Sunday, March 8, 2015

ஒரு சரித்திரக் குடும்பம்...!





ஜமால் மைதீன் பாப்பா- இவரை நினைவுகூரும் பொழுது ஒரு நெடிய பின்னணி தவிர்க்க முடியாமல் வந்து ஒட்டிக் கொள்ளும். இவரின் மூதாதையர்கள் (இப்படிச் சொல்லும் போது 3000 ஆண்டு சரித்திரம் எனப் புரிந்து கொள்ளவேண்டாம்).

இவருக்கு முன்னர் வாழ்ந்த மூன்று நான்குத் தலைமுறையினரின் கதையில் இருந்து தொடங்கவேண்டும்.

இராமநாதபுரம் மாவட்டம் நரிக்குடி என்னும் குக்கிராமம் இவரின் பூர்வீகம்.
தமிழகத்தின் மூத்தக் குடியினரான மறவர்குல வழித்தோன்றல். தமிழகத்திற்கு ஒரு செய்தி ஏற்கனவே தெரிந்திருக்கும். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முஸ்லிம் பெண்மணியிடம் தாய்ப்பால் பருகி வளர்ந்தவர் என்பது.

பசும்பொன் ஐயாவின் ரத்தத்தில் கலந்திருந்த தாய்ப்பால் பாப்பாவின் குடும்பத்து ஒரு தாயின் பால்தான்.

ஏற்கனவே பசும்பொன் தேவரும் பாப்பா முன்னோரும் தாயத்தார்தாம். 

பாப்பாவின் முன்னோர் ஒரு இறைஞான சூஃபியால் இஸ்லாத்தைத் தழுவியவர்கள். சொந்த ஊரான நரிக்குடியை விட்டுப் பஞ்சம் பிழைக்க வெளியேறினார்கள்.

இறைவன் நாடினான்.

இந்திய விடுதலைக்கு முன்பே பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்குப் பலப்பல கோடிகளை இறைவன் வாரி வாரி வழங்கினான்

ஜமால் முஹமது சாஹிப் தமிழகத்தின் தலைசிறந்த வணிகப் பெருமகனாகப் பரிணமித்தார். ஜமால்முஹமது சாஹிப், இவர் சகோதரர் ஜமால் அப்துல்லாஹ் சாஹிப் இவர்களின் செல்வச் செழிப்பு பிரமிக்கத்தக்கதாக வளர்ச்சி அடைந்திருந்தது.

தஞ்சை மாவட்ட ஆடுதுறையில் ஜமாலியா குடும்பம் செழித்தோங்கியது.

சென்னையிலும் ஜமால் முஹமது பிரதர்ஸ் & கம்பெனி தோல் வணிகத்தில் முதல்நிலை வகித்த பெருமைக்குரியது. தோல் ஏற்றுமதியில் தமிழகத்தில் இவர்களை நெருங்க இன்னொருவரில்லை என்கிற அளவுச் சிறப்புப் பெற்றிருந்தனர்.

சென்னை தம்புச்செட்டி தெருவில் ஜமால் முஹமது சாஹிபின் அலுவலகம் இருந்தது.

இந்த அலுவலகத்திற்கும் இந்திய சுதந்திர வரலாற்றிற்கும் ஒரு சரித்திரத் தொடர்பு இருக்கிறது.

மகாத்மா காந்தி இந்திய விடுதலை இயக்கத்திற்காக ஒருகோடி ரூபாய் நிதி திரட்ட இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். சென்னைக்கும் வந்தார்.

சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் காந்திஜீயை அழைத்துக் கொண்டு தம்புச்செட்டி தெருவிலிருக்கும் ஜமால் முஹமது கம்பெனிக்கு வந்தார்.
"மகாத்மாஜீ! உங்கள் நிதித் திரட்டலின் டார்கெட் என்ன?" என்று ஜமால் முஹமது சாஹிப் கேட்டார்.

"மொத்தமாக ஒரு கோடி ரூபாய்" எனக் காந்திஜீ சொன்னார்.

"காந்திஜீ! நீங்கள் உங்களை வருத்திக் கொள்ள வேண்டாம். இந்தியச் சுந்திரப் பணிக்காக எங்களுடைய பங்களிப்பு இது" எனக் கூறி ஒரு பிளாங்க் செக்கில் ஜமால்முஹமது சாஹிப் கையெழுத்திட்டுக் காந்திஜீயிடம் கொடுத்தார்.

காந்திஜீக்கோ மலைப்பு.

"என்ன இது?" என்றார் காந்திஜீ.

