Saturday, November 16, 2013

ஒரு மகாகவி பிரார்த்தனை!



     ஆகஸ்ட் மாதம் 15 ம் நாள் 1947 ஆம் ஆண்டு. இரவு 12.01 மணிக்கு இந்தியப் பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் துவங்கியது. அதுவரை இந்தியத்தை அடிமைப்படுத்தி வந்த வெள்ளை ஏகாபத்திய காலனி ஆதிக்கம் முற்றிலுமாக விடைபெற்ற நாள் அது.

     கவிக்குயில் சரோஜினி நாயுடு தன் இனிய குரல் வளத்தால் இந்தியாவின் தேசிய கீதமாக ஒரு பாடலைப் பாடினார். அந்தப் பாடல் "சாரே ஜஹான் சே அச்சா" உருதுப் பாடல். பாராளுமன்றம் சுதந்திரச் சுவாசத்தால் விம்மிப் பூரித்து மகிழ்ந்தது.

     இந்திரா அம்மையார் பிரதமராக இருந்த காலம். ரஷ்யாவின் துணையுடன் வான் வெளியில் இந்திய விஞ்ஞானி நடந்தார். இவர்தான் வான வெளியில் நடந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா. அங்கிருந்த படி பாரதப் பிரதமருடன் பேசினார்.

   "ராகேஷ் ஷர்மா! வான் வெளியில் இருந்து இந்தியாவைப் பார்க்கும்போது எப்படி இருக்கிறது? என இந்திரா அம்மையார் கேட்கிறார்.


"சாரே ஜஹான் சே அச்சா
ஹிந்துஸ்தான் ஹமாரா"


      இப்படி அந்த வான்வெளி வீரர் பதில் சொல்கிறார். மனிதன் எழுதிய கவிதை வரிகள் வான் வெளியில் மனிதனால் உச்சரிக்கப்பட்டது இதுவே முதல் முறை.

      இன்றும் கூட ராணுவ அணி வகுப்பில் இதே பாடல்தான் ஒலிக்கப்படுகிறது.

      தேசிய கீதமாக அல்ல - ஒரு நிழல் தேசிய கீதம் போல. இந்தப் பாடலின் பிதாமகர் அல்லாமா முஹம்மது இக்பால், 1876 ஆண்டு பிப்ரவரி 22 ஆம் நாள் பிறந்தார்.





      "உணர்ச்சிகரமான பாடல்கள் விவாதங்களை ஏற்படுத்தும் பாடல்கள்” என்று விமர்சகர்களால் குறிக்கப்படும் பாடல்கள் இக்பாலுக்குச் சொந்தமானவை.

      1920 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இக்பால் முஸ்லிம்களால் மட்டுமல்ல ஹிந்துக்களால், சீக்கியர்களால், அனைத்து இந்தியர்களால், ஏன் கம்யுனிஸ்டுகளால் கூட "இவர் எங்கள் முன்னோடி" எனப் பெருமையுடன் குறிக்கப்பட்டார்.

      அல்லாமாவின் உருது பார்ஸிப் பாடல்கள் உலகத்தரம் கொண்டவை. கற்பனை வளம் கனிந்தவை. தூரப் பார்வை பெற்றவை. சுயத்தன்மை சுதந்திர வெறி, வாழ்வு தத்துவ வெளிப்பாடுகள் இக்பாலின் பாடலுக்கு கவிதா முத்திரை பதித்தன.

      ஐரோப்பிய கலாச்சாரங்களுக்குத் தீவிர எதிர்ப்பாளர். அது உலகத்தின் அப்பட்டமான ஒழுங்கீனம் எனச் சாடத் தயங்காதவர். முஸ்லிம்களுக்கும் இந்தியத்தில் தனி நாடு வேண்டும் என முதல் குரல் குடுத்தவர்.

      மவ்லானா ரூமி, இப்னு இகுல் தூன், நீட்சே, பெர்க்ஸன், ஒயிட்ஹெட் போன்ற தத்துவ ஞானிகளிடம் ஆழமான ஈடுபாடு இக்பாலுக்கு இருந்தது.

      இறைவனைப் பணியும் அடக்கம், இறைத்தூதர் நபி [ஸல்] அவர்களின் மேல் கொண்ட முஹப்பத் (ஆழ்ந்த அன்பு) இவையே இக்பால் பாடல்களில் நிலைத்திருக்கும் தன்மை.
     
பெருமானாரின் வாழ்வை ஆதாரமாக்கி ஒழுக்கமான கட்டுக்கோப்பான வாழ்வை தன் வாழ்கை முறையாகக் கடைப்பிடித்தவர்.

ஆரம்ப கால இஸ்லாமிய வரலாற்றின் பெருமைகளில் அளப்பரிய நாட்டம் வைத்தவர். தன் காலத்து முஸ்லிம் சமுதாயத்தின் அவல நிலையைக் கண்டு கொதி நெருப்பாகப் பொங்கி எழுந்தவர்.

      தற்கால முஸ்லிம்களின் மோசமான நடத்தைகளின் மீது காறித்துப்பவும் அச்சப்படாதவர். உணர்ச்சி அற்ற இந்தப் பிண்டங்களை ஓதிக்கித் தள்ள முந்திக் கொண்டு புறப்பட்டவர். எரிச்சல் மட்டும் ஒரு சமுகத்தை  உருவாக்குவதில்லை. ஆக்க பூர்வமான மாற்று வழி எது என்று ஒரு பாதையைக் காட்டுவதுதான் சீர்த்திருத்தவாதியின் முதல் அடையாளம்.
     
