Friday, January 15, 2016

சங்கம் பலப்பலக் கண்ட தாய்த் தமிழே!



சங்கம் பலப்பலக் கண்ட தாய்த் தமிழே!

பொங்கும் இலக்கண இலக்கியப் பாக்கியம்
எங்கும் நிறைத்த இனித்த அமிழ்தே!
சிங்கம் நிகர்த்த வீரம் கொழித்த
தங்கத் தமிழர் வாழ்வின் செழிப்பே!

அங்கம் முழுதும் அன்பு கனிந்த
மங்கள மகிமை மணக்கும் மருக்கொழுந்தே!
தொங்கும் தோரணம் வெற்றி முழங்கும்
திங்கள் முகத்துத் தமிழர் பெருநாளே!

உழவர் தோளில் வியர்வை முத்துகள்
எழுகிற உழைப்பின் உயர்வுத் திருநாளே!
பழுதற வாழ்க! பலநலம் சூழ்க!
செழுநிறப் பொன்னொளிச் செழிப்பினில் திகழ்க!

தமிழர் வாழ்க! தரணியோர் வாழ்க!
நமைஎதிரப் போரும் தம்நிலை மாறுக!
கரங்கள் தழுவி கண்ணியம் சேர்க்க!
உறுதியில் வாழ்வோம்! உலகம் காப்போம்!

அமைதி நிலவுக! அருள் மணம் கமழ்க!
சுமைகள் விலகுக! சுகந்தம் பெருகுக!
இமைகளில் என்றும் வசந்தம் உலவுக!
எங்கள் வாழ்த்துகள்! பொங்கல் வாழ்த்துகள்!

No comments:

Post a Comment