"மகாத்மாஜீ! நீங்கள் எதிர்பார்க்கும் முழுத்தொகையையும் இந்தச் செக்கில் நீங்கள் குறித்துக் கொள்ளலாம்" என்றார் ஜமால் முஹமது சாஹிப்.

"ஜமால் முஹமது சாஹிப்! நன்றி. பெரும் மகிழ்ச்சி. நீங்கள் ஒருவர் மட்டுமே இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள நான் விரும்பவில்லை. நம் இந்திய மக்கள் பலரது பங்கும் இதில் இருக்கவேண்டும்.

உங்கள் பங்கிற்கான ஒரு லட்சத்தை இதில் குறித்துக் கொள்கிறேன்" எனக் கூறி காந்திஜீ ஜமால் முஹமது சாஹிப்  வழங்கிய செக்கில் ஒரு லட்சத்தைக் குறித்துக் கொண்டார்.

காந்திஜீ காலத்தில் ஒரு லட்சம் என்றால் இன்றைய காலத்தில் அதன் மதிப்பீட்டை இதைப் படிப்பவர்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

ஜமால் முஹமது சாஹிபின் தம்பியும் கம்பெனியின் பங்குதாரருமான ஜமால் அப்துல்லாஹ் சாஹிபின் மகனார்களில் ஒருவர்தாம் ஜமால் மைதீன் பாப்பா சாஹிப்.

இந்திய விடுதலைக்காக லண்டனில் வட்டமேஜை மாநாடு கூடியது ஆதிக்கக்கார ஆங்கிலேயரும் இந்திய அரசியல் மேதையரும் கலந்து கொண்ட  வட்டமேஜை மாநாடு அது.

காந்திஜீ அந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார், இன்னும் மேன்மைக்குரிய தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இந்திய முஸ்லிம்கள் சார்பாக அரசியல் மேதை மவ்லானா முஹமதலியும் கலந்து கொள்கிறார்.

மவ்லானா முஹமதலியின் லண்டன் பயணச் செலவினங்களை ஜமால் முஹமது சாஹிப் ஏற்றுக் கொண்டார்.

கராச்சித் துறைமுகத்திற்கு மவ்லானா முஹமதலியுடன் தானும் சென்று மவ்லானாவை லண்டனுக்கு வழியனுப்பி வைத்தார்.

மவ்லானா முஹமதலி இந்தியத் தாய்மண்ணில் நின்று ஒரு பிரகடனம் செய்கிறார்" என் தாய்த்திரு மண்ணின் விடுதலையை வேண்டி வட்டமேஜை மாநாடிற்கு நாங்கள் செல்கிறோம், இந்தப் பேச்சு வார்த்தையை இறைவன் முழுமையாக வெற்றியாக்கித் தருவான் என்று நம்புகிறோம். ஒரு வேளை வெற்றி வாய்க்கவில்லை என்றால் நான் என் அடிமைப்பட்ட தாய்மண்ணுக்குத் திரும்பமாட்டேன்" என மவ்லானா முஹமதலி சூளுரைத்துக் கொண்டார்.

அந்த வட்டமேஜை மாநாடு தோல்வியில் முடிந்தது. இந்தியத் தலைவர்கள் வேதனையுடன் இந்தியம் திரும்பினர்.

ஆனால் மவ்லானா முஹமதலி தான் கூறிய படியே இந்தியம் திரும்ப மறுத்து விட்டார்.

நேரே இறைவனிடம் முறையிட மக்க மாநகர் சென்றுவிட்டார்.

முஸ்லிம்களுக்கு ஒரு ஆழமான நம்பிக்கையுண்டு மக்காவிலுள்ள கஃபா என்னும் கஃபத்துல்லாவின் திரைச்சீலையைப் பற்றிக் கொண்டு நெக்குருகிப் பிரார்த்தனை செய்தால் அப்பிரார்த்தனை அங்கீகரிக்கப் பட்டுவிடும் என்பதுதான் அந்தப் பூரணமான நம்பிக்கை.

மவ்லானா முஹமதலி அந்தக் கஃபாவின் திரைச் சீலையைப் பற்றிப் பிடித்து நெக்குருகி அழுது கரைந்து "எங்களின் தாய்த்திரு நாடான இந்தியத்திற்கு நிபந்தனையற்ற பூரணச் சுதந்திரத்தை வழங்கியருள்வாயாக எங்கள் முயற்சிகளை எல்லாம் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் எங்கள் இறைவனே இன்னும் ஏன் தாமதிக்கிறாய்? உன் கருணையை எங்களுக்கு வாரி வழங்கி அருள்வாயாக!

