Sunday, March 9, 2014

அசுத்த வார்த்தைகள்!!!




வாழ்த்துதல் என்பது உயிரினத்தின் யதார்த்தமான சுகானுபவமிக்க உயரிய செயல்பாடு.

இந்தச் செயல்பாட்டை அதனுடைய புரிதலிலும் அர்த்தத்திலும் கையாளும்போது அதன் வெளிச்சம் வரலாற்றுப் பிரமிப்பு மிக்கதாகும்.

ஆனால் இந்த வெளிச்சச் செயல்பாடு மிக வேக வேகமாக விரயமாக்கப் படும்பொழுது சமுதாயத்தின் சீர்கேடும் சிதைவும் சரித்திரச் சின்னமாகத் தேங்கி விடுகிறது.

வாழ்த்தத் தெரியாத மனிதம் வாழத் தெரியாத விரயம். அதேநேரம் வாழ்த்து என்ற பெயரில் பொய்மையை மூட்டைக் கட்டித் தூக்கி வந்து கொட்டும் பொழுது சமூகத்தின் தலைவிதியேத் தகர்க்கப் படுகிறது.

வாழ்த்துதலில் உண்மை இருக்கும். சத்தியத்தின் உயிரோட்டம் துடித்துக் கொண்டிருக்கும். எளிமையானதாக அது இருக்கும். தேவை இல்லாத புனைதல் நிச்சயமாக அங்கே இருக்காது. இதுதான் சரியான வாழ்த்துதலின் அடையாளம்.

இன்றைய அரசியல் உலகம், ஆட்சி பீடங்கள், அதிகார வர்க்கங்கள் இந்த உண்மையை உருத்தெரியாமல் சிதைத்து அதனைச் சமாதிக்குள் அனுப்பி அந்தச் சமாதியின் மீது அழகியச் சலவை சின்னங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

இதனால் லாபம் இருக்கிறது. இது வளர்ச்சிக்கு வழி செய்கிறது இன்னும் சொல்லப் போனால் இது ஒரு ராஜ தந்திரம், அறிவின் சாகசம், கெட்டிக்காரத்தனத்தின் லாபக் கையிருப்பு என்றெல்லாம் பிரச்சாரம் கலந்த வணிகமாக இது மாறிவிட்டது.

ஒரு இயக்கத்தின் தலைமையை அல்லது அதிகார வர்க்கத்தின் தலைமையை வானளாவப் புகழ்வதால் சலுகைக் களஞ்சியத்தை நிரப்பிக் கொள்ள முடியும் என்ற கருத்தாக்கம், மகத்தான கேடாக மட்டும் இல்லை. தலைமுறைச் சீரழிவு சம்பந்தப் பட்டதாகவும் அது இருக்கிறது.

வாழ்த்துதல் என்பது மீறி, புனைதல் என்னும் பொய்யின் கோட்டைக்குள் நுழையும் பொழுது நமது ஆழ்மனம் அழுகிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

உலகத் தமிழினத்தின் தலைவரே!”, “முத்தமிழ் அறிஞரே!”, “வாழும் வள்ளுவரே!”, “தொல்காப்பியச் சுடரொளியே!

தாயே!”, “தமிழே!”, “கன்னி மரியே!”, “காவேரிச் செல்வியே!”, “பொன்னியின் செல்வியே!” , “இதய தெய்வமே!” , “காவல் தெய்வமே!

இப்படியெல்லாம் வார்த்தைகளைக் கண்டெடுத்து தங்கள் தலைமைகளை அலங்காரப் படுத்தும் மனித மனங்களை ஒரு சமூகம் மன்னித்து விடுவதோ மறந்து விடுவதோ தலைமுறைத் தவறாக விஸ்வரூபம் எடுக்கும் என்பதைச் சொல்லிக் காட்ட வேண்டிய பொறுப்பு சமூக அக்கறையாளர்களுக்கு இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் ஒரு புதிய சொல்லாடலையே கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இல்லாததையெல்லாம் இருப்பதாகச் சொல்லி வாழ்த்திவிட்டு, அந்தப் போஸ்டரின் கீழே ஒரு வரியைச் சேர்த்து இருப்பார்கள்.

வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்இந்த வாக்கியம் தமிழ் தோன்றிய காலம் தொட்டு தொடர்ந்து வந்ததாகத் தெரியவில்லை. திராவிட முன்னேற்ற கழகத்தினால் கண்டறியப்பட்டு அண்ணாவுக்கும், கருணாநிதிக்கும் தரப்பட்டது. இன்றைக்கு அம்மா இதய தெய்வத்துக்கும் இந்த வசனம் வழங்கப் படுகிறது. இதில் யாருக்கும் வெட்கமில்லை.