பலமிழந்த இந்திய முஸ்லிம் சமுகத்திற்கு இக்பால் மாற்று வழியைக் காட்டினார். அதுதான் முன்னோர்களின் பாதை
     
நினைத்துக் கொண்டிருப்பவர்களைக் காட்டிலும் நினைத்துக் கொண்டே காரியங்களை நிறைவேற்றுபவர்களைத் தான் பாராட்டும் பழக்கமுள்ளவர் அவர்.

      உலக முஸ்லிம்களின் ஒப்பற்ற பேச்சாளராகத் தன்னை உருவகப்படுத்திக் கொண்டவர் இக்பால்.

      இஸ்லாத்தை அரபுப் பாலையில் முளைக்க வைத்து அதை உலகம் முழுவதும் நிழல் பரப்பும் படி விரிவடையச் செய்த இறைவனைப் பாராட்டுவதில் இக்பால் மற்றைய எவரையும் விட தனக்கு என ஒரு தனிப்பாணியினை  உருவாக்கிக் கொண்டிருந்தவர்.

      “எங்களது பாங்கு ஒலிகள்
      ஐரோப்பாவின் சர்ச்சிகளிருந்தும் வெளிப்புறப்பட்டன.!
      ஆப்ரிக்காவின்
      பாலைப் புறங்களிலும் அது பரவி பெருகியது!
     
      உலகம் எங்களின்
      உள்ளங்கையில் வந்து
      விழுந்தது !
      ஆனால்
      எங்களின் பெருமைகள் எங்கள் விழிகளை
      இறுக்கி மூடிவிட்டது !”


      ஆண்டியை அரசனுடன் ஒரே சமமாக்கி மஸ்ஜிதில் நிறுத்தி நீங்கள் அத்தனைபேரும் இறைவனின் அடிமைகள். சமமான அடிமைகள் என்பதை இஸ்லாம்தான் உலகுக்கு நிரூபித்துக் காட்டியது

      இவைகள் மகாகவி இக்பால் உலகுக்கு அறிவிக்கும் செய்தியாகும்

       “இறைவா!
       உன் அருட்கொடைகள்
       உன் மீது நம்பிக்கை
       இழந்தவர்கள் மீதும்
       விழுகிறது!
       முஸ்லிம்களின் பக்கம்
       ஏன் உன் கோபமின்னல்கள்
       சீறிப்பாய்கின்றது?''

       காரணத்தோடு இக்பால் கவலைப் படுகிறார்.

       ''படைத்தவனை மறந்த பின்
       அவன் இறுதித் தூதரைத் துறந்த பின்
       இஸ்லாமியன்
       துரும்புகளாலும்
       தொல்லைப்படக் கூடியவனாக
       ஆகிவிடுகிறான்!”
     
      கவலைகளைச் சுமந்து கொண்டே வேதனைப் படும் கவிஞராக இக்பாலால் வாழ முடியாது.

      ''முஸ்லிம்களின்
      முன்னோர்களுக்கு
      நீ எப்படி
      உன் பாக்கியங்களை
      வாரி வழங்கினாயோ
      அதனையே
      எங்களுக்கும்
      அள்ளித்தா!
      தூக்கத்தையே
      சுகமாக்கி கொள்ளும்
      இதயங்களைத் தட்டித் திறந்தருள்''!

      இக்பாலின் பிராத்தனை இப்படி அர்ஷின் ஆண்டவனை நோக்கி இறைஞ்சுகிறது.

      “உன் முன்னோர்களை
      அண்ணாந்து பார்!
      அவர்கள் தலைகள்
      என்னிடம் மட்டுமே
      தாழ்ந்தன!
      அதற்கு கூலித்தான்
      உலகம் அவர்களின்
      காலுக்குக்கீழாக 
      அருளப்பெற்றது!''

      இறைவன் இப்படி மனிதனுக்குச் செய்தி வாசிக்கிறான் என இக்பால் சொல்லுகிறார்.


      ''படைத்தவனை மறந்த பின்
      அவன்
      இறுதி தூதரைத் துறந்த பின்
      இஸ்லாமியன்
      துரும்புகளாலும்
      தொல்லைப்படகூடியவனாக
      ஆகிவிடுகிறான்!''

      பிரச்சனை இதுதான் என அழுத்தமாக இக்பால் அறிவிக்கிறார்.

      ஒரு புரட்சியாளரின் பேனாவாக இக்பாலின் எழுது கோலை இந்தச் சமுகம் மாற்றி அமைத்து விட்டது.

      “நீங்கள்
      செய்யதுகள்!
      மீர்ஷாக்கள்!
      ஆப்கானிய
      ஆற்றலாளர்கள்!
      எல்லாம் சரிதான்
      நீங்கள் என்றைக்கு
      முஸ்லிமாகப் போகிறீர்கள்?'

      நபி இப்ராஹீம்
      பொறுமை நம்பிக்கை
      முஸ்லிம்களுக்கு
      வாய்த்து விட்டால்!
      துன்பத் தீக்குள்ளும்
      புஷ்பத் தோட்டத்தை
      ரசிக்க முடியும்!''

      இக்பாலின் தூரப்பார்வையில் நம்பிக்கையே பிரகாசிக்கின்றது.

      ஒரு மகாகவியின் எண்ணங்களும் பிராத்தனைகளும் பொய்யாவதில்லை.


      இறைவா! எங்களை எங்களுக்கு அடையாளம் காட்டி அருள்!

No comments:

Post a Comment