என் மரணம் அடிமைப்பட்டுள்ள என் தாய்நாட்டில் நிகழக்கூடாது சுதந்திர மண்ணில்தான் என் உடல் அடக்கம் பெற வேண்டும்" எனக் கண்கலங்கி மவ்லானா முஹமதலி பிரார்த்தனை செய்தார்.

இந்தப் பிரார்த்தனையைச் செய்துவிட்டு இன்று அடிமைப் பட்டிருக்கும் என் தாய்மண்ணிற்கு நான் திரும்ப மாட்டேன், ஒரு சுதந்திர பூமிக்குச் செல்கிறேன் எனச் சொல்லி விட்டு ஜெருசலம் சென்று விட்டார்.

மவ்லானா முஹமதலியின் மரணம் ஜெருசலத்திலேயே நிகழ்ந்தது அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.

மவ்லானா முஹமதலியும் அவர் மூத்த சகோதரர் மவ்லானா சவ்கத்தலியும் இரட்டையர்கள் .இவர்களின் தாயார் பீபி அம்மையார் இவர் இந்தியச் சுதந்திரத்துக்காக இந்தியா முழுவதும் மேடை ஏறி முழங்கிய வீரத்தாயார்.

காந்தியடிகள் பீபி அன்னையாரை மாஜீ என்றுதான் அழைப்பார்.

ஒரு பொழுது பீபி அம்மையாரைச் சந்திக்கச் சென்ற காந்தியடிகளுக்குப் பீபி அம்மையார் ஒரு துணி ஆடையை அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்தத் துணியாடை காந்திஜீயை அதிகம் கவர்ந்தது பீபி அம்மையாரிடம் "மாஜீ! இது என்ன ஆடை?"எனக் காந்தி கேட்டார்.

பீபி அம்மையார் "நானே என் கைகளால் நூற்ற நூலாடை உங்களுக்கு இது "கத்ர்" என பீபி அம்மையார் பதில் கூறினார்கள்.

கத்ர் - என்ற சொல்லுக்கு வெகுமதி (அன்பளிப்பு) என்பது பொருள். இதுதான் காந்திஜீ நமக்கு வழங்கிய கதராடையின் கதை.

பீபி அம்மையார் இந்தியா முழுவதும் மேடை ஏறி அன்னிய ஆங்கில அரசுக்கு எதிராக வீர உரையாற்றினார்கள்.

தமிழகத்திற்கு ஜமால் முஹமது சாஹிப் பீபி அம்மையாரை அழைத்து வந்தார். சென்னை மற்றும் பிற இடங்களிலும் பீபி அம்மையார் பேசினார் இறுதியாகத் தென்காசியில் பீபி அம்மையார் வீர முழக்கமிட்டார்கள்.

தென்காசிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் மு.ந.அப்துர் ரஹ்மான் சாஹிப். (இவர் என் தந்தையாரின் தந்தையார்).

ஜமால் மைதீன் பாப்பாவின் தந்தையார் ஜமால் அப்துல்லாஹ் சாஹிப் தன் முதல் மூன்று பெண்மக்களை நெல்லை மாவட்டத்துக்காரர்களுக்கே மணமுடித்து வைத்தார்.

முதல்மருமகர் மு.ந.அப்துர் ரஹ்மான் சாஹிப், இரண்டாம் மருமகர் மு.ந.முஹமது சாஹிப், மூன்றாம் மருமகர் M.முஹமது இஸ்மாயீல் சாஹிப். (கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்)

ஜமால் மைதீன் பாப்பாவிற்கு இந்த மூவரும் மச்சான்மார்கள்.

ஜமால் மைதீன் பாப்பாவின் நிழற்படத்தைப் பாப்பா சாஹிப் பேரர் Jamal Jas முகநூலில் இருதினங்களுக்கு முன்னர் பதிவு செய்திருந்தார் அதைப் பார்த்ததும் பாப்பா நன்னாவைப் பற்றி எனக்குத் தெரிந்தவைகளைப் பதிவு செய்ய ஆசைப்பட்டேன்.

பாப்பா நன்னா நினைவு தமிழக, இந்தியச் சரித்திரப் பின்னணி கொண்டிருப்பதால் அதைப் பதிவிடுவது ஒரு சமூகக் கடமை எனக் கருதிப் பதிவிட்டிருக்கிறேன்.

பாப்பா நன்னாவின் சமூகத் தொண்டு, மற்றுமோர் வரலாற்றுத் தொகுப்பு.
நாளை அல்லது நாளை மறுநாள் அதைப் பதிவிடுகிறேன்.
(படம்: kezhakkarai.com)

No comments:

Post a Comment