Wednesday, January 21, 2015

யாரை நோக்கி...?




தி இந்து தமிழ் நாளிதழில் (19-01-2015) ஒரு செய்தி.

போகிற போக்கில் தூக்கி எறிந்து செல்லும் பாணியில் இந்தச் செய்தி
ஒரு ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பக்கத்தில் உள்ள குளந்திரன்பட்டுக்
கிராமத்தில் ஒரு நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது.  பொங்கல் விழாவிற்காக அந்த ஊரில் நடைபெறக்கூடிய மாட்டுப் பொங்கலில் கலந்துகொள்ள ஒரு குடும்பத்தினர் வந்திருக்கின்றனர்.

அவர்கள் அந்த ஊர்க்காரர்களால் துரத்தி விட்டப்பட்டனர். அவர்கள் ஏற்கனவே ஊர்விலக்கம் செய்யப்பட்டவர்கள். இதன் அடிப்படையில்தான் தற்போது கைகலப்பு நடந்திருக்கிறது. கறம்பக்குடி காவல் நிலையத்தில் எட்டு நபர்கள் மீது வழக்குப் பதிவாகி இருக்கிறது.

யார் அந்தக் குடும்பத்தினர்?

குணசேகரன் என்ற துரை. குணாதான் அக்குடும்பத்தினர். இந்த துரைகுணா
எழுத்தாளர் 2014 ஆம் ஆண்டு ஜூலை12-ஆம் தேதி "ஊரார் வரைந்த ஓவியம்” என்ற நூலை வெளியிட்டார். அந்த நூல் பெண்களை இழிவு படுத்திவிட்டதாகக் கூறி இவர் குடும்பத்தினரை அடித்து ஊரை விட்டு விலக்கி வைத்துளளனர்

இதேபோல் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சார்ந்த
கண்ணன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் "கருவாட்டு ரத்தம்" என்ற நூலை
வெளியிட்டார் அவரின் வீட்டையும் தீயிட்டுக் கொழுத்தி ஊரைவிட்டு விலக்கியுள்ளனர் .

பெருமாள்முருகன் எழுத்து மூலமாகத் தன் மரணத்தை உறுதிப்படுத்தி எழுதிக் கொடுத்துவிட்டார். இந்த நிகழ்வுகளெல்லாம் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக பெருக்கெடுக்க ஆரம்பித்து விட்டன.

எழுத்தின் காரணமாக விரட்டப்பட்டவவர்கள் எல்லாம் தாழ்நிலை சமூகத்தவர்கள், விரட்டி விட்டவரகள் சற்று முன்நிலை பெற்ற சமூகத்தவர்கள் என்ற தோற்றம் காட்டப் படுகிறது .

உள்ளபடியே இந்தத் தோற்றம்தான் உண்மையானதா? இல்லையேல் வேறொரு திட்டம் முகமூடி அணிந்து வரத்துவங்கி இருக்கிறதா? கொஞ்சம்
ஆழமாகச் சிந்தித்தேயாக வேண்டும்.

விரட்டப்பட்ட மூன்று எழுத்தாளர்களும் அந்தந்தப் பகுதியில் நிலவிவரும் அழுத்தங்களை வரலாற்று உறுதியாக பதிவு செய்திருக்கின்றனர்.

யாரையும் கொச்சைப் படுத்தவோ தாக்கவோ அவர்களின் எழுத்துகள்
முனையவில்லை. சில வரலாற்றின் நிகழ்வுகளை முன் வைக்கும் போது சகித்துக் கொள்ளாதவர் பலாத்காரத்தால் அச்சுறுத்தல் தரத் தயாராகிவிட்டனர்.

இந்தப் பயத்தால் பீடிக்கப்பட்ட சிலர் தங்கள் அரசியலைப் பலப்படுத்த மதத்தையும் ஜாதியத்தையும் தூண்டி விடுகிறார்கள்.

உண்மைக்கும் எழுத்துக்கும் அஞ்சும் இவர்கள் பயங்கரத்தை விளைவித்து
எழுத்தாளனை முடக்கப் பார்க்கிறார்கள்.

எழுத்தாளன் முடக்கப்பட்டால் சரித்திர உண்மை மறைந்து போகும் அந்த இடத்தில் பொய்யான போலிச் சரித்திரத்தை எழுத்து மூலம் பரப்பி
விடலாம் என்ற ராஜத்திரம் கையாளப் படுகிறது.
இது ஒரு சாதுர்யம் வெளித்தோற்றத்தில் ஜாதி மோதல் மதக்கலவரம், ஆனால் அடிப்படையில் உண்மைச் சரித்திரம் மறைக்கப்பட வேண்டும் போலி வரலாறு புகுத்தப்பட வேண்டும் என்கிற R.S.S.யின் பாரதீய ஜனதாவின் "புதிய மொந்தையில் பழைய கள்"என்ற பழமொழி அரங்கேற்றப் படுகிறது.


போலிச் சரித்திரம் க்ரீடம் அணிந்து கொலு அமர முடியும் என்கிற கோணங்கித்தனத் தத்துவம் கையாளப் படுகிறது.

இந்நிகழவுகள் அனைத்தும் ஆழமான சிந்தனையாளர்களுக்கும் எழுத்தாளர்
களுக்கும் விடப்படும் சவால்.  இந்தச் சவாலை எழுததாளர்கள் எதிர்
கொள்ளத்தான் வேண்டும்.

தொலைக்காட்சியின் நிகழ்வொன்றில் பா ஜ க வைச் சார்ந்த ராகவன் ஒருமுறை குறிப்பிட்டார், எங்களின் தீர்க்கமான எதிரிகள் கம்யூனிஸ்ட்கள்தாம் என்று.

இதைக் குறிப்பிடக் காரணம், வெளிப்பட்டிருக்கும் மூன்று எழுத்தாளர்களும் பொதுவுடைமைச் சிந்தனை கொண்டவர்கள்.

எழுத்துக்களின் உரிமை எங்கெல்லாம் நசுக்கப் படுகிறதோ அங்கெல்லாம்
அந்த நிகழ்வுகளின் பின்புலமாக இந்த வக்கிரங்கள் தன் முகம் மறைத்து
பதுங்கித்தான் கிடக்கும்.

மாதொரு பாகனாகட்டும், லஜ்ஜா மற்றும் ஆமனாகட்டும் இன்னும் பிற எழுத்துகளுக்கும் எதிர்ப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் நியாயமான
அடித்தள ஆதாரமான எழுத்துகள்தான் புறப்பட்டு வரவேண்டும்.


எழுத்தாளனையும் எழுத்துக்களையும் அச்சுறுத்தலால் அழிக்க நினைப்பது
அடாவடித்தனம், காட்டுமிராண்டித்தனம்.

No comments:

Post a Comment