச் சொல்லித்தான் தீர வேண்டும்.

இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் பதிவு செய்து கொள்கிறேன்.
காயிதெ மில்லத் பேரர் என் தம்பி தாவூது மியான்கான் "காயிதெ மில்லத் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்" என்று ஒரு லீகைத் தொடங்கி இருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை எனக்கு இதில் எந்த உடன்பாடும் கிடையாது. இவரின் இந்த லீகும் "உச்சி வெய்யில் நிழல்" போன்றதுதான். ஒரு பொருளின் பாதத்திற்குக் கீழ் உச்சி வெய்யில் நிழல் ஒடுங்கிக் கிடக்கும். அது போலத்தான் இதுவும் என்பது என் கருத்து.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எங்கெல்லாம் பலகீனப் படுகிறதோ அங்கெல்லாம் தீவிரவாதத் தீமைத் தலைதூக்கத் தொடங்கி விடுகிறது. இதுதான் சரித்திரச் சாட்சி.

தமிழகத்தின் மக்களும் சம காலத்து அத்தனை அரசியல் தலைவர்களும் அறிந்து பெருமிதம் கொண்டிருந்த "கண்ணியத்திற் குரிய காயிதெ மில்லத்" என்ற சொல்லாடல் இன்று முஸ்லிம் லீக் இளைஞர் சிலரால் மாற்றப் பட்டு வருகிறது. "கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்" என்ற புதிய சொல்லாடல் வழங்கப் படுகிறது. இது ஏன் தலைமையால் திருத்தப் படவில்லை? இதன் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள்.?

யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநிலத் தலைமையகம் காயிதெ மில்லத் காலத்திலேயே மாநிலப் பொதுச் செயலாளராகவும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டக் குழு உறுப்பினராகவும் இருந்து மறைந்த K.T.M.அஹமது இப்றாஹிம் சாஹிப் நினைவாக "K.T.M.அஹமது இப்றாஹிம் மன்ஸில்" என்று செயல்பட்டு வந்தது. இன்று காயிதெ மில்லத் மன்ஸிலாக அது மாற்றப் பட்டு விட்டது. இந்த அவசியம் ஏன் ஏற்கப்பட்டது.?

இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?

பெயரில் என்ன இருக்கிறது? அல்வாவை அல்வா என்றால் என்ன? வால்அ என்றால் என்ன? அல்வாச் சுவை மாறியா விடும்? என்று கேட்பது போல் இதை எடுத்து விட முடியாது. ஒரு அடையாளம் அழிக்கப் படுகிறதைப்
புரிந்து கொள்வது முக்கியம்.

இதுவரைச் சில செய்திகளை முன் வைத்திருக்கிறேன். எவரையும் தாக்கும் நோக்கம் இல்லை.
 
எவருக்காவும் தயங்கும் போக்கும் இல்லை.
 
இன்னும் இன்னும் சிந்திப்போம் காலத்தின் கட்டாயம் இது.
 
கூட்டாகச் சிந்திப்பதே கோட்பாட்டு வெற்றியாகும்.

No comments:

Post a Comment