இந்த அடைமொழிகளை சொல்பவர்களுக்கு இவற்றில் எதுவுமே துளியும் உண்மையில்லை என்று நன்றாகத் தெரியும். ஆனாலும் இந்த வார்த்தைகளை முன்னெடுத்து வைக்கிறார்கள்.

இந்த வாசகங்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களுக்கும் இவற்றில் குன்றிமனியளவும் சத்தியம் இல்லை என்ற சமாச்சாரம் பிரம்மாண்டமாகத் தெரியும். ஆனாலும் தங்களைத் தாங்களே மகிழ்வால் தழுவிக் கொள்கிறார்கள்.

இவைகள் எல்லாம் ஒரு கேளிக்கைப் போல் அமைகின்றன. இவைகளைத் திரும்பத் திரும்ப பயன்படுத்தும் பொழுது இந்த இருவரின் பக்கமும் அது ஒரு உண்மையைப் போல சிலை வடிவம் பெற்று விடுகிறது. இதுதான் மனநோய்.

நாளாக நாளாக நிழல்களை நிஜமாக கருதுகிறார்கள். அப்படியே நம்புகிறார்கள். நிஜமான இந்த மனிதர்கள் நிழலாகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற புரிதல்கூட இல்லாமல் போலியாகவே மாறிவிடுகிறார்கள்.

இந்த போலிகளின் ஆளுமைகளும், ஆட்படும் தன்மைகளும் சமுதாயத் தோற்றங்களாக உருவாகும் பொழுது தலைமுறைகள் சவலைப் பிள்ளைகளைப் போல சக்திகள் இழந்து மரணக் குழியில் மல்லாந்துக் கிடக்கின்றன.

அதாவது மன நோய்களே மனித உருவங்களாக அங்கீகரிக்கப் படும்பொழுது, தலைமுறைகள் எத்தகைய அவலங்களைச் சந்திக்க நேரிடும் என்பதற்கு இன்றைய தன்னிகரற்ற தமிழினம் ஒரு அடையாளம் ஆகும்.

இந்த மன உணர்வு, இன்றுதான் சமுதாயம் கண்டுபிடித்த ஒன்றாக இருக்கிறது என்று கருத வேண்டாம்.

மனித அழிவு தலைதூக்கும் பொழுது இந்த மனநோய் வீதி உலா வரும் என்பதற்குச் சரித்திர வீதிகளில் சான்றுகள் கிடைக்கின்றன.

இனியர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு

இது வள்ளுவர் வாசகம்.

ஒரு தொடர்பை, உறவைச் சுட்டிக் காட்டும் பொழுது, அதில் உண்மை இருக்க வேண்டும். ஒரு பெருமிதத்தை ஒருவருக்கு பொருத்திக் காட்டும் பொழுது, அதில் சத்தியம் இருக்க வேண்டும். மாறுபாடாக, வாழ்த்துவதாகக் கருதி உரியவர்களை உயர்த்துவதாகப் புரிந்து அதிகப் பட்சமாகப் பேசப்படும் எந்த மொழியானாலும் அந்த மொழி வாழ்த்து மொழி அல்ல. புனைதல் மொழிஎன ஒரு அற்புதமான சொல்லாடலை வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

ஒருவர் எமக்கு இவ்வளவு உயர்வானவர் அவருக்கு நாம் அவ்வளவு அணுக்கமானவர் என்று காட்டப் பயன்படுத்தும் அத்தனை மொழிகளும் புனை மொழிகள்.

எப்படியென்றால் எங்கள் தலைவி’ , ‘காவேரித் தாய்’, ‘கன்னி மரியாள்’, ‘இதய தெய்வம்என்றெல்லாம் புனையப் படுகின்ற மொழிகள் போலிகளின் கருவறையில் தயாரான கற்பச் சிதைவு பிண்டங்கள்.

எங்கள் தலைவர்’, ‘தமிழனத் தலைவர்’, ‘ராஜ ராஜ சோழன்’, ‘வாழும் வள்ளுவர்’, ‘முத்தமிழ் அறிஞர்என்றெல்லாம் பிதற்றப்படுவது பொய்யென்னும் தாயின் பால் குடித்து வளரும் பாலகச் சிதைவுகள்.

இதைத்தான் வள்ளுவர், ”புனையினும் புல்லென்னும் நட்புஎன்கிறார்.

புனைமொழிக் கலாச்சாரத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழமை இருந்தாலும் அதனுடைய மோசமான பரிமாணத்தை ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்புப் போல சிறப்பாக்கியச் சீரழிவைத் தமிழகத்தில் திராவிட இயக்கங்கள்தாம் தலைக் கனக்க சுமந்து, தோள் வலிக்கத் தூக்கி தமிழக வீதியெங்கும் விற்றுத் திரிகின்றன. இப்படிச் சொல்வதற்கு அச்சப் பட வேண்டியது இல்லை.

சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொருளாளர் புனைமொழியில் சொல்வதென்றால்தளபதி”, “நாளைய முதல்வர்என்னும் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

சென்னை மெரீனாவில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதியில் இரட்டை இலைச் சின்னம் இருக்கிறது. இது தேர்தல் காலத்தில் வெளிப்படத் தெரிவது தேர்தல் விதிக்கு முரண்பட்டது. எனவே அதை மூட வேண்டும். இதுதான் வழக்கின் சாராம்சம்.

சரியாகத்தான் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். இதுபோல் அரசுத் திட்டங்களில் அரசு செலவில் தர்மங்களை வழங்கும் பொருள்களில் முதல்வர் என்ற தனிமனிதரின் உருவமோ அல்லது அந்த ஆளுங்கட்சியின் சின்னமோ பொறிக்கப்பட்டு இருப்பது தகாதது மட்டுமல்ல மகத்தான தவறானது கூட. அது குற்றச்சாயல் கொண்டது என்ற எண்ணத்தையும் இதன் மூலம் ஏற்படுத்தி இருக்கிறார் ஸ்டாலின். வரவேற்க வேண்டிய சிந்தனை.

இந்த அருவருப்பைத் தொடங்கி வைத்தது ஸ்டாலிலின் தந்தையும் தமிழக முன்னாள் முதல்வரும் புனைமொழியில் சொல்வதானால் தமிழினக் காவலரும், முத்தமிழ் அறிஞரும், வாழும் வள்ளுவரும் என வருணிக்கப் படும் கலைஞர் கருணாநிதிக்குத் தான் பூரண உரிமையாகும்.

கருணாநிதி எட்டடி என்றால், “போயஸ் தோட்டத்துப் புறா”, “பால்கனிப் பாவைஎன்று கருணாநிதியால் புனையப் பட்ட முதல்வர் செல்வி ஜெயலலிதா கருணாநிதியை விட கூடுதலாகப் பதினாறு அடி தாண்டித் துள்ளிக் குதித்திருக்கிறார் என்பதுதான் உண்மை.

இந்த வேகத் துள்ளலைச் சகிக்க முடியாத ஸ்டாலின் இந்தக் கேட்டின் வலிமையை மக்களுக்கு இன்று புரிய வைக்கிறார்.

நாம் ஒன்றுதான் சொல்ல முடியும் ,”புனைமொழி தளபதியாரே!, உங்கள் தந்தையான வாழும் வள்ளுவருக்கு எப்படியாவது தலைவலிக் கொடுத்து கொண்டே தான் இருப்பீர்களோ?”

இதய தெய்வம், நாளைய பிரதமர் என்னும் புனைமொழிகளை சுமந்துத் திரியும் செல்வி ஜெயலலிதா அம்மையாருக்கு ஒரு சின்ன வேண்டுகோள்.

அம்மா தண்ணீர் வழங்கிவிட்டீர்கள், அம்மா உணவகம் வீதிகளில் அசத்திக் கொண்டிருக்கின்றன. ஒன்றை மறந்து விட்டீர்களே! டாஸ்மாக், தமிழகத்தின் அரசுக் கஜானாவையே காத்துக் கொண்டிருக்கிறது என்கின்ற உண்மையை உங்கள் அடிப்பொடித் தொண்டர்கள் விளம்பரப்படுத்த மறந்து விட்டனர். 'அம்மா டாஸ்மாக்என்ற விளம்பரத்தை மறைத்து உங்கள் புகழுக்குப் புழுதிச் சேர்க்கிறார்கள். உரிய நடவடிக்கை உடனே எடுங்கள்”.

பொய்யான ஒன்றை, பொய்யென்றே தெரிந்து சொல்லிக் கொள்வதும் அதைப் பொய்யென்றே தெரிந்து ஏற்றுக் கொள்வதும் ஒரு கட்டத்தில் பொய்யென்னும் நிலையை மீறி அதுவே உண்மையென்னும் உணர்வாக நம்பப்படும்போது நடந்துவிடும் சீரழிவுக்கு ஹிட்லரும், ஹிட்லரின் மதிமந்திரி கோயபல்சும், ஹிட்லர் ஆட்சியின் சீரழிவும் நல்லதொரு எடுத்துக்காட்டு.

அடுத்தத் தலைமுறையை ஹிட்லரைப் போல் மன நோயாளியாக்கும் இந்த வாழ்த்தியல் வழிப்பாட்டுத் தத்துவம்தான் உள்ளபடிக்கு நமது அடுத்த தலைமுறைக்கு நாம் விதைத்து வைக்கும் விஷ விருட்சம்.

No comments:

Post a